கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

திங்கள், டிசம்பர் 31, 2012

புத்தாண்டு வாழ்த்துக்கள் !!










0123 எண்கள் இடம்மாறி 2013 ஆனதோ?
பிறக்கும்  2013 - எப்போதும்
சிறக்கும் என்பதில் ஐயமில்லை !
பறக்கும் 2012 இன்றோடு ......
மறவா நிகழ்வுகள் நெஞ்சோடு !
என்றும் சிறக்கும் 2013 -  ல்
இமயம் வியக்கும் சாதனைகள்
இலங்கும் வாழ்வில் வன்மமின்றி !
என புத்தாண்டை வரவேற்று
உங்களனைவரையும் வாழ்த்துகிறேன்!
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

.......அன்புடன் கா.ந.கல்யாணசுந்தரம்.

புதன், டிசம்பர் 19, 2012

இல்லங்களில் மலர்ந்திருந்தது

 
 
 
 
 
 
 
மழலை மொழியறியாது
மகிழ்வோடு பழகின...
பொம்மைகள் !

மழலைகளின் கையசைப்பில்
மண்டிக்கிடந்தது....
மனிதநேயம்!

இறைவனின் பங்களிப்பாய்
இல்லங்களில் மலர்ந்திருந்தது
மழலை மொழி !

நடைவண்டிக்கு
தெரிந்திருந்தது....
குழந்தை வளர்ப்பு!

ஒரு மரப்பாச்சியின்
முதல் கனவு...
மழலைக்கு தாயானது!


........கா.ந.கல்யாணசுந்தரம்.

புதன், டிசம்பர் 12, 2012

12.12.12 ஹைக்கூ கவிதைகள்







*இலையுதிர் காலத்தின்
திறந்த புத்தகமாயின....
தளிர்களின் வரவு!

*மொட்டவிழும் மலருக்கு
தெரியாத உறவு...
வேர்களின் பரிவு !

*புல் நுனியில்
ஒரு பிரபஞ்சம்
பனித்துளி !

*தென்றலின் தழுவலில்
நாணிற்று ....
ஆற்றங்கரை நாணல் !

*மாலை நேரத்து
எழிலோவியங்கள்....
கூடு திரும்பும் பறவைகள் !

*மீனவனின் அவலத்தை
சுமந்து வந்தது......
கடலோர காற்று !

*மலை முகட்டில்
மேகப் பெண்களின் ஆடிப் பொங்கல் ....
அருவி!

*வெள்ளி அலைகளின்
தோழமையுடன் .....
துள்ளியெழும் மீன்கள் !

*பரிசல் பெண்ணின்
புரிதல் வாழ்க்கையில் ....
புலம் பெயரா படகுத்துடுப்புகள் !

*தேன் தந்த மலருக்கு
வண்டின் பரிசளிப்பு....
மகரந்த சேர்க்கை !

*கொன்றை மலர்களின்
சிவப்பு கம்பள வரவேற்பு....
கிராமத்தின் சாலைகளில் !

*விட்டுக் கொடுக்கும்
பண்பை வளர்த்தன....
ஒற்றையடிப் பாதைகள் !

...........கா.ந.கல்யாணசுந்தரம்.


 

செவ்வாய், டிசம்பர் 11, 2012

செவ்வாய் கிரஹத்தில்

 
 
 
 
 
 
 
பொழுது புலர்வதற்குள்
பெரு ஒளி வரவழைத்து
அலுவலகம் சென்றார்கள்!
பிள்ளைகளுக்கு ஆக்சிஜன் குப்பிகளை
முதுகுக்குபின்னால் கட்டிவைத்து
பள்ளிக்கூடம் அனுப்பினார்கள்
புத்தகமில்லா குழந்தைகள்
ஆக்சிஜனை சுமந்தவாறே
வேற்று கிரக மனிதர்களின்
ராக்கெட்டுகளில் பறந்தவாறே
டாடா காண்பித்து கிளம்பினர் !
பெட்ரோல் இல்லா கார்கள்
நகரில் வலம் வந்தன!
மனிதநேயமில்ல வாழ்க்கையில்
வயது முதிர்ந்தோர்
செவ்வாய் கிரஹத்தில்
காப்பகங்களில் வாழ்ந்தனர்!
அப்போதும் அவர்கள்
ஒரு சொல்லை
ஆன்மதிருப்தியாய்
உச்சரித்தவரே இருந்தனர்.....
"எல்லாம் தலைஎழுத்து" !

....கா.ந.கல்யாணசுந்தரம்.

புதன், டிசம்பர் 05, 2012

சிக்குண்டு தவிக்கிறது....







*நாணல் இசைத்த பாடல்
தெரிந்திருக்கிறது...
நதிக்கரைக்கு மட்டும் !

*மூங்கில் வேர்களை
மறக்கமுடியுமா?
புல்லாங்குழலின் நினைவுகள் !

*ஆற்றின் கரங்களை
முத்தமிட நினைக்கின்றன ...
அலை வருடிய கூழாங்கற்கள்!

*தள்ளினாலும் நீர் விலகாது
எனைத் தழுவி பயணிக்கிறது ....
பேசும் படகுத் துடுப்புகள்!

*வீசாத வலைக்குள்
சிக்குண்டு தவிக்கிறது....
ஒரு மீனவனின் பசி !

.............கா.ந.கல்யாணசுந்தரம்.

ஞாயிறு, டிசம்பர் 02, 2012

ஒரு கனத்த இதயத்தை










கண்களை மூடினேன்
உலகம் இருண்டது
இதயக் கோட்டையின்
கதவுகள் மட்டும்
எண்ணங்களின் திரவு கோலால்
திறந்துகொண்டது....
மூளையின் செதில்களில் சில
கரங்களாய் வளர்ந்து
தூரிகை ஒன்றினை
தேடிப் பிடித்தது....
மௌன சலவைக்காரன்
தீச்செயல் துணிகளைத் துவைத்து
வெண்மையாக்கினான் .
வண்ணமிழந்த ஆடைகளில்
பல வண்ணத்துப்பூச்சிகள்
வந்தமர்ந்தன.....
சும்மா இருந்த ஊனுடல்
எனது ஆன்மாவிடம் ....
'அந்த தூரிகையால்
வாசமிகு மலர்களை உருவாக்கி
வண்ணத்துப் பூச்சிகளுக்கு
விருந்தளி' ........என்று கேட்டது .
தூரிகைகள் மலர்களை
படைக்கும்முன்
கண்கள் திறந்துகொண்டன .....
சும்மா தியானம் நிலைபெறாமல்
சுமந்து சென்றது
ஒரு கனத்த இதயத்தை !

..........................கா.ந.கல்யாணசுந்தரம் 

திங்கள், நவம்பர் 26, 2012

காற்றின் விசாரிப்பு !











*துள்ளும் மீன்களுக்கு
தெரியவில்லை ...
வலைக்குள் சிறையானது!

*பூட்டிய வீட்டுக்குள்
புகுந்து வெளியேறியது...
காற்றின் விசாரிப்பு !

*ஒரு கைதியின் இதயத்தில்
ஏற்கனவே கைதானாள்
கள்வனின் காதலி !

*ரேகைகளை காண்பித்து
நல்லநேரம் தேடுவதில்
தொலைந்துபோனது எதிர்காலம்!

*படிப்பினைகளின் செயலாக்கமே
கிழித்தெறிகிறது....
கனவுக்கும் நினைவுக்குமான தூரத்தை!

*கடைசியாக நடந்தாலும்
இலக்கின் விளிம்புகளைத் தொடு...
இது ஊர்வலத்தின் உன்னதம்!

......................கா.ந.கல்யாணசுந்தரம்

ஞாயிறு, நவம்பர் 25, 2012

கிராமத்து களத்துமேடு!








ஒரு புதுக்கவிதையாய்
காலைப்பனி மேய்கின்ற...
கிராமத்து களத்துமேடு!

ஒற்றைக்காலில் நின்றபடி
வயிற்றுப் பசிக்கான தவம்
ஆற்றுப்படுகை கொக்குகள் !

இளஞ்சூரியனை
பங்குபோட்டு குதூகலிக்கும்
தென்னை ஓலைகள் !

எங்களுக்கேது விடுமுறை
வானில் எழும்....
இரைதேடும் பறவைகள்!

அன்றலர்ந்த மலர்களை
விட்டு வையுங்கள்....
தேனருந்தும் வண்டினம்!

..........கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், நவம்பர் 22, 2012

விரல்கள் தேடுகின்றன...





மரம் வெட்ட கோடரியை எடுத்தாலும்
கரங்களின் விரல்கள் தேடுகின்றன...
விருட்சத்தின் விதைகளை !

........கா.ந கல்யாணசுந்தரம்

 

திங்கள், நவம்பர் 19, 2012

உள்ளத்தில் நல்ல உள்ளம்




உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா... கர்ணா
வருவதை எதிகொள்ளடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா... கர்ணா
வருவதை எதிகொள்ளடா

தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
ஊர்ப்பழி ஏற்றாயடா
நானும் உன் பழி கொண்டேனடா
நானும் உன் பழி கொண்டேனடா
மன்னவர் பணியேற்கும்
கண்ணனும் பணி செய்த
உன்னடி பணிவேனடா -கர்ணா
மன்னித்து அருள்வாயடா

செஞ்சோற்று கடன் தீர்த்த
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா - கர்ணா
வஞ்சகன் கண்ணனடா
வஞ்சகன் கண்ணனடா

- கண்ணதாசன்

வெள்ளி, நவம்பர் 16, 2012

'அனுபவம் என்பதே நான்தான்'







 
 
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!
 
......................கவிஞர் கண்ணதாசன் 

திங்கள், நவம்பர் 12, 2012

தீப ஒளித் திருநாளாம் தீபாவளி நன்னாளில்





தீப ஒளித் திருநாளாம் தீபாவளி நன்னாளில்
இல்லமதில் மகிழ்ச்சி ஒளி திசையெங்கும் வீசட்டும்!
மனிதநேய அறுசுவை உணவுப் பரிமாற்றம்
வீதியெங்கும் விளங்கட்டும் !
இருப்போர் இல்லாதோர்க்கு
வழங்கிடும் நாளாகட்டும்!
இல்லாதோர் இனியிங்கு வளமுடனே
வாழும் நிலை வரட்டும்!
திருநாட்கள் பெருநாளாய்
அரும்பி நித்தம் மனிதநேயச் சோலையில்
மணம் கமழும் மலர்களாய்
பூத்துக் குலுங்கட்டும் !




........கா .ந .கல்யாணசுந்தரம்.

வியாழன், நவம்பர் 08, 2012

கண்கள் தேடுகின்றன.....







வெறுமனே புத்தகத்தின் பக்கங்களை
புரட்டிக் கொண்டிருந்தேன் !
வெளிச்ச தேவதையின் கண்கள்
கட்டப்பட்டு தனி அறையில்
தள்ளப்பட்டு தாளிடப்பட்டிருந்தது !
ஆசிரியர் சொன்ன பாடங்களின்
வரிகளை நிலவொளியில்
கண்கள் தேடுகின்றன.....
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
நுனிபுல்லை மேய்ந்த மாடென
சோம்பல் முறித்து தூங்கப் போனேன் !
ஏற்கனவே மின்சார பொத்தான்களை
இயக்கி வைத்ததால் பளீர் என
மின்னொளி நீண்ட நேர இடைவெளிக்குப்பின்
பாய்ந்து என் விழிப் படலத்தை தாக்கியது...
வெளிச்ச தேவதையின் கண்கள்
இப்போது திறக்கப்பட்டன.....
ஆனால் தூக்கம் ததும்பிய
எனது விழிகள் மட்டும் திறக்கவில்லை!
கனவில் ஆசிரியரின் பிரம்படி
துல்லியமாய் நினைவில் நின்றது
விழித்தபின் அம்மாவிடம் கேட்டேன் ...
விளக்கெரிக்க மண்ணெண்ணெய்யாவது
கிடைக்குமா?

........கா.ந கல்யாணசுந்தரம்

புதன், நவம்பர் 07, 2012

உறவுகளின் பண்பாடு - ஹைக்கூ







*ஒரு இரவின் கைப்பிடிக்குள்
தப்பிக்கவே  பதுங்கியிருந்தது
பகலின் ஒளிப்பிம்பங்கள்


*கரைகளை அணைத்தபடி
நதி ஓடிக்கொண்டிருந்தது
இது கரைகளின் கனவு 


*கல்லுக்குள் ஈரம் இருப்பதால் 
சிற்பியின்  உளி விளைவிக்கிறது
எழில்மிகு சிற்பங்கள்


*இருந்தும்  இறந்தபடி
வாழ்கிறார்கள்
செலவிடாத  செல்வத்துடன்


*பாசத்தின் நிழலோடு
எப்போதும் பயணிக்கும்
உறவுகளின் பண்பாடு


                            .....கா .ந.கல்யாணசுந்தரம்




செவ்வாய், நவம்பர் 06, 2012

தேடல்...





ஒரு பகல் பொழுதின்
ஆளுமையில்
அவனின் பலம் அனைத்தும்
இழந்த நிலையில்
கைகளில் திணிக்கப்படுகின்றன ...
இன்றைய
பொழுதுக்கான சம்பளம்!
ஆள் அரவமற்ற
தெருவோரத்து குடிசைக்குள்
கால்கள் சற்றே
ஓய்வெடுத்தன ....
மல்லாந்து படுத்த
அவனது கண்களுக்கு
கோளரங்கம் ஆனது
குடிசையின் கூரை!
அடுத்த நாளின்
நகர்தலுக்கான தேடல்...
மனதுக்குள்
ஏக்கப் புள்ளிகளுடன்
கோலமிட்டன....
வாசல் இல்லாத
அவனது வீட்டின்
முற்றத்தில்....!



.....கா.ந.கல்யாணசுந்தரம்





திங்கள், நவம்பர் 05, 2012

உயிர்ப்பின் ஆசை


பார்த்த பொம்மைகளையே
மீண்டும் மீண்டும் பார்த்தவாறே
அலுத்துப்போன குழந்தை
தாத்தாவின்  மடிமீது
தூங்கிப்போனது!
சிதறிக்கிடந்த பொம்மைகள்
மீண்டும் உயிர்ப்பித்தெழ
நேரமாகும்....!
தாத்தாவும் பொம்மைகளோடு
பொம்மையாய் குழந்தையை
சுமந்தவாறே தூங்கிப்போனார் !
எங்கிருந்தோ பாடல் ஒலித்தது....
' நான் மறுபடியும் குழந்தையாக
பிறக்க வேண்டும் - அன்னை
மடிமீது தலைவைத்து படுக்கவேண்டும்'

........கா.ந.கல்யாணசுந்தரம்  

திங்கள், செப்டம்பர் 17, 2012

மலர்களின் சிரிபொலி !


பிரிந்து செல்லும் பாதைகள்
எப்போதும் சந்தித்துக்கொள்கின்றன...
பிரிந்த இடத்தில் !

ஒரு பனிபொழிந்த காலை
துல்லியமாய் கேட்கிறது...
மலர்களின் சிரிபொலி !

உதிர்ந்த இறகினில்
உறங்காமல் விழித்திருக்கிறது...
ஒரு பறவையின் தேடல் !

ஆற்றுப் படுகை நாணலிடம்
கேட்கத் தோன்றுகிறது..
புயலின் வலிமையை !

கிராமிய மணம் கமழும்
உயிரோவியங்களுடன் ...
மாலை நேரத்து ஏரிக்கரை !

..........கா.ந.கல்யாணசுந்தரம்.

சனி, செப்டம்பர் 08, 2012

குழல்கூட இசைக்காமல் சற்றே நிற்கும்


மொட்டவிழ்ந்த மலர்போல மழலை முகம்
பொட்டிட்டு பூச்சூடி பார்த்தாலே போதும்
கட்டவிழ்ந்த தாழை மலர் போல அழைப்பாள்
கொட்டுகின்ற அருவியென துள்ளி எழுவாள்
குழல்கூட இசைக்காமல் சற்றே நிற்கும்
மழலை இவள் வாய் மொழியில் தோற்கும்
வண்ணத்து பூச்சியென சிறகடித்து வருவாள்
காண்போரின் கையசைப்பில் கண்சிமிட்டி சிரிப்பாள்
முகமறியா போதிலும் மடிமீது வந்தமர்வாள்
கொடிமுல்லைப் பூவாய் மனம் கவர்ந்திழுப்பாள்
மீண்டும் மழலையாய் பிறப்பெடுக்க இறைவனை
வேண்டும் மனம் கொடுத்து வாழ்வாள் இனிதாக!


..................கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, செப்டம்பர் 07, 2012

கலையழகு பாதமலர் போற்றி வணங்கிடுவோம் !
























அருளோடு திருஉருவம் ஆனந்த களிநடனம்
பெருநிதிய வளத்தோடு பூவுலகில் அவதரித்தாய் !
கலியுகம் இதுவென்று மானுடம் அறிந்திடவே - ஈரைந்து
அவதாரம் எடுத்துலகில் ஆட்கொண்டாய் பெருமாளே !

ஏழுமலை கடந்து உன்னுருவம் கண்டிடவே
பாழும் இவ்வுடல் சுமந்து வருகின்றேன்
சூழும் பாவ அலைகடலில் அகப்பட்டோம் - கலியுகம்
வீழும் நாளறியேன் அறிவேன் நாராயணாவெனும் நாமம்

அலைமகள் அகம்கண்ட கலியுக வரதனிவன்
சிலைவடிவம் கொண்டிட்டான் மலைமீது!
விலையிலா அருட்கொடையாம் என்றென்றும் - திருமாலின்
கலையழகு பாதமலர் போற்றி வணங்கிடுவோம் !

.............கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், செப்டம்பர் 06, 2012

அன்னை ஓர் ஆலயம்!


* பயணிக்கும் தூரம் அதிகமெனில்
தாகமெடுக்கும்.....
அம்மாவை நினைத்துக்கொள் !

* நினைத்ததை பெற்றவுடன்
நிம்மதி கிடைக்கும்....
பெற்றவளின் நினைவிருந்தால்!

* புகழின் உச்சியை அடைந்தாலும்
மறவாதே....
அன்னையின் அரவணைப்பை !

* தெய்வமில்லை என்போருக்கும்
கடவுளானாள்...
அன்னை ஓர் ஆலயம்!

.................கா.ந.கல்யாணசுந்தரம்

செவ்வாய், ஆகஸ்ட் 14, 2012

இனி ஒரு விதி செய்வோம்.....












விடுதலைக்கான சின்னமாய்
இன்றும் பட்டொளிவீசி பறக்கிறது
நமது மூவண்ணக்கொடி!
அன்னியரின் அடிமத்தளையருத்து
பொன்னான தாயகத்தை
மீட்டெடுக்க இன்னுயிர் நீத்தனர்
இந்தியத் திருநாட்டின்
இணையில்லா தவப்புதல்வர்கள் !
நள்ளிரவில் பெற்ற சுதந்திரம்
நலமுற பேணிக் காப்போமென
உறுதிமொழி ஏற்றிடும்
மாணவ மாணவியர் தினம் தினம்!
ஆகஸ்டு மாதம் பதினைந்தாம் நாளில்
நல்லதொரு கருத்தினை
பகிர்ந்திடவே விழைகின்றேன்!
சுதந்திர தேசிய மணிக்கொடியை
இனி தனிமனித போராட்டத்தில்
பயன் படுத்தலாகாது!
கொள்கை எதுவாகிலும்
தேசிய கொடியினை தன்னலப்போக்கில்
தவறாகப் பயன்படுத்தி மக்களிடம்
அனுதாபம் பெறுகின்ற சுயநலவாதிகளை
அடையாளம் கண்டுகொள்வோம்!
அரசும் சட்டமும் இருந்தும்
அகற்றிட தயக்கமென்ன?
இனி ஒரு விதி செய்வோம் அதை
எந்தநாளும் காப்போம்!

....கா.ந.கல்யாணசுந்தரம்.

ஞாயிறு, ஆகஸ்ட் 12, 2012

எது சுதந்திரம்?















அன்னியரின் அடிமைத்தளையருத்து
ஆருயிர் தாயகத்தை மீட்டெடுத்து
இணையிலா இந்தியத்திருனாட்டின்
ஈடில்லா அரசியலமைப்பை
உருவாக்கி மகிழ்ந்தோம்!
ஊரும் நாடும் சிறப்புறவே
எளியவரும் பயனுறும் வண்ணம்
ஏற்றமிகு மக்களாட்சி மலர்ந்திடச் செய்தோம்!
ஐயம் இல்லா அறிவுத்திருக்கோயில்
ஒவ்வொரு ஊராட்சியிலும் உருவாக்கினோம்!
ஓதும் கல்விமுறையில் மட்டும்
ஒளடதமாய் விளங்காமல்
மொழியுலக வரலாற்றில் சுதந்திரத்தை
பறிகொடுத்து வளர்கல்வி
அரசியலாய் சமைந்ததுவே!

.....கா.ந..கல்யாணசுந்தரம்

சனி, ஜூலை 28, 2012

முற்றுப்புள்ளி உறவுகள்......




கால்புள்ளியும் அரைப்புள்ளியும்
அவ்வப்போது வைத்து நீட்டித்துக்
கொண்டிருந்தாலும்,
வினாக்குறி வாழ்க்கையில்
எப்போதுமே ஆச்சரியக் குறிகள்!
இருப்பினும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
முற்றுப்புள்ளி உறவுகளுடன்.

......கா.ந.கல்யாணசுந்தரம்

வியாழன், ஜூலை 26, 2012

முடிவில்லா பயணம்....




*எங்களது முடிவில்லா பயணம்

கதிரவனின் ஒளிக்கரங்களுடன்

தாமரை மலர்கள்!

.........கா.ந.கல்யாணசுந்தரம்





செவ்வாய், ஜூலை 17, 2012

நீர்க்குமிழி பயணத்தில்....

@ மன ஏரியில் முகிழ்த்து
அடிக்கடி உடைந்துபோகிறது
எண்ணக் குமிழ்கள்

@ மழை வெள்ளத்தில் மிதக்கும்
நீர்க்குமிழி பயணத்தில்....
நிலைத்திருக்கிறது மானுட வாழ்வு!

@ உடையும் மழை வெள்ள
நீர்க்குமிழி உடையும் போது....
உடன் அழுகிறது மழலை !

@ குளத்து நீரில் மிதக்கும்
தாமரை இலைகளின் வரவுகள்
ஒட்டாத நீர்த்துளிகள்!

@ காகித கப்பல்களின் பயணத்தில்
மழை நீர் ஓடைகள்...
நொறுங்கும் நீர்க் குமிழ்களோடு !

...........கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, ஜூலை 13, 2012

இதய நூலகம்.....




படுக்கையில் படுத்ததும் கண்ணுறங்கி
கனவுலகில் சஞ்சரிக்கும் நாட்கள் குறைந்தன !
ஏதோ ஒன்றை இழந்து மற்றொன்றை தேடும்
படலத்தில் வாழ்க்கை காய்களை நகர்த்துகிறேன்!
ஒளிவு மறைவற்ற எண்ணங்களில்
என்னை நானே ஏமாற்றப்படுகிறேன்!
தீர்க்கமாய் செய்துமுடிக்கும் திறனும்
இப்போதெல்லாம் சோம்பல் போர்வைக்குள்
முடங்கியவாறே செயலிழந்திருப்பது...
நன்றாகவே உணரப்படுகிறது!
ஆரம்பிக்கப்பட்ட வாசல் கோலங்கள்
முடிக்கப்படாமலே சிக்கலாய் முடிவதைப்போல்
முனைப்புகள் தோல்விகளின் விளிம்புகளில் !
ஆனால் ஒன்று மட்டும் தெளிவாய் தெரிகிறது...
மனதின் உறுதியை உடல் ஏற்க மறுக்கிறது!
எண்ணங்களின் விழுதுகள் அவ்வப்போது
விரல் நுனிக்குள் கவிதை வேர்களாய் வியாபித்து....
தடம் பாதிக்கும் ஆற்றலுடன் வெளிப்படுகிறது!
காகிதத் தாட்களுடன் கடைசிவரை வாழ்வதில்
இதய நூலகம் எப்போதும் காத்திருக்கிறது!

..........கா.ந.கல்யாணசுந்தரம்.

புதன், ஜூலை 11, 2012

தியாகத்தின் விளைநிலம் !






என்னை உயிர்ப்பித்த நாள் முதல்
பிம்பங்களின் நடு நடுவே
எனது கண்கள் தேடுகின்றன...
நிஜமான மனதுடைய முகங்களை!
சில நேரங்களில் முகத்தருகே கூட
முத்தமிடுவதுபோல் அன்பான முகங்கள்!
சலிப்பின் விளிம்புகளை தொட்டவாறு
கைதட்டலோடு சில முகங்கள்!
சேட்டைகளை செய்தவாறே எனது
புன்னகைக்கு தவமிருக்கும் புதிய முகங்கள்!
கைநீட்ட எனை எடுத்தணைக்கும்
இருகரமுடைய மனிதங்கள்!
மனித உடல் சூட்டில் எனது சிறுநீர்
சட்டென்று வெளியேற,
வீசி எறியாத குறையாய் பெற்றவளிடம்
தள்ளுகின்ற பல முகங்கள்!
பட்டாடைமேல் மலம் கழித்தாலும்
முகம் சுளிக்காமல் எனைக் கொஞ்சுகின்ற
ஓர் முகம்! - பத்துமாத பந்தம் மட்டுமல்ல!
எனது முகவரிக்குள் எழுத்தாகி ,
உயிர் மெய்யாய் உலவும் தாயெனும்
தியாகத்தின் விளைநிலம்!

............கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, ஜூன் 08, 2012

சூட்சும நெறிகளை அறியவேண்டும்!




உணர்வுகள் மனித உடலின்
இரசாயனக் கலவை என்பதை
யாவரும் அறிந்ததே!
மனித இதயத்தின் இயக்கங்களை
மன அழுத்தம் கட்டுப்படுத்த இயலும்!
வெளியில் சொல்லப்படாத கவலைகள்
இரத்த நாளங்களை செயலிழக்கச் செய்யும்!
மொத்தத்தில் மனிதன் தனது
மூளையின் ஒழுங்கான செயல்பாட்டில்
இயங்கவிடாமல் வாழ்கிறான்!
செம்மையான சிந்தனைகளாலும்
அமைதி தியானம் போன்ற
அக ஒழுக்கங்களில்
வாழ்நாளை கூட்டவும் செய்யலாம் !
சிரிக்கத் தெரிந்த மனிதன்
வாழ்நாளில் புலம்பும் அவலநிலையை
சிரமேற் கொள்கிறான்!
சும்மா இருத்தலே சுகம் எனும்
ஞானியர் கூற்றில் ஒளிந்திருக்கும்
சூட்சும நெறிகளை அறியவேண்டும்!
மனிதம் வாழத்தான் பிறந்துள்ளது
என்பதை அறிய வேண்டும்!
வீடு பேற்றின் வாயிலைத் தொட
நாடு கடந்து போகத்தேவை இல்லை !
மனம் எனும் உள்ளக் கோயிலின்
மணிக் கதவுகளை சாந்தமெனும்
சாவி கொண்டு திறந்தாலே போதுமானது!

....கா.ந.கல்யாணசுந்தரம்.

புதன், ஜூன் 06, 2012

இனி காத்திருப்பு பயனில்லை...




நானொரு வெற்று காகிதம்தான்
என்றாலும் உன் கரம் பட்டு
காகித ஒடமானேன்!
அலைகளில்லா குளத்தில்
என்னை மிதக்கவிட்டு
வேடிக்கைப் பார்க்கிறாயே!
இது நியாயமா?
ஓடம் ஓடவேண்டும்...
மூழ்கினாலும் கப்பல் அழகென்று
இந்த மானுடம் வர்ணிக்கிறதே!
அலைகள்தான் எங்களின் வாழ்கையை
நிலைப்படுத்தும் ஆயுதம்!
நங்கூரங்கள் கூட பலநேரம்
நம்பிக்கை இழக்கிறது!
நில அதிர்வுகளில் அலைகள்
அரக்க குணம் கொண்டழிக்கிறது!
எங்களுக்கு உறுதுணையாய்
உடன்வந்தாலும் .....
உனது உள்ளமதை நாமறிவோம்!
இலக்குகளின்றி பயணித்தலை
பாய்மரக்கப்பல்கள் அறிந்திருந்தாலும்
மாலுமியின் திறனறிந்து
பயணித்தலே எங்கள் நோக்கம்!
அடி பெண்ணே! உண்மையை சொல்லிவிடு...
சும்மா எங்களுடன் உறவாடாதே...!
உனது எண்ணத் திசைகளை நன்கறிவோம்...!
இனி காத்திருப்பு பயனில்லை...
இனிய பயணிப்பு நம்மோடு பூத்திருக்கு....
பயணிப்போம் இலக்கை நோக்கி!

.......கா.ந.கல்யாணசுந்தரம்

திங்கள், மே 21, 2012

ஹைக்கூ ... தத்துவ மலர்கள்




@ பரந்த மனம் இல்லையெனில்
எப்போதும் இதயம் சுமக்க நேரிடும்
அந்தரங்க அமைதியின்மை !

@ நோக்கமும் கொள்கையும்
செயல்திறனுடன் இணைந்தால் தெரியும்....
முன்னேற்றப் பாதையின் முதல்படி !

@ மன ஏரியில் முகிழ்த்து
அடிக்கடி உடைந்துபோகிறது...
எண்ணக் குமிழ்கள் !

@ உறவுகளின் நல்வாழ்வில்
பங்குபெறும் உதவிக்கரங்கள் ...
இறைவனின் வழிபாட்டுக்கு உகந்தது!

@ தவறான சிந்தனைகளை களைய
எப்போதும் தேவைப்படுகிறது...
மற்றுமொரு கற்பனை எண்ணம் !

@ உன்னை அறிதலால்
புனிதமாகிறது....
தன்னம்பிக்கையின் பிறப்பிடம் !

@ அதர்ம களைகளை அகற்றி
தர்மத்தின் வேர்களுக்கு நீர் ஊற்று....
மலரும் மனிதநேய மலர்கள்!

.............கா.ந.கல்யாணசுந்தரம்

ஞாயிறு, மே 20, 2012

இலக்கை நோக்கி

அன்றாட வாழ்க்கை ஒரு
சுழற்சியாக இருக்கிறது...
புதுமைகளின் வரவுகள்
செயற்கையாய் மட்டுமே இருக்கிறது!
இயற்கையான புன்னகைகூட
பூக்காமலே இதழ்களுக்குள்
புதைந்துபோகிறது!
அழுத்தமான மனதுடன்
நெஞ்சம் இதயத்துடன்
தினம் தினம் போராடுகிறது!
பயணிப்பில் அர்த்தமற்று
திசைகளை அடையாளம் காணாது
மானுடம் தவிக்கிறது!
ஆசைகள் அரவமற்று மனதுக்குள்
நுழைந்து அரசாட்சி செய்கிறது!
பிறப்பில் ஏற்கனவே
எழுதப்பட்டுவிட்டது இறப்பு....
என்றாலும்.......
வாழ்வியல் அத்தியாயங்களில்
முத்திரைப் பதிக்கவே
தனித்துவ திறன்களை
அடையாளம் காண
இந்த மானுடத்திசுக்கள்
முற்படுகின்றன....!
இந்த சுழற்சி முற்றுப்பெறாது
ஆளுமை கதிர்வீச்சில்
இளமைக்காலங்கள் திசைமாறி
பயணிக்கிறது.....ஆம்
பாய்மரக் கப்பலில் இலக்கைநோக்கி!

..............கா.ந.கல்யாணசுந்தரம்.

புதன், மே 02, 2012

முன்னோக்கிய பயணிப்பில்....






இயற்கையும் செயற்கையும்

பின்னோக்கி நகர்கிறது ...

நமது முன்னேறும் பயணிப்பில்!



........கா.ந.கல்யாணசுந்தரம்.







செவ்வாய், ஏப்ரல் 24, 2012

என்னுடன் பழகிய நிழல் கூட....




*என்னுடன் பழகிய நிழல்கூட
இப்போது வெறுக்கிறது...
நிழல் தரும் மரங்களை வெட்டியதால் !

*எனது கிளைகளை வெட்டி
முடமாக்காதீர்.....
வெட்டினாலும் துளிர்த்திடுவேன்!

*படுத்து உறங்குபவர்களை விட
இளைப்பாறுபவர்களை விரும்புகிறேன்...
நிழல் தரும் மரங்கள் !

* அரம் கொண்டு மரம் அழித்தனர்
அறம் பொருள் இன்பமெனும்....
குறள் படித்த மாந்தர் !

* உங்களின் உயிர் மூச்சு எங்களிடம்
என்றாலும்....எங்களின் வாழ்வு உங்களிடமே....
மரங்களின் பெருமூச்சு !

..............கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, ஏப்ரல் 13, 2012

வசந்த வாயில் மாவிலைத் தோரணமே!

















சிந்தனை மலர்கள் தூவி
நந்தன ஆண்டு இன்று
சிறப்புற மலர்ந்ததுவே !
வண்ணங்கள் ஒருங்கிணைந்து
எண்ணங்களில் உயிர்த்தெழுந்து
வாழ்க்கைச் சுவற்றில்
நாளும் வரைந்திடுமே
நல்லதொரு ஓவியம்!
மனிதநேயம் மலரும்
மண்மீது மாண்புடனே!
சித்திரைத் தமிழ் மகளே
சிரம் தாழ்த்தி வணங்குகிறோம் !
வசந்த வாயில் மாவிலைத் தோரணமே !
வந்திங்கு வாழ்த்தொலிகள் ஏற்றிடுவாய் !
........கா.ந.கல்யாணசுந்தரம்.

புதன், ஏப்ரல் 11, 2012

வேர்களின் தேடல்.....













பூக்களுடன் உறவாடும்

வண்டுகளுக்கு தெரியுமா?

வேர்களின் தேடலை ....!


..........கா.ந.கல்யாணசுந்தரம்.

ஞாயிறு, ஏப்ரல் 08, 2012

கனவு மெய்ப்பட வேண்டும்



















நடந்து செல்ல செல்ல
எனது தூரம் வளர்கிறது
பாதை ஏனோ முடியவில்லை !
அருகில் எவரையும்
காண முடியவில்லை !
தேநீர் அருந்த எவ்வளவு
தூரம் பயணிப்பது?
ஒரு ஓலைக் குடிலுக்கு அருகில்
எனது தாய் என்னை வரவேற்கிறாள்!
மகனே...கால் வலிக்கிறதா?
உள்ளே வா ..... உனக்கு தேநீர் தருகிறேன்
என்றழைத்து ஒரு கோப்பை தேநீர்
அருந்தத் தருகிறாள்!
என் கரங்களைப் பற்றி
அவள் கண்ணீர் மல்க கூறுகிறாள்
" தடைக் கற்கள் என்றுமே
உனது படிக் கற்கள் தான்!
சோர்வு அடையாதே.....
என்றாவது இந்த உலகம்
உன்னை திரும்பி பார்க்கும்"
இந்த உற்சாக வார்த்தைகள்
என்னுள் ஆனந்த ராகங்களை
மீட்டுகிறது......
எனக்கு புதியதாய் சிறகுகள்
முளைக்கின்றன......
இதோ ....நான் பறந்து செல்கிறேன்...
இப்போது நான் பயணிக்கும் தூரம்
அதிகமில்லை!
இலக்குகள் என்னருகே.........!

............கா.ந.கல்யாணசுந்தரம்.

திங்கள், ஏப்ரல் 02, 2012

எங்கள் வீட்டு தோட்டத்தில்....

எங்கள் வீட்டுத் தோட்டத்தில்
புரட்சி புரட்சி என கேட்கிறது...
பறவைகளின் ஒலி

எங்கள் வீட்டுத் திண்ணையில்
அழியாத சுவடுகளாய் ...
மூதாதையரின் அமர்விடங்கள் !

எங்கள் வீட்டுப் பரணையில்
பழைய புத்தகக் கட்டுக்குள்...
நட்பின் அடையாளங்கள் !

எங்கள் வீட்டின் சன்னலருகே
முத்தமிடும் ...
நிலவொளி நிழல்கள் !

எங்கள் வீட்டு முற்றத்தில்
எப்போதும் காத்திருக்கிறேன்....
அணிலோடு விளையாட !

எங்கள் வீட்டு கதவிடுக்குகளில்
கண்ணை வைத்துப் பாருங்கள்...
இவளின் முகமழிந்த கோலங்கள் தெரியும்!

ஞாயிறு, மார்ச் 25, 2012

ஒளவையாரின் கொன்றைவேந்தன்
















கடவுள் வாழ்த்து

கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே

உயிர் வருக்கம்
1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று
3. இல்லறம் அல்லது நல்லறம் அன்று
4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்
5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்
8. ஏவா மக்கள் மூவா மருந்து
9. ஐயம் புகினும் செய்வன செய்
10. ஒருவனைப் பற்றி ஒரகத்து இரு
11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்
12. ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு
13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு

ககர வருக்கம்
14. கற்பெனப்படுவது சொல் திறம்பாமை
15. காவல்தானே பாவையர்க்கு அழகு
16. கிட்டாதாயின் வெட்டென மற
17. கீழோர் ஆயினும் தாழ உரை
18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்
20. கெடுவது செய்யின் விடுவது கருமம்
21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை
22. கைப் பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி
23. கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி
24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு
25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை

சகர வருக்கம்
26. சந்நதிக்கு அழகு வந்தி செய்யாமை
27. சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு
28. சினத்தைப் பேணின் தவத்திற்கு அழகு
29. சீரைத் தேடின் ஏரைத் தேடு
30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
31. சூதும் வாதும் வேதனை செய்யும்
32. செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும்
33. சேமம் புகினும் யாமத்து உறங்கு
34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்
35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்
36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்

தகர வருக்கம்

37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
38. தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
40. தீராக் கோபம் போராய் முடியும்
41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு
42. தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்
43. தெய்வம் சீறின் கைத்தவம் மாளும்
44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும்
45. தையும் மாசியும் வையகத்து உறங்கு
46. தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது
47. தோழனோடும் ஏழைமை பேசேல்

நகர வருக்கம்
48. நல்லிணக்கம் அல்லல் படுத்தும்
49. நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை
50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை
51. நீரகம் பொருந்திய ஊரகத்து இரு
52. நுண்ணிய கருமமும் எண்ணித் துணி
53. நூல்முறை தெரிந்து சீலத்து ஒழுகு
54. நெஞ்சை ஒளiத்து ஒரு வஞ்சகம் இல்லை
55. நேரா நோன்பு சீராகாது
56. நைபவர் எனினும் நொய்ய உரையேல்
57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்
58. நோன்பு என்பதுவே (? என்பது) கொன்று தின்னாமை

பகர வருக்கம்
59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்
60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்
61. பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்
62. பீரம் பேணி பாரம் தாங்கும்
63. புலையும் கொலையும் களவும் தவிர்
64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்
65. பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும்
66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்
67. பையச் சென்றால் வையம் தாங்கும்
68. பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்
69. போனகம் என்பது தான் உழந்து உண்டல்

மகர வருக்கம்
70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்
71. மாரி அல்லது காரியம் இல்லை
72. மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை
73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது
74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு
77. மேழிச் செல்வம் கோழை படாது
78. மை விழியார் தம் மனையகன்று ஒழுகு
79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம்
80. மோனம் என்பது ஞான வரம்பு

வகர வருக்கம்
81. வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண்
82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும்
83. விருந்திலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்
84. வீரன் கேண்மை கூரம்பு ஆகும்
85. உரவோர் என்கை இரவாது இருத்தல்
86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை
88. வேந்தன் சீறின் ஆம் துணை இல்லை
89. வைகல் தோறும் தெய்வம் தொழு
90. ஒத்த இடத்து நித்திரை கொள்
91. ஓதாதார்க்கு இல்லை உணர்வொடும் ஒழுக்கம்

ஒளவையாரின் ஆத்திச்சூடி
















வாழ்த்து

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.


உயிர் வருக்கம்
1. அறம் செய விரும்பு
2. ஆறுவது சினம்
3. இயல்வது கரவேல்
4. ஈவது விலக்கேல்
5. உடையது விளம்பேல்
6. ஊக்கமது கைவிடேல்
7. எண் எழுத்து இகழேல்
8. ஏற்பது இகழ்ச்சி
9. ஐயம் இட்டு உண்
10. ஒப்புரவு ஒழுகு
11. ஓதுவது ஒழியேல்
12. ஒளவியம் பேசேல்
13. அஃகம் சுருக்கேல்


உயிர்மெய் வருக்கம்
14. கண்டொன்று சொல்லேல்
15. ஙப் போல் வளை
16. சனி நீராடு
17. ஞயம்பட உரை
18. இடம்பட வீடு எடேல்
19. இணக்கம் அறிந்து இணங்கு
20. தந்தை தாய்ப் பேண்
21. நன்றி மறவேல்
22. பருவத்தே பயிர் செய்
23. மண் பறித்து உண்ணேல்
24. இயல்பு அலாதன செய்யேல்
25. அரவம் ஆட்டேல்
26. இலவம் பஞ்சில் துயில்
27. வஞ்சகம் பேசேல்
28. அழகு அலாதன செய்யேல்
29. இளமையில் கல்
30. அரனை மறவேல்
31. அனந்தல் ஆடேல்


ககர வருக்கம்
32. கடிவது மற
33. காப்பது விரதம்
34. கிழமைப்பட வாழ்
35. கீழ்மை அகற்று
36. குணமது கைவிடேல்
37. கூடிப் பிரியேல்
38. கெடுப்பது ஒழி
39. கேள்வி முயல்
40. கைவினை கரவேல்
41. கொள்ளை விரும்பேல்
42. கோதாட்டு ஒழி
43. கௌவை அகற்று


சகர வருக்கம்
44. சக்கர நெறி நில்
45. சான்றோர் இனத்து இரு
46. சித்திரம் பேசேல்
47. சீர்மை மறவேல்
48. சுளiக்கச் சொல்லேல்
49. சூது விரும்பேல்
50. செய்வன திருந்தச் செய்
51. சேரிடம் அறிந்து சேர்
52. சையெனத் திரியேல்
53. சொற் சோர்வு படேல்
54. சோம்பித் திரியேல்


தகர வருக்கம்
55. தக்கோன் எனத் திரி
56. தானமது விரும்பு
57. திருமாலுக்கு அடிமை செய்
58. தீவினை அகற்று
59. துன்பத்திற்கு இடம் கொடேல்
60. தூக்கி வினை செய்
61. தெய்வம் இகழேல்
62. தேசத்தோடு ஒட்டி வாழ்
63. தையல் சொல் கேளேல்
64. தொன்மை மறவேல்
65. தோற்பன தொடரேல்


நகர வருக்கம்
66. நன்மை கடைப்பிடி
67. நாடு ஒப்பன செய்
68. நிலையில் பிரியேல்
69. நீர் விளையாடேல்
70. நுண்மை நுகரேல்
71. நூல் பல கல்
72. நெற்பயிர் விளைவு செய்
73. நேர்பட ஒழுகு
74. நைவினை நணுகேல்
75. நொய்ய உரையேல்
76. நோய்க்கு இடம் கொடேல்


பகர வருக்கம்
77. பழிப்பன பகரேல்
78. பாம்பொடு பழகேல்
79. பிழைபடச் சொல்லேல்
80. பீடு பெற நில்
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
82. பூமி திருத்தி உண்
83. பெரியாரைத் துணைக் கொள்
84. பேதைமை அகற்று
85. பையலோடு இணங்கேல்
86. பொருள்தனைப் போற்றி வாழ்
87. போர்த் தொழில் புரியேல்


மகர வருக்கம்
88. மனம் தடுமாறேல்
89. மாற்றானுக்கு இடம் கொடேல்
90. மிகைபடச் சொல்லேல்
91. மீதூண் விரும்பேல்
92. முனைமுகத்து நில்லேல்
93. மூர்க்கரோடு இணங்கேல்
94. மெல்லி நல்லாள் தோள்சேர்
95. மேன்மக்கள் சொல் கேள்
96. மை விழியார் மனை அகல்
97. மொழிவது அற மொழி
98. மோகத்தை முனி


வகர வருக்கம்
99. வல்லமை பேசேல்
100. வாது முற்கூறேல்
101. வித்தை விரும்பு
102. வீடு பெற நில்
103. உத்தமனாய் இரு
104. ஊருடன் கூடி வாழ்
105. வெட்டெனப் பேசேல்
106. வேண்டி வினை செயேல்
107. வைகறைத் துயில் எழு
108. ஒன்னாரைத் தேறேல்
109. ஓரம் சொல்லேல்

nanri: Thamizh Ilakkiyam


--------------------------------------------------------------------------------

வெள்ளி, மார்ச் 23, 2012

விடியல் பறவைகள்

'அருவி ' கவிதை இலக்கிய காலாண்டிதழில் ( ஹைக்கூ - 786 சிறப்பிதழ்) இடம்பெற்றுள்ள எனது கவிதைகளை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

* பூங்காவில்
ஒரு நேர்காணல்
பூக்களோடு

* மண்வாசனையின்
தாய்வீடானது
பிறந்த கிராமம்

*வண்ணக் கலவைகள்
உயிர்த்தெழுந்தன
பட்டாம்பூச்சி

* ஒட்டடைக் குச்சியின்
ஒரு சிதைந்த வரலாறு
சிலந்தி வலைகள்

* மேய்ச்சல் இடமின்றி
தவித்துப் போயின
மந்தைவெளி மாடுகள்

* சுமப்பதில் எப்போதும்
தோள்களைவிட
மனசு

* நெஞ்சம் மகிழும்
உதய கீதங்களுடன்
விடியல் பறவைகள்

* பசியற்ற வாழ்வுக்கு
நல்லதோர் சுவர்தேடும்
கரித்துண்டு ஓவியன்

^ வாழ்க்கை வெளிச்சமின்றி
நகரும் விளக்குத் தூண்கள்
திருமண ஊர்வலத்தில்

* இல்லம் நிறைந்திருந்தது
பொன் பொருளால் அல்ல
மழலைச்சொற்களால்

.......கா.ந.கல்யாணசுந்தரம்,

(நன்றி: அருவி ஹைக்கூ சிறப்பிதழ்)

ஞாயிறு, மார்ச் 18, 2012

நட்பின் இலக்கணம்


 
பிரித்து எழுதி
                    பொருள் கூற முடியாது.... ....
நட்பின் இலக்கணம் 

 
.......கா.ந.கல்யாணசுந்தரம்.
 

ஞாயிறு, மார்ச் 04, 2012

இனிய ஹைக்கூ ஒரு மொழிபெயர்ப்பில்.....


அன்பார்ந்த வலைத்தள உறவுகளே, எமது மனிதநேயத்துளிகள் எனும் ஹைக்கூ கவிதை நூலில் இருந்து
சில முக்கிய ஹைக்கூ கவிதைகள் மலையாளத்தில் http://www.wonderhaikuworlds.com/ வலைத்தளத்தில் மொழிபெயர்க்கப்பட்டன.
தங்களின் சிறப்புப் பார்வைக்கு.


*வைகறையில் சூரியனை
பங்குபோட்டன....
தென்னங் கீற்றுகள்!

*ഉദയ സൂര്യന്
തുണ്ടം തുണ്ടമായി -
ഓലക്കീറുകള്
.....................


*பாய்மரக் கப்பலில்
பயணிக்கிறோம்...
எண்ணிலா இலக்கை நோக்கி.


*പായ്മര കപ്പലില്
യാത്രയില്
മഹത്തായ ദിക്ക് നോക്കി
....................


*வீட்டின் கூரையில்
புதுமனை புகுவிழா...
சிட்டுக்குருவிகள்

*വീടിന്റെ കൂരയില്
ഒരു പാലു കാച്ച്
ചെറു കുരുവികള്


....................

*பலவண்ண மலர்கள்
நார் ஒன்றில்....
ஒருமைப் பாட்டுணர்வுடன்!


*പല വര്ണ മലര്കള്
ഒരു നാരില് നിന്ന്..
ഒരുമയിന് ഉണര്വുമായി
....................

சில்லரை காசுகள்தான்
இன்னிசைப்பாடல்கள்
தெருப்பாடகன்.

*ചില്ലറ കാശുകള് തന്നെ
എന്റെ മധുര ഗാനങ്ങള്
തെരുവ് ഗായകന്
...................
*இல்லையென்று சொல்லாமல்
ஒருமாலரினை கொடு
நெஞ்சம்நிறையும்

*ഇല്ലെന്ന് ചൊല്ലാമല്
ഒരു പൂവെങ്കിലും കൊടുക്കു ~
മനം-നിറയെ ആനന്ദം
...................
*மூழ்கியும் மலர்ந்தன
நீர் வட்டங்களாய்
குளத்தில் எறிந்த கல்

*മുങ്ങി പോയെങ്കിലും
മലര്ന്നു ജല വൃത്തങ്ങളായി ...
കുളത്തില് എറിഞ്ഞ കല്ല്

.....................

*உவர்க்கும் உறவுகளும்
இனிக்கும் பலாச்சுளையாய்
பிரிவின் நிழலில்

*കയ്ക്കുന്ന ബന്ധങ്ങളും
മധുരിക്കുന്ന ചക്ക ചുളകളായി
വേര്പാടിന്റെ നിഴലുകളില്
.............

.........கா.ந.கல்யாணசுந்தரம்.

செவ்வாய், பிப்ரவரி 28, 2012

காலையும் மாலையும்

கிராமத்து அத்தியாயங்கள்தான்
ஒரு சரித்திரம் படைக்கும் சித்திரங்கள் !
அகன்ற மண் தெருக்களில் வெள்ளநீர்
மழைநாளில் சிறுவர்களின்
காகிதக் கப்பல் விடும்
ஆற்றுப் படுகையானது!
கிராமத்து கிழக்கு வாசல்
அம்மன்கோயில் அனைவர்
வாழ்வோடு பக்திநெறி வளர்த்தது!
ஆலமரத்து நிழல் குடை
பாடித் திரியும் பறவைகள் சரணாலயம் ஆனது!
கிராமத்து திண்ணைகள் ஒரு
பாரம்பரியத்தின் சொத்தானது!
மனிதநேயம் வளர்த்த
மாண்புறு மேடையானது!
காலையும் மாலையும்
கிராமத்தின் எழிலார்ந்த ஓவியமானது!
வயல் பரப்பு ஒற்றையடிப் பாதைகள்
விட்டுக் கொடுக்கும் பண்பை வளர்த்தன!
கிராமங்கள் நகரமாகி நரகமாகும் நிலை
இனிவேண்டாம் !
படித்துப் பட்டம் பெற்றாலும்
ஏர்ப்பின்னதுதான் உலகம் என்றுணர்ந்து
இயற்கையோடு இயந்து வாழ வாருங்கள்!

............கா.ந.கல்யாணசுந்தரம்.

ஞாயிறு, பிப்ரவரி 26, 2012

தருணம் தரும் சுகம்





















பாச உணர்வுகள்
நேசமுடன் வெளிப்படுத்தும்
இருவிழி வாசல்கள்
எப்போதும் துடித்திருக்கின்றன !

விளக்கொளி சாம்ராஜ்ஜியத்தில்
மின்மினி பூச்சிகளின்
ஊர்வலங்கள் எப்போதாவது
நடைபெறும் காரிருளுக்காக!

தனக்கொரு வீடில்லை என
எப்போதும் தென்றல் நினைத்ததில்லை !
கட்டுப்பாடு அறியா சிட்டுகள்கூட
கூடு கட்ட தவறியதில்லை!

நதிமிகு வெள்ளம் அணைக்குள்
சிறைபட்டாலும் வளர்மிகு
வயலுக்கு ஜீவனாகி
வான்சிறப்பில் வாழ்ந்திடும்!

இதயம் வளர் அன்பெனும்
சிறைக்குள் அகப்படினும்
முறைப்படி மணம்முடிக்கும்
தருணத்தை வரவேற்போம் !

............கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, பிப்ரவரி 24, 2012

பிரிவோம் சந்திப்போம்.....















சந்தித்த வேளையில்
பகிர்ந்துகொண்ட உணர்வுகளுக்கு
ஒரு வடிகாலாய் அமைந்தது
நமது எதிர்பாரா நட்பு!

காலம் காலமாய்
உணவூட்டி கல்வி புகட்டி
நல்வழி காண்பித்த பெற்றோர்களை
மறத்தல் மாண்பாகுமா?

பின்தொடர்தலும்
காத்திருத்தலும்
காதலின் அத்தியாயங்கள்
என்றிருப்பின் முடிவுரை எங்கே?

என்னுடன் இணைவதே
இந்த பொன்னுடல் பெற்ற பேரெனில் ...
சுற்றம் மறந்து பயணித்தல்
உடன்போக்காகிவிடும்!

இந்த இனிய நட்பு
ஒரு இலக்கியக் காதலின்
முகவுரையாகட்டும்....
நட்புடன் இனி பிரிவோம் சந்திப்போம்!



.......கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், பிப்ரவரி 23, 2012

ஒரு மழை நாளில்....
















@வானத்து மழைத்துளிகளின்


வண்ணப் பதிப்பு....


வானவில் !




@புதியவர்களின் வருகைக்காக


மகிழ்ச்சியுடன் வீழ்கிறோம்...


ஒரு இலையுதிர்காலத்து இலை !




@மழைச் சாரல்களில்


ஒரு இனிய ஸ்பரிசம் நிகழ்கிறது....


விளையாடும் சிறுவர்களின் கண்களில்!




@இறை தேட வழியில்லை


சுவர் ஓரம் ஒதுங்குகின்றன...


மழையில் நனைந்த புறாக்கள்!




@ஒரு கோடை நாளின் வானப்பெண்ணின்


மேகக் கூந்தலுக்குள் நளினமாய்....


மின்னல் வகிடுகள் !



............கா.ந.கல்யாணசுந்தரம்.

திங்கள், பிப்ரவரி 13, 2012

முப்பொழுதும் நினைத்திருப்போம்!

மண்ணுலகை ஓரடியால்
வாமனன் அளந்தாலும்
வள்ளுவனின் ஈரடி குறள்
நம் நினைவில் தடம் பதிக்கிறது

நல்லுலகில் வள்ளுவம் வழி
நடக்கின்ற மாந்தரெல்லாம்
நல்வழிகண்டு நலம்பெருவர்
மதுரை சங்கம் கண்ட மாண்புறு தமிழ்
மண்ணில் சரித்திரம் படைத்ததுவே

செம்மொழியாய் செம்மாந்து
சேய்மையில் வாழ்வோரிடத்தும்
இன்றும் சொல்தொடுத்து
வாழ்வியலில் வளமோடு இலங்கியதே

கல்தோன்றி மண்தோன்றா காலத்தே
முன்தோன்றி மூத்த தமிழென்று
முன்னோர்கள் பகர்ந்ததை
மீண்டும் மீண்டும் பறைசாற்றி
பேசுவதில் பயனில்லை

மென்பொருள் அறிவியலில் மேலும்
தடம்பதிக்க விழைகின்றோம்!
மென்பொருள் துறை வல்லுனர்களே
தமிழின் தரம் ஆய்ந்து துறைதோறும்
தமிழ் மென்பொருள் கணணிவளர
அயராதுழைத்திடுங்கள்....!

இந்நூற்றாண்டில் மொழிப் புரட்சி
போர்க்கள தளபதி
எப்போதும் நீங்கள்தான்...!
முத்தமிழின் சிறப்புயர்த்தும்
இத்தரையின் மாந்தர்களை
முப்பொழுதும் நினைத்திருப்போம்!!!

..........கா.ந.கல்யாணசுந்தரம்.

திங்கள், பிப்ரவரி 06, 2012

அசையாதா அரசியல் தேர்.....

சோழர் கால உத்திரமேரூர்
கல்வெட்டு செப்புகின்ற
மக்களாட்ச்சியின் மகிமை
நாடறிந்த ஒன்று!
இடிப்பார் இலாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும் எனும்
குரள்மொழி இன்றும் கோலோச்சுகிறது!
எங்கும் ஊழல் எதிலும் ஊழல்தான்
இதுதான் விதியென மக்கள் நினைத்து...
வாழும் அவல நிலை இன்றும் உளது!
ஊழலின் வித்தாக அரசியல் கண்டோர்
உலவும் மாநிலத்தில் மக்களாட்சி,
மாற்றம் எப்போதும் கண்டதில்லை!
அடிபணியும் மக்களும் அதிகார வர்க்கமும்
புற்றீசலாய் புவிமீது எப்போதும்!
பொதுஉடைமைக் கொள்கைதனை
போதிக்கும் காந்தி இனிபிறப்பினும்,
ஆதரிக்கும் அரசியலாரைக் காண்பதறிது!
இளைய சமுதாயமே! இனி பொறுத்தது போதும்
பொங்கி எழுவென்று குரல்கொடுப்பினும்....,
எல்லோரும் ஏங்குகின்றனர்....
நல்லதொரு சமுதாயம் பிறப்பெடுக்க,
மக்களாட்ச்சியில் ஒரு மறுமலர்ச்சி பிறந்திட,
அசையாதா அரசியல் தேர் இனியேனும் !

........கா.ந.கல்யாணசுந்தரம்.

வேரை மறந்த விழுதுகள்....

ஆல் போல் தழைத்து
அருகுபோல் வேரூன்றி
பல்லாண்டு வாழ்கவென
வாழ்த்தும் பெரியோர்கள்
முத்திரைப் பதித்தனர்! -கனணியுக
வாழ்வுதனில் கால்பத்தித்த இளைஞர்கள்
தேடலே வாழ்க்கையென
பொன்னான மனிதநேய
வாழ்வுதனை தொலைக்கின்றார்!
இயந்திரமாய் இயங்குகிற
உலகமதில் உழன்றுழன்று முடங்கும்
தெளிவற்ற சிந்தனையில்- வயோதிகர்
உளமதனைஅறிந்திடாமல்
அறிவிழப்போர் ஏராளம்!
பிள்ளைகளின் எதிர்கால வாழ்வுதனை
செல்லரிக்கா விழுதெனவே வளர்த்து
சுயவளர்ச்சி காணாத பெற்றோர்கள்
வலுவிழந்து வீழுகின்ற
சூழலை நாம் காணுகின்றோம்!
காப்பகங்கள் சாலைதோறும்
தோன்றிற்று இந்நாளில்!
வயது முதிர்ந்தாலும்
அனுபவப் பெட்டகங்கள்
பயனின்றி காப்பகத்தில்
வாழும் நிலை அறிவோம்!
நல்லதொரு குடும்பம்
பல்கலை என்பதனை நிலை நிறுத்த,.
வேரை மறந்த விழுதுகளை இனங்கண்டு
தரையைத் தொடவைப்போம்! - ஆல்
தழைத்து அனுபவத்தை பகிர்ந்திடவே!

.........கா..கல்யாணசுந்தரம்.

( நன்றி: ஈகரை தமிழ் களஞ்சியம்)

ஞாயிறு, ஜனவரி 29, 2012

நிலமகள் நோதல் இன்றி....
















வேலை வெட்டி ஏதுமில்லையென
நாளும் வெட்டியாய் ஊர் சுற்றும் வாலிபர்கள்
தோளினை சுமக்கும் உடல்கள்
இருந்தென்ன இலாபம்?
விவசாயம் தழைக்கின்ற விளைநிலங்கள்
ஏராளம் நம் நாட்டில்!
படித்துவிட்டு வேலையின்றி
பகட்டாய் வாழ்ந்ததெல்லாம்
வீணே என்றறியும் முன்
வீறுகொண்டு எழுவீர் இளைய தலைமுறையே...
பாட்டன் கொடுத்த வயல்காட்டில்
பொன்விளையும் பூமி இதுவென்று போற்றி
எர் பிடித்து உழுதிடுவீர்!
தைமகள் உங்கள் வீடு தேடி
தானியக் களஞ்சியத்தை கொட்டிடுவாள்
இது உறுதி நம்பிடுவீர் ! - இனி
பயிரிடா விளைநிலங்கள்
இருத்தலாகாது என இயம்பிடுங்கள்!
நிலமகள் நோதலின்றி வாழ்ந்திடுங்கள்!

.....கா.ந.கல்யாணசுந்தரம்,
நன்றி: ஈகரை தமிழ் களஞ்சியம்

வெள்ளி, ஜனவரி 27, 2012

இந்தக் காதல் எதுவரை?
















புரிதலின் பயணிப்பில் நேசிப்பு பூத்துக் குலுங்கும்
நினைவுகளில் தேன்சொரிந்து இதயம் குளிரும்
வாசமிகு வாழ்வுக்கான வசந்த வாயில்கள்
வழியெங்கும் வரவேற்கும் - ஆம்
இதுதான் காதலின் மேன்மையென உள்ளங்கள்
ஒரு புரியாத ஸ்பரிசத்தில் பரவசப்படும்!
மார்கழிப் பனி பாவையர்க்கு உன்னத நோன்பானது
சூடிக்கொடுத்தவளின் திருவாயால்!
பயணிப்பின் எல்லை பயணிக்கும் திசையில்
ஒரு இடமறிந்த உண்மை!
நேசிப்பின் நடை இருமனங்களின்
எல்லையற்ற தூரத்தின் விளிம்புகள்!
வயதின் மூப்பிலும் வியப்பின்றி விருந்துவைக்கும்
இல்லத்துணையின் ஈடற்ற அன்பே காதல்!- இந்தக்
காதல் எது வரை? ....எனக்கேளின்....
துளிர் விடும் மனம் முதல் துவளும் நாள் வரை
துணைவருமே காதல் மாசற்ற முகத்துடன்...!
எனச் சொல்வோம் நேசமுடன் எந்நாளும் !


..........கா.ந.கல்யாணசுந்தரம்.

( நன்றி: ஈகரை)

தூரத்து உறவுகள் எப்போதும் ......

உறவுகளில் உன்னதமென்று
மாதா, பிதா. குரு தெய்வமென முன்னோர்கள்
அந்நாளில் கண்டறிந்த உண்மை!
அகல உழுவதிலும் ஆழ உழும் விவசாயி
கொண்டிருக்கும் உறவோ விளை நிலமீது!
நெய்யும் தொழிலுக்கு நிகரில்லையென
நெசவாளியின் உறவோ நெய்யும் தறி மீது!
உண்ண உணவு உடுக்க உடை
இவ்விரண்டும் கிடைத்தபின்
இருக்கும் இடம்தான் இன்றியமையாதது!
இடர் அகற்றி இனிதே தங்க
வீடென்பது விதிவிலக்கல்ல வாழ்வுக்கு!
உறவுகளின் மேன்மை சுற்றத்தாரோடு
முடிவதில்லை மானுட வாழ்வில்!
கற்றறியா சிற்பி கல்லுடன்
உளிகொண்டு உறவாடலில்
உன்னத சிலை வடிக்கும்
அற்புதம் காண்கின்றோம்!
உறவுகள் அண்மையில் இருப்பினும்
சேய்மையில் இருப்பினும்
மேன்மை காண்பதில்
இருக்கிறது மனிதநேயம்!
உவர்ந்து கசந்த போதிலும்
தூரத்து உறவுகள் எப்போதும்
இனிப்பதுண்டு பலாச்சுளையாய்......
பிரிவின் நிழலில் !

...........கா.ந.கல்யாணசுந்தரம்.

புதன், ஜனவரி 18, 2012

இனிய தமிழ் இனி

அகரம் பயின்ற நாள் முதலே
அன்னைத்தமிழில் பேசும் கலை கற்றோம்!
ஆன்மிகம் வளர்த்த இன்தமிழ்
ஆலம் விழுதாய் நிலமதில் நிலைத்தது!
இதழியல் வரலாற்றில் இமயம் தொட்டு
இணைய தளத்திலும் தடம் பதித்தது!
ஈதலும் இசைபட வாழ்தலும் நம் தமிழர்
ஈடிலா கொள்கையாய் சிரமேற்கொண்டனர்!
உலகின் மொழிகளில் செம்மொழியென
உன்னத இடம் கொண்டு உலவுகிறது!
ஊருணி பலருக்கும் உதவுதல் போல்
ஊக்கமுடன் நம் அறிஞரெல்லாம் செயல்படுவர்!
எங்கும் தமிழே முழங்கக் கேட்போம்
எதிலும் தமிழே வழங்கக் கேட்போமென
ஏங்கும் இளைஞர் அயராதுழைப்பர்!
ஏற்றமிகு சொல்வனத்தில் புவியெங்கும்
ஐயமின்றி தேன்பொழியும் மணமலறாய்
ஐயன் வள்ளுவன் திருவடி குறள் சிறக்க
ஒப்பிலா மொழியிதுவென உலகு மொழிகளை
ஒருங்கிணைத்து எபோதும்
ஓங்கு புகழுடன் இனியத் தமிழினி
ஔவை முதல் இன்றைய கவிகள் வரை
புகழ் சேர்த்து புவிமீது ஓயாது உலவும் !
............கா.ந.கல்யாணசுந்தரம்.

(nanri: eegarai.net)

நடக்க முடியாத நதிகள்
















பலவீனத்தின் குறியீட்டில் ஒரு பாலின மனிதம்!
அது பெண்மையெனும் மலரினையொத்த
மெல்லிய பூங்காற்று! - ஆம் நிலமதில்
ஒரு நூல்கண்டு வேலியில்
ஓடி விளையாடும் நூலறுந்த பட்டங்கள்!
பெண்ணியம் பேசுகின்ற பெண்டிரெல்லாம்
புரிதலான வாழ்வுக்கொரு வழி தந்தால்
பாரத மண் மீது பெண்மைக்கொரு பெருமைதான்!
உளவியலை ஆராயாமல் உடலியலில்
ஆவல் கொண்டு மணம்புரியும் மாந்தரெல்லாம்
நல்லதொரு வீணையை நலங்கெட புழுதியில்
எரிவதைக் காணுகின்றோம்!
விலைகேட்டுப் போனார்கள் திரும்பவில்லை - என்
வினைக்கூர்றின் மணநாளும் அரும்பவில்லையென
முதிர்கன்னியாய் முகமழியும் மகளிரைக் காணுகிறோம்!
பாரினில் பெண்கள் சட்டங்கள் ஆளினும்
வரதட்சணை நவீனமாய் உருவெடுத்து ஆள்கிறதே!
கலியுக இளைய தலைமுறையே......
நல்லதோர் முடிவெடுங்கள் இனிமேலும்
நடக்க முடியாத நதிகள்
பூகோள நிலப்பரப்பில் வேண்டாம்!
புதியதோர் உலகு செய்வோம்!

........கா.ந.கல்யாணசுந்தரம்.

(ஈகரை தமிழ் களஞ்சியம் - இணையதளத்தில் பரிசு பெற்ற கவிதை)

சனி, ஜனவரி 14, 2012

பொங்கலிடு பொங்கலிடு !

தை மகளின் வரவு - நல்ல
தமிழிசையின் உறவு!
புத்தரிசி பொங்கலிட்டு
புத்தாடை அணிந்து
மண்ணின் மணம் கமழ
பாடுகின்ற நாளிது!
உழைப்போரின் உளம் மகிழ
உன்னத இயற்கையின்
இறையருள் நாளிது!
பொங்கலிடு பொங்கலிடு !
புதிய வாழ்வின் பூமணக்கும்
பொங்கலிடு!
மனிதநேயமுடன் பொங்கட்டும்!
தமிழர்தம் வாழ்வு உலகளவில்
தழைக்கட்டும்!
பொங்கலிடு பொங்கலிடு !
மனிதநேயப் பொங்கலிடு!
தமிழ்ப் புத்தாண்டின் வரவு கண்டு
தமிழ் கூறும் நல்லுலகு செழிக்க
பொங்கலிடு!

......கா.ந.கல்யாணசுந்தரம்.

ஞாயிறு, ஜனவரி 08, 2012

ஆருத்ரா தரிசனம் - ஆடல் காணீர்!

சபைகள் ஐந்திலும் திருவடி கண்டேன்!
நடனமிடும் பொற்பாத காட்சி - அது
காண்போரின் இப்பிறப்பின் மாட்சி!
திருவாதிரை திருநாளின் அற்புத நடனம்
ஒருநாளும் மறவாத ஆருத்ரா தரிசனம்!

ஓம் நமச்சிவாய! ஓம் நமச்சிவாய! ஓம் நமச்சிவாய ஓம்!

அம்பலத்து ஆடும் நடராஜரைத் தரிசிக்கச் சென்றால், அவரது இடது திருவடியை அவசியம் தரிசிக்க வேண்டும். ஏனெனில், அந்த தரிசனம், நம் பாவங்களை எல்லாம் போக்கி, சொர்க்கத்தை தந்து விடும். மேலும், தீர்க்காயுளையும் தரும்.

சிவபக்தரான மார்க்கண்டேயருக்கு, 16 வயதில், ஆயுள் முடிந்து விடும் என்ற நிலை இருந்தது. இதனால், அவரது தந்தை, மிகுந்த வருத்தத்தில் இருந்தார். குறிப்பிட்ட நாளில், எமன் வர, தன் பிரிவால், தந்தை துக்கப்படக் கூடாதே என்பதற்காக, சிவலிங்கத்தை கட்டி அணைத்துக் கொண்டார். லிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட சிவனின் இடது கால், எமனை எட்டி உதைத்தது. மார்க்கண்டேயன் தப்பித்தார். அந்த திருவடி பட்டதால், எமனுக்கும் மீண்டும் உயிர் கிடைத்தது.

இப்படிப்பட்ட சிறப்புக்குரிய நடராஜர், தமிழகத்தில், ஐந்து சபைகளில் அருள் பாலிக்கிறார். ரத்ன சபையான திருவாலங்காடு, பொன்னம்பலமான சிதம்பரம், வெள்ளியம்பலமான மதுரை, தாமிர சபையான திருநெல்வேலி, சித்திர சபையான குற்றாலம் ஆகியவை, அவரது அருளை வாரி வழங்கும் ஸ்தலங்கள். ஆருத்ரா தரிசனத்தன்று, உங்கள் ஊரிலுள்ள நடராஜரின் திருவடி தரிசனம் பெற்று, வாழ்க்கைத் துணைவியை இன்முகத்துடன் நடத்துங்கள்; தீர்க்காயுளும் பெறுங்கள்.





சிதம்பரம் கனகசபை : (பொற்சபை)
























திருவாலங்காடு இரத்தின சபை :
















மதுரை வெள்ளியம்பலம் :













திருநெல்வேலி தாமிர சபை:















திருக்குற்றாலம் சித்திர சபை:













எல்லா வளமும் அருளும் பெற்று அனைவரும் வாழ்க வளமுடன் என்று இறைவனை துதிக்கிறேன்!




அன்பன், கா.ந.கல்யாணசுந்தரம்.