கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

செவ்வாய், செப்டம்பர் 23, 2014

கார்கால ஹைக்கூ கவிதைகள்.....




*கார்கால மழை
நனையாமல் நகரும் நத்தைகள்
சாலையோர நாய்க்குடை காளான்கள் ...!

* பாசிபடிந்த ஆல விழுதுகள்
ஊஞ்சலாடுகின்றன...
மழையில் நனைந்த மந்திகள் !

* மந்தையில் இருந்து பிரிந்தது
ஆட்டுக்குட்டி....
மஞ்சள் வெயிலில் நனைந்தபடி !

* குளிர் காற்றில் ஊசலாடும்
தூக்கனான் குருவிக் கூடுகள்...
உறக்கமிழந்த குஞ்சுகளோடு !

* புது வெள்ளத்தில்
ஆனந்தக் கூத்தாடியது...
ஓடைக்கரை தவளைகள்  !

* நேற்று பெய்த மழை வாசம்
புத்துயிர் பெற்றன...
எனது கவிதைக் கரங்கள் !

* இன்னமும் தேடுகிறது மனது
மழை வருமுன் மணக்கின்ற
மண்வாசம் !

.......கா.ந.கல்யாணசுந்தரம்.


அது ஒரு வசந்தகாலம்...



அது ஒரு வசந்த காலம்
மேக மூட்டம் பகலை
இருளாக்கியது.....


பெருமழை பெயதலின்
முன்னோடியாய்
மின்னல் வெட்டும் இடியும்...
பள்ளிக்கூடத்தின் மணி
அடிக்கப்பட்டது....
புற்றீசலாய் வகுப்பிலிருந்து
பறந்து சென்றோம்
வீட்டுக்கு....!


சுவையான கேழ்வரகு அடை
அம்மாவின் கைவண்ணத்தில்
மணம் தவழ
அழைத்தது வீட்டின் வாயில் !


தூறல் ஆரம்பித்தது.....
மழைக்கு இதமாய்
அடையை காகிதப்பைகளில்
அடைத்து வைத்துக்கொண்டு
திண்ணையில் உட்கார்ந்து
சுவைத்தவரே தயாரானது
எங்களின் காகிதக் கப்பல்கள்....!


அக்கம் பக்கம் நட்புகளுடன்
தெருவில் அணைகட்டி
திறந்துவிட்டோம்
வெள்ளத்தை ....
வெள்ள நீரில் பயணித்தன
காகிதக் கப்பல்கள் .........
மனிதநேயத்தின்
அறிச்சுவடுகளாய்....!
ஆம்...அது ஒரு வசந்த காலம் !!!!!!

.....கா.ந.கல்யாணசுந்தரம்.