கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

திங்கள், ஏப்ரல் 20, 2015

தமிழினம் தழைக்க ....

தமிழினம் தழைக்க 
தமிழகம் தழுவவேண்டும்... 
மதுவற்ற மாநிலத்தை !

.............கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, ஏப்ரல் 10, 2015

சாவிகொடுத்த பொம்மைபோல் ....

எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம் ...
வேகமாக நடந்து செல்வோரின் கைகள்
அவரவர்களின் மனவோட்டத்தின்படி
அசைந்து அசைந்து ஊஞ்சலாடுகிறது !
சாவிகொடுத்த பொம்மைபோல் சிலர்
முகத்தில் சலனமற்று பயணிக்கின்றனர் !
நாளைய வாழ்க்கையின் இருத்தலுக்காய்
இருப்புக்கொள்ளாமல் தேடுதல் வேட்டை !
இடையிடையே தர்மநெறி  தேர்வு நடத்தும்
பாதையோர பிதாமகர்கள் !
காலனின் கையாட்களாய்
சாலைகளெங்கும்  போக்குவரத்து
விதிமீறும் வாகனவோட்டிகள் !
தமிழில் பேசினால் அவமானமென்று
ஆங்கிலத்தில் மட்டுமே பதிலளிக்கும்
இளைய தலைமுறைகள் .....
எதையும் காதில் போட்டுக்கொள்ளாது
அலைபேசி பாடல்களில் மூழ்கியபடி
பேசா மானுட பிறவிபோல்
இருப்பிடத்தை தொலைத்தவாறே நகர்கிறது !
பணம் கொடுத்து எதையும் வாங்கும்
 நகரத்து பகட்டு நரக வாழ்வுதனில்
மனிதநேயம் மறைந்தே போனது !

.........கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், ஏப்ரல் 09, 2015

சிறுவனின் வயிறும் ...

போஸ்டர் ஒட்டிய
சிறுவனின் வயிறும் ...
ஒட்டியிருந்தது பசியால் !

.....கா.ந.கல்யாணசுந்தரம்