கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

திங்கள், ஏப்ரல் 14, 2014

தமிழ் நவின்று தழைத்திடுங்கள் பல்லாண்டு!










முத்தமிழின் சுவையுணரும் 
இளங்காலை நேரம் !

இத்தரையை மகிழ்விக்கும் 
சுகமான காலம் !
சித்திரை எனும் 
முத்திரை பதித்த மாதம்!
மல்லிகை மலரோடு 
மாவிலைத் தோரணம் அசைந்தாட 
மெல்லிசையாய்  
தமிழ் பேசும் மழலை மொழி !
உற்றோரும் பெற்றோரும் 
பெற்றெடுத்த தமிழ்மண்ணின் 
வரலாற்றை வளமோடு காத்திட்டு 
வளர்கின்ற தலைமுறைக்கு
தாய்மொழியை அமுதாக..... 
என்றென்றும் தந்திடுவோம்  தரமாக !
ஜெய ஆண்டின் வருகையிலே 
இதய மகிழ் தமிழ் வாழ்த்து 
இயம்புகிறேன் .... தமிழ் நவின்று 
தழைத்திடுங்கள்  பல்லாண்டு! 

........... கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், ஏப்ரல் 03, 2014

இதுவன்றோ தமிழனின் வீடு......

தமிழிசை நாள்தோறும் பாடு - இனி 
நற்றமிழ் துறைதோறும் நாடு 
இதுவன்றோ தமிழனின் வீடு - இதை 
மறுப்போரை மறக்காமல் சாடு 

......(தமிழிசை ) 

தாய்மொழி நன்கறிந்து பயின்றால் - அயல் 
மொழி இனிதாகும் இன்றே 
வாய்மொழி தாய்தந்த பரிசு - நம் 
வாழ்வினை வளமாக்கும் உறவு 

....(தமிழிசை ) 

அம்மா என்றழைக்கும் மழலை - பின் 
மம்மி என்றழைப்பது ஏனோ ? 
தனிமனித முன்னேற்றம் இதுவில்லை - ஏன் 
தமிழன் மறந்தான் நற்றமிழ் சொல்லை ? 

......(தமிழிசை )

............................கா.ந.கல்யாணசுந்தரம் .