கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

வியாழன், மார்ச் 08, 2018

உணர்வுமிக்க இலங்கைப் பயணம் ( தொடர் – 1)



உணர்வுமிக்க இலங்கைப் பயணம் ( தொடர் – 1)
*******************************************************************
இலங்கை மட்டக்களப்பு – ஓட்டமாவடி “ நுட்பம் “ இலக்கிய ஆண்டு விழாவுக்கு பத்துபேர் கொண்ட கவிஞர் குழுவுடன் 24/02/2018 அன்று பயணமானோம். பிப்ரவரி 25 அன்று விழா இனிதே முடிந்தது.
விழா நிகழ்வுகள் சிறப்பாக இருந்தன. இலங்கை பயணம் தொடங்கியது முதலே..... மனதுக்குள் ஈழத் தமிழர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து அகதிகளாக பல நாடுகளில் தங்கி அமைதிச் சூழல் ஏற்பட்டபின் தங்கள் தாயகம் திரும்பிய......நிலையை மனதுக்குள் ஒரு ஏக்கமாய்..... நினைவலைகளை சுழலவிட்டபடி இருந்தேன்.
உலகின் மிகப் பெருமை வாய்ந்த யாழ்பாணம் பொது நூலகம் சிங்களவர்களால் தமிழர்களின்போரின் போது எரித்துச் சாம்பலாக்கிய நிகழ்வு எனது மனதில் மறையாத சுவடாக இருந்துவந்தது. நூலகத்தைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் கொழுந்துவிட்டு எரிந்தது. 28/02/2018 அன்று ஜாப்னா – யாழ்பாணம் சென்றதும் நாங்கள் யாழ்பாணம் பொது நூலகம் இருந்த இடம் நோக்கி சென்றோம்.
நூலகக் கட்டடம் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் இயங்கிக் கொண்டிருந்தது. நாங்கள் நண்பகல் இரண்டு மணி அளவில் சென்றோம். மாலை நான்கு மணிக்குதான் அனுமதி என்றனர். நாங்கள் தமிழகத்தில் இருந்து எட்டுபேர்கொண்ட கவிஞர் குழு வந்திருக்கிறோம் என்றவுடன் அனுமதி அளித்தனர். உட்புறம் புகைப்படம் எடுக்க அனுமதிக்க வில்லை.
நூலகத்தில் பல்கலை மாணவர்கள், பொதுமக்கள், தமிழ் ஆர்வலர்கள் பலர் புத்தகங்களில் மூழ்கி குறிப்பெடுத்துக் கொண்டிருந்தனர். தென்னிந்திய தமிழ்ப் புத்தகங்களுக்கு தனியான ஒரு பகுதி கொடுக்கப்பட்டிருந்தது. அங்கு யாழ்ப்பாண வாசகர் எங்களுக்கு அறிமுகமாகி உள்ளே அழைத்துச் சென்றார். இந்த நூலகம் முற்றிலும் எரிந்தது என்றும் லட்சக்கணக்கான பழம்பெரும் நூல்கள், ஓலைச்சுவடிகள், ஆய்வேடுகள் அனைத்தும் எரிந்து சாம்பலானது என்று அவர் கண்களில் நீர் ததும்ப கூறியபோது எங்களின் இதயம் கனத்து அழுதது. உலகம் முழுதும் உள்ள தமிழர்களின் உதவியாலும் தற்போதைய அரசின் தமிழ்ப் பிரதிநிதிகளாலும் நூலகம் புத்துயிர் பெற்றது என்றும் கூறினார்.
1981 ஆம் ஆண்டு சிங்கள வெறியர்களால் சூறையாடப்பட்ட, எரிக்கப்பட்ட நூலகம் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது மனதுக்கு இதமாய் இருந்தது.
எரிக்கப்பட்ட நூலகத்தின் புகைப்படம் அங்கே இருந்தது. எலும்புக்கூடாய் புத்தகங்களின்றி புகைபடிந்த அந்த நூலகக் கட்டடம் தமிழனின் அவலத்தை எடுத்துக் கூறியது.
இனி விக்கிப்பீடியா சொல்லும் செய்தியை இங்கு காண்போம் :
_______________________________________________
( விக்கிப்பீடியா:
யாழ் நூலகம் 1933 ஆம் ஆண்டில் இருந்து கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ளது. முதலில் சிலரது தனிப்பட்ட சேகரிப்புகளுடன் நூலகம் ஆரம்பிக்கப்பட்டு, மிக விரைவில் உள்ளூர் தமிழ் மக்களின் ஆதரவுடன் ஒரு முழு நூலகமானது. யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் தனிப்பட்டவர்களிடம் இருந்து வந்த பல நூல்கள், குறிப்பாக நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள் 1800களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை இந்நூல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன[5][6]. நூலகத்தின் முதலாவது கட்டடம் 1959 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது[5][6].
யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு சூன் 1 ஆம் திகதி இரவு சிங்கள வன்முறைக் குழுவொன்றால் இடம்பெற்றது.[1] இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது[2]. இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது[3][4]. இந்த நூலகஎரிப்பு வன்கும்பலில் இலங்கையின்அமைச்சர் காமினி திசாநாயக்கா உட்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர். நூலகம் எரிக்கப்பட்டது ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் அழியா காயம் ஒன்றை ஏற்படுத்தி, தமிழ்த் தேசியப் போக்குக்கு உரம் ஊட்டியது.
• யாழ் நூலக வரலாறு, மற்றும் அதன் எரிப்பு குறித்த "The Jaffna Public Library rises from its ashes" என்ற பெயரில் ஓர் ஆவண நூலை கட்டிடக்கலை நிபுணர் வி. எஸ். துரைராஜா எழுதி வெளியிட்டுள்ளார்[7]
• எரியும் நினைவுகள் என்ற பெயரில் ஓர் ஆவணப் படத்தை ஊடகவியலாளர் சி. சோமிதரன் இயக்கி வெளியிட்டுள்ளார்.)
___________________________________________________
ஆம்...நண்பர்களே யாழ் பொது நூலகம் ஈழத் தமிழர் வாழ்விட வரலாற்றை பறைசாற்றியபடி இப்போதும் நிமிர்ந்து நிற்கிறது.
தொடரும்......
அன்பன்,
கா.ந.கல்யாணசுந்தரம் .
படங்கள்: எரிக்கப்பட்ட நூலகம் - நன்றி: கூகுள்
தற்போதைய நூலகப் படங்கள் - எங்களது பயணத்தின்போது எடுக்கப்பட்டவை ....

2 கருத்துகள்:

  1. "யாழ் பொது நூலகம் ஈழத் தமிழர் வாழ்விட வரலாற்றை பறைசாற்றியபடி இப்போதும் நிமிர்ந்து நிற்கிறது." என்பது உண்மையே!
    யாழ்ப்பாணத்தில் தங்களைச் சந்திக்க முடியாதது துயரமே!
    இனி வரும் காலத்தில் சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அய்யா. ஏழு நாட்களில் எங்களின் பயணத்தை முடித்து திரும்பினோம். தங்களது அன்பான விசாரிப்புக்கு மிக்க நன்றி.

      நீக்கு