கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

திங்கள், ஆகஸ்ட் 29, 2011

பூவாக உனை சுமக்க

புன்னை மர நிழலில்
தென்றல் துணையோடு
பிள்ளைக்கு தாலாட்டு!
தண்ணீர் தேக்கிவைத்த
வயக்காடு பரப்பினில்
நெல்நாத்துக் கட்டோடு
தாயவளின் பெரும்பாடு!

உச்சி வெயில் தணலாகி
உடம்பெல்லாம் வியர்க்க
பச்ச புள்ள செவ்வாய்க்கு
பால் புகட்டும் நேரமிது!
மார்பிரண்டும் பெரும்பாரம்
பிடிக்காத சுமையிதுவே!
பூவாக உனை சுமக்க
உள்ளமிது குதூகலிக்கும்!
குடைபிடித்து நிர்க்கின்ற
முதலாளி கெடுபிடியில்
நாற்று நாடும் கையிரண்டும்
குழந்தையின் நேசமிகு
உணர்வுகளில் நடுநடுங்க....
மங்கையவள் மாராப்பு
மழலைவாய் தீண்டாமல்
பால்வடிந்து நனைந்ததம்மா!
பாவியவள் அடிவயிற்றை
நனைக்கின்ற தேடலிலே!

.....கா.ந.கல்யாணசுந்தரம்.

பார்வையின் எல்லைக்குள்..........

நம் கைகளுக்கு
எட்டாத தூரத்தில்
வைத்திருப்போம்
குறிக்கோள்களை
ஆனால் அவை
எப்போதும்
இருக்க வேண்டும்
நமது
பார்வையின்
எல்லைக்குள்!
அவற்றை திருத்தவும்
அடையவும்
நம்மிடம் அதிகாரம்
இருக்கிறது!

......கா.ந .கல்யாணசுந்தரம்.

படித்தீர்களா?'அருவி'

'அருவி'
கவிதை இலக்கிய காலாண்டிதழ்
ஆசிரியர்: காவனூர் ந.சீனிவாசன்
புதிய பொலிவோடு முழுவதும் கவிதை மணம் பரப்பி
திமிரி நகரில் இருந்து வெளிவருகிறது

முகவரி: அருவி,
14 , நேரு பஜார்,
திமிரி 632512,
ஆர்க்காடு வட்டம்,
வேலூர் மாவட்டம

aruvisrinivasan@gmail.com
Cell:9600898806

இருவரின் புரிதலில்

மனிதப் பிறவியின் பயனிதுவென
இப்போதுதான் புரிந்தது....
அவளது புன்னகையில்
பிறப்பெடுக்கும் அங்கீகாரங்கள்!

கற்றது கைப்பிடி அளவுதான்னென்று
இப்போதுதான் புரிந்தது
அவளது அன்பின்
அரவணைப்பில் அகமகிழ்ந்தது!

எதிர்காலம் ஒரு வினாக்குரியானபோது
புதிரல்ல நம் வாழ்க்கையென்று
திட்டமிட்டு அவளால்
தடம்பதித்தது நிகழ்காலங்கள்!

எல்லா வளமும் நலனும்
இருவரின் புரிதலில்
ஒவ்வொருநாளும்
பிறப்பெடுக்கின்றன!





கா.ந.கல்யாணசுந்தரம்.

பரவசப்படும் இதயம்!






மனசுக்குள் ஒரு சுகம்...
அஞ்சலகப் பெட்டிக்குள்
கடிதம் விழும் போது
எப்போது சேருமோ என்கிற
ஏக்கத்தில் ஒரு தவிப்பு...
தெருமுனையில் தபால்காரன்
வருகைக்கான காத்திருப்பில்
ஒரு அலாதியான பரபரப்பு!
கைக்கு கிடைத்த கடிதத்தை
பக்குவமாய் பிரிப்பதற்குள்
அம்மாவும் தங்கையும்
அவசரப்படும் காட்சிகளில்
பரவசப்படும் இதயம்!
முத்து முத்தான கையெழுத்தில்
அண்ணனுடைய கடிதத்தினை
அம்மாவுக்கு படித்துக்காட்டும்போது
நானும் இமயமலையில்
இந்தியநாட்டின் எல்லையோரம்
துப்பாக்கியேந்தி நிர்ப்பது போன்ற
தியாக உணர்வுகள்...
மின்னணு நவீன பொருட்களும்
கைப்பேசியும் இப்போது
எங்களிடம் இருந்து என்ன பயன்?
மலர் மாலைக்குள் உனது
களங்கமற்ற முகத்தில் நாங்கள்
தெளிவாய் பிரதிபலிக்கிறோம்
இந்த தேசம் காத்த
தவப்புதல்வனின் வாரீசுகளாய்

ஒரு நீர்த்துளிக்குள் கடல்...



ஒரு நீர்த்துளிக்குள் கடல்...
என்று அறிந்தும் இந்த வாழ்க்கை
ஒரு மௌனத்தின் பிரவாகம்
என்பதை யாவரும் அறிந்திலர்!
இருட்டறைக்குள் உயிர் கொடுத்து
தவமிருந்து பெற்றெடுத்த தாயுள்ளம்
ஒரு தபோவனம்!
வம்ச விருட்சத்தின் நாற்றங்கால்கள்
இன்றளவும் நாம்தான் என்று பறைசாற்ற....
உன்னுள் இன்றளவும் எதை சாதித்தாய்
என்று மனம் மௌனமாய் கேட்பது
யாருக்கு தெரியப்போகிறது!
ஆனால் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது
இந்த மானுடம் வென்ற மௌன நித்திரை
மரணமென்று!........
இனிமேலாவது அன்னையின் தபோவனத்தில்
ஒரு நிரந்தரப் பணியாளனாய் இரு!

.....கா .ந .கல்யாணசுந்தரம்.