கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

சனி, அக்டோபர் 04, 2014

பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும், - காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்;
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும், - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!

பொழிலிடை வண்டின் ஒலியும் - ஓடைப்
புனலிடை வாய்க்கும் கலியும்,
குழலிடை வாய்க்கும் இசையும், - வீணை
கொட்டிடும் அமுதப் பண்ணும்,
குழவிகள் மழலைப் பேச்சும் - பெண்கள்
கொஞ்சிடும் இதழின் வாய்ப்பும்,
விழைகுவ னேனும், தமிழும் - நானும்
மெய்யாய் உடலுயிர் கண்டீர்!

பயிலுறும் அண்ணன் தம்பி, - அக்கம்
பக்கத் துறவின் முறையார்,
தயைமிக உடையாள் அன்னை - என்னைச்
சந்ததம் மறவாத் தந்தை,
குயில்போற் பேசிடும் மனையாள், - அன்பைக்
கொட்டி வளர்க்கும் பிள்ளை,
அயலவ ராகும் வண்ணம் - தமிழ் என்
அறிவினில் உறைதல் கண்டீர் !

நீலச் சுடர்மணி வானம் - ஆங்கே
நிறையக் குளிர்வெண் ணிலவாம்.
காலைப் பரிதியின் உதயம் - ஆங்கே
கடல்மேல் எல்லாம் ஒளியாம்,
மாலைச் சுடரினில் மூழ்கும் - நல்ல
மலைகளின் இன்பக் காட்சி
மேலென எழுதும் கவிஞர் - தமிழின்
விந்தையை எழுதத் தரமோ?

செந்நெல் மாற்றிய சோறும் - பசுநெய்
தேக்கிய கறியின் வகையும்,
தன்னிகர் தானியம் முதிரை, - கட்டித்
தயிரோடு மிளகின் சாறும்,
நன்மதுரஞ்செய் கிழங்கு - கானில்
நாவிலினித்திடும் அப்பம்,
உன்னை வளர்ப்பன தமிழா! -உயிரை
உணர்வை வளர்ப்பது தமிழே !

.......பாவேந்தர் பாரதிதாசன்.