கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

சனி, நவம்பர் 02, 2013

புத்தாடை இனிப்போடு பட்டாசு வெடியோடு மனமகிழ் தீபவொளி மனையெங்கும் ஒளிவீச தீமை, வறுமை நிலமதில் எந்நாளும் வாராது ... மனிதம் தழைக்க கொண்டாடுவோம் இனிதாக தீபவொளித் திருநாளை! நல்வாழ்த்துக்கள் என்றென்றும்..... அன்பன், கா.ந.கல்யாணசுந்தரம்

ஞாயிறு, செப்டம்பர் 22, 2013

தளிர்களின் நிழல்

உதிரும் சருகுகளின்
பாதையில் தெளிவாய்...
தளிர்களின் நிழல் !

...........கா.ந.கல்யாணசுந்தரம்

வெள்ளி, செப்டம்பர் 20, 2013

புத்தனின் போதிமர நிழல்













உனது கனவுகளின்
அடித்தளங்கள்
என்னால் உருவாக்கப்படுகின்றன
கண்களை மூடி
எண்ணங்களை ஒருமுகப்படுத்து....
நெற்றிப் பொட்டில்
வண்ண வண்ண கலவைகளின்
வடிவமைப்பில்
ஒரு பூங்கா உருவாவதை
உன்னால் உணரமுடியும் !
கனவுக்குள் ஒரு கனவை
உருவாக்கி ஆளுமைப்படுத்த
ஒரு கனவுத் தொழிற்சாலை
எனக்கு தேவைப்படுகிறது.....
சிந்தனை முதலீடுகளில்
நேரம் தொலைந்தாலும்
சிதைந்த நினைவுகளை
செம்மைப்படுத்த முயல்கிறேன்!
கனவுகளில் மட்டும்
தொடரும் என் நினைவுகளை
நிகழ்கால வாழ்க்கையிலும்
மனதில் கொள்!
அறிமுகமில்லா இந்த
இருவரின் வாழ்க்கையில்
ஒரு அர்த்தமுள்ள
எதிர்காலம் உருவாகட்டும்!
கண்களைத் திற
உன்னைச் சுற்றி புத்தனின்
போதிமர நிழல்
பரவிக்கிடக்கிறது....
ஆனால் சூரியன் மட்டும்
இங்கு உதிக்கவில்லை !

.............கா.ந.கல்யாணசுந்தரம்

திங்கள், செப்டம்பர் 09, 2013

அன்பின் வழியது உயிர்நிலைதான் என்றாலும்
ஆழ்கடலின் நங்கூரமாய் மனது !
இயல்பின் வெளிப்பாடாய் இயக்கம் அமைந்தாலும்
ஈன்ற அன்னைக்கு ஈடில்லை உலகில் !
உண்மை ஒளிரும் எப்போதும் என்றாலும்
ஊமை மொழி அறிவது எக்கணம்?
எண்  சாண்  உடலுக்கு சிரசே பிரதானம்
ஏற்றமிகு வாழ்விற்கு பணமே அரியாசனம்
ஐம்பொன் சிலைக்கு பாலாபிஷேகம்
ஒரு ஏழைச் சிறுமிக்கு பாலியல் வன்மம்
ஓடி ஒளிந்த தமிழின ஈழம்
ஔடதமாய் எந்நாளில் கிட்டும்?

......கா.ந.கல்யாணசுந்தரம் .

வளம் தரும் விநாயகர் சதுர்த்தி விரதம்



வளம் தரும் விநாயகர் சதுர்த்தி விரதம்





விநாயகர் சதுர்த்தி விரதத்தை ஒரு கொண்டாட்டமாகவே நாம் பாவிக்கலாம். விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் தருவார்.




அதனால்தான் அவர் எல்லாருக்கும் பொதுவாகவும், யாரும் சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார்.



விநாயகர் விரதத்தை பார்வதி தேவியே மேற்கொண்டிருக்கிறார். தன் கணவரை அவமதித்து யாகம் நடத்திய தந்தை தட்சனிடம் நியாயம் கேட்கப் போனாள் பார்வதி என்ற தாட்சாயணி. ஆனால், தட்சனோ மிகவும் கர்வம் பிடித்தவன். மருமகனை அவமானப்படுத்தியது போதாதென்று, மகளையும் கேலி பேசினான்.



இந்த அவமானத்தை பொறுத்துக் கொள்ள முடியாத தாட்சாயணி, தட்சன் வளர்த்து வைத்திருந்த யாக குண்டத்தில் அப்படியே பாய்ந்துவிட்டாள்.



அதன்பிறகு, பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து பார்வதி என்னும் பெயருடன் வளர்ந்து வந்தாள்.



சிறு வயதிலிருந்தே கயிலைநாதன்தான் தன் கணவன் என்று தீர்மானமாக இருந்தாள். அவளுடைய அந்த எண்ணம் பலிக்க வேண்டும் என்றால், அவள் விநாயகரை நினைத்து சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டுமென்று அவளுடைய தந்தையார் பர்வதராஜன் யோசனை சொன்னார்.



அவர் சொன்னபடியே, மண்ணால் ஒரு விநாயகர் விக்ரகத்தை உருவாக்கினாள் பார்வதி. கூடவே தங்கத்தாலும் ஓர் உருவம் செய்து இரண்டையும் பொற்கும்பம் ஒன்றின் பக்கத்தில் வைத்தாள்.



அந்த விக்ரகங்களுக்கு ஆகம விதிப்படி பூஜைகளை செய்தாள்.



ஆவணி மாத அமாவாசைக்கு அடுத்த சதுர்த்தியில் இப்படி பூஜையை ஆரம்பித்து, பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி வரையில் தினமும் பூஜை செய்தாள்.



அதற்குப் பிறகு மண் பிள்ளையாரை, மேள தாளத்தோடு ஊர்வலமாக எடுத்துப் போய் நதியிலே இறக்கி விட்டாள். அந்த பதினைந்து நாட்களும் நியம நிஷ்டைகளை மீறாமல் இருந்த விரதத்தின் பலனாக, தான் ஆசைப்பட்டாற்போல கயிலைநாதனை கைப்பிடித்தாள்.



விநாயகர் ஆதி பரம்பொருள். எல்லோருக்கும் மூத்தவர். பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று எல்லோரையும் உருவாக்கியவர் அவர்தான். அவர் சாதிக்க வேண்டியது நிறைய இருந்ததால் அவர் பலவித அவதாரங்களை எடுத்தார்.



அந்த மாதிரியான ஒரு அவதாரம்தான் சிவன் மகனாக அவர் தோன்றியது. அற்பத் தாவரமான புல்லையும் (அருகம்புல்) அவர் ஏற்றுக் கொள்கிறார். காட்டுப்பூவான எருக்கம்பூவைக் கூட அவர் மறுப்பதில்லை.



அவரைப் பொறுத்தவரை புல் மாலை போட்டவரும் ஒன்றுதான்; ரோஜா மாலை போட்டவரும் ஒன்றுதான். வித்தியாசமே பார்க்க மாட்டார். தன்னை வணங்குபவரின் மனம் சுத்தமாக இருக்கிறதா, அந்த மனதில் தனக்கு எத்தகைய இடம் இருக்கிறது என்பதை மட்டும்தான் பார்ப்பார்.



விநாயகர் சதுர்த்தி விரத நடைமுறைகள் என்னென்ன?



அன்றைய தினம் விடியற் காலையிலேயே எழுந்து, சுத்தமாக குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். வாசலில் மாவிலைத் தோரணம் கட்டலாம். முடிந்தால், இரண்டு வாழைக் கன்றுகளையும் வாசலின் இருபுறங்களிலும் கட்டி வைக்கலாம். பிறகு, பூஜையறையில் சுத்தம் செய்த ஒரு மணையை வைக்க வேண்டும்.



அதன்மேல் ஒரு கோலம் போட்டு, அதன்மேல் ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும். இலையின் நுனி வடக்கு பார்த்ததுபோல இருப்பது நல்லது. இந்த இலையின் மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும்.



பூமியிலிருந்து உருவான எதுவும் பூமிக்கே திரும்பப் போகவேண்டும் என்ற தத்துவம்தான் களிமண் பிள்ளையார். களிமண் மட்டும்தான் என்றில்லாமல், உலோகம், கற்சிலை விக்ரகங்களையும் வைக்கலாம்.



பத்ர புஷ்பம் எனப்படும் பல்வகைப் பூக்கள் கொண்ட கொத்து, எருக்கம்பூ மாலை, அருகம்புல், சாமந்தி, மல்லி என்று எத்தனை வகை பூக்களை வாங்க முடியுமோ, அவரவர் வசதிக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம்.



அதேபோல முடிந்த அளவுக்கு சில வகை பழங்களையும் வாங்கிக் கொள்ளலாம். இவை எல்லாவற்றையும் விட, விநாயகருக்கு மிகவும் பிடித்தமான மோதகத்தை செய்து கொள்ளலாம்.



அதாவது கொழுக்கட்டை. தேங்காய் பூர்ணத்தை உள்ளே வைத்து செய்யப்படுவது. இதிலும் ஒரு தத்துவம் இருக்கிறது. மேலே இருக்கும் மாவுப் பொருள்தான் அண்டம்.



உள்ளே இருக்கும் வெல்லப் பூர்ணம்தான் பிரம்மம். அதாவது நமக்குள் இருக்கும் இனிய குணங்களை மாயை மறைக்கிறது. இந்த மாயையை உடைத்தால் அதாவது வெள்ளை மாவுப் பொருளை உடைத்தால், உள்ளே இனிய குணமான வெல்லப் பூர்ணம் நமக்குக் கிடைக்கும்.



(விநாயகருக்கு முதன் முதலாக இந்தக் கொழுக்கட்டையை நிவேதனம் செய்தது, வசிஷ்ட முனிவருடைய மனைவியான அருந்ததி.)



பிள்ளையாருக்கு பூக்களால் அலங்காரம் செய்து விட்டு, பிறகு விநாயகர் பாடல்கள் எதை வேண்டுமானாலும் பாடலாம். அவ்வையார் தந்த விநாயகர் அகவல், காரிய சித்தி மாலை படிப்பது விசேஷமான பலன்களைத் தரும். பிள்ளையாருக்கு கொழுக்கட்டை மட்டுமில்லாமல், அவரவர் வசதிக்கேற்ப எள்ளுருண்டை, பாயசம், வடை என்றும் நைவேத்யம் செய்யலாம்.



பால், தேன், வெல்லம், முந்திரி, அவல் என்று ஒவ்வொன்றிலும் சிறிதளவு எடுத்து ஒன்றாகக் கலந்து அதையும் நைவேத்யம் செய்யலாம். நிவேதனப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் 21 என்ற கணக்கில் சிலர் வைப்பார்கள். ஆனால், எண்ணிக்கை முக்கியமில்லை; ஈடுபாடுதான் முக்கியம். பிறகு கற்பூரம் காட்டி விரதத்தை முடிக்கலாம்.



இந்த விரதத்தை காலையிலிருந்தே உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் அனுஷ்டிப்பது மிகவும் விசேஷம். பூஜை நேரம் வரை பட்டினியாக இருப்பது சிறப்பு. சம்பிரதாயம் பார்க்கக் கூடியவர்கள் இந்த விநாயகர் சதுர்த்திக்குப் பிறகும் தொடர்ந்து விரதத்தை அனுசரிப்பார்கள். அப்படித் தொடர்ந்து, பௌர்ணமிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினத்தோடு விரதத்தை நிறைவு செய்வார்கள்.



இத்தனை நாள் விரதத்துக்குப் பிறகுதான் பிள்ளையாரை கிணற்றிலோ அல்லது ஏதாவது நீர்நிலையிலோ கொண்டுபோய் போடுவது வழக்கம்.



பதினைந்து நாள் அனுசரித்தாலும் சரி, விநாயகர் சதுர்த்தி அன்றைக்கு ஒரே ஒருநாள் மட்டும் அனுசரித்தாலும் சரி, மேற்கொள்ளும் விரதத்தை உளப்பூர்வமாகக் கடைப்பிடிக்க வேண்டியதுதான் முக்கியம்.



வருடத்திற்கு ஒருமுறை இப்படி விநாயகர் சதுர்த்தி அனுசரிப்பதுபோல மாதந்தோறும் பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தியாக அனுஷ்டிக்கப்படுகிறது.



இந்த நாளிலும் விரதம் இருப்பது சிலருடைய வழக்கம். அன்றைக்கு முழுவதும் பட்டினி இருந்து, விநாயகர் சிலை அல்லது படத்துக்கு முன்னால் தீபமேற்றி, விநாயகர் பாடல்கள், ஸ்தோத்திரங்களை பாடி, மாலையில் கொழுக்கட்டை நைவேத்யம் செய்து, பிறகு சந்திர தரிசனம் செய்துவிட்டு எளிமையான உணவை எடுத்துக்கொண்டு விரதத்தை முடிப்பதும் சிலர் வழக்கம்.



இந்த விரதங்களால் உள்ளம் மேன்மைஅடையும்; உடல் ஆரோக்கியம் வளரும்; எல்லா வளங்களும் நிறையும். விரதம் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்தினருக்கும், அவர்களை சார்ந்த அனைவருக்கும் விநாயகர் நல்லன எல்லாம் அருள்வார்.



(Thanks: Dinakaran)

திங்கள், ஆகஸ்ட் 05, 2013

எப்போது கண்டெடுக்கும் இன்னொரு காந்தியை ?









அகமும் புறமும்
என்னவென்று அறியாமலே
கலிங்கத்து பரணிக்கு
உரை எழுதுபவர்கள் !
நெல்லிக்கனியின்
சுவையறியாது
அதியாமானின்
வள்ளல்தன்மைக்கு
மகுடம் சூட்டுபவர்கள் !
ஆறாம் அறிவை
அடகுவைத்துவிட்டு
ஏழாம் அறிவை அலசுபவர்கள் !
இவர்களெல்லாம் ....
வெளிச்சத்துக்கு விளக்கு
ஏற்றுபவர்கள் !
வெளிச்சப்பார்வையில்
இவர்களெல்லாம்
இருளின் சொந்தக்காரர்கள்  !
சமுதாயப் புத்தகத்தின்
முகவரியைக் கூட
படிக்கத்  தெரியாத
சுயநலவாத
கூட்டமைப்பின்
கொள்கைச்செம்மல்கள் !
வாக்கு வங்கிகளை
கொள்ளையடித்து ....
மக்களாட்சியின் மகிமைக்கு
மலர்வளையம் வைப்பவர்கள்!
சுதந்திர தினம் ஆண்டுதோறும்
கொடியேற்றத்தில் மட்டுமே
கொண்டாடப்படுகிறது!
மதம் பிடித்த யானைகளாய்
சமுதாய சீர்கேடுகளை
கட்டவிழ்த்துவிடுவோரை
இனம்கண்டும் ...
ஆர்த்தெழாத  மானுடம்
எப்போது கண்டெடுக்கும்
இன்னொரு காந்தியை ?

..........கா.ந.கல்யாணசுந்தரம்








வியாழன், ஜூலை 11, 2013

தோள்களின் தோழமையோடு !






விடியல் பறவைகளோடு
எனது பயணிப்பும் !
வாழ்க்கையின் தொலைந்த
பக்கங்களைப் புரட்டியவாறே
கடக்கும் இரவுப் பொழுதுகள் !
பகல் நேரத்து தேடல்களில் !
புலம்பெயரும் சிந்தனைகள்
அரை குறை அறிவுஜீவிகளின்
அறிவுறுத்தல்களில்
செயலிழக்கும் மனம் !
உடன் பிறவா தோழர்களின்
தளர்ந்த கைகுலுக்கல்களில்
நட்பின் தேய்மானம் !
இறை வழிபாடுகளில்
இனம்புரியா நிலைப்பாடு !
கார் கால தொடர் மழையில்
நிரம்பும் ஏரிகளுக்கும்
வடிகால்கள் இருக்கின்றன !
ஆம் ....பிறரிடம் பகிரப்படாத
துன்பங்களுடன் எனது
மனமும் முன்வரிசையில்
அமர்ந்திருக்கிறது....
பாரம் சுமப்போர் போட்டியில்
கலந்துகொள்ள .....
தோள்களின் தோழமையோடு !

...........கா.ந.கல்யாணசுந்தரம்


சனி, ஜூலை 06, 2013

உனக்காகத் தேடுகிறேன்




வேறொரு பெயரை 
உனக்காகத் தேடுகிறேன் 
ஜாதிமல்லியே !

............கா.ந.கல்யாணசுந்தரம்

வெள்ளி, மே 10, 2013

சுமைதாங்கியிடம்

என்னை நான் வியந்து பார்க்கிறேன்
நெஞ்சு வெடிக்கும் மனச் சுமைகளைக் கூட
தாங்கிக்கொள்ளும் மனோபாவத்தை
இறைவன் எப்படி கொடுத்தானென்று !

எப்படியும் ஏதோ ஒரு விதத்தில்
ஒவ்வொருவருக்கும் மனச் சுமைகள்
இருந்து கொண்டுதான் இருக்கிறது!

சுமைகளை ஏற்றிய பார வண்டியாய்
இமைகளை மூடி ஒரு புத்தனைப்போல்
சும்மா இருத்தலின் சுகம் காணும்
முயற்சியில் தோல்விகளே நிதர்சனம்!

நடைபயணத்தில் தலைமுதல்
பாதம்வரை நரம்புகள் உயிர்த்தெழ
பாரம் பதவி விலகி பயணிக்க ஆரம்பித்தது !

கிராமத்து ஒற்றையடிப் பாதையில்
கம்பீரமாய் நின்ற சுமைதாங்கியில்
சாய்ந்தபடி ஓய்வெடுத்தேன்......
" தலைச் சுமைகளை மட்டுமே
இறக்கிவைக்கின்றனர் " என ஏக்கத்துடன்
முணுமுணுத்த சுமைதாங்கியிடம்
விக்கித்து வலுவிழந்துபோனேன் !


..............கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், மே 09, 2013

கும்புடுங்க



கத்திரி வெய்யில்
தோள்பட்டை எலும்பை
உருக்கி எடுக்க
தென்னை இளநீர்
விற்றபடி கணவனைப்
பார்த்து மனைவி சொன்னாள் ....
"படிக்கவைக்காத
தென்னம்பிள்ளையை
படம்புடிச்சி தெனமும்
கும்புடுங்க !"

......கா.ந.கல்யாணசுந்தரம்,

எதிர்வினை ....



ஒரு கனவின் தொடர்
என்னுள் மின்னல் பூக்களை
மலரவிட்டது
தொடரும் தேடுதல்
எதற்காக என்பது மட்டும்
புரியாமல் இருக்கிறது
கைக்கு எட்டியது
வாய்க்கு எட்டாமலே
கனவுகள் முற்றுப்பெருகிறது
வானப்பெருவெளியில்
சிறகை விரித்து பறக்கிறேன்
மனிதநேயமுடன்
பறவைகளின் விசாரிப்புகள்
மனதை குளிர்விக்கிறது
சிகரங்களை நோக்கி
பயணம் தொடர்கிறது
என்னைப் பிடித்து
இழுத்து கீழே தள்ள
அங்கு எவரும் இல்லை.
இருப்பினும் எதிர்வினை
இல்லாததொரு தேசத்தில்
எனது இருப்பிடம்
சிறப்பானதாக தெரியவில்லை.

............கா.ந.கல்யாணசுந்தரம்  

ஞாயிறு, ஏப்ரல் 14, 2013

சித்திரை மலர்கள்









சித்திரை மலர்கள் மலரட்டுமே
சிந்தனைத் துளிகள் அரும்பட்டுமே
இத்தரை மகிழும் நன்னாளாம்
முத்திரைப் பதித்து வளரட்டுமே

விஜய ஆண்டின் வரவிங்கு
விளைக்கும் ஆயிரம் நலமிங்கு
புதுமைகள் பூத்துக் குலுங்கிடுமே
புன்னகை நம்மில் இலங்கிடுமே

மழலை மொழியிங்கு தமிழென்று
மனதால்  கொள்கை கொண்டிடுவோம் 
தமிழை சொல்லும் தமிழன் இங்கே
தலைநிமிர்ந்து வாழ்வது திண்ணியமே

.............கா.ந.கல்யாணசுந்தரம்


 

செவ்வாய், ஏப்ரல் 02, 2013

அமிழ்தான தமிழ் இன்று வேண்டும்


அமிழ்தான தமிழ் இன்று வேண்டும் - தினம்
அகம் குளிர நான் பாட வேண்டும்
இனிதான சொல் காண வேண்டும் - நம்
இல்லத்தில் கலந்துரையாட வேண்டும்

                                                            (அமிழ்தான )

மம்மி என்றழைக்காது மழலை - இனி
அம்மா என்றிசைக்கட்டும் குழலை
மொழியோடு உறவாடும் நெஞ்சம் - நல்
வழியோடு வளமாக வாழும்

                                                           (அமிழ்தான )

சான்றோர்கள் வளர்த்திட்ட செம்மொழி - வளர்
சான்றாக உடன்வாழும் அருள்மொழி
தாய்மொழி பகல்வதில் தாழ்வில்லை - இளைய
தலைமுறையே இனி பேசிடு தவறில்லை


                                                              (அமிழ்தான )

                                               ..................கா..கல்யாணசுந்தரம். 

சனி, மார்ச் 09, 2013

பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகிறோம்

 
 


மொட்டவிழ்ந்த மலர்போல மழலை முகம்
பொட்டிட்டு பூச்சூடி பார்த்தாலே போதும்
கட்டவிழ்ந்த தாழை மலர் போல அழைப்பாள்
கொட்டுகின்ற அருவியென துள்ளி எழுவாள்
குழல்கூட இசைக்காமல் சற்றே நிற்கும்
மழலை இவள் வாய் மொழியில் தோற்கும்
வண்ணத்து பூச்சியென சிறகடித்து வருவாள்
காண்போரின் கையசைப்பில் கண்சிமிட்டி சிரிப்பாள்
முகமறியா போதிலும் மடிமீது வந்தமர்வாள்
கொடிமுல்லைப் பூவாய் மனம் கவர்ந்திழுப்பாள்
வினோத்குமார் கலைவாணி தம்பதியர
பெற்றெடுத்த வாசமிகு பெரும் செல்வம்
எங்களின் ஆசைமிகு பெயர்த்தி பிரணீ த்தா
மழலையிவள் நேசமிகு பிறந்தனாளின்று
உவகையுடன் பாசமிகு மனதுடனே
பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகிறோம்
தாத்தா பாட்டி !
கா .கல்யாணசுந்தரம்
அருள்செல்வி கல்யாணசுந்தரம்
செய்யாறு
09.03.2013



Reply
Forward


சனி, மார்ச் 02, 2013

அடையாளங்கள்





முயல்களைவிட ஆமைகளுக்கு
தெரிந்திருக்கிறது 
பாதையின் அடையாளங்கள்                    

........... கா.ந. கல்யாணசுந்தரம்    

                                                                                                                                                                     

திங்கள், பிப்ரவரி 25, 2013

குறையாத பொக்கிஷங்களாய் !










பனி படர்ந்த புல்வெளி
வெண்மேகம் அணைத்த
மலைமுகடுகள்
நீர் நிறைந்த பரந்த கிராமத்து எரி
வெண்ணிற கொக்குகள்
கூட்டமாய் பறந்து அமரும்
நாற்றங்கால் வயல்கள்
ஒற்றையடிப்பாதையில்
கால்நடைகளின் அணிவகுப்பு
தென்றல் தாலாட்டும்
தென்னை மரங்கள்
மாந்தோப்புக்குள் இசைக்கும்
இளம் குயில்கள்
அருவி கொட்டுதலின் 
சாரல் துளிகள் 
மாலை நேரத்து ஏரிக்கரையில் 
நிழலோவியமாய் 
வீடுதிரும்பும் தொழிலாளிகள் 
இன்னும் எத்தனை எத்தனையோ 
நெஞ்சில் இன்னும் 
வரைபடமாய் எனது ....
கிராமத்து வாழ்க்கையின் 
கையிருப்புகள் !
பிறரிடம் பகிர்ந்தும் 
குறையாத பொக்கிஷங்களாய் !
......கா.ந.கல்யாணசுந்தரம் 

புதன், பிப்ரவரி 20, 2013

பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள்










பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள்

தமிழ்க் காதல்

கமலம் அடுக்கிய செவ்விதழால் - மலர்க்
காட்டினில் வண்டின் இசைவளத்தால்
கமழ்தரு தென்றல் சிலிர் சிலிர்ப்பால் - கருங்
கண்மலரால் முல்லை வெண்ணகைப்பால் - மயில்
அமையும் அன்னங்களின் மென்னடையால் - மயில்
ஆட்டத்தினால் தளிர் ஊட்டத்தினால்
சமையும் ஒருத்தி - அப் பூஞ்சோலை எனைத்
தன் வசம் ஆக்கிவிட்டாள் ஒருநாள்.

சோலை அணங்கொடு திண்ணையிலே - நான்
தோளினை ஊன்றி இருக்கையிலே
சேலை நிகர்த்த விழியுடையாள் - என்றன்
செந்தமிழ்ப் பத்தினி வந்துவிட்டாள்!
சோலை யெலாம் ஒளி வானமெலாம் - நல்ல
தோகையர் கூட்டமெலாம் அளிக்கும்
கோல இன்பத்தை யென் உள்ளத்திலே - வந்து
கொட்டி விட்டாள் எனைத் தொட்டிழுத்தாள்!

மென்காற்றும் வன்காற்றும்

அண்டங்கள் கோடி கோடி அனைத்தையும் தன்ன கத்தே
கொண்ட ஓர் பெரும் புறத்தில் கூத்திடு கின்ற காற்றே!
திண்குன்றைத் தூள் தூளாகச் செய்யினும் செய்வாய் நீஓர்
துண்துளி அனிச்சம் பூவும் நோகாது நுழைந்தும் செல்வாய்! 14

தென்னாடுபெற்ற செல்வம்

உன்னிடம் அமைந் திருக்கும் உண்மையின் விரிவில், மக்கள்
சின்னதோர் பகுதி யேனும் தெரிந்தார்கள் இல்லை; யேனும்
தென்னாடு பெற்ற செல்வத் தென்றலே உன்இன்பத்தைத்
தென்னாட்டுக் கல்லால் வேறே எந்நாட்டில் தெரியச் செய்தாய்? 15

தென்றலின் நலம்
குளிர்நறுஞ் சந்தனஞ் சார் பொதிகையில் குளிர்ந்தும், ஆங்கே
ஒளிர்நறு மலரின் ஊடே மணத்தினை உண்டும், வண்டின்
கிளர்நறும் பண்ணில் நல்ல கேள்வியை அடைந்தும் நாளும்,
வளர்கின்றாய் தென்ற லேஉன் வரவினை வாழ்த்தா ருண்டா? 16

அசைவின் பயன்

உன்அரும் உருவம் காணேன் ஆயினும் உன்றன் ஒவ்வோர்
சின்னநல் அசைவும் என்னைச் சிலிர்த்திடச் செய்யும்! பெற்ற
அன்னையைக் கண்டோ ர், அன்னை அன்பினைக் கண்ணிற் காணார்,
என்னினும் உயிர்க் கூட்டத்தை இணைத்திடல் அன்பே அன்றோ? 17

தென்றலின் குறும்பு

உலைத்தீயை ஊது கின்றாய்; உலைத்தீயில் உருகும் கொல்லன்
மலைத்தோளில் உனது தோளும், மார்பினில் உன்பூ மார்பும்
சலிக்காது தழுவத் தந்து குளிர்ச்சியைத் தருவாய்! பெண்கள்
விலக்காத உடையை நீ போய் விலக்கினும், விலக்கார் உன்னை! 18

குழந்தையும் தென்றலும்

இழந்திட்டால் உயிர்வா ழாத என்னாசை மலர்மு கத்துக்
குழந்தையின் நெற்றி மீது குழலினை அசைப்பாய்; அன்பின்
கொழுந்தென்று நினைத்துக், கண்ணிற் குளிர்செய்து, மேனியெங்கும்
வழிந்தோடிக், கிலு கிலுப்பை தன்னையும் அசைப்பாய் வாழி! 19

தென்றல் இன்பம்

இருந்தஓர் மணமும், மிக்க இனியதோர் குளிரும், கொண்டு
விருந்தாய்நீ அடையுந் தோறும் கோடையின் வெப்பத் திற்கு
மருந்தாகி அயர்வி னுக்கு மாற்றாகிப் பின்னர், வானிற்
பருந்தாகி, இளங்கி ளைமேற் பறந்தோடிப் பாடு கின்றாய்! 20


தென்றலின் பயன்

எழுதிக்கொண் டிருந்தேன்; அங்கே எழுதிய தாளும் கண்டாய்;
வழியோடு வந்த நீயோ வழக்கம்போல் இன்பம் தந்தாய்;
' எழுதிய தாளை நீ ஏன் கிளப்பினை' என்று கேட்டேன்,
புழுதியைத் துடைத்தேன் என்றாய்; மீண்டும் நீ புணர்ந்தாய் என்னை! 21

தென்றற்கு நன்றி

கழுகொடு, நெடிய தென்னை, கமழ்கின்ற சந்த னங்கள்,
சமைகின்ற பொதிகை அன்னை, உனைத்தந்தாள் தமிழைத் தந்தாள்
தமிழ் எனக்கு அகத்தும், தக்கதென்றல்நீ புறத்தும், இன்பம்
அமைவுறச் செய்வ தைநான் கனவிலும் மறவேன் அன்றோ? 22

தென்றலின் விளையாட்டு

களச்சிறுதும்பி பெற்ற கண்ணாடிச் சிறகில் மின்னித்,
துளிச்சிறு மலர் இதழ்மேல் கூத்தாடித் துளிதேன் சிந்தி,
வெளிச்சிறு பிள்ளை யாடும் பந்தோடு விளையாடிப், போய்க்
கிளிச்சிற காடை பற்றிக் கிழிக்கின்றாய் தென்ற லேநீ! 23
 
 
.........பாவேந்தர் பாரதிதாசன் .


வெள்ளி, பிப்ரவரி 08, 2013

யாருக்கும் தெரியவில்லை

மாவட்ட கல்வி அதிகாரி
வருகையால் பரபரப்பானது
உயர்நிலைப்பள்ளி....
சீருடை மாணவர்களின்
அணிவகுப்பில் மகிழ்வெய்திய
அதிகாரி ......
ஒரு மூடிவெயத்த அறையைக்
காண்பித்து .....
என்னவென்று வினவ ...
முப்பது ஆண்டுகளாய்
பழுதான மர பெஞ்சுகள்
அடுக்கிய அறை
என பதில் வந்தது!
அறையைத் திறந்து ...
பத்தாம் வகுப்பு
பென்ச்சுகளைத் தேடினார்
கல்வி அதிகாரி!
உடைந்திருந்த அந்த
மர இருக்கையில் அமர்ந்தார் !
யாருக்கும் தெரியவில்லை
அவர் இந்த இருக்கையில்
அமர்ந்து இந்த பள்ளியில்
படித்தவர் என்பதை!

...கா.ந.கல்யாணசுந்தரம்

கடிகார முள்

அம்மா அலறியபடி தேடினாள்...
" எம் புள்ளைய காலைல இருந்து
காணலையே " என புலம்பியவாறு !
" வொம் பையன் மூனாவதூட்டு
புள்ள பார்வதியோட கூட்டாளி
போட்டுகினு கொல்லப்புறம் போனது"
இது பக்கத்துவீட்டு பொன்னம்மாளின்
அங்கலாய்ப்பு!
ஒரு பனைவோலை கடிகாரம்
செய்து பார்வதிக்கு கட்டிவிட்ட
நட்பின் கரங்கள் அங்கு .....
தேடிக்கொண்டிருந்தது
வேலமரத்து முட்களுக்காக....
சரியான கடிகார முள்
கிடைத்துவிட்ட பெருமிதத்தில்
அந்த எட்டு வயது சிறுவன்
தோழியுடன் நடந்தான் ......
அவன் வீடு இருந்த அந்த 
கிராமத்து தெரு முனைக்கு...
காலத்தை வென்ற
ஒரு கர்மவீரனாக !

.........கா.ந.கல்யாணசுந்தரம்.

புதன், ஜனவரி 30, 2013

நூலறுந்த பட்டங்கள்!








காகிதம், நூல்கண்டு, தென்னங்குச்சி
காற்றுக்குள் பிரவேசிக்க முயற்சி
சோற்றுப் பானையை திறந்து
சுடு சோற்றைப் பிசைந்து
பசையாக்கினோம்.....
அழகிய பட்டம் உருவாக்கினோம்!
வெட்டவெளி மைதானத்தில்
கூட்டமாய் சென்று காத்தாடி பட்டம்
கலர் கலராய் பறக்கவிட்டபடி
விண்ணையே அண்ணாந்து
விழிபிதுங்க பார்வையிட்டோம்....
பட்டங்கள் உயர உயர பறந்தபடி
எங்கள் மனங்களில் குதூகலம் !
சில காத்தாடி பட்டங்களில்
தந்திகளும் அனுப்பப்பட்டன.....!
மாஞ்சா தடவிய நூல்கண்டுகள்
அஞ்சாமல் பதம்பார்த்தன
உயரும் பட்டங்களின் எண்ணிக்கையை !
பசிவேளை வந்தாலும்
பட்டங்களை இறக்க மனமின்றி
மரத்தில் கட்டிவைத்து அழகு பார்த்தோம்!
எப்போதாவது மின்கம்பிகளில்
சிக்கித்தவிப்பதுண்டு
நூலறுந்த பட்டங்கள்!
இப்போதெல்லாம் வேலை கொடுக்காமலே
பெட்டிக்குள் சிக்குண்டு
சிறைபட்டுப்போகின்றன......
பல்கலைப் பட்டங்களும் !

..........கா.ந.கல்யாணசுந்தரம்.


திங்கள், ஜனவரி 21, 2013

பத்தாம் பசலிக்காரன்

ஊருக்கு செல்லும்
ஒற்றையடிப் பாதைகூட
பாதி காணாமல் போனது!
நல்ல தண்ணீர் குளம் முழுக்க
சாக்கடை நீரோடு
குட்டையாய் காட்சி தர
களத்துமேட்டு குடியிருப்புகள்
அடுக்குமாடியாய் இருந்தது!
கிராமம் நகரமாய்
மாறியிருந்தது!
கிழக்குபுறத்து அம்மன்கோயில்
புது கோபுரத்துடன்
மிளிர்ந்தது!
ஆனால் என்மனம் மட்டும்
ஏங்கித்தவித்து........ இளைப்பாறியது
ஒரு பெரிய ஆலமரத்தடியில்!
30 ஆண்டுகள் இடைவெளியில்
நாங்கள் நட்ட ஆலமரம்
தழைத்திருந்தது அப்படியே !
மகிழ்வில் உரக்க கத்தினேன்....
" மரம் இல்லா வாழ்வு
மரண வாழ்வு " ..என்றவாறு.
அங்கே சென்றவர்களின் பார்வை
என் மீது........
இவன் ஒரு பத்தாம் பசலிக்காரன்
என சொல்லியவாறு.

....கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, ஜனவரி 11, 2013

மனிதநேயப் பொங்கலிடு!









தை மகளின் வரவு - நல்ல
தமிழிசையின் உறவு!
புத்தரிசி பொங்கலிட்டு
புத்தாடை அணிந்து
மண்ணின் மணம் கமழ
பாடுகின்ற நாளிது!
உழைப்போரின் உளம் மகிழ
உன்னத இயற்கையின்
இறையருள் நாளிது!
பொங்கலிடு பொங்கலிடு !
புதிய வாழ்வின் பூமணக்கும்
பொங்கலிடு!
மனிதநேயமுடன் பொங்கட்டும்!
தமிழர்தம் வாழ்வு உலகளவில்
தழைக்கட்டும்!
பொங்கலிடு பொங்கலிடு !
மனிதநேயப் பொங்கலிடு!
தமிழ்ப் புத்தாண்டின் வரவு கண்டு
தமிழ் கூறும் நல்லுலகு செழிக்க
பொங்கலிடு!

......கா.ந.கல்யாணசுந்தரம்.

செவ்வாய், ஜனவரி 08, 2013

நம்பிக்கையெனும் நங்கூரம் !







*இருகரம் இணைந்த மணவாழ்வில்


புதைந்துகிடக்கிறது ....

நம்பிக்கையெனும் நங்கூரம் !



*கைகளுக்குள் கனிவாய்

மலர்ந்திடுதே....

காதல் பூக்கள் !



* கைகுலுக்காமலே

நடந்து முடிந்தது...

சாதி ஒழிப்பு மாநாடு!



* கண்ணாமூச்சி வேண்டாம்

உன் கைகளை நீட்டு...கண்ணே

மருதாணி வைக்க வேண்டும் !



* கடவுளைத் தொழும் கைகள்

காத்திருக்கவேண்டும் எப்போதும்....

மற்றவர் துயர் துடைக்க !



......கா.ந.கல்யாணசுந்தரம்.

.

செவ்வாய், ஜனவரி 01, 2013

சீர்மிகு நல்லுலகு காண

சிந்தனையை முன்னிறுத்தி
சீர்மிகு நல்லுலகு காண
செம்மாந்து வாழ்த்து சொல்வோம்
2013 - ம் ஆண்டு தழைக்கட்டும்!
நல்லுள்ளங்கள்
மகிழட்டும் எந்நாளும் !
வன்மம் வக்கிரம் தொலைத்து
வான்புகழ் வள்ளுவன் வழங்கிட்ட
குறள்வழி வாழ்வோம்
வையகத்தே இன்பமுற்று !

....கா.ந.கல்யாணசுந்தரம்.