கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

புதன், ஜூலை 20, 2016

இனி கங்கைக்கரையில்தான் என்று !


அறம் பொருள் இன்பமென
முப்பாலைப் பொழிந்தாய் !
மானுடம் உய்ய உலகுக்கோர்
பொதுமறையை பகன்றிட்டாய் !
செம்மொழியாம் தமிழுக்கு
மகுடமாய் என்றென்றும்உனது திருக்குறளன்றோ !

தன்னலம் கருதா தமிழ்க்காதலன்
தருண்விசையின் முயற்சியில்
கங்கை நதிப்புறத்து நற்றமிழ்
ஆசானாய் நீ கொலுவிருக்கும்
தருணத்தில்......பாவிகள் உன்னை
புறக்கணித்து கருப்புநிற காகிதத்தில்
சுற்றியபடி பூங்காவில் தள்ளினரே !
இன்னா செய்தாரை அவர்நாண
நன்னயம் செய்பவன் நீ......
பொருந்தாது இவையெல்லாம்
இந்நாளில்.....
தமிழினம் கொதித்தெழும்...!
இந்திய தேசியத்தின் நூலென
திருக்குறளை அரசு ஏற்காவிடினும்
சூளுரைப்போம்.....நம் அய்யனின்
திருவுருவம்.....இனி கங்கைக்கரையில்தான் என்று !


.....கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, ஜூலை 15, 2016

நாளொன்றைக் கூறுங்கள்...!!!




தேவைகளை உள்ளடக்கிய
வாழ்வில் அபரிமிதமாக
மனிதம் வாழ்கிறது ...!
பயணிப்பில் இலக்கு
தேவைதான்....
இலக்கின் பாதையில்
தோல்விகள் இருக்கலாம் !
ஆனால் சுயநலத்தின்
முதுகில் சவாரி செய்து
இலக்கினை அடைவதால்
யாருக்கு இலாபம் ?
வெற்றிகளை மட்டுமே
பச்சை குத்திக்கொள்ளும்
மனிதம் எப்போதுமே
அடையாளம் காணப்படுகிறது
ஆம்..............................
சூழலை மறந்த இனத்தோடு !
கொள்கையற்ற அரசியலார்
கால்கழுவி வாழுகின்ற
சுயநலக் கூட்டங்கள்
அவலநிலை மாந்தரின்
அன்றாட வாழ்வுதனை
கூறுபோட்டு விற்கிறது !
எல்லோரும் எல்லாமும்
பெறவேண்டும் !
இங்கு இல்லாமை
இல்லாத நிலை வேண்டும் !
........இதனை மெய்ப்பிக்கும்
நாளொன்றைக் கூறுங்கள்...!!!
.........கா.ந.கல்யாணசுந்தரம்

புதன், ஜூலை 13, 2016

வடுகப்பட்டிமுதல் வால்காவரை ......



என் ஜன்னலின் வழியே
எட்டிப்பார்க்கிறேன்
நேற்றுப் போட்ட கோலம் கூட
ஒரு மௌனத்தின்
சப்தங்களாகிப்போனது !
வானம் தொட்டுவிடும் தூரம்தான்
என்று வைகறை மேகங்களில்
தமிழுக்கு நிறமுண்டென
உனது திருத்தி எழுதிய தீர்ப்புகள்
மறக்கவியலா கல்வெட்டுக்கள் !
பெய்யெனப்பெய்யும் மழையே ....
இந்த தண்ணீர் தேசத்து
எல்லா நதிகளிலும்
எங்கள் ஓடங்கள்
சிகரத்தை நோக்கி
கொஞ்சம் தேநீர் நிறைய வானத்துடனும்
காவி நிறத்தில் ஒரு காதல் செய்கிறது !
மூன்றாம் உலகப்போருக்கு
வில்லோடு வா நிலவே என்றழைக்க ...
ஒரு போர்க்களமும்
இரண்டு பூக்களுமே மீதமிருந்தன !
எனது பழைய பனைவோளைகளை
புரட்டியதில்
குளத்தில் கல்லெறிந்தவர்களை விட
கவிராஜன் கதைகளைக்
கேட்டவர்களே அதிகம் !
இதனால் சகலமானவர்களுக்கும்
வடுகப்பட்டிமுதல் வால்காவரை
சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன் .....
கள்ளிக்காட்டு இதிகாசம்
உனது இரத்ததானம் !
கருவாச்சி காவியம்
இன்னொரு தேசியகீதம் !
சிறுகதைகளின் சிற்பியே
உன்னைச் செதுக்கினாலும்
அந்தக் கல்லிலிருந்து
உதிரும் கவிதைப்பூக்கள்
விற்பனைக்கல்ல எங்களின் சுவாசத்திற்கு !
தாய்மண்ணின் தமிழுக்கு
உயிராய் வாழும் இந்நூற்றாண்டு கவியே
உளமார வாழ்த்துகிறேன் பிறந்தநாளில்
பல்லாண்டு வாழ்கவென !
.......கா.ந.கல்யாணசுந்தரம்

சனி, ஜூலை 09, 2016

தார்ச்சாலைப் பூக்கள்

தெருவிளக்கு உமிழும் 
வெளிச்ச எச்சிலில் 
இரவு  தன்னை 
கரைத்துக்கொண்டு
விடியலின் வாழ்வுக்கு 
வழிவிடுகிறது 

தார்ச்சாலைப் பூக்கள் 
வியர்வைத்துளிகளின் 
வாசம் பரப்பி 
ஒரு பரபரப்பில் 
தன்னை சிறைவைக்க 
தயாரானது 

எச்சங்களின் வரவால் 
வயிறு புடைத்த 
குப்பைத் தொட்டிகள் 
அட்டை பொறுக்கும் 
சிறுவர்களின் மறுவாழ்வில் 
அங்கம் கொண்டது   

நான்கு சக்கரம் 
இரண்டு சக்கரம் 
மூன்று சக்கரம் 
நாளெல்லாம் உருண்டு 
மானுடத் திசுக்களை 
சுமந்தவாறு 
ஊர்வலத்தை நடத்தின  

வளமிக்க 
விளைநிலங்களை 
மறந்த மனங்கள் 
விடுதலை அறியா 
விருப்பினர்களாக
தூண்டில்  புழுவானார்கள் 

நெரிசல் மிக்க 
நகரத்து விண்வெளியில் 
பறக்க மறந்த
பறவைகள் மட்டும் 
கிராமத்து பாதைகளை 
தேர்ந்தெடுத்தன 

.........கா.ந.கல்யாணசுந்தரம்