கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!
மனிதநேயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனிதநேயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஏப்ரல் 16, 2018

மனித உணர்வுகளின் வெளிப்பாடாக அமையவேண்டும் ....தமிழ் ஐக்கூ கவிதைகள் !

மனித உணர்வுகளின் வெளிப்பாடாக அமையவேண்டும் ....தமிழ் ஐக்கூ கவிதைகள் !
********************************************************************
தமிழ் ஐக்கூ கவிதைகள் ஒரு நூற்றாண்டைக் கடந்து வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது.
கவிதைகளின் பரிணாம வளர்ச்சியில் துளிப்பாக்கள் (ஐக்கூ கவிதைகள் ) தமிழ் கவிதை உலகில் இனிய தடம் பதித்து வருகிறது என்பதில் ஐயமில்லை.
ஒரு கவிதை சமுதாய மாற்றத்தைக் கொண்டுவருமேயானால் அது ஜீவனுள்ள வரிகளையும் சொற்களையும் தன்னகத்தே கொண்டு ஒரு இயக்கத்தையே நடத்துகிறது என்பது உண்மை.
திரையுலகில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவியரசு கண்ணதாசன், கவிஞர் வாலி போன்றோரின் பாடல்வரிகளில் உயிரோட்டமான சொற்களும் வரிகளுமே காலம் கடந்து நிற்கும் தன்மைக்கு அடிப்படை ஆகும்.
எளிய தமிழ் சொற்களால் கோடானுகோடி மக்களின் இதயத்தை கொள்ளையடித்த கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகளில் இந்த சமுதாய முன்னேற்றத்துக்கான விதைகள் தூவப்பட்டன.
இலக்கிய உலகில் பக்தி இலக்கியம் தொட்டு, சங்க இலக்கியம் மற்றும் சங்கம் மருவிய காலம் வரை அலைகடலாய் தமிழ் இலக்கிய வரலாறு பார்போற்ற ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.
இந்த வரிசையில் காலம் கடந்து நிற்கும், வாழ்ந்துகொண்டிருக்கும் ஐக்கூ (துளிப்பாக்கள் ) கவிதைகள் நூற்றுக் கணக்கான கவிஞர்களின் விரல்களில் பிறப்பெடுத்த பெருமைக்கு உரியதாகும்.
இந்த வரிசையில் தடம்பதித்த/தடம் பதித்து வரும் ஐக்கூ கவிஞர்களின் ஹைக்கூ கவிதைகள் தினம் தொடராக எனது பார்வையில் வெளியிட விரும்புகிறேன்.
இந்த ஐக்கூ கவிதைகள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவை. விளக்கம் கொடுத்து புரிய வைக்க வேண்டும் எனும் கட்டாயம் இல்லை. பன்முக நோக்கில் பொருள் கொள்ளும் ஆற்றல் மிக்க ஐக்கூ கவிஞர்கள் மத்தியில் நான் விளக்கம் கொடுக்க
விரும்பவில்லை... !
இந்த ஐக்கூ கவிதைகளை (துளிப்பாக்கள்) உள்வாங்கி கவிதையின்பம் பெற அன்போடு அழைக்கிறேன்...!
தற்போது ஐக்கூ எழுதும் இளைய தலைமுறைக்கும் இந்த ஐக்கூ கவிதைகள் எடுத்துக் காட்டாய் விளங்கும் என நம்புகிறேன்.
காலத்தை வெல்லும் தமிழ் ஐக்கூ கவிதைகள்....தொடர் ..1
*****************************************************
1. துணிகளில் தெரிவதில்லை
நெசவாளனின்
கருத்த விரல்கள்
......ஏகாதேசி
2. பசித்தழுகிறது குழந்தை
ரப்பர் மரத்தில் பால் வெட்டியபடி
வற்றிய மார்போடு அம்மா
.....ஏகாதேசி
3. சருகு பொறுக்குவதில்
சரியாகிறது நேரம்
குளிர் காய்வது எப்போது ?
.....பல்லவி குமார்
4. தீக்குச்சி இறந்தது
தீபத்தில்
அசைந்தாடும் உயிர்
......பழனி இளங்கம்பன்
5. அட...குடங்களுக்குக் கூட
சொட்டு மருந்து கொடுக்கிறதே...
நகரிய தெருக் குழாய்
......முகவை முனீஸ்
6. இருண்ட கிராமத்தின் வழியே
இரக்கமின்றி செல்கின்றன
நகரத்திற்கு மின்கம்பிகள்
......நாவம்மா முருகன்
7. பிச்சையெடுத்தான் சிறுவன்
பசி தீர்ந்தது
குடிகார அப்பாவுக்கு
.....நாவம்மா முருகன்
8. சங்கு ஊதியும்
எழுந்திருக்கவில்லை
ஆலைத் தொழிலாளி
.....சீனு தமிழ்மணி
9. இருட்டில் அமர்ந்து
மௌனத்தை தின்னும்
அணைந்த மெழுகுவர்த்தி
.....மு.முருகேஷ்
10. ஏற்றத் தாழ்விலும்
இணைந்த இயக்கம்
விரல்கள்
......கா.ந.கல்யாணசுந்தரம்
....................நாளை தொடரும்.............
(நன்றி: நீங்கள் கேட்ட ஐக்கூ தொகுப்பு நூல் - ஆண்டு 2000)

சனி, ஆகஸ்ட் 27, 2016

புத்துலகு கண்டிடுமே பொறுப்போடு !

















தோகை விரித்தாடும்
மயில் போல்
தாவிக் குதித்திடும்
மனது நித்தம் !
புருவவில்லில் 
பார்வைக் கணைகள்
தொடுத்திடும்
ஒரு பருவ யுத்தம் !
வெண்கலச் சிலைபோல்
மேனி மின்னும்
எழிலுரு மாற்றம் தன்னில்...
அறியாது புரியாது
புன்முறுவல் பூக்கின்ற
ஆனந்த மொட்டவிழ்
வசந்த காலம் !
முறைமாமன்
குச்சி நட்டு பந்தலிடும்
மறத்தமிழன்
பண்பாட்டின் நிகழ்விடம் !
பட்டுப் பாவாடையும்
பளபளக்கும் தாவணியும்
பருவத்தின்
வாசலுக்கு மெருகூட்டும் !
மஞ்சள் நீராடி
அகில் சந்தன வாசமுடன்
கொஞ்சுமொழியாளின்
கூடத்து விழாவினில்...
கெஞ்சுகின்ற
விழியோடு காத்திருந்து
தஞ்சமடைந்திடுமே
வாலிப நெஞ்சங்கள் !
மொட்டவிழ் தாமரையாய்
முகம்மலர
நாளொருமேனியும்
பொழுதொரு வண்ணமுமாய் ...
பூப்பெய்திய பருவமினி
பெற்றோரின் அரவணைப்பில்
புத்துலகு கண்டிடுமே
பொறுப்போடு !
...........கா.ந.கல்யாணசுந்தரம்

வெள்ளி, ஜூலை 15, 2016

நாளொன்றைக் கூறுங்கள்...!!!




தேவைகளை உள்ளடக்கிய
வாழ்வில் அபரிமிதமாக
மனிதம் வாழ்கிறது ...!
பயணிப்பில் இலக்கு
தேவைதான்....
இலக்கின் பாதையில்
தோல்விகள் இருக்கலாம் !
ஆனால் சுயநலத்தின்
முதுகில் சவாரி செய்து
இலக்கினை அடைவதால்
யாருக்கு இலாபம் ?
வெற்றிகளை மட்டுமே
பச்சை குத்திக்கொள்ளும்
மனிதம் எப்போதுமே
அடையாளம் காணப்படுகிறது
ஆம்..............................
சூழலை மறந்த இனத்தோடு !
கொள்கையற்ற அரசியலார்
கால்கழுவி வாழுகின்ற
சுயநலக் கூட்டங்கள்
அவலநிலை மாந்தரின்
அன்றாட வாழ்வுதனை
கூறுபோட்டு விற்கிறது !
எல்லோரும் எல்லாமும்
பெறவேண்டும் !
இங்கு இல்லாமை
இல்லாத நிலை வேண்டும் !
........இதனை மெய்ப்பிக்கும்
நாளொன்றைக் கூறுங்கள்...!!!
.........கா.ந.கல்யாணசுந்தரம்

ஞாயிறு, ஆகஸ்ட் 30, 2015

இவனது நிஜ வாழ்க்கை ...

வண்ணக் கலவைகள்  
கிண்ணத்தில் இருந்தன...
ஆடை களைந்து
மினுக்கும் ஜிகினா
உடையணியும் நேரம்
ஒரு முறை மீண்டும்
நிலைக்கண்ணாடியில்
தன்னைப்பார்த்து மீள்கையில்
ஒப்பனைக் கலைஞன்
அவனருகே .....!
திரைவிலகியதும்
முதல் காட்சியில்
தோன்றவேண்டும்.....!
வீதியெங்கும் ஆவலுடன்
அமர்ந்திருக்கும்
ரசிகர்கள்....!
ஹார்மோனியப் பெட்டியுடன்
பாட்டுவாதியார்
பக்க வாத்தியங்களுக்கு
நடுவே...!
மாதக்கணக்கில்
ஒத்திகை பார்த்து
நினைவில்கொண்ட பாடலை
உச்ச குரலில் பாடவேண்டும்  !
ஆம்.....................
அரிதாரம் பூசி கோமாளியாய்
மற்றவர்களை சிரிக்கச்செயும்
இவனது நிஜ வாழ்க்கை ...
ஒரு முகமூடிக்குள்
புதைந்திருக்கிறது !


...........கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், டிசம்பர் 25, 2014

விண்ணில் ஒளிரும்....

விண்ணில் ஒளிரும் 
மனிதநேய மணிவிளக்காய் ....
மண்ணில் தவழ்ந்தார் இயேசு!

...........கா.ந.கல்யாணசுந்தரம்.

செவ்வாய், அக்டோபர் 21, 2014

மனிதநேயமுடன் மாநிலத்தில் வாழ்ந்திடவே வாழ்த்துகிறேன்....




இன்சுவைப் பண்டங்கள் 
இனிதே உண்டு 
புத்தாடைப் பொலிவுடனே 
பட்டாசு மத்தாப்பு 
வகை வகையாய் 
வானவேடிக்கை பல செய்து 
மகிழ்ந்திருப்பீர் நட்புடனே!
தீப ஒளித் திருநாளாம் 
தீபாவளி நன்னாளில் 
மனிதம் தழைத்திட 
உறுதிமொழி ஏற்பீர் !
அறிவியல் நுட்பமெல்லாம் 
ஆக்கமுடன் கையாண்டு 
மனிதநேயமுடன் 
மாநிலத்தில் வாழ்ந்திடவே 
வாழ்த்துகிறேன்....
இனிய தீபாவளி 
திருநாள் வாழ்த்துக்கள்!

..........கா.ந.கல்யாணசுந்தரம்.  

ஞாயிறு, அக்டோபர் 05, 2014

காத்திருக்கிறேன்....




புன்னகை எப்போது வரும்?
காத்திருக்கிறேன்....
சராசரி மனித வாழ்க்கையில்
மகிழ்வின் எல்லையில் 
உதடுகள் தருகின்ற 
உன்னத வெளிப்பாடே 
புனிதமான புன்னகை !
எண்ணங்களின் எளிய 
வண்ணமயமான 
வாழ்வியலே புன்னகை!
பொலிவுறும் முகத்தோற்றத்தில் 
புத்தொளி வீசி 
கவர்ந்திழுக்கும் கலைனுட்பமே 
புன்னகை!
மற்றவரின் செயல்பாடுகளில் 
நிறைவுகளை அடையாளம் 
காணும் மௌன வெளிப்பாடே 
புன்னகை....
ஒரு புன்னகை ஓராயிரம் 
செயல்பாட்டினை செம்மையாக 
செயல்படுத்தும் திறனாளி !
வாய்மொழியில் பாராட்டாது
புன்னகைத்து அங்கீகரித்தல் 
பண்பாட்டின் எல்லை !
அகத்தின் முகவரியை 
முகத்தின் புன்னகை  
அறிமுகப்படுத்தும் !
முகவரி அற்றுப்போய் 
முதுகெலும்பில்லாமல் வாழாதீர்!
புன்னகை முகத்தோடு 
புவிமீது புதுக்கவிதை 
எழுத வாருங்கள்...
காத்திருக்கிறேன்.....
புன்னகையின் பேரேழில் காண !


............கா.ந.கல்யாணசுந்தரம் 



சனி, ஆகஸ்ட் 09, 2014

நீங்களாவது.......




கொடிதருகிறேன் 
குண்டூசி தருகிறேன் 
நீங்களாவது சட்டையில் 
அணிந்துகொள்ளுங்கள்!
என்று தணியுமிந்த 
ஏழ்மையின் தாகம்?
தேசியம் தழைத்ததா?
சுதந்திரம் பிழைத்ததா?
நினைவினில் பாரதி ....
நிழலாடுதே உன்கவி...!

........கா.ந.கல்யாணசுந்தரம் .

புதன், மார்ச் 19, 2014

தமிழர்தம் நெஞ்சமெல்லாம்.........



தமிழர்தம் வாழ்வினை சிற்றுளியால்
மனிதநேயமுடன் சிற்பங்களில்
அள்ளித் தெளித்தான் பல்லவன் !
பகலவன் உள்ளளவும் பார்போற்றும்
மாமல்லை பறைசாற்றும்
கலைமாந்தர் நுண்ணறிவை !
வனப்புமிகு சிலைகள் எல்லாம்
உயிர்பெற்று வாராதோ... என்றே
ஏங்கிடும் தமிழர்தம் நெஞ்சமெல்லாம்
தவிக்கிறது ........
உயிர்கொடுத்தேனும் காப்பாற்றவேண்டும்
மாமல்லபுரத்து எழில்மிகு சிற்பங்களை....
கடலரிப்பின்  பிடியிலிருந்து !

........கா.ந.கல்யாணசுந்தரம் 

திங்கள், பிப்ரவரி 25, 2013

குறையாத பொக்கிஷங்களாய் !










பனி படர்ந்த புல்வெளி
வெண்மேகம் அணைத்த
மலைமுகடுகள்
நீர் நிறைந்த பரந்த கிராமத்து எரி
வெண்ணிற கொக்குகள்
கூட்டமாய் பறந்து அமரும்
நாற்றங்கால் வயல்கள்
ஒற்றையடிப்பாதையில்
கால்நடைகளின் அணிவகுப்பு
தென்றல் தாலாட்டும்
தென்னை மரங்கள்
மாந்தோப்புக்குள் இசைக்கும்
இளம் குயில்கள்
அருவி கொட்டுதலின் 
சாரல் துளிகள் 
மாலை நேரத்து ஏரிக்கரையில் 
நிழலோவியமாய் 
வீடுதிரும்பும் தொழிலாளிகள் 
இன்னும் எத்தனை எத்தனையோ 
நெஞ்சில் இன்னும் 
வரைபடமாய் எனது ....
கிராமத்து வாழ்க்கையின் 
கையிருப்புகள் !
பிறரிடம் பகிர்ந்தும் 
குறையாத பொக்கிஷங்களாய் !
......கா.ந.கல்யாணசுந்தரம் 

ஞாயிறு, ஆகஸ்ட் 12, 2012

எது சுதந்திரம்?















அன்னியரின் அடிமைத்தளையருத்து
ஆருயிர் தாயகத்தை மீட்டெடுத்து
இணையிலா இந்தியத்திருனாட்டின்
ஈடில்லா அரசியலமைப்பை
உருவாக்கி மகிழ்ந்தோம்!
ஊரும் நாடும் சிறப்புறவே
எளியவரும் பயனுறும் வண்ணம்
ஏற்றமிகு மக்களாட்சி மலர்ந்திடச் செய்தோம்!
ஐயம் இல்லா அறிவுத்திருக்கோயில்
ஒவ்வொரு ஊராட்சியிலும் உருவாக்கினோம்!
ஓதும் கல்விமுறையில் மட்டும்
ஒளடதமாய் விளங்காமல்
மொழியுலக வரலாற்றில் சுதந்திரத்தை
பறிகொடுத்து வளர்கல்வி
அரசியலாய் சமைந்ததுவே!

.....கா.ந..கல்யாணசுந்தரம்

ஞாயிறு, மார்ச் 04, 2012

இனிய ஹைக்கூ ஒரு மொழிபெயர்ப்பில்.....


அன்பார்ந்த வலைத்தள உறவுகளே, எமது மனிதநேயத்துளிகள் எனும் ஹைக்கூ கவிதை நூலில் இருந்து
சில முக்கிய ஹைக்கூ கவிதைகள் மலையாளத்தில் http://www.wonderhaikuworlds.com/ வலைத்தளத்தில் மொழிபெயர்க்கப்பட்டன.
தங்களின் சிறப்புப் பார்வைக்கு.


*வைகறையில் சூரியனை
பங்குபோட்டன....
தென்னங் கீற்றுகள்!

*ഉദയ സൂര്യന്
തുണ്ടം തുണ്ടമായി -
ഓലക്കീറുകള്
.....................


*பாய்மரக் கப்பலில்
பயணிக்கிறோம்...
எண்ணிலா இலக்கை நோக்கி.


*പായ്മര കപ്പലില്
യാത്രയില്
മഹത്തായ ദിക്ക് നോക്കി
....................


*வீட்டின் கூரையில்
புதுமனை புகுவிழா...
சிட்டுக்குருவிகள்

*വീടിന്റെ കൂരയില്
ഒരു പാലു കാച്ച്
ചെറു കുരുവികള്


....................

*பலவண்ண மலர்கள்
நார் ஒன்றில்....
ஒருமைப் பாட்டுணர்வுடன்!


*പല വര്ണ മലര്കള്
ഒരു നാരില് നിന്ന്..
ഒരുമയിന് ഉണര്വുമായി
....................

சில்லரை காசுகள்தான்
இன்னிசைப்பாடல்கள்
தெருப்பாடகன்.

*ചില്ലറ കാശുകള് തന്നെ
എന്റെ മധുര ഗാനങ്ങള്
തെരുവ് ഗായകന്
...................
*இல்லையென்று சொல்லாமல்
ஒருமாலரினை கொடு
நெஞ்சம்நிறையும்

*ഇല്ലെന്ന് ചൊല്ലാമല്
ഒരു പൂവെങ്കിലും കൊടുക്കു ~
മനം-നിറയെ ആനന്ദം
...................
*மூழ்கியும் மலர்ந்தன
நீர் வட்டங்களாய்
குளத்தில் எறிந்த கல்

*മുങ്ങി പോയെങ്കിലും
മലര്ന്നു ജല വൃത്തങ്ങളായി ...
കുളത്തില് എറിഞ്ഞ കല്ല്

.....................

*உவர்க்கும் உறவுகளும்
இனிக்கும் பலாச்சுளையாய்
பிரிவின் நிழலில்

*കയ്ക്കുന്ന ബന്ധങ്ങളും
മധുരിക്കുന്ന ചക്ക ചുളകളായി
വേര്പാടിന്റെ നിഴലുകളില്
.............

.........கா.ந.கல்யாணசுந்தரம்.

சனி, ஜனவரி 14, 2012

பொங்கலிடு பொங்கலிடு !

தை மகளின் வரவு - நல்ல
தமிழிசையின் உறவு!
புத்தரிசி பொங்கலிட்டு
புத்தாடை அணிந்து
மண்ணின் மணம் கமழ
பாடுகின்ற நாளிது!
உழைப்போரின் உளம் மகிழ
உன்னத இயற்கையின்
இறையருள் நாளிது!
பொங்கலிடு பொங்கலிடு !
புதிய வாழ்வின் பூமணக்கும்
பொங்கலிடு!
மனிதநேயமுடன் பொங்கட்டும்!
தமிழர்தம் வாழ்வு உலகளவில்
தழைக்கட்டும்!
பொங்கலிடு பொங்கலிடு !
மனிதநேயப் பொங்கலிடு!
தமிழ்ப் புத்தாண்டின் வரவு கண்டு
தமிழ் கூறும் நல்லுலகு செழிக்க
பொங்கலிடு!

......கா.ந.கல்யாணசுந்தரம்.

செவ்வாய், நவம்பர் 29, 2011

விழுதுகளோடு வாழத்தான் வேண்டும் !

















காலம் எப்போதும் சக்கரமாய்
சுழன்றுகொண்டுதான் இருக்கிறது
என்பதெல்லாம் பொய்!
காலம் வேகமாக
கடந்துகொண்டிருக்கிறது
என்பதுதான் உண்மை!
பரிணாம வளர்ச்சி
இபோதெல்லாம் பண்பாட்டின்
முதுகெலும்பில் என்றாகிவிட்டது!
கலாச்சாரம் என்றால் என்ன?
இந்த கேள்விகள் ...........
இளையதலைமுறைகளின்
பிரதானமானது !
இயற்கையின் இருப்பிடங்களும்
இயல்புநிலை மாறி
சரித்திரச் சான்றுகளை
சீரழிக்கின்றன.....!
பருவ காலங்களின் மாற்றங்கள்
தலைகீழாக பயணிக்கின்றன!
மனிதநேயத்தின் அறிச்சுவடுகளை
தேடித் தேடி பாதம்தான் தேய்கிறது!
இன்சொல் விலகி கடும்பொருள்
வன்சொற்கள் சிம்மாசனத்தில்!
எப்படியோ....நாமெல்லாம்.....
விழுதுகளோடு வாழத்தான்
விதிக்கப்பட்டுள்ளோம்!

...............கா.ந.கல்யாணசுந்தரம்.

திங்கள், அக்டோபர் 10, 2011

சருகுகள்
















பிறர்க்கு உதவி இன்பம் காணும்
சிறு பிள்ளைவயதை நினைத்தே,
வாழ்ந்த இவளின் பருவம்
சமுதாய வீதியில் - சில கயவர்கள்
மடியில் தஞ்சும் புகுந்தது...
பட்டாம்பூச்சியாய் சிறகடித்து
பறந்த காலங்கள் வெறும்
கூட்டுப் புழுவானாள்!
கால் வயிற்று கஞ்சிக்கு காலம் தள்ள....
வயிற்றில் விளைந்த கருக்களும்
தரிசுநில வித்தாகிப் போனது!
ஒப்பிலா இன்பமுதை இரவுக் கூடலில்
தந்தவளின் உடலின்று முடங்கியது!
நுகர்ந்தோர் எல்லாம் நகர்ந்து போயினர்
அந்த நடை பாதை நுனியை யாரும் நாடவில்லை
அள்ளியெடுத்து முத்தமிட்ட மேனிக்கு
இன்று கொள்ளிவைத்து
பால் வார்க்க யாருமில்லை!
சமுதாயம் பெற்ற சந்தனப் பேழை
சாக்கடைப் பொருளாய் சிதறிக் கிடக்கிறது!
பட்டமரக் கிளை மீதமர்ந்த கழுகுக்கு
பிணவிருந்தாகி மடிந்து போனாள்!
அந்தோ!...... சமுதாயம் பெற்ற
விலைமகளிர் எல்லாம்
இளவேனிர்காலத்து உதிர்ந்த
சருகுகளே!

......கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, செப்டம்பர் 30, 2011

ரணம் ஆறாத வெந்த நெஞ்சோடு....
















சந்தைக்கு செல்லும் பாரவண்டி
சரக்கு மூட்டைகளை ஏற்றியதும்
அசைய மறுத்த எருதுகளை...
அவன் வெறுப்புடன் பார்த்தான்!
கடும் வெயில் காதுகளைக்
குடையும் முன் அடுத்த கிராமத்து
சந்தைக்கு செல்ல வேண்டும்!
சகட்டுமேனிக்கு அடித்த அடியில்
சாட்டைகூட பிய்ந்து போனது!
நேரத்தோடு பறந்து சென்று
நூற்றுக்கணக்கில் வியாபாரம் செய்து
முதலாளியிடம் நல்ல பெயர்
வாங்கியும்கூடமனதில் நிம்மதி இல்லை!
மாலையில் மனைவி குப்பம்மா
பச்சிலையால் எருதுகளின்
சாட்டைத் தழும்புகளுக்கு
பத்து போடும் போது இவன் மட்டும்
ரணம் ஆறாத வெந்த நெஞ்சோடு....
வாயில்லாத ஜீவனாய்
விக்கித்து நின்றான்!

.........கா.ந.கல்யாணசுந்தரம்

திங்கள், செப்டம்பர் 26, 2011

மகத்தானது மனிதநேயம்
















எங்கே போகிறோம்?
என்று நமக்கு நாமே
கேள்வி கேட்டுக்கொள்வோம்!
மானுடம் வாழும் பூமியில்
விசாரிப்புகளின்றி
வறண்ட பாலைவனமாய்
ஈரமற்ற நெஞ்சின்
உடல் கூடுகளாய்
புழுவினும் கேவலமாய்
மனச் சுமைகளை மட்டுமே
சுயநலத்தின் சிகரமாக்கிக்கொண்டு
ஊர்ந்து செல்கிறோம்!
மானுடமே!.... வாழும் வாழ்க்கையில்
மகத்தானது மனிதநேயம்
என்பதைவிடுத்து பயணிக்கிறோம்!
உனது பாலைவன பயணத்திலும்
புதைகுழிகள் இருப்பதை மறந்து!


...கா.ந.கல்யாணசுந்தரம்.



சனி, செப்டம்பர் 24, 2011

அனுபவப் பெட்டகங்கள்
















எங்கேயோ எப்போதோ
செய்த தவருகள்தாம்
இங்கே, இப்போதே
திருத்தப்படுகின்றன...
முற்பகலும் பிற்பகலும்
அடுத்தடுத்த இயக்கங்களாயின!
இந்த மானுடத்தின்
பாதயாத்திரை இன்னும்
முற்றுப்பெறவில்லை!

தனக்கென சந்ததிகளையும்
சொத்துக்களையும் சேர்க்கின்ற
மானிடத் திசுக்கள்,
இனியாவது
சமுதாயச் சிந்தனைகளை
நல்லதொரு மறுமலர்ச்சிக்கு
பயிரிட்டு பேணி காக்க
மானுட மண்டையோட்டு
செதில்களுக்கு
சொல்லி வைக்கட்டும்!

அன்பெனும் சொல்லறியாது,
அறிவுத் தளர்ச்சியால்...
வயதில் பெரியோரை
காப்பகத்தில் வளர்க்கின்ற
இயந்திர வர்க்கத்தினைக்
காணுகின்றோம் நிலமதிலே!
இல்லை ....இல்லை...
இனியாவது இளைய தலைமுறையே!
மனிதநேயத்தின் மணிவிளக்காய்,
அனுபவப் பெட்டகங்களை
அரவணைப்போம் வாரீர்!

....கா.ந.கல்யாணசுந்தரம்

வியாழன், செப்டம்பர் 22, 2011

இத்தரையில் பெற்ற சுகம்...





















உனது மென்மையான
விரல் நுனிகளில்
அந்த வயலின்
பிரசவிக்கும்
இன்ப நாதங்கள்....
ஒரு குளிர்கால
முன்பனி காலத்தில்
பூத்துக் குலுங்கும்
செந்தூரப் பூக்களின்
அலாதியான வாசம்...
இரவும் பகலும்
சந்திக்கும் அந்த
அந்திசாயும் நேரத்து
பறவைகள் சங்கமிக்கும்
சலசலப்பு ஓசை!
இரவு நேரத்து
அமைதியின் மடியில்
குழந்தையை தூங்கவைக்கும்
ஒரு தாயின் தூரத்து
தாலாட்டுப் பாடல்.....
இறைவா....
இத்துணை மனிதநேயமிக்க
உறவுகளின் மேன்மயை
அதன் புனிதத்தை
அறியவைத்தாயே...
தாயே...இத்தறையில்
இப்பிறப்பு பெற்றசுகம்
இனிதானதென்று
இயம்பிட இன்று நீயில்லை!
உன் கைப்பிடித்து
உலாவிய நாட்களுக்கு
இனிதான நிகழ்வுகளை
காணிக்கையாக்குகிறேன்!

...கா.ந.கல்யாணசுந்தரம்.