
நம்மைச் சுற்றி உற்றுநோக்கினால்
எல்லாமே எதற்காகவோ
காத்திருக்கின்றன...
முற்றுப்பெறாத நீண்ட சாலைகள்
பயணிப்பின் வரவை எதிர்நோக்கி!
விதைக்கப்பட்டவை
அறுவடை நாளை நோக்கி!
உயர்ந்த மலை முகடுகள்
நீர்வீழ்ச்சியின் வரவுக்காக!
வான் மேகங்கள்
நல்ல மழை பொழிதலுக்காக!
தேன்கூட்டின் ஈக்களும்
தேனருந்த முழுநிலவின் வருகைக்காக!
மூங்கில் காடுகள்
எப்போதும் காத்திருக்கின்றன
நல்லதொரு
புல்லாங்குழலை பிரசவிக்க !
இப்படி எத்தனையோ
அசையும் அசையா
பொருட்கள் ஒரு காத்திருப்பின்
சுகத்தில் லயித்திருக்கின்றன!
உனக்கான எனது காத்திருப்பு மட்டும்
உனக்கு கசந்துவிட்டது ஏனோ ?
............கா.ந.கல்யாணசுந்தரம்.