கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!
இயற்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இயற்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஏப்ரல் 16, 2018

மனித உணர்வுகளின் வெளிப்பாடாக அமையவேண்டும் ....தமிழ் ஐக்கூ கவிதைகள் !

மனித உணர்வுகளின் வெளிப்பாடாக அமையவேண்டும் ....தமிழ் ஐக்கூ கவிதைகள் !
********************************************************************
தமிழ் ஐக்கூ கவிதைகள் ஒரு நூற்றாண்டைக் கடந்து வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது.
கவிதைகளின் பரிணாம வளர்ச்சியில் துளிப்பாக்கள் (ஐக்கூ கவிதைகள் ) தமிழ் கவிதை உலகில் இனிய தடம் பதித்து வருகிறது என்பதில் ஐயமில்லை.
ஒரு கவிதை சமுதாய மாற்றத்தைக் கொண்டுவருமேயானால் அது ஜீவனுள்ள வரிகளையும் சொற்களையும் தன்னகத்தே கொண்டு ஒரு இயக்கத்தையே நடத்துகிறது என்பது உண்மை.
திரையுலகில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவியரசு கண்ணதாசன், கவிஞர் வாலி போன்றோரின் பாடல்வரிகளில் உயிரோட்டமான சொற்களும் வரிகளுமே காலம் கடந்து நிற்கும் தன்மைக்கு அடிப்படை ஆகும்.
எளிய தமிழ் சொற்களால் கோடானுகோடி மக்களின் இதயத்தை கொள்ளையடித்த கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகளில் இந்த சமுதாய முன்னேற்றத்துக்கான விதைகள் தூவப்பட்டன.
இலக்கிய உலகில் பக்தி இலக்கியம் தொட்டு, சங்க இலக்கியம் மற்றும் சங்கம் மருவிய காலம் வரை அலைகடலாய் தமிழ் இலக்கிய வரலாறு பார்போற்ற ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.
இந்த வரிசையில் காலம் கடந்து நிற்கும், வாழ்ந்துகொண்டிருக்கும் ஐக்கூ (துளிப்பாக்கள் ) கவிதைகள் நூற்றுக் கணக்கான கவிஞர்களின் விரல்களில் பிறப்பெடுத்த பெருமைக்கு உரியதாகும்.
இந்த வரிசையில் தடம்பதித்த/தடம் பதித்து வரும் ஐக்கூ கவிஞர்களின் ஹைக்கூ கவிதைகள் தினம் தொடராக எனது பார்வையில் வெளியிட விரும்புகிறேன்.
இந்த ஐக்கூ கவிதைகள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவை. விளக்கம் கொடுத்து புரிய வைக்க வேண்டும் எனும் கட்டாயம் இல்லை. பன்முக நோக்கில் பொருள் கொள்ளும் ஆற்றல் மிக்க ஐக்கூ கவிஞர்கள் மத்தியில் நான் விளக்கம் கொடுக்க
விரும்பவில்லை... !
இந்த ஐக்கூ கவிதைகளை (துளிப்பாக்கள்) உள்வாங்கி கவிதையின்பம் பெற அன்போடு அழைக்கிறேன்...!
தற்போது ஐக்கூ எழுதும் இளைய தலைமுறைக்கும் இந்த ஐக்கூ கவிதைகள் எடுத்துக் காட்டாய் விளங்கும் என நம்புகிறேன்.
காலத்தை வெல்லும் தமிழ் ஐக்கூ கவிதைகள்....தொடர் ..1
*****************************************************
1. துணிகளில் தெரிவதில்லை
நெசவாளனின்
கருத்த விரல்கள்
......ஏகாதேசி
2. பசித்தழுகிறது குழந்தை
ரப்பர் மரத்தில் பால் வெட்டியபடி
வற்றிய மார்போடு அம்மா
.....ஏகாதேசி
3. சருகு பொறுக்குவதில்
சரியாகிறது நேரம்
குளிர் காய்வது எப்போது ?
.....பல்லவி குமார்
4. தீக்குச்சி இறந்தது
தீபத்தில்
அசைந்தாடும் உயிர்
......பழனி இளங்கம்பன்
5. அட...குடங்களுக்குக் கூட
சொட்டு மருந்து கொடுக்கிறதே...
நகரிய தெருக் குழாய்
......முகவை முனீஸ்
6. இருண்ட கிராமத்தின் வழியே
இரக்கமின்றி செல்கின்றன
நகரத்திற்கு மின்கம்பிகள்
......நாவம்மா முருகன்
7. பிச்சையெடுத்தான் சிறுவன்
பசி தீர்ந்தது
குடிகார அப்பாவுக்கு
.....நாவம்மா முருகன்
8. சங்கு ஊதியும்
எழுந்திருக்கவில்லை
ஆலைத் தொழிலாளி
.....சீனு தமிழ்மணி
9. இருட்டில் அமர்ந்து
மௌனத்தை தின்னும்
அணைந்த மெழுகுவர்த்தி
.....மு.முருகேஷ்
10. ஏற்றத் தாழ்விலும்
இணைந்த இயக்கம்
விரல்கள்
......கா.ந.கல்யாணசுந்தரம்
....................நாளை தொடரும்.............
(நன்றி: நீங்கள் கேட்ட ஐக்கூ தொகுப்பு நூல் - ஆண்டு 2000)

சனி, ஆகஸ்ட் 27, 2016

புத்துலகு கண்டிடுமே பொறுப்போடு !

















தோகை விரித்தாடும்
மயில் போல்
தாவிக் குதித்திடும்
மனது நித்தம் !
புருவவில்லில் 
பார்வைக் கணைகள்
தொடுத்திடும்
ஒரு பருவ யுத்தம் !
வெண்கலச் சிலைபோல்
மேனி மின்னும்
எழிலுரு மாற்றம் தன்னில்...
அறியாது புரியாது
புன்முறுவல் பூக்கின்ற
ஆனந்த மொட்டவிழ்
வசந்த காலம் !
முறைமாமன்
குச்சி நட்டு பந்தலிடும்
மறத்தமிழன்
பண்பாட்டின் நிகழ்விடம் !
பட்டுப் பாவாடையும்
பளபளக்கும் தாவணியும்
பருவத்தின்
வாசலுக்கு மெருகூட்டும் !
மஞ்சள் நீராடி
அகில் சந்தன வாசமுடன்
கொஞ்சுமொழியாளின்
கூடத்து விழாவினில்...
கெஞ்சுகின்ற
விழியோடு காத்திருந்து
தஞ்சமடைந்திடுமே
வாலிப நெஞ்சங்கள் !
மொட்டவிழ் தாமரையாய்
முகம்மலர
நாளொருமேனியும்
பொழுதொரு வண்ணமுமாய் ...
பூப்பெய்திய பருவமினி
பெற்றோரின் அரவணைப்பில்
புத்துலகு கண்டிடுமே
பொறுப்போடு !
...........கா.ந.கல்யாணசுந்தரம்

வெள்ளி, செப்டம்பர் 18, 2015

தளிர்களின் காலம் ....




விண் காணும் தளிர்கள்
மண் நோக்கியபடி
சருகுகள்

.....கா.ந.கல்யாணசுந்தரம்.

திங்கள், பிப்ரவரி 25, 2013

குறையாத பொக்கிஷங்களாய் !










பனி படர்ந்த புல்வெளி
வெண்மேகம் அணைத்த
மலைமுகடுகள்
நீர் நிறைந்த பரந்த கிராமத்து எரி
வெண்ணிற கொக்குகள்
கூட்டமாய் பறந்து அமரும்
நாற்றங்கால் வயல்கள்
ஒற்றையடிப்பாதையில்
கால்நடைகளின் அணிவகுப்பு
தென்றல் தாலாட்டும்
தென்னை மரங்கள்
மாந்தோப்புக்குள் இசைக்கும்
இளம் குயில்கள்
அருவி கொட்டுதலின் 
சாரல் துளிகள் 
மாலை நேரத்து ஏரிக்கரையில் 
நிழலோவியமாய் 
வீடுதிரும்பும் தொழிலாளிகள் 
இன்னும் எத்தனை எத்தனையோ 
நெஞ்சில் இன்னும் 
வரைபடமாய் எனது ....
கிராமத்து வாழ்க்கையின் 
கையிருப்புகள் !
பிறரிடம் பகிர்ந்தும் 
குறையாத பொக்கிஷங்களாய் !
......கா.ந.கல்யாணசுந்தரம் 

வியாழன், ஜூலை 26, 2012

முடிவில்லா பயணம்....




*எங்களது முடிவில்லா பயணம்

கதிரவனின் ஒளிக்கரங்களுடன்

தாமரை மலர்கள்!

.........கா.ந.கல்யாணசுந்தரம்





செவ்வாய், ஏப்ரல் 24, 2012

என்னுடன் பழகிய நிழல் கூட....




*என்னுடன் பழகிய நிழல்கூட
இப்போது வெறுக்கிறது...
நிழல் தரும் மரங்களை வெட்டியதால் !

*எனது கிளைகளை வெட்டி
முடமாக்காதீர்.....
வெட்டினாலும் துளிர்த்திடுவேன்!

*படுத்து உறங்குபவர்களை விட
இளைப்பாறுபவர்களை விரும்புகிறேன்...
நிழல் தரும் மரங்கள் !

* அரம் கொண்டு மரம் அழித்தனர்
அறம் பொருள் இன்பமெனும்....
குறள் படித்த மாந்தர் !

* உங்களின் உயிர் மூச்சு எங்களிடம்
என்றாலும்....எங்களின் வாழ்வு உங்களிடமே....
மரங்களின் பெருமூச்சு !

..............கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், பிப்ரவரி 23, 2012

ஒரு மழை நாளில்....
















@வானத்து மழைத்துளிகளின்


வண்ணப் பதிப்பு....


வானவில் !




@புதியவர்களின் வருகைக்காக


மகிழ்ச்சியுடன் வீழ்கிறோம்...


ஒரு இலையுதிர்காலத்து இலை !




@மழைச் சாரல்களில்


ஒரு இனிய ஸ்பரிசம் நிகழ்கிறது....


விளையாடும் சிறுவர்களின் கண்களில்!




@இறை தேட வழியில்லை


சுவர் ஓரம் ஒதுங்குகின்றன...


மழையில் நனைந்த புறாக்கள்!




@ஒரு கோடை நாளின் வானப்பெண்ணின்


மேகக் கூந்தலுக்குள் நளினமாய்....


மின்னல் வகிடுகள் !



............கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, டிசம்பர் 30, 2011

வலியறியாத...





நதி வருடிய கைகளின்
வலியறியாத...
கூழாங்கற்கள்!

......கா.ந.கல்யாணசுந்தரம்

புதன், டிசம்பர் 14, 2011

ஹைக்கூ சிந்தனைகள்....

















*தவமாய் தவமிருக்கும்
கூட்டுப்புழுவின் காத்திருப்பு....
ஒரு வண்ணமயமான வாழ்வுக்கு!

*ஒரு தலைமுறைக்கான இடைவெளியில்
தொலைத்ததை மீண்டும் தேடுகிறது....
புன்னகை மறந்த மானுடம்!

*பயணிக்கும் திசையில் மட்டுமில்லாமல்
வாழ்நாள் முழுவதும் வேண்டும் ...
ஒளிமயமான பசுமைக்காலம் !

*பிரிந்தபோதுதான் தெரிந்தது
இன்பம் மட்டுமே அல்ல....
வாழ்க்கையின் புரிதல் !

*இந்த பூமியைக் காட்டி
குழந்தைக்கு சோறு ஊட்டினாள்...
நிலவில் தாய்!

*விளையாடும் வயதை மறந்து
வயிற்றுப் பிழைப்பில் ...
பொம்மை விற்கும் சிறுமி!

*ஒரு பனிபொழியும் காலை
மேகப் போர்வைக்குள் ...
முடங்கிப்போனது சூரியக் கதிர்கள்!

*இல்லம் நிறைந்திருந்தது
பொன்பொருளால் அல்ல...
மழலைச் சொற்களால்!

..............கா.ந.கல்யாணசுந்தரம்.

ஞாயிறு, டிசம்பர் 11, 2011

நங்கூரமிடாத நம்பிக்கைகளோடு .....
















பயணங்களில் புதுமைகள்
எபோதுமே நிகழ்ந்துகொண்டுதான்
இருக்கிறது!
பல இடங்கள் ஏற்கனவே
எனக்கு பழகியதாய் இருக்கிறது!
சில பழமையான வீடுகளை பார்க்கும்போது
அதில் வசித்தது போன்ற ஒரு உணர்வு!
நினைவு தெரிந்த நாள் முதல்
பறவைகளிடம் ஒரு அதீத பற்று!
என்னுடைய கரங்கள் தொட்டு துவக்கினால்
அது மற்றவர்களுக்கு மட்டுமே ராசியாகிறது!
நான் வசிக்கின்ற இடத்தின் எதிரில் எப்போதுமே
புதிய கட்டடம் உருவாகிறது!
அதில் வசிப்போரும் வாழ்வின் உயர்நிலையை
நுகர்கின்றனர்..
இறைவனின் இயற்கை படைப்புகளில்
ஆன்மா எபோதுமே இயைந்து செயல்படுகிறது
கனவுகளில் .....
எனது செயல்கள் முற்றுப்பெறாமல்
தொக்கிநின்று ஏக்கத்தை ஏற்படுத்துகிறது...
ஆனால் மற்றவர்கள் நடக்கிறார்கள்....
நான் மட்டும் பறந்து செல்கிறேன்....
நீரோடைகள் எப்போதுமே
பயணிப்பில் குறுக்கிடுகின்றன...
மானுடத்தின் ஏழாம் அறிவில்
அறிவியல் பயணிக்கும் தருவாயில்
கடந்தகால பயணிப்பில் எனது
அறிவு பயனத்திசையை மாற்றி
ஆச்சரியத்தில் மீண்டும் மீண்டும்
மூழ்கிக் கிடக்கிறது....!
நங்கூரமிடாத நம்பிக்கைகளோடு!




......கா.ந.கல்யாணசுந்தரம்.
























வியாழன், செப்டம்பர் 22, 2011

எழிலார்ந்த ஓவியம்


மாலையின் வரவுக்காக
மணிக்கணக்காய் தவமிருக்கிறேன்...
காரணம்....
பொன்னிற மஞ்சள் வெயிலில்
மயங்கும் நதிக்கரை
தென்னங் கீற்றுகள்!
இறைவன் தினம் தினம்
உயிர்த்துடிப்பாய் வரைகின்ற
இயற்கையெனும் இளையகன்னியின்
எழிலார்ந்த ஓவியம்!
சுருங்கச் சொன்னால்...
நான் இன்னும் உயிரோடிருப்பது
உங்களின் இனிய தோற்றங்களால்!

.........கா.ந.கல்யாணசுந்தரம்.

புதன், ஆகஸ்ட் 24, 2011

ஏனென்றால்

மலையின்
முகடுகளை
நோக்கித்தான்
எப்போதும்
செல்கின்றன
வெற்றிக்கான பாதைகள்
ஏனென்றால்
அவை நம்மை
இறக்கிவிடும் போது
முகம்காட்ட
மறுக்கின்றன!