கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

புதன், அக்டோபர் 08, 2014

அமிழ்தென நின் பாடல் இலங்கும் புவிமீது !



காடுவெளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலும்தான் மிச்சம் ! - எனும்
உழைக்கும் வர்க்கத்தின் அவலத்தை
அன்றே பாடிவைத்த பட்டுக்கோட்டையே !
இமைப்பொழுதும் சோம்பலின்றி உழைத்து 
இளைய சமுதாயம் மேன்மையுற- நல்லிசை
பாடலை நாள்தோறும் புனைந்த புலவனே !
பொதுஉடமை பூவெடுத்து நற்றமிழ் சொல்
நார்கொண்டு பாமாலை தந்த வள்ளலே !
நிலவுக்கு ஆடைகட்டி மன மேடையில்
ஆடவைத்த ஆனந்தக் கவியே!
உனதிசைப்பாடல்களால் துள்ளாத மனங்களை
துள்ளவைத்து இன்பத் தேனை அள்ள வைத்தாய்!
வாழ்ந்த காலங்கள் குறைவெனினும்
குன்றின்மேலிட்ட விளக்கானாய் !
நும் பெயரை எனக்கிட்ட பெற்றோர்கள் இன்றில்லை!
நுனிப்புல்லின் பனித்துளியாய் கவிஎழுதும்
திறன் எனக்கு வந்ததெல்லாம் - நின் பெயரை
கொண்டதாலே எனவெண்ணி நாளும் மகிழ்கிறேன்!
தமிழ் வாழும் காலமெல்லாம் நற்றமிழ் மணம்பரப்பி
அமிழ்தென நின் பாடல் இலங்கும் புவிமீது !

.........கா.ந.கல்யாணசுந்தரம்