கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!
புதுக்கவிதை. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதுக்கவிதை. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, செப்டம்பர் 11, 2016

நவீனத்துவம் ஒரு நகர்தலோடு....




அந்த ஓவியத்துக்குள் 

என்னதான் இருக்கிறது ?
பின்நவீனத்துவ சிந்தனைகளில் 
பிறப்பெடுத்த வடிவமா ?
உதிர்ந்த இறகின் தூரிகையால் 
வரையப்பட்டதா ?
வண்ணங்களின் கூட்டுக் குடும்பமா ?
அப்பிய நிறங்களின் கலவைகளில்
மானுட வடிவங்கள் அம்மணமாய்
ஒரு கோணம் சித்தரித்தது !
பிறந்த மழலைக்கு பாலூட்டும்
அன்னையின் வடிவம் மறுகோணம் !
விரித்த கூந்தலொடு விசும்பும் பெண்ணின்
உருவமெங்கும் சிவப்புத் தழும்புகள்
மொத்தமாய் விசுவரூப தரிசனம்....
அத்தனையும் பின்னிப் பிணைந்திருக்கும்
நவீனத்துவம் ஒரு நகர்தலோடு....
வானரச் சேட்டைகளில்
விழிபிதுங்கும் மந்தியைப்போல்
அங்குமிங்கும் ஓடி அலைந்து
ஒதுக்கப்படுகிறேன்....அந்த
ஓவியக் கண்காட்சி வளாகத்தின்
மூலையில் ...
மனிதநேயமற்ற
ஒரு பிரளயத்தின் வாசம்
இப்போது எனது மூக்கருகில் !
...........கா.ந.கல்யாணசுந்தரம்

புதன், ஆகஸ்ட் 31, 2016

உதிர்தலின் புனிதம் அறிந்து !

பாதங்களில் மிதியுற்ற 
சருகுகளின் சலசலப்பில் 
எனது பயணிப்பின் திசை
மாற்றியமைகிறது

மணல் தேசமொன்றின்
ஆற்றைக் கடக்க
ஒரு பரிசல் பெண்ணின்
துணையோடு
பயணமானேன்...
மற்றவர்களை மட்டுமே
கரைசேர்க்கும் இவள்
துவண்ட முகத்தோடு
துடுப்புகளால் கையசைத்து
விடைபெற்றாள்

பயனத்திசைகள் எங்கும்
மானுட அவலம்
முடிவின்றி பயணிக்கிறது
மீண்டும் தொடர்கிறேன்
காய்ந்த வனமொன்றின்
சாலையொன்றில்...
இப்போது மௌனித்திருந்தது
சலசலப்பின்றி சருகுகள்
உதிர்தலின் புனிதம் அறிந்து !

........கா.ந.கல்யாணசுந்தரம்.

ஞாயிறு, ஆகஸ்ட் 28, 2016

இல்லறத்தில் நல்லறம் கண்ட நங்கையிவள்



வான்வழி தவழும் நிலவென மழலையிவள்
வாய்முத்தம் சுவைத்திங்கு மகிழ்ந்திடவே....
நிலமதில் பேதையாய் எண்திசையும்
உற்றுநோக்கி வியப்பிலாழ்ந்து நாள்தோறும்  
பெதும்பையாய் தோழியர் பலருடன் ஊஞ்சலாடி.....
காலம் வளர்த்த பயிர் பசுமையுடன் நின்றாடுதம்மா !

கனிமொழி மங்கையிவள் பெண்மையின் சிறப்பறிந்து
நாணித் தலைகுனியும் நங்கையிவள்
கானகத்து வண்ணமயில் பூங்கோதை !  
அன்னநடை பயிலும் மடந்தையின் கைபிடிக்க
மணாளனைத் தேடிப் பெற்றோர் மட்டற்ற மகிழ்வெய்தி
அரிவைப் பருவத்தே பயிர் செய்வர் !

இல்லறத்தில் நல்லறம் கண்ட நங்கையிவள்
கைப்பிடித்த கணவனுடன் தெரிவைத் திறத்தாலே
பேர்சொல்லும் பிள்ளைகளைப் பெற்றெடுப்பர் !
பேரிளம் பெண்ணிவளின் பல்கலை வித்தகத்தால் 
சமுதாயக் கூடமதில் கலாச்சாரத் தூணாக நின்றிடுவாள்
அமுதாக தமிழ் மரபில் இலங்கிடுவாள் குலவிளக்காய் !
     


...............கா.ந.கல்யாணசுந்தரம்

சனி, ஆகஸ்ட் 27, 2016

புத்துலகு கண்டிடுமே பொறுப்போடு !

















தோகை விரித்தாடும்
மயில் போல்
தாவிக் குதித்திடும்
மனது நித்தம் !
புருவவில்லில் 
பார்வைக் கணைகள்
தொடுத்திடும்
ஒரு பருவ யுத்தம் !
வெண்கலச் சிலைபோல்
மேனி மின்னும்
எழிலுரு மாற்றம் தன்னில்...
அறியாது புரியாது
புன்முறுவல் பூக்கின்ற
ஆனந்த மொட்டவிழ்
வசந்த காலம் !
முறைமாமன்
குச்சி நட்டு பந்தலிடும்
மறத்தமிழன்
பண்பாட்டின் நிகழ்விடம் !
பட்டுப் பாவாடையும்
பளபளக்கும் தாவணியும்
பருவத்தின்
வாசலுக்கு மெருகூட்டும் !
மஞ்சள் நீராடி
அகில் சந்தன வாசமுடன்
கொஞ்சுமொழியாளின்
கூடத்து விழாவினில்...
கெஞ்சுகின்ற
விழியோடு காத்திருந்து
தஞ்சமடைந்திடுமே
வாலிப நெஞ்சங்கள் !
மொட்டவிழ் தாமரையாய்
முகம்மலர
நாளொருமேனியும்
பொழுதொரு வண்ணமுமாய் ...
பூப்பெய்திய பருவமினி
பெற்றோரின் அரவணைப்பில்
புத்துலகு கண்டிடுமே
பொறுப்போடு !
...........கா.ந.கல்யாணசுந்தரம்

செவ்வாய், மே 31, 2016

விடியலைத் தாருங்கள் ...

மக்களால் தேர்ந்தெடுகப்பட்டும்
மதியிழந்து போனார்கள் ...
காலில் விழும் கனவான்கள் !
பரவாயில்லை ...
பொறுத்துக்கொள்கிறோம் !

தொகுதிக்கு வாருங்கள்
உங்களின் காலில் விழுந்து
கெஞ்சாத குறையாய்
காத்திருக்கிறார்கள்
உங்களின் பிரஜைகள் !

அடிப்படை வசதிகூட
காணாத பகுதிக்கு
அவசியம் செல்லுங்கள்...!
குறைகளைக் கேட்டறிந்து
களைந்திடுங்கள் உடனடி தீர்வால் !

அடுத்த வேளை உணவின்றி
உடுத்த துணியுமின்றி வாடும்
அடித்தட்டு மக்களுக்கு நல்லதொரு
விடியலைத் தாருங்கள் ...
அடுத்த ஐந்தாண்டு அருகில்தான் !

.......கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், ஜூலை 30, 2015

இந்தியத் தாயின் நல்லிணக்க நாயகன் !

எளிமையின் சிகரம்
இணையிலா மாமனிதர்
கவிதை நெஞ்சின் கோமகன்
அக்கினிச் சிறகினில்
அகிலத்தை அடைகாத்தவன் ...
பார் போற்றும் பாரதரத்னா !
இராமேஸ்வர கடற்கரையின்
இளம் தென்றல்....
அன்பெனும் சிறைக்குள்
நம்மை அகப்படவைத்தவன் !
அறிவியல் உலகின்
ஓர் அமர காவியம்....
தமிழுலகின் இலக்கியப் பேழை
இந்தியத் தாயின் நல்லிணக்க நாயகன் !
மதங்களைக் கடந்த மாமேதை
அப்துல் கலாம் இன்னுயிர் பிரிந்தாலும்
அவரின் சாதனைப் பயணம்
என்றும் நம்மோடுதான். !

...............கா.ந.கல்யாணசுந்தரம்.
 

செவ்வாய், ஜனவரி 20, 2015

கனவில் அந்த மூவரும்.....



ஊருக்குள் நுழையும்
தார்சாலையின்
ஓரத்தில்
சிதிலமடைந்த மண்டபம்...!
மண்டபத்தின் கூரையின்
நடுவில்
பெரியதாய் ஆலமரம்
தழைத்திருந்தது !

சிற்பவேலைப்பாடுகளுடன்
தூண்கள்...!
தரைப்பகுதி கற்கள்
களவாடப்பட்டு
குண்டும் குழியுமாய் இருந்தது !
சிலந்திக்கூட்டுக்குள்
சிக்கியிருந்த பூச்சிகள்
தவித்துக் கொண்டிருந்தன !

ஆடுமேயத்த சிறுவன்
ஒருவன்  
ஆட்டுக் குட்டியுடன்
அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தான்  
எதிரில் கட்டப்பட்டிருந்த
பஞ்சாயத்து நிழற்குடையின் கீழ்
அடுத்த பேருந்துக்காக
ஐந்தாறுபேர் நின்றிருந்தனர்!

கோடை காலத்தின்
வெப்பத்தை தாங்கமுடியாது  
அயர்ந்த உறக்கத்தில் இருந்த
அந்தச் சிறுவனின் கனவில்
மூவர் வந்து சென்றனர்.....
கண்விழித்த சிறுவனுக்கு
நினைவில் நின்றது....
கனவில் அந்த முவரும்
இவனுடன் அந்த மண்டபத்தில்
இளைப்பாறியதாய்......!
அவர்கள் கோவலன்,
கண்ணகியுடன் கவுந்தியடிகள்
என்பதுமட்டும்
அவனுக்கு தெரியவில்லை!

ஆனால் .......சரித்திர சான்றுகளின்
புனைவுகளில் என்றும்
இலயித்தவரே இருக்கின்றனர்
இன்றைய எழுத்தாளர்கள்!


............கா.ந.கல்யாணசுந்தரம் 

ஞாயிறு, ஏப்ரல் 08, 2012

கனவு மெய்ப்பட வேண்டும்



















நடந்து செல்ல செல்ல
எனது தூரம் வளர்கிறது
பாதை ஏனோ முடியவில்லை !
அருகில் எவரையும்
காண முடியவில்லை !
தேநீர் அருந்த எவ்வளவு
தூரம் பயணிப்பது?
ஒரு ஓலைக் குடிலுக்கு அருகில்
எனது தாய் என்னை வரவேற்கிறாள்!
மகனே...கால் வலிக்கிறதா?
உள்ளே வா ..... உனக்கு தேநீர் தருகிறேன்
என்றழைத்து ஒரு கோப்பை தேநீர்
அருந்தத் தருகிறாள்!
என் கரங்களைப் பற்றி
அவள் கண்ணீர் மல்க கூறுகிறாள்
" தடைக் கற்கள் என்றுமே
உனது படிக் கற்கள் தான்!
சோர்வு அடையாதே.....
என்றாவது இந்த உலகம்
உன்னை திரும்பி பார்க்கும்"
இந்த உற்சாக வார்த்தைகள்
என்னுள் ஆனந்த ராகங்களை
மீட்டுகிறது......
எனக்கு புதியதாய் சிறகுகள்
முளைக்கின்றன......
இதோ ....நான் பறந்து செல்கிறேன்...
இப்போது நான் பயணிக்கும் தூரம்
அதிகமில்லை!
இலக்குகள் என்னருகே.........!

............கா.ந.கல்யாணசுந்தரம்.