கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

சனி, டிசம்பர் 31, 2011

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...


இரண்டாயிரத்து பன்னிரண்டு
அனைவருக்கும் இனிய ஆண்டு !
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
இயற்கை வளமுடன் என்றென்றும்
மானுடம் இனிதே வாழ்ந்து
சமுதாய முன்னேற்றம் காணும்!
நாடும் வீடும் பயனுறும் வண்ணம்
நன்மை மலிந்திடும் ஆண்டு!
பொன்னொளிர் வாழ்வில் அனைவரும்
நிம்மதி பெற்று நித்தம் மேன்மையுற
மனதார வாழ்த்துகிறேன்
இறைவனை வேண்டி !
வாழ்க வளமுடன்!
எல்லாப்புகழும் இறைவனுக்கே!

அன்பன், கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, டிசம்பர் 30, 2011

வலியறியாத...





நதி வருடிய கைகளின்
வலியறியாத...
கூழாங்கற்கள்!

......கா.ந.கல்யாணசுந்தரம்

மலரும் மங்கையும்



மலரும் மங்கையும்
ஒரு ஜாதியானதால்....
பட்டாம்பூச்சியின் சுவாசமானது!

....கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், டிசம்பர் 29, 2011

ஒரு பனிபொழியும் காலை


ஒரு பனிபொழியும் காலை
மேகப் போர்வைக்குள் ...
முடங்கிப்போனது சூரியக் கதிர்கள்!

...கா.ந.கல்யாணசுந்தரம்.

தவமாய் தவமிருக்கும்


தவமாய் தவமிருக்கும்
கூட்டுப்புழுவின் காத்திருப்பு....
ஒரு வண்ணமயமான வாழ்வுக்கு!

.......கா.ந.கல்யாணசுந்தரம்.

ஞாயிறு, டிசம்பர் 25, 2011

பெத்தலகேம் நகரின் புனிதமே..!






பெத்தலகேம் நகரின் புனிதமே!
அன்னை மரியாளின் அவதார புதல்வனே!
ஆண்டவனின் தூதனே....
கல்வாரிகுன்றின் முள் முடியரசனே!
அன்பும் கருணையும் ஈகையும்
உந்தன் பிரவிக்குணங்கள்!
உலகத்தின் பிறப்புகள் உந்தன்
வருகையால் புனிதம் பெற்றன!
வேதம் பைபிளில் சங்கீதமானது!
ஒரு கன்னத்தில் அறைந்தால்
மறு கன்னம் காட்டு என
மனிதநேயம் கற்பித்த மகாத்மாவே!
அடைக்கலமே உனது அபயகரம்!
உனது பிறந்தநாள் உலகில்
எல்லோர்க்கும் ஒரு புனிதநாள்!

..........கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, டிசம்பர் 23, 2011

சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்



















கால் வயிற்று கஞ்சிக்கு
கயிற்றில் அந்தர வாழ்க்கை...
தூக்கிலிடு சமுதாயத்தை !

அன்றாடத் தேடல்களில்
கேள்விக்குறியானது...
பாரம் சுமக்கும் முதுகு!

கல்வியறிவை
தானமாய்க் கொடுப்போம்...
அவலத்தில் வாழும் சிறார்களுக்கு !

பசியற்ற வாழ்வுக்கு
நல்லதோர் சுவர்தேடும்...
கரித்துண்டு ஓவியன்!

வெற்றிடம் இல்லாத
நிறைந்த வயிற்றுடன்...
பலூன் விற்பவன்!

வாழ்க்கை வெளிச்சமின்றி
நகரும் விளக்குத்தூண்கள்...
திருமண ஊர்வலத்தில்!

மதம் பிடித்த யானைகளாய்
சமுதாய சீர்கேடுகள்...
தேவை அங்குசக் கவிஞர்கள்!

...........கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், டிசம்பர் 22, 2011

உலகம் அழியும் இது மயனின் வழி.....


டிசம்பர் இருபத்து ஒன்று 2012
உலகம் அழியும் நாள்....
இது மயன் நாட்காட்டியின் எல்லை!
கடல் கொந்தளித்து சுனாமி வரலாம்...
எரிமலைகள் வெடித்து சிதறலாம்...
வேற்று கிரகங்களில் இருந்து
புதிய விண்வெளிக்கலன்களின் தாக்குதல்
இருக்கலாம்....
சூறாவளிப் புயல்களால் நாடு உருக்குலையலாம்....
சூரியனின் ஒளிக்கதிர்கள் மறைந்துபோகலாம்....
கடல்மட்டம் உயர்ந்து நிலங்களை
கபளீகரம் செய்யலாம்....
விண்மீன்களின் பாதைகள் மாறி
கிரகங்களின் மீது மோதி பூமியை தாக்கலாம்....
மொத்தத்தில் கலியுகம் முடியும் நாள்
டிசம்பர் 21 , 2012 ............................................
இப்படியெல்லாம் தகவல்கள்
தொலைக்காட்சிகளிலும்,
மேலைநாட்டு பத்திரிகைகளிலும்
இணையதளத்திலும் செய்திகள்..........
அறிவியல் வல்லுனர்கள்,
வானியல் ஆராய்ச்சியாளர்கள்
ஜோதிடர்கள், பாதிரியார்கள், சாதுக்கள்
இப்படியாக பலர்
அமானுஷ்யமாக பட்டும் படாமலும்
ஆமோதித்து பின்பு சாத்தியமில்லை என்றும்
சொல்கின்றனர்..........
இப்படியாக நான் இந்த செய்திகளை உள்வாங்கி,
சிந்தித்து நாற்காலியில் அமர்ந்திருந்தேன் !
என் கவனத்தை திசை திருப்பி
எங்களின் பெயர்த்தி சொன்னாள்.....
"இனிமே ஒரு வருஷம் என்பது
ஆறு மாதங்கள்தான் !
அப்போ நான் நிச்சயமா
நூறு வயசுக்குமேல் வாழ்வேன்...!"
சிரித்துக்கொண்டே சொன்ன சிறுமியின்
அமானுஷ்ய வார்த்தைகளில் சிக்குண்டு
அந்த மயன் நாட்காட்டியை
என் நினைவில் இருந்து
கழற்றி எறிந்தேன்!
மானுடம் வெல்லும் என்று எண்ணியவாறே!

........கா.ந.கல்யாணசுந்தரம்.

திங்கள், டிசம்பர் 19, 2011

வாழ்க்கைப் படகு!























பயணங்களில் எப்போதுமே
வெற்றி நிச்சயம் என்று
சொல்லமுடியாது!
இதுதான் இலக்கு என்று
பயணிப்பவர்களுக்கு கூட
படிக்கற்கள் தடைக்கல்லாய்
மாறியதுண்டு!
விட்டுக்கொடுக்கும்
பண்பானவர்களும்
வீதியில் நிற்கும் அவலங்கள்
அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது!
ஒரு நாணயத்தின்
இருபக்கங்களாய் மானுடம்
இந்த கலியுகத்தில்
வெற்றித் தோல்விக்கு மத்தியில்
பந்தாடப்படுகிறது!
ஓ.....மறைந்துபோகும் மானிடனே
மறந்துவிடாதே.....!
இந்த பிறவிக்கடலில்
எப்போதாவது சந்திக்கும்
வாழ்க்கைப் படகின்
வெற்றிப் பயணத்தில்
உன்னுடன் பயணிக்கின்றன...
தோல்வியின் துடுப்புகளும்!

..........கா.ந.கல்யாணசுந்தரம்.

ஒளிமயமான பசுமைக்காலம் - ஹைக்கூ

















பயணிக்கும் திசையில் மட்டுமில்லாமல்
வாழ்நாள் முழுவதும் வேண்டும் ...
ஒளிமயமான பசுமைக்காலம் !

ஞாயிறு, டிசம்பர் 18, 2011

வாழ்வியல் சிந்தனைகள் - ஹைக்கூ




பிரித்து எழுதி
பொருள் கூற முடியாது...
நட்பின் இலக்கணம்!




அடுத்தவேளை
உணவுக்கில்லை...
சமைந்தாள் மகள்



பாலில் நெல்
கலந்தபோது....
பதறியது பாலாடை!

சனி, டிசம்பர் 17, 2011

ஆண்டாள் நாச்சியார்





















மார்கழித் திங்களில் மங்கையரெல்லாம்-திரு
மாலவன் பாதம் போற்றி
பாவை நோன்பிருப்பார்!
திருப்பாவை முப்பதும் செப்புகிற பாவைக்கு
திருமண நன்னாள் எளிதில் கைகூடும்!
ஆண்டாள் நாச்சியார் நவின்ற திருப்பாவை
அழகு தமிழில் இனித்திடும் தெள்ளமுது!
புனித மாதமாம் மார்கழியில் அவர் திருநாமம் போற்றி
பயனுறுவோம் புவிமீது!

......கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், டிசம்பர் 15, 2011

உறவுகளோடு உறவுகளின் பயணிப்பு














சந்தணப் பொட்டிட்டு மாலை அணிவித்து
மாப்பிள்ளையை வரவேற்கும்
மைத்துனராக மணமகளின் சகோதரன்!
மணப்பெண்ணின் அலங்காரத்தில்
முழுதுமாய் அக்கறை செலுத்துகின்ற
தாய் வீட்டு சொந்தங்கள் !
புதிய உறவில் தடம் பதிக்கும்
சம்பந்திகளின் சம்பந்த நலுங்கு!
மணப்பந்தலில் கைவிளக்கேந்தி நிற்கும்
நாத்தனாராக மணமகனின் சகோதரி !
மங்கல நாண் அணியும்முன்
மணமகளை மடிமீது
அமர்த்திகொள்ளும் தாய் மாமன் !
அட்சதை அனைவரிடமும் கொடுத்து
மங்கல மனைமாட்சிக்கு
ஆசி கேட்கும் மாமன் மைத்துனர்கள் !
சீர்வரிசை முறையாக
கொடுத்து மகிழும் தாய் !
மருமகன் மருமகளை தன்மக்களாக
ஏற்றுக்கொள்ளும் மாமனார் மாமியார் !
கணவனே கண்கண்ட
தெய்வமென்று மனைவியும்…
மனைவி சொல்லே
மந்திரமென கணவனும்….
மாதா பிதா குரு
தெய்வமென பிள்ளைகளும்…..
இப்படியே உறவுகள் நமது பயணிப்பில்
இறுதிவரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது….
பாசம் எனும் முகமூடி அணிந்தவாறே..... !


.......கா.ந.கல்யாணசுந்தரம்

புதன், டிசம்பர் 14, 2011

ஹைக்கூ சிந்தனைகள்....

















*தவமாய் தவமிருக்கும்
கூட்டுப்புழுவின் காத்திருப்பு....
ஒரு வண்ணமயமான வாழ்வுக்கு!

*ஒரு தலைமுறைக்கான இடைவெளியில்
தொலைத்ததை மீண்டும் தேடுகிறது....
புன்னகை மறந்த மானுடம்!

*பயணிக்கும் திசையில் மட்டுமில்லாமல்
வாழ்நாள் முழுவதும் வேண்டும் ...
ஒளிமயமான பசுமைக்காலம் !

*பிரிந்தபோதுதான் தெரிந்தது
இன்பம் மட்டுமே அல்ல....
வாழ்க்கையின் புரிதல் !

*இந்த பூமியைக் காட்டி
குழந்தைக்கு சோறு ஊட்டினாள்...
நிலவில் தாய்!

*விளையாடும் வயதை மறந்து
வயிற்றுப் பிழைப்பில் ...
பொம்மை விற்கும் சிறுமி!

*ஒரு பனிபொழியும் காலை
மேகப் போர்வைக்குள் ...
முடங்கிப்போனது சூரியக் கதிர்கள்!

*இல்லம் நிறைந்திருந்தது
பொன்பொருளால் அல்ல...
மழலைச் சொற்களால்!

..............கா.ந.கல்யாணசுந்தரம்.

திங்கள், டிசம்பர் 12, 2011

தாய்மை




















பல்லவி

ஒளிரும் மெழுகிலே
ஓவியம் பிறந்தால்
தியாகம் என்றே சொல்லாகும்!

வணங்கும் தெய்வமும்
வாழ்த்திப் பேசிடும்
தாய்மையின் அழகு தெய்வீகம் - இந்த
தாய்மையின் அழகு தெய்வீகம்!
....ஒளிரும்

சரணம்

மாதங்கள் பத்தும்
சுகமாய் சுமக்க
சுமந்த உயிரே தாயாகும்!

பாச நெஞ்சம்
முதுமையில் வீழ்ந்தால்
பிள்ளையின் கரமே தூணாகும் - இந்த
பிள்ளையின் கரமே தூணாகும்!

....ஒளிரும்

கருவில் தோன்றிய
நாள் முதலே - உன்
உருவம் காணத் துடித்திருந்தேன்!
கடலும் அலையும் விலகினாலும்
அன்னையை பிரியா நிலை வேண்டும் - என்
அன்னையைப் பிரியா நிலை வேண்டும்!

.....ஒளிரும்

.............கா.ந.கல்யாணசுந்தரம்.

ஞாயிறு, டிசம்பர் 11, 2011

நங்கூரமிடாத நம்பிக்கைகளோடு .....
















பயணங்களில் புதுமைகள்
எபோதுமே நிகழ்ந்துகொண்டுதான்
இருக்கிறது!
பல இடங்கள் ஏற்கனவே
எனக்கு பழகியதாய் இருக்கிறது!
சில பழமையான வீடுகளை பார்க்கும்போது
அதில் வசித்தது போன்ற ஒரு உணர்வு!
நினைவு தெரிந்த நாள் முதல்
பறவைகளிடம் ஒரு அதீத பற்று!
என்னுடைய கரங்கள் தொட்டு துவக்கினால்
அது மற்றவர்களுக்கு மட்டுமே ராசியாகிறது!
நான் வசிக்கின்ற இடத்தின் எதிரில் எப்போதுமே
புதிய கட்டடம் உருவாகிறது!
அதில் வசிப்போரும் வாழ்வின் உயர்நிலையை
நுகர்கின்றனர்..
இறைவனின் இயற்கை படைப்புகளில்
ஆன்மா எபோதுமே இயைந்து செயல்படுகிறது
கனவுகளில் .....
எனது செயல்கள் முற்றுப்பெறாமல்
தொக்கிநின்று ஏக்கத்தை ஏற்படுத்துகிறது...
ஆனால் மற்றவர்கள் நடக்கிறார்கள்....
நான் மட்டும் பறந்து செல்கிறேன்....
நீரோடைகள் எப்போதுமே
பயணிப்பில் குறுக்கிடுகின்றன...
மானுடத்தின் ஏழாம் அறிவில்
அறிவியல் பயணிக்கும் தருவாயில்
கடந்தகால பயணிப்பில் எனது
அறிவு பயனத்திசையை மாற்றி
ஆச்சரியத்தில் மீண்டும் மீண்டும்
மூழ்கிக் கிடக்கிறது....!
நங்கூரமிடாத நம்பிக்கைகளோடு!




......கா.ந.கல்யாணசுந்தரம்.
























வெள்ளி, டிசம்பர் 09, 2011

பின்னுக்கு தள்ளப்படவேண்டும் ....















எனக்கு தெரிந்தவரை மனிதம்
பின்னுக்குத் தள்ளப்படவேண்டும்...
பத்துபைசா தபால் அட்டையில்
நலம் விசாரித்தபோது உறவுகள்
பலமாயிருந்தது!
செல்போன் இல்லாத கரங்கள்
எப்போதும் தயாராய் இருந்தது
மற்றவர்களின் துன்பம் போக்க!
ஏர் பூட்டி உழவு மேற்கொண்டபோது
உணவுதானியங்கள் தரமாயிருந்தது!
நடைபாதை பயணங்கள்
மக்களின் நலனுக்கான வழிதந்தது!
திரைப்படங்கள் பண்பாட்டின்
சிகரங்களாய் விளங்கின!
இல்லறமே நல்லறமாய் கொண்டு
மாந்தரெல்லாம்
நல்லதொரு குடும்பம் பல்கலையென
வித்திட்டிருந்தன......
ஆம்...ஒரு குறைந்தபட்ச
மனிதநேயத்தைக் காண
எனக்கு தெரிந்தவரை மனிதம்
பின்னுக்குத் தள்ளப்படவேண்டும்...

..........கா.ந.கல்யாணசுந்தரம்.

சனி, டிசம்பர் 03, 2011

உனக்கான எனது காத்திருப்பு.....















நம்மைச் சுற்றி உற்றுநோக்கினால்

எல்லாமே எதற்காகவோ

காத்திருக்கின்றன...

முற்றுப்பெறாத நீண்ட சாலைகள்

பயணிப்பின் வரவை எதிர்நோக்கி!

விதைக்கப்பட்டவை

அறுவடை நாளை நோக்கி!

உயர்ந்த மலை முகடுகள்

நீர்வீழ்ச்சியின் வரவுக்காக!

வான் மேகங்கள்

நல்ல மழை பொழிதலுக்காக!

தேன்கூட்டின் ஈக்களும்

தேனருந்த முழுநிலவின் வருகைக்காக!

மூங்கில் காடுகள்

எப்போதும் காத்திருக்கின்றன

நல்லதொரு

புல்லாங்குழலை பிரசவிக்க !

இப்படி எத்தனையோ

அசையும் அசையா

பொருட்கள் ஒரு காத்திருப்பின்

சுகத்தில் லயித்திருக்கின்றன!

உனக்கான எனது காத்திருப்பு மட்டும்

உனக்கு கசந்துவிட்டது ஏனோ ?


............கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, டிசம்பர் 02, 2011

ஒரு குடு குடுப்பை சத்தம்......












குடு குடுப்பை சத்தத்தினை
பகலில் கேட்டபோது
இரவில் தந்த பயத்தினை
பறித்துப்போட்டது!
'நல்ல காலம் பொறக்குது தாயி......
இந்த வூட்டு எஜமானனுக்கு
ஒரு கண்டம் இருக்குது தாயி....
தண்ணிலகண்டமுன்னு நான் சொல்லல....
உங்க வூட்டு குலதெய்வம் சொல்றா தாயி ......
பூவாடகாரிக்கு பூஜை போடுங்க தாயி.....
வர கண்டம் வராம போயிடும் தாயி.....'
இப்படி விடியலில்
சொன்ன வார்த்தைக்கு
விடைதேடும் படலத்தில்
கணவருடன் சிந்திக்கும் வேளையில்.....
அதே கோடாங்கி பூம் பூம் மாட்டுடன்
ஒரு நாதஸ்வர இசையுடன் வீட்டு வாயிலில்.....
' அம்மா ஒரு கிழிஞ்ச துணி ....
சட்ட துணி கொண்டுங்கம்மா...
இந்த ஏழை கோடாங்கிக்கு குளுருதும்மா....'
என்று கேட்ட கோடாங்கியிடம் ....
'ஏம்பா குடு குடுப்பை
விடியற் காலைல வீட்டுமுன்னாடி
நடக்கப்போறத எப்படி சொன்ன? ----
என்று கேட்கும்போதே ....
' அம்மா தாயி எந்த வீட்டு முன்னாடி
என்ன சொன்னேன்னு
எனக்கே தெரியாதும்மா.....
இதெல்லாம் உங்க ஆத்தா சொல்றது!'
என்று சொல்லிக்கொண்டே
அடுத்த வீட்டின் முன்
நாதஸ்வரம் வாசிக்க தொடங்கினான்....
குலதெய்வம் கோயில் செல்ல
என் கணவர் ஏற்பாடுகளை செய்தபடி
பூவாடைக்காரிக்கு புதுப்புடவை ஒன்றை
எடுக்கவேண்டும் என்றும்
சொல்லிக்கொண்டார்.......
ஆனால் ஒரு கிழிந்த சட்டைகூட
வாங்காமல் சென்ற
அந்த குடு குடுப்பைக்காரனை நினைத்தபடியே
என் மனது மட்டும் ஊஞ்சலாடியது.....!

...........கா.ந.கல்யாணசுந்தரம்.

செவ்வாய், நவம்பர் 29, 2011

விழுதுகளோடு வாழத்தான் வேண்டும் !

















காலம் எப்போதும் சக்கரமாய்
சுழன்றுகொண்டுதான் இருக்கிறது
என்பதெல்லாம் பொய்!
காலம் வேகமாக
கடந்துகொண்டிருக்கிறது
என்பதுதான் உண்மை!
பரிணாம வளர்ச்சி
இபோதெல்லாம் பண்பாட்டின்
முதுகெலும்பில் என்றாகிவிட்டது!
கலாச்சாரம் என்றால் என்ன?
இந்த கேள்விகள் ...........
இளையதலைமுறைகளின்
பிரதானமானது !
இயற்கையின் இருப்பிடங்களும்
இயல்புநிலை மாறி
சரித்திரச் சான்றுகளை
சீரழிக்கின்றன.....!
பருவ காலங்களின் மாற்றங்கள்
தலைகீழாக பயணிக்கின்றன!
மனிதநேயத்தின் அறிச்சுவடுகளை
தேடித் தேடி பாதம்தான் தேய்கிறது!
இன்சொல் விலகி கடும்பொருள்
வன்சொற்கள் சிம்மாசனத்தில்!
எப்படியோ....நாமெல்லாம்.....
விழுதுகளோடு வாழத்தான்
விதிக்கப்பட்டுள்ளோம்!

...............கா.ந.கல்யாணசுந்தரம்.

புதன், நவம்பர் 23, 2011

எப்போது கிடைக்கும்?















பயணிக்கும்போது ஆன்மாவின்
இருப்பிடம் தூய்மையாகிறது!
அன்பை வெளிப்படுத்தி
அமைதியின் பிறப்பிடம் நோக்கி
பழகிய காலங்கள்
இன்பக் கேணியாய்
நெஞ்சில் பிரவாகமாகிறது!
துன்பத்தை பிறரிடம்
பகிர்ந்துகொள்ளும் போது
ஆறுதலான வரைபடம்
மனதில் உருவாகிறது!
எண்ணத்தூரிகைகளே .........
உங்களுக்கு ஒரு
சரியான ஓவியன்
எப்போது வருவான்?
என்னிடம் அலைபாயும்
எண்ணங்களின் வண்ணங்கள்
உள்ளக் கிண்ணங்களில்
நிரம்பி வழிந்துகொண்டிருக்கின்றன....
வீணாகிப்போனாலும் பரவாயில்லை !
ஒரு நல்ல ஓவியம்
எப்போது கிடைக்கும்?

..........கா.ந.கல்யாணசுந்தரம்.

செவ்வாய், நவம்பர் 22, 2011

பண்ணிசைக்கிறேன்!

உன்னில் இருந்து உதிர்ந்தாலும்
பரவாயில்லை....
சிறகை விரித்து பறக்கின்றாய் !
வானம் வசப்படட்டும்
நான் இந்த கரங்களில்
இருந்துகொண்டு
பண்ணிசைக்கிறேன்!

.....கா.ந.கல்யாணசுந்தரம்.

திங்கள், அக்டோபர் 17, 2011

சற்று வித்தியாசமானதுதான்
















அழகியலை ரசிப்பதற்கு
இருவர் வேண்டும்!
ஏகாந்த வேளைகளில் நமக்குள்
பரிமாறப்படும் சிந்தனைகள்
வாழ்க்கையின் வெளிச்சத்துக்கான
ஒளிச்சிதறல்கள்!
புரிதலான வாழ்க்கையின் அரிச்சுவடுகளை
இங்கே வண்ணம் தெளித்த வனக்கூரையின் கீழ்
படித்துக்கொண்டிருக்கிறோம்!
நீரில் எழுதும் எழுத்தினைப் போன்றது
இந்த நிலையில்லா உடல்....
நீர்மேல் நியலையாக சிம்மாசனம்போட்டு
எதிர்காலத்தின் விளிம்புகளில்
நிலாச்சோறு உண்கிறோம்!
எத்தனை விளக்குகள் நம்மிடம் இருப்பினும்
முற்போக்கு சிந்தனை விளக்கம் தாங்கும்
விடிவெள்ளி முளைக்கவேண்டும்!
வாழ்க்கை என்பது
ஒரு வெற்றிடத்தில் இருந்து
பிறக்கவில்லை....
இரண்டு உடற்கூறுகளின் சங்கமம்!
ஆம்.....
நமது திருமண முதலிரவு...
சற்று வித்தியாசமானதுதான்!

,,,,,,,,கா.ந.கல்யாணசுந்தரம்.

சனி, அக்டோபர் 15, 2011

ஒரு கார்கால துவக்கம்.....

என் ரோஜா தோட்டத்தில்
எனக்காக முதலில் பூத்த மலராக
உனது வருகை எப்போதுமே இருக்கும்.
வார மாத இதழ்களில் வருகின்ற
கவிதைகளைப் படிக்கும் போதெல்லாம்
அதில் உனது பார்வையின் துடிப்பை
அறிந்துகொண்டிருக்கின்றேன்!
காதல் உணர்வுகளில் எனது இதயம்
ஒரு தும்பியாய்
வட்டமிட்டுக்கொண்டிருக்கிறது!

பெண்ணியம் சார்ந்த ஒரு புரிதலில்
நிச்சயமாக இது சிற்றின்பம் இல்லை.
கனவுத் தொழிற்சாலையின்
இன்ப உற்பத்தியாக இருந்தால்
இந்த சமுதாய சந்தையில்
நம்மிடம் இருந்து காதல்
களவாடப்படும் என்பது உறுதி !

நாம் கை கோர்த்து நடந்த
நாள் முதலே நட்பின்
இலக்கணத்தை அல்லவா
சுவாசித்திருக்கிறோம்.
அது நம் காதலின்
கார்கால துவக்கமென்றால்
இன்று நமதுள்ளம்
இளமையின் வாயிலில்
உன்னதமான சிநேகத்தின்
வசந்தமாகட்டும்!

....கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், அக்டோபர் 13, 2011

முப்பெரும் காலங்கள்....
















ஒரு அங்கீகாரத்துக்காக
வாழ்நாளைப்
பணயம் வைத்ததுதான்
அவனின் கடந்தகாலம் .....
சறுக்கலின் கொடுமையை
உணர்ந்தவாறே
பயணித்தல்தான்
அவனது நிகழ்காலம் .....
எதோ ஒரு சக்த்தியால்
இயக்கப்படுகிறோம்....
நம்மால் ஒன்றும் இல்லை
இறையருள் ஒன்றே
மகத்தானது!
நல்லவை நடப்பது
நம்மிடம் இல்லை....
உழைத்த உழைப்பின்
அங்கீகாரம் அரூபமான
கடவுளிடம் இருந்து
கிடைத்துவிடும் ......
இதுவே அவனது
எதிர்காலத்தின்
வசந்தமானது!


.....கா.ந.கல்யாணசுந்தரம்.

புதன், அக்டோபர் 12, 2011

தமிழே வாழ்க!

தமிழே வாழ்க! தாயே வாழ்க!
அமிழ்தே வாழ்க! அன்பே வாழ்க!
கமழக் கமழக் கனிந்த கனியே
அமைந்த வாழ்வின் அழகே வாழ்க!

சேர சோழ பாண்டிய ரெல்லாம்
ஆர வளர்த்த ஆயே வாழ்க!
ஊரும் பேரும் தெரியா தவரும்
பாரோர் அறியச் செய்தாய் வாழ்க!

சீரிய அறமும் சிறந்த வாழ்வும்
ஆரும் அடையும் அறிவைப் பொழிந்தாய்;
வீரம் தந்தாய் மேன்மை வகுத்தாய்
ஈர நெஞ்சே இன்பம் என்றாய்.

குமரி நாட்டில் தூக்கிய கொடியை
இமயத் தலைமேல் ஏறச் செய்தாய்.
தமிழைத் தனித்த புகழில் நட்டாய்
தமிழின் பகைவர் நெஞ்சைச் சுட்டாய்.

முத்தமிழ் அம்மா! முத்தமிழ் அம்மா!
தத்துவ உணர்வை முதலில் தந்தாய்;
எத்தனை இலக்கியம், இலக்கணம் வைத்தாய்
முத்துக் கடலே! பவழக் கொடியே!

எழுத்தே பேச்சே இயலே வாழ்க!
இழைத்த குயிலே இசையே வாழ்க!
தழைத்த மயிலே கூத்தே வாழ்க!
ஒழுக்க வாழ்வின் உயிரே வாழ்க!

தமிழே ஆதித் தாயே வாழ்க!
தமிழர்க் கெல்லாம் உயிரே வாழ்க!
தமிழ் நாட்டுக்கும் பிற நாட்டுக்கும்
அமிழ்தாய் அமைந்த அம்மா வாழ்க!

ஊரில் தமிழன் மார்பைத் தட்டிப்
பாரில் தமிழன் நானே என்னும்
சீரைத் தந்த தமிழே வாழ்க!
ஓரா உலகின் ஒளியே வாழ்க!

.........புரட்சி கவி பாரதிதாசன்

செவ்வாய், அக்டோபர் 11, 2011

மண்வாசம்




















நெனவிருக்குதா பொன்னுத்தாயி
நீயும் நானும் ஒண்ணா சேந்து
நாலாவது படிக்கிறப்போ
களத்துமேட்டுல ஓடிப்பிடிச்சி
விளையாடும் போது.....
என்ன மாடு முட்டி கீழ தள்ளுனத!
கையில கட்டுபோட்டு
வீட்ல இருந்தப்போ
ஒன்னோட அம்மாவோட
என்ன பார்க்க வந்தப்போ....
'ஒங்க பொண்ணாலதான்
எம் புள்ள கைய ஓடிச்சிகிட்டான்'
அப்படின்னு ஆத்தா உன் ஆத்தாகிட்ட
சண்டை போட்டு அனுப்பிடுச்சி!
ஆனா....நீ ....எங்கிட்ட சொல்லிட்டுப் போனே...
நான் விழுந்த எடத்துல
ஒரு புளியங்கன்னு நட்டுவச்சி தண்ணிவூத்தி
வளக்கறேன்னு........
அதுக்கப்பறம் உங்க ஆத்தாவோட
வேற ஊருக்கு போயிட்ட....
இப்ப சரியா முப்பத்தஞ்சு வருஷமாச்சி....
நம்ம ஊர் அங்காளம்மா கோயில்ல
திருவிழாவுக்கு வந்தப்போ பாத்தேன்...
நீ நட்டுவச்ச புளியமரம் வளந்து
பூவும் பிஞ்சியுமா பாக்கறப்போ.....
உன் நெனப்பு வந்துடுச்சி பொன்னுத்தாயி!
ஆமா.... பொன்னுத்தாயி!
இப்ப என் கை நல்லா இருக்கு!
உன்னோட வேண்டுதல் பலிச்சிடுச்சி!
ஆனா உன்னோட வாழ்நாள்ள...
இந்த புளியமரமும் நம்மோட
கண்ணாமூச்சியும்.....மறக்கமுடியாத
பாதிப்ப உண்டுபன்னிடிச்சி.....
அக்கம் பக்கத்துல சொன்னாங்க....
போன வாரம் நீ உன் புருஷன் கொழந்தையோட
ஊருக்கு வந்து இந்த புளியமரத்தடியில
பொங்கல் வச்சி சாமி கும்மிட்டேன்னு.....
மனசு தாங்காம என் நெஞ்சுலே
ஒரு கேள்வி மட்டும் திரும்ப திரும்ப
ஒலிச்சிகிட்டே இருக்கு.....
என் சாமியே சாமி கும்பிடனுமா?

.........கா.ந.கல்யாணசுந்தரம்.

திங்கள், அக்டோபர் 10, 2011

சருகுகள்
















பிறர்க்கு உதவி இன்பம் காணும்
சிறு பிள்ளைவயதை நினைத்தே,
வாழ்ந்த இவளின் பருவம்
சமுதாய வீதியில் - சில கயவர்கள்
மடியில் தஞ்சும் புகுந்தது...
பட்டாம்பூச்சியாய் சிறகடித்து
பறந்த காலங்கள் வெறும்
கூட்டுப் புழுவானாள்!
கால் வயிற்று கஞ்சிக்கு காலம் தள்ள....
வயிற்றில் விளைந்த கருக்களும்
தரிசுநில வித்தாகிப் போனது!
ஒப்பிலா இன்பமுதை இரவுக் கூடலில்
தந்தவளின் உடலின்று முடங்கியது!
நுகர்ந்தோர் எல்லாம் நகர்ந்து போயினர்
அந்த நடை பாதை நுனியை யாரும் நாடவில்லை
அள்ளியெடுத்து முத்தமிட்ட மேனிக்கு
இன்று கொள்ளிவைத்து
பால் வார்க்க யாருமில்லை!
சமுதாயம் பெற்ற சந்தனப் பேழை
சாக்கடைப் பொருளாய் சிதறிக் கிடக்கிறது!
பட்டமரக் கிளை மீதமர்ந்த கழுகுக்கு
பிணவிருந்தாகி மடிந்து போனாள்!
அந்தோ!...... சமுதாயம் பெற்ற
விலைமகளிர் எல்லாம்
இளவேனிர்காலத்து உதிர்ந்த
சருகுகளே!

......கா.ந.கல்யாணசுந்தரம்.

சனி, அக்டோபர் 08, 2011

ஒரு கவிதையானது.....



எதற்காக மழலயின் மௌனம்?
இந்த மெழுகு வார்த்திகளை
அணைத்துதான் பிறந்தநாள்
கொண்டாடவேண்டுமா?
கேட்கின்றன இவளின் விழிகள்!
தமிழ்க் கவிதையாய்
எனை ஈன்ற பெற்றோருக்கு
ஒரு விண்ணப்பம்.....
மெழுகினை அணைக்காமல்
பிறந்தநாள் கொண்டாட
அனுமதி தாருங்கள்!
ஆமாம் இந்த மழலயின் எண்ணங்களில்
மனிதநேயத்தின் ஒளி பிறந்துள்ளாது!
இந்த காத்திருப்பு எமக்கு
ஒரு கவிதையானது!

.......கா.ந.கல்யாணசுந்தரம்.

எதிர்பார்ப்பும் கூடத்தான்!

இயற்கையின் யதார்த்தங்களில் இருந்து
விடுபட்டுப்போன காட்சிகள்!
இனிய இராகங்களின் புரிதல் இல்லாத
பாடல்களின் அரவணைப்புகளில்
விரசமான உடை அணிவிப்புகள்!
மனதைத் தொடாத குத்துப்பாடல்கள்!
நாமென்ன பத்துப்பாட்டும் எட்டுத்தொகையுமா
கேட்கின்றோம்?
வன்முறையும் விரசமும் வாடிக்கையாகிப்போன
இந்த சினிமா ஊடகம்
இளையதளைமுறைத் தோட்டத்து
நச்சு களைகளாக அல்லவா இருக்கிறது.
அறம், பொருள், இன்பம் எனும்
வாழ்வியல் தத்துவங்கள்
நவீனத்துவமாக இந்த
சினிமா ஊடகங்களில்
ஏன் உலா வரக்கூடாது?
இது இன்றைய இளைஞ்சர்களின்
வினாவல்ல!
எதிர்பார்ப்பும் கூடத்தான்!

..........கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், அக்டோபர் 06, 2011

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்



வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறும் பாவலர் உள்ளத்தில் இருப்பாள்
உள்ளதாம் பொருள் வேதி உணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின்று ஒளிர்வாள்
கள்ளமற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசக உட்பொருள் ஆவாள்
மாதர் தீம்குரல் பாட்டில் இருப்பாள்
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்
கீதம் பாடும் குயிலின் குரலை
கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள்
கோதகன்ற தொழிலுடைத்தாகி
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை உற்றாள்
இன்பமே வடிவாகிட பெற்றாள்
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறும் பாவலர் உள்ளத்தில் இருப்பாள்

வெள்ளி, செப்டம்பர் 30, 2011

கொடியில் பூத்த முல்லை!



இருவர் தந்த அமுதம் - இளம்
காலைப் பொழுதின் குமுதம்!
சின்ன விழிகள் அசைத்து - இவள்
வண்ண கவிதை வடிப்பாள்!
மெல்ல நடந்து வந்து - ஒரு
முத்தம் தந்து சிரிப்பாள்
பேசும் மழலைக் கிள்ளை - இளம்
கொடியில் பூத்த முல்லை!
மொழிகள் அறிந்த உண்மை - பேசும்
மழலைக்கு இணை ஏது?

......கா.ந.கல்யாணசுந்தரம்.

ரணம் ஆறாத வெந்த நெஞ்சோடு....
















சந்தைக்கு செல்லும் பாரவண்டி
சரக்கு மூட்டைகளை ஏற்றியதும்
அசைய மறுத்த எருதுகளை...
அவன் வெறுப்புடன் பார்த்தான்!
கடும் வெயில் காதுகளைக்
குடையும் முன் அடுத்த கிராமத்து
சந்தைக்கு செல்ல வேண்டும்!
சகட்டுமேனிக்கு அடித்த அடியில்
சாட்டைகூட பிய்ந்து போனது!
நேரத்தோடு பறந்து சென்று
நூற்றுக்கணக்கில் வியாபாரம் செய்து
முதலாளியிடம் நல்ல பெயர்
வாங்கியும்கூடமனதில் நிம்மதி இல்லை!
மாலையில் மனைவி குப்பம்மா
பச்சிலையால் எருதுகளின்
சாட்டைத் தழும்புகளுக்கு
பத்து போடும் போது இவன் மட்டும்
ரணம் ஆறாத வெந்த நெஞ்சோடு....
வாயில்லாத ஜீவனாய்
விக்கித்து நின்றான்!

.........கா.ந.கல்யாணசுந்தரம்

புதன், செப்டம்பர் 28, 2011

தீர்வு...


பிறந்தது, வளர்ந்தது
வாழ்ந்தது....என்று
நம் வாழ்க்கை எப்போதுமே
யதார்த்தமாய் இருந்தாலும்...
உள்ளம் என்ற உன்னத
உணர்வுப் பூங்காவில்
உணர்ந்தது, நெகிழ்ந்தது
மகிழ்ந்தது என்னும்
வண்ணமலர்க் கூட்டங்கள்
வாடாமல் மணம்
வீசுகின்றன...

உறவுகள், மரபுகள்
சொந்தங்கள், பந்தங்கள்
இவையெல்லாம்....
மானுடத்தின்
வரவுகள் என்றாலும்,
சேவைகளும், சிந்தனைகளின்
பகிர்வுகளும் நமது
விருதுகள் என்ற நினைவுகள்
வாழ்நாளில் ஆளுமை செய்ய...
எனது எச்சங்களுக்கு
நானே தீர்வு காணுகின்றேன்!

......கா.ந.கல்யாணசுந்தரம்

செவ்வாய், செப்டம்பர் 27, 2011

பாச வலைகள்....


உலகம் ஒரு மாயை என்று
சொல்வதை அறிவியல் ஆமோதிக்காது!
விதி என்பது விதிக்கப்பட்ட
ஒரு அமானுஷ்யம்........
என ஒப்புக்கொள்ளாத மானுடம்
அதர்மத்திடம் உறவுகொள்கிறது!
செயல்பாடுகள் என்றுமே
அவரவர் ஜனித்த நட்சத்திர
ராசி பலன்களால்தான்
என்றெல்லாம் கூறுவதை
பலநேரங்களில் நம்பத்தான்
வேண்டியிருக்கிறது!
மனிதத்தின் பலவீனங்கள்
பலவாறு கூறுபோட்டு பார்க்க
மனிதமே முயலுகிறது!
ஆளுமை எண்ணங்கள் தலைப்படும்போது...
மனசாட்சி ஏனோ அரசாட்சி செய்வதில்லை!
இன்னொரு பிறப்பின் ரகசியம்
என்னவென்று அறியாத
தூண்டில் மீன்களாய் மனிதவாழ்க்கை!
இருப்பினும்......
ஆசை எனும் வாழ்க்கை கடலில்
உறவுத் தோணிகள்
இன்றும் சுமக்கின்றன...
பாச வலைகளை!


.........கா.ந.கல்யாணசுந்தரம்.

திங்கள், செப்டம்பர் 26, 2011

நெஞ்சமதைத் தழுவும் வரை




இதயத்தை ஒருமுறை
கேட்டுக்கொள்கிறான் ...
வெடித்துவிடாமல்
வாழவேண்டுமென்று....
பாசம் நேசமெல்லாம்
பங்குபோட்டு
பாதியிலே ஒதுங்கிவிடும்!
உறவுகளின் ஒப்பாரியில்
ஓரங்க நாடகங்கள்
இடையிடையே அரங்கேறும்!
நட்பு வட்டங்கள்
அஞ்சலிக்கு ஆள் சேர்க்கும்!
கரும்பலகையில் கல்வி
கற்றதெல்லாம்
கல்லறை வரைக்கும்
கொண்டுசெல்லும்!
இருந்தாலும் .....
மீண்டும் மீண்டும்
கேட்டுக்கொள்கிறான்
இதயத்திடம்....
'வெடித்துவிடாதே
நினைவுக் கூடே...!
சற்றேனும் காத்திரு
சிநேகத்தின் சுவாசத்தை
மொத்தமாய் ஆளுகின்ற
என்னவளின் மூச்சுக்காற்று
நெஞ்சமதைத் தழுவும் வரை!'

....கா.ந.கல்யாணசுந்தரம்


மகத்தானது மனிதநேயம்
















எங்கே போகிறோம்?
என்று நமக்கு நாமே
கேள்வி கேட்டுக்கொள்வோம்!
மானுடம் வாழும் பூமியில்
விசாரிப்புகளின்றி
வறண்ட பாலைவனமாய்
ஈரமற்ற நெஞ்சின்
உடல் கூடுகளாய்
புழுவினும் கேவலமாய்
மனச் சுமைகளை மட்டுமே
சுயநலத்தின் சிகரமாக்கிக்கொண்டு
ஊர்ந்து செல்கிறோம்!
மானுடமே!.... வாழும் வாழ்க்கையில்
மகத்தானது மனிதநேயம்
என்பதைவிடுத்து பயணிக்கிறோம்!
உனது பாலைவன பயணத்திலும்
புதைகுழிகள் இருப்பதை மறந்து!


...கா.ந.கல்யாணசுந்தரம்.



சனி, செப்டம்பர் 24, 2011

அனுபவப் பெட்டகங்கள்
















எங்கேயோ எப்போதோ
செய்த தவருகள்தாம்
இங்கே, இப்போதே
திருத்தப்படுகின்றன...
முற்பகலும் பிற்பகலும்
அடுத்தடுத்த இயக்கங்களாயின!
இந்த மானுடத்தின்
பாதயாத்திரை இன்னும்
முற்றுப்பெறவில்லை!

தனக்கென சந்ததிகளையும்
சொத்துக்களையும் சேர்க்கின்ற
மானிடத் திசுக்கள்,
இனியாவது
சமுதாயச் சிந்தனைகளை
நல்லதொரு மறுமலர்ச்சிக்கு
பயிரிட்டு பேணி காக்க
மானுட மண்டையோட்டு
செதில்களுக்கு
சொல்லி வைக்கட்டும்!

அன்பெனும் சொல்லறியாது,
அறிவுத் தளர்ச்சியால்...
வயதில் பெரியோரை
காப்பகத்தில் வளர்க்கின்ற
இயந்திர வர்க்கத்தினைக்
காணுகின்றோம் நிலமதிலே!
இல்லை ....இல்லை...
இனியாவது இளைய தலைமுறையே!
மனிதநேயத்தின் மணிவிளக்காய்,
அனுபவப் பெட்டகங்களை
அரவணைப்போம் வாரீர்!

....கா.ந.கல்யாணசுந்தரம்

புரிதலைத் தேடியது


காதலின்போது காட்டிய
பரிவும் அன்பின் அரவணைப்புகளும்
திருமண வாழ்வுதனில்
புரிதல் இல்லாது போனதென்ன?
உண்மைக் காதலென
இந்த உள்ளம் நம்பியதெல்லாம்
பொய்மையென காலம்
கற்பித்ததென்ன?
காதலுக்கும் காமத்திற்கும்
அர்த்தம் புரியாது
புரிதலைத் தேடியது....
இந்தப் பேதையின் குற்றமே!

......கா.ந.கல்யாணசுந்தரம்

வெள்ளி, செப்டம்பர் 23, 2011

அப்போதே தன்னுள்....


வாழ்க்கை சிகரத்தின்
ஒவ்வொரு படியிலும்
நினைத்துப் பார்க்கிறேன்....
வியந்து நினைக்கிறேன்!
அகரம் பயில ....
துணையாய் நின்ற
தகரப் பலகையின்
கருமை வண்ணத்தை!
அப்போதே தன்னுள்
அடக்கமாய் ஒளித்து
வைத்திருந்த ஒளிமயமான
என்னுடய எதிர்காலத்தை!

.....கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், செப்டம்பர் 22, 2011

எழிலார்ந்த ஓவியம்


மாலையின் வரவுக்காக
மணிக்கணக்காய் தவமிருக்கிறேன்...
காரணம்....
பொன்னிற மஞ்சள் வெயிலில்
மயங்கும் நதிக்கரை
தென்னங் கீற்றுகள்!
இறைவன் தினம் தினம்
உயிர்த்துடிப்பாய் வரைகின்ற
இயற்கையெனும் இளையகன்னியின்
எழிலார்ந்த ஓவியம்!
சுருங்கச் சொன்னால்...
நான் இன்னும் உயிரோடிருப்பது
உங்களின் இனிய தோற்றங்களால்!

.........கா.ந.கல்யாணசுந்தரம்.

இத்தரையில் பெற்ற சுகம்...





















உனது மென்மையான
விரல் நுனிகளில்
அந்த வயலின்
பிரசவிக்கும்
இன்ப நாதங்கள்....
ஒரு குளிர்கால
முன்பனி காலத்தில்
பூத்துக் குலுங்கும்
செந்தூரப் பூக்களின்
அலாதியான வாசம்...
இரவும் பகலும்
சந்திக்கும் அந்த
அந்திசாயும் நேரத்து
பறவைகள் சங்கமிக்கும்
சலசலப்பு ஓசை!
இரவு நேரத்து
அமைதியின் மடியில்
குழந்தையை தூங்கவைக்கும்
ஒரு தாயின் தூரத்து
தாலாட்டுப் பாடல்.....
இறைவா....
இத்துணை மனிதநேயமிக்க
உறவுகளின் மேன்மயை
அதன் புனிதத்தை
அறியவைத்தாயே...
தாயே...இத்தறையில்
இப்பிறப்பு பெற்றசுகம்
இனிதானதென்று
இயம்பிட இன்று நீயில்லை!
உன் கைப்பிடித்து
உலாவிய நாட்களுக்கு
இனிதான நிகழ்வுகளை
காணிக்கையாக்குகிறேன்!

...கா.ந.கல்யாணசுந்தரம்.




புதன், செப்டம்பர் 21, 2011

களத்துமேட்டு வாழ்த்து...

களத்துமேடு குடியிருப்பில் அவள்
கதிர் அறுத்து கட்டு சுமந்து நடக்கையில்
காத தூரமானாலும் பின்னால் நடப்பதற்கு
வெல்லமென காத்திருப்பான்!
தென்னைமரத்து குயில் கூட
தோற்றுப்போகும் அவளது குரலில்!
மாந்தோப்பு மயில் கூட்டமும்
மெய்மறந்து ஆடாது நிற்கும்
அவளது இடையழகு நடையின் போது!
கருத்தொருமித்த காதலானது
இவர்களது நட்பின் மேன்மை!
நெல்லடித்து தூற்றியதுபோல்
சொல்லால் அடித்து துறத்தினார்கள்!
நூலருந்த பட்டமென அலைபாய்ந்து
செயலற்ற பிம்பமாய் அவளின் வாழ்வு!
கடலலை ஒதுக்கிய ஒற்றைக் கால் செருப்பாய்
கிராமத்து எல்லைதனில் ஒதுக்கப்பட்டான்!
எழிலார்ந்த வளமிக்க வயல்பரப்பில்
பழிசொல்லும் கூட்டம்தான் பெருகியது!
இயற்கை இயம்புவதை கேட்காத
ஈனபுத்தி மாக்கள் இனியேனும் மாறட்டும்!
விரும்பும் மனதின் வசந்த காலங்களை
அரும்பிட நீர்பாச்சும் நிலை வரட்டும்!
களத்துமேட்டு கதிரடிக்கும் காலமதில்
தூற்றிய பதர்களும் இருக்கத்தான் செய்யும்!
காளைகளின் மணியோசை இவர்களது
காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்!

.................கா.ந.கல்யாணசுந்தரம்.

ஞாயிறு, செப்டம்பர் 18, 2011

வீடுபேற்றின் வாயிலை நாடு!




















நிலத்தோடு ஸ்பரிசிக்கும் கால்கள்
நெஞ்சுக்குள் ஈரம் எப்போதும் பிரவாகமாய் !
பிராணத்தின் சூட்சுமத்தை அறிந்த இதயம்
தணலாய் எப்போதும் அடிவயிற்றின் யாகம்
கண்மணிக்குள் அடங்கிவிடும் நீலவானம்
ஐம்பூதங்களை ஒருங்கிணைத்து
சும்மா இருத்தலின் சுகம்தானைக் காண
அம்மா என்று உச்சரித்து அமர்ந்தேன்!
அமர்ந்தநிலை தியானத்தின் உச்சத்தில்
ஒரு எல்லையற்ற நிர்மலமான
அகண்டவெளியின் ஓங்காரத்தின்
ஒளியழகைக் கண்டேன்!
உருவமும் அருவமும் இல்லா
நிலை எய்தும் உன்னதம்
சும்மா இருத்தலின் சுகம்தானில்
மண்டிக் கிடக்கிறது மனமே!
அலைபாயும் எண்ணங்களை
ஒருமுகப்படுத்து!
சிலையென அசையாது
சின்முத்திரைப் பதித்து
அன்பின் வழியது உயிர்நிலையென
அறப்பொருளாய்
வீடுபேற்றின் வாயிலை நாடு!

.........கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, செப்டம்பர் 16, 2011

வெற்றிக்கான விழுப்புண்கள்

முழு மனதோடு
நம்மை
ஏற்றுக் கொள்ள
யாராவது
இருக்கிறார்களா
என ஏக்கத்துடன்
காத்திருக்கின்றன
தோல்விகள்!
காரணம்...
அவைகள்
வெற்றிக்கான
விழுப்புண்கள் என
நம்மால்
அடையாளம்
காணாததால்!

வியாழன், செப்டம்பர் 15, 2011

எங்கும் தமிழே முழங்கக் கேட்போம்





எங்கும் தமிழே முழங்கக் கேட்போம்

எதிலும் தமிழே வழங்கக் கேட்போம்

கங்கை தவழும் இமயம் கடந்து

கன்னித் தமிழைக் கொண்டு செல்வோம்

பொங்கும் தமிழின் இலக்கியச் சுவையை

பூமியின் மீது உலவ விடுவோம்

திங்கள் செல்லும் விண்வெளிப் பாதையில்

மங்காத் தமிழொளி சிந்தக் காண்போம்!


..........கா.ந.கல்யாணசுந்தரம்

















புதன், செப்டம்பர் 14, 2011

தேவை ஒரு மந்திரக்கோல்....


ஊழல், ஊழல், ஊழல்,
எங்கும் எதிலு ஊழல்....
கறுப்புப்பணம்.....இந்தியா
சுதந்திரம் வாங்கும் முன்பே
புழக்கத்தில் வழக்கமாகிப்போன
கணக்கில் வாராத பணம்.
உண்ணாவிரதம், சத்தியாகிரகம்
இவையெல்லாம் தேசத் தந்தை
மகாத்மாவினால் அடையாளம்
காணப்பட்டவை !
அரசுக்கு அறிவுறுத்தலாமே தவிர
மக்கள் வெள்ளத்தில்
வன்முறையை கட்டவிழ்க்கலாமா?
ஆம்..... இப்போது தேவை
நிச்சயம் தேவை ஒரு மந்திரக்கோல்....
ஒரு சமூக நீதி படைக்க!

திங்கள், செப்டம்பர் 12, 2011

மூதுரை



1.
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

2.
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால அந்நன்றி
என்று தருங்கோல் எனவேண்டா -நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.

3.
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர்.

4.
இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்
இன்னா அளவில் இனியவும் - இன்னாத
நாளல்லா நாள்பூந்த நன்மலரும் போலுமே
ஆளில்லா மங்கைக் கழகு.

5.
அட்டாலும் பால்சுவையில் குன்றா(து) அளவளவாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் - கெட்டாலும்
மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.

6.
அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா .

7.
உற்ற இடத்தில் உயிர்வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ - கற்றூண்
பிளந்திறுவ தல்லால் பெரும்பாரம் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான்.

8.
நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு - மேலைத்
தவத்தளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
குலத்தளவே ஆகுமாம் குணம் .

9.
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று.

10.
தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.

11.
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.

12.
பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமிபோனால் முளையாதாம் - கொண்டபேர்
ஆற்றல் உடையார்க்(கு) ஆகாது அளவு இன்றி
ஏற்ற கருமம் செயல்.

13.
மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடல்சிறியர் என்று இருக்க வேண்டா - கடல்பெரிது
மண்ணீரும் ஆகா(து) அதனருகே சிற்றூறல்
உண்ணீ ருமாகி விடும்.

14.
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் - அவைநடுவே
நீட்டோ லை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டா தவன்நன் மரம்.

15.
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி!
16.
வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி
ஆங்கதனுக்(கு) ஆகாரம் ஆனால்போல் - பாங்கறியாப்
புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின்மேல் இட்ட கலம்.

17.
அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு.

18.
அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வர் உறவல்லர் -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு.

19.
சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்(று)
அல்லாதார் கெட்டாலங் கென்னாகும்? - சீரிய
பொன்னின் குடம்உடைந்தால் பொன்னாகும் என்னாகும்
மண்ணின் குடமுடைந்தக் கால்.

20.
ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி - தோழி
நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம்
விதியின் பயனே பயன்.

21.
உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு.

22.
இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும்.

23.
எழுதியவா றேகாண இரங்கு மடநெஞ்சே
கருதியவா றாமே கருமம் - கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை.

24.
கற்பிளவோ(டு) ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவோ(டு) ஒப்பாரும் போல்வாரே - விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீர்ஒழுகு சான்றோர் சினம்.

25.
நற்றாமரைக் கயத்தில் நல்லன்னம் சேர்ந்தாற்போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்.

26.
நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும்
அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு - நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர்.

27.
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச்
சென்றஇடம் எல்லாம் சிறப்பு.

28.
கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொல்கூற்றம்
அல்லாத மாந்தர்க்(கு) அறம்கூற்றம் - மெல்லிய
வாழைக்குத் தான்ஈன்ற காய்கூற்றம் கூற்றமே
இல்லிற்(கு) இசைந்து ஒழுகாப் பெண்.

29.
சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்தும்
கந்தம் குறைபடாது ஆதலால் - தம்தம்
தனம்சிறியர் ஆயினும் தார்வேந்தர் கேட்டால்
மனம்சிறியர் ஆவரோ மற்று.

30.
மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல
உருவும் உயர்குலமும் எல்லாம் -திருமடந்தை
ஆகும்போ(து) அவளோடும் ஆகும்; அவள்பிரிந்து
போம்போ(து) அவளோடு (ம்) போம்.

31.
சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம்அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம்.

வியாழன், செப்டம்பர் 08, 2011

நினைவுகளின் ஆராதிப்பில்






















முப்பது ஆண்டுகளின்
இடைவெளிக்குப்பின்
இனிய பயணமாய்
பிறந்த ஊருக்கு!
கிராமத்து வாசம் மாறினாலும்
புராதான சின்னங்களாய்
பழைய வீடுகள்!

கோளரங்க கூரையின் கீழ்
குண்டும் குழியுமாய் தரை
பொற்கால நினைவுகளில்
புதையுண்டு போனேன்!
அன்புக்கேனியாய்
இன்ப ஊற்றை வற்றாமல்
அள்ளித் தெளித்த
அன்னை இல்லம்
அரவணைத்தது!

ஆட்டுக்கல் குழவியும்,
இன்சுவை சமையலறையும்,
தயிர்ப்பானைத் துளிகளும்,
ஆன்மீகமாய் பூஜையறை மாடங்களும்
அன்னை இல்லத்தின் அன்புச்
சுவடுகளாய் நிலைத்திருக்கிறது!

அம்மா, அப்பா, அக்கா, அண்ணன்
தம்பி, தங்கையென அப்போது
கதவின் பின்புறம் நானெழுதிய
வார்த்தைப் பிழைகளை திருத்திய
அம்மாவின் கையெழுத்தோடு
'தமிழமுதூட்டிய' அன்னையின்
சுவடுகள் அழியாது இன்றும்
நினைவுகளின் ஆராதிப்பில்!



....கா.ந.கல்யாணசுந்தரம்.

செவ்வாய், செப்டம்பர் 06, 2011

அவனுக்கு முடிந்தது...


காற்றுக்கு வேலி போட
முடியவில்லை!
கடலை சொந்தம் கொண்டாட
முடியவில்லை!
மழையினை கயிறாக கொண்டு
வானத்தை தொட முடியவில்லை!
விண்மீன்களை எண்ணிவிட
ஒருபோதும் முடியவில்லை!
வானவில்லுக்கு ஒரு மேடை
அமைத்திட முடியவில்லை!
கொட்டும் அருவிக்குள்
குடை பிடிக்க முடியவில்லை!
வெள்ளைநிற பட்டாம்பூச்சிக்கு
வண்ணம் தீட்ட முடியவில்லை!
ஆனால் அவனுக்கு முடிந்தது...
ஒரு பாலைவனமான பருவத்துக்கு
பொட்டு வைத்து பூச்சூட்டி
வசந்த காலத்தை வரவேற்க!

.........கா.ந.கல்யாணசுந்தரம்.

பேசத்தெரியாத குழந்தை


குழந்தை வீரிட்டு அழுத சப்தம்
அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை
ஓடி வந்து கேட்க வைத்தது....
'அடியே பொன்னம்மா....ஏண்டி
கொழந்தய இப்படி அடிக்குற? '
கையில் கிடைத்ததைக் கொண்டு
குழந்தையை அடித்தவள் இப்போது
வாரியணைத்தபடி சொன்னாள்....
'பின்ன என்னாக்கா....பத்து பாத்திரம்
தேச்சு வாங்கின சம்பளத்துல
புது சட்டை வாங்கி போட்டா...அத
தொலைச்சிட்டு வந்து நிக்கரா...
அடிச்சாலும் பதிலு இல்ல...'
பொனம்மாவின் குமுரலுக்கு
பேசத்தெரியாத குழந்தை
மனதோடு தேற்றிக் கொண்டது...
'என்னோட புதிய துணி

பக்கத்து வீட்டு கொழந்தையோட
மரப்பாச்சிக்கு கட்டிட்டேன்....
எவ்வளவு அழகா
இருக்கு தெரியுமா?' .


கா.ந.கல்யாணசுந்தரம்.




சிறகை விரி! வானில் எழு!!




எப்போதும் நல்லதை
நினைக்கும்போதெல்லாம்
ஒரு சமுதாயத்தின்
வளர்ச்சியாக அது இருக்கும்!
நாளை என்று
செயல்பாடுகளை தள்ளிப்போடாமல்
இன்றே இனிது
முடிப்பதால் நிச்சயமாக
வளர்ச்சியின் படிகளில்
வாழ்கிறோம் என்பதும்,
குறிக்கோளின் சிகரத்தினை
காணும் நேரம்
அருகாமையில்தான்
என்பதும் உறுதியாகிறது!
எதற்காக வாழ்ந்தோம்
என்று நினைவுகூரும்போது,
அதற்கான லட்சியத்தை
அடைந்தோமா என்பதில்தான்
இந்த மானுடத்தின்
புரிதல் பரிமளிக்கிறது!
நண்பனே....
சிறகை விரி! வானில் எழு!!
வானம் வசப்படவிட்டாலும்
பரவாயில்லை...
இந்த பூமிப்பந்தின்
விளிம்புகளையாவது
தரிசனம் செய்!

......கா.ந.கல்யாணசுந்தரம்.