கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

புதன், ஆகஸ்ட் 31, 2016

மனம்கொத்திப் பறவைகளின் கூடாகட்டும் !

இருளின் அடர்த்திக்குள்
என்னை முழுவதுமாய்
திணித்துக்கொண்டேன் ...
வெளிச்ச நாட்களின்
வாழ்க்கைப் பக்கங்களை
விளக்கின்றி
படிக்கத் துவங்கினேன்....
திடீரென இருளை
அணைத்துக்கொண்டு
விளக்கொளி உள்ளே
பாய்ந்தது ....
வெளிச்சப் பூக்களை
அள்ளித்தெளித்த
தேவதையாய் இரவின்
கரங்கள் மகிழ்ந்தன...
பகலைவிட இருளை
அதிகம் நேசிக்கிறேன்
காரணம்.....
அப்போதுதான் நெஞ்சம்
மனதின் விசும்பல்களை
அசைபோட்டபடியே
நிம்மதியடைகிறது !
இரவின் கரங்களே....
இப்போதாவது
தெரிந்து கொள்ளுங்கள்
உங்களிடம் இருக்கும்
வெளிச்சஅரும்புகளை
பூக்கவிடாது என்மீது
இருளின் வேர்களை
படரவிடுங்கள்....
அவை எனது
மனம்கொத்திப் பறவைகளின்
கூடாகட்டும் !
.......கா.ந.கல்யாணசுந்தரம்

உதிர்தலின் புனிதம் அறிந்து !

பாதங்களில் மிதியுற்ற 
சருகுகளின் சலசலப்பில் 
எனது பயணிப்பின் திசை
மாற்றியமைகிறது

மணல் தேசமொன்றின்
ஆற்றைக் கடக்க
ஒரு பரிசல் பெண்ணின்
துணையோடு
பயணமானேன்...
மற்றவர்களை மட்டுமே
கரைசேர்க்கும் இவள்
துவண்ட முகத்தோடு
துடுப்புகளால் கையசைத்து
விடைபெற்றாள்

பயனத்திசைகள் எங்கும்
மானுட அவலம்
முடிவின்றி பயணிக்கிறது
மீண்டும் தொடர்கிறேன்
காய்ந்த வனமொன்றின்
சாலையொன்றில்...
இப்போது மௌனித்திருந்தது
சலசலப்பின்றி சருகுகள்
உதிர்தலின் புனிதம் அறிந்து !

........கா.ந.கல்யாணசுந்தரம்.