கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

புதன், ஜூலை 15, 2015


சிந்திக்கும் நேரங்களில் 
சிறகடிக்கும் பட்டாம்பூச்சிகள்கூட 
ஓய்வெடுத்து உனை நோக்கும் 
விளையாடும் போதெல்லாம் 
வானவில் வழிநெடுக
பந்தல்போடும் !        

நடனமிட்டு புன்முறுவல் 
பூக்கின்றபோது முற்றத்து 
அணில்கூட அசையாது நிற்கும் 
மழலையிவள் வாய்மொழியில் 
குழலோசை செவிமடுத்து 
குதூகலிக்கும் !


தென்றலிடம்  நடைபயின்று
மன்றல் வந்த மானினமோ
இவளின் மருண்டவிழியழகில்
மயக்கமுற்று மீளாது
துயில் கொள்ளும் !

ஒளிப்பூக்களை பறித்தெடுத்து
சத்தமின்றி என்னுள் செலுத்துகிறாள் !
கோடையின் குளிர் குளிர்நிலவில்
குதூகலமாய் கற்பனைத்தேர் ஏறி
எனை இயங்கவைத்து
யாதுமாகி நிற்கிறாள் !
         ..........கா.ந.கல்யாணசுந்தரம்.