கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

ஞாயிறு, ஏப்ரல் 22, 2018

தமிழில் ஹைக்கூ கவிதைகள்...இயற்கை குறித்த புரிதல் ...தொடர் ....3

இயற்கை குறித்த புரிதல் ......தொடர் ...3
*****************************************
தமிழ் ஐக்கூ கவிதைகளில் இயற்கை சார்ந்த புரிதலோடு எழுதப்படும் வரிகள் நெஞ்சுக்கு நிம்மதி தருவன. ஏகாந்த சூழலில் நம்மை அழைத்துச் சென்று மனதை அமைதியில் ஆழ்த்தும் சக்தி பெற்றவை. ஆம்....மனிதனும் இயற்கையும் தோழர்கள். மறுக்க முடியுமா ?
இன்னும் சில ஐக்கூ கவிதைகளைக் காண்போம்...
1. தலைகீழாய்த் தொங்கும்
கிளிகளின் மூக்கு
முந்திரிக் காடு
.......அனலேந்தி ( அருவி ஹைக்கூ வாசல் )
2. கூடை நிறையப் பூக்கள்
எதை ரசிப்பது ?
பேசாமல் கூடையாக்கிவிட்டேன்
.......ம.ரமேஷ் (அருவி ஹைக்கூ வாசல் )
3. யாருமற்ற மரத்தடி
கயிற்றுக் கட்டிலில்
படுத்துறங்கும் நிழல்
.......காவனூர் ந.சீனிவாசன் (அருவி ஹைக்கூ வாசல் )
4. மெல்லப்போ தென்றலே
வழியில் கருவேல மரங்கள்
குத்தும் முட்கள்
.......வீ.தங்கராஜ், காஞ்சிபுரம் (அருவி ஹைக்கூ வாசல் )
5. எழுந்து போன
தடம் தெரியவில்லை
கிணற்றில் விழுந்த நிலா
........அ . முத்து விஜயன்
கல்பாக்கம் (அருவி ஹைக்கூ வாசல் )
6. அசைந்தாடுகிறது
பறவை பறந்த பின்பும்
நாணல்
........த.வே.விக்ரமாதித்தன், செய்யாறு
(அருவி ஹைக்கூ வாசல் )
7. வேர்களின் உருவம்
கிளைகளில்
இலையுதிர் காலம்
.......சொ.சரவணபவன், திமிரி
(அருவி ஹைக்கூ வாசல் )
8. நீரின் அழகில்
முகம் பார்க்கும் கொக்கு
ஓடிக்கொண்டிருக்கும் நதி
........பாரதி வசந்தன், புதுச்சேரி (அருவி ஹைக்கூ வாசல் )
9. கடற்கரை ஓரம்
காதல் இசை
ஆடும் படகு
........கா.அமீர்ஜான் ,திருநின்றவூர்
(அருவி ஹைக்கூ வாசல் )
10. நெஞ்சம் மகிழும்
உதய கீதங்களுடன்
விடியல் பறவைகள்
...........கா.ந.கல்யாணசுந்தரம்
(அருவி ஹைக்கூ வாசல் )
இன்னும் தொடரும் ...இயற்கை குறித்த புரிதல் ......

இயற்கை குறித்த புரிதல் தமிழ் ஐக்கூ கவிஞர்களிடையே ஏற்பட வேண்டும் ! தொடர் 2

இயற்கை குறித்த புரிதல் தமிழ் ஐக்கூ கவிஞர்களிடையே ஏற்பட வேண்டும் !
**********************************************************************
இயற்கை மானுடம் ஆராதிக்கின்ற இறைவனின் படைப்பு. வாழ்வியல் தத்துவங்களை மனிதனுக்கு இயற்கை போதிக்கும் ஆற்றல் கொண்டவை . இயற்கையை மனிதன் இறைத்தன்மையுடன் ஒப்பிட்டு வழிபாடு செய்தவிதங்கள் அற்புதமானவை.
இயற்கையோடு இயைந்த வாழ்வுதான் மனிதனின் 
ஆரோக்கியமான வழிநடத்துதலில் முக்கிய பங்கு வகிக்கிறது எவராலும் மறுக்கமுடியாத உண்மை.
" வாடிய பயிரைக்
கண்டபோதெல்லாம்....
வாடினேன் ! "
........அருள்பிரகாச இராமலிங்க வள்ளலாரின் மனிதநேயமிக்க வரிகள். இயற்கையின் வளங்களை ஆராதித்த முதல் வள்ளல். மிகச் சிறந்த ஐக்கூவாக இதை ஏற்றுக் கொள்ளலாம்.
பெரும்பாலும் ஜப்பானிய ஐக்கூ கவிதைகள் இயற்கையின் வளங்களை அதில் உறைகின்ற சூட்சுமங்களை எடுத்துச் சொல்லும் ஜென் புரிதலாகவே விளங்கின. ஒரு நூற்றாண்டை கடந்த தமிழ் ஐக்கூ கவிதைகளில் பல தமிழகம் சார்ந்த இயற்கையின் புரிதலோடு ஒட்டி எழுதப்பட்டுள்ளன என்பது நிதர்சன உண்மை.
தற்கால ஐக்கூ கவிகளின் புரிதல் இயற்கை ஒட்டி இருத்தல் அவசியம். காலச் சூழலின் காரணமாக பெரும்பாலும் அரசியல், சமூகம் சார்ந்த அவலங்களின் வெளிப்பாடாகவே ஐக்கூ கவிதைகள் எழுதப்பட்டு வருகின்றன....இதுதான் உண்மையும் கூட.
எழுதும் பத்து ஐக்கூ கவிதைகளில் ஒன்றையாவது இயற்கையின் புரிதலோடு எழுதுங்கள். அவை காலம் கடந்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.
இனி சில ஹைக்கூ கவிதைகளைக் காண்போம்....
1. உள்ளே உறங்கும் தேனீக்கள்
பனியில் முழுக்க நனைந்து
கிளையில் தொங்கும் தேன்கூடு
.......ந.க.துறைவன் (ஹைக்கூ பாவை )
2. கூடு திரும்பும்
பறவைக் கூட்டம்
வெள்ளை வானவில்
......அருணாச்சல சிவா (பொன்விசிறி )
3. ஓய்ந்த மழையை
எதிரொலித்தன
மரத்தின் இலைகள்
.......கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி (பெயர் தெரியாப் பூ )
4. பூக்களுக்குக் குளிர்
போர்வையாய் விரிகிறது
வண்ணத்துப் பூச்சி
.......புல்வெளி செ.காமராசன் (விதைக்குள் விருட்சம் )
5. விண்மீன்களுக்காக காத்திருந்தபோது
மடியில் வந்து விழுந்தது
ஒரு பூ
.......கழனியூரன் (கரந்தடி )
6. வீசுகிறது
வேலியைத் தாண்டி
வெண்மல்லி வாசம்
........பொன்குமார் ( பிற )
7. மழை நனைத்த பூமி
உறவு விரிந்தது
எங்கும் மண் வாசம்
........ஆரிசன் (குளத்தில் மிதக்கும் தீபங்கள் )
8. தாமரைப் பூவில் நின்று
வண்டை விரட்டித் தவளை சொன்னது
இசைமிக நல்ல தென்று
...........ஈரோடு தமிழன்பன் (சென்னிமலை கிளியோபாத்ராக்கள்) (லிமரைக்கூ )
9. காற்றோடு கலக்கிறது
மகரந்த மணம்
வேலியோரப் பூக்கள்
............ச.கோபிநாத் (குழந்தைகளைத் தேடும் கடவுள் )
10. உதிரும் கொன்றை மலர்கள்
கருப்புக் குடையின் மேல்
கார் காலத் துவக்கம்
.......... கா.ந.கல்யாணசுந்தரம் (மனிதநேயத் துளிகள் )
......தொடரும் ....இயற்கை குறித்த புரிதல் ......

திங்கள், ஏப்ரல் 16, 2018

மனித உணர்வுகளின் வெளிப்பாடாக அமையவேண்டும் ....தமிழ் ஐக்கூ கவிதைகள் !

மனித உணர்வுகளின் வெளிப்பாடாக அமையவேண்டும் ....தமிழ் ஐக்கூ கவிதைகள் !
********************************************************************
தமிழ் ஐக்கூ கவிதைகள் ஒரு நூற்றாண்டைக் கடந்து வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது.
கவிதைகளின் பரிணாம வளர்ச்சியில் துளிப்பாக்கள் (ஐக்கூ கவிதைகள் ) தமிழ் கவிதை உலகில் இனிய தடம் பதித்து வருகிறது என்பதில் ஐயமில்லை.
ஒரு கவிதை சமுதாய மாற்றத்தைக் கொண்டுவருமேயானால் அது ஜீவனுள்ள வரிகளையும் சொற்களையும் தன்னகத்தே கொண்டு ஒரு இயக்கத்தையே நடத்துகிறது என்பது உண்மை.
திரையுலகில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவியரசு கண்ணதாசன், கவிஞர் வாலி போன்றோரின் பாடல்வரிகளில் உயிரோட்டமான சொற்களும் வரிகளுமே காலம் கடந்து நிற்கும் தன்மைக்கு அடிப்படை ஆகும்.
எளிய தமிழ் சொற்களால் கோடானுகோடி மக்களின் இதயத்தை கொள்ளையடித்த கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகளில் இந்த சமுதாய முன்னேற்றத்துக்கான விதைகள் தூவப்பட்டன.
இலக்கிய உலகில் பக்தி இலக்கியம் தொட்டு, சங்க இலக்கியம் மற்றும் சங்கம் மருவிய காலம் வரை அலைகடலாய் தமிழ் இலக்கிய வரலாறு பார்போற்ற ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.
இந்த வரிசையில் காலம் கடந்து நிற்கும், வாழ்ந்துகொண்டிருக்கும் ஐக்கூ (துளிப்பாக்கள் ) கவிதைகள் நூற்றுக் கணக்கான கவிஞர்களின் விரல்களில் பிறப்பெடுத்த பெருமைக்கு உரியதாகும்.
இந்த வரிசையில் தடம்பதித்த/தடம் பதித்து வரும் ஐக்கூ கவிஞர்களின் ஹைக்கூ கவிதைகள் தினம் தொடராக எனது பார்வையில் வெளியிட விரும்புகிறேன்.
இந்த ஐக்கூ கவிதைகள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவை. விளக்கம் கொடுத்து புரிய வைக்க வேண்டும் எனும் கட்டாயம் இல்லை. பன்முக நோக்கில் பொருள் கொள்ளும் ஆற்றல் மிக்க ஐக்கூ கவிஞர்கள் மத்தியில் நான் விளக்கம் கொடுக்க
விரும்பவில்லை... !
இந்த ஐக்கூ கவிதைகளை (துளிப்பாக்கள்) உள்வாங்கி கவிதையின்பம் பெற அன்போடு அழைக்கிறேன்...!
தற்போது ஐக்கூ எழுதும் இளைய தலைமுறைக்கும் இந்த ஐக்கூ கவிதைகள் எடுத்துக் காட்டாய் விளங்கும் என நம்புகிறேன்.
காலத்தை வெல்லும் தமிழ் ஐக்கூ கவிதைகள்....தொடர் ..1
*****************************************************
1. துணிகளில் தெரிவதில்லை
நெசவாளனின்
கருத்த விரல்கள்
......ஏகாதேசி
2. பசித்தழுகிறது குழந்தை
ரப்பர் மரத்தில் பால் வெட்டியபடி
வற்றிய மார்போடு அம்மா
.....ஏகாதேசி
3. சருகு பொறுக்குவதில்
சரியாகிறது நேரம்
குளிர் காய்வது எப்போது ?
.....பல்லவி குமார்
4. தீக்குச்சி இறந்தது
தீபத்தில்
அசைந்தாடும் உயிர்
......பழனி இளங்கம்பன்
5. அட...குடங்களுக்குக் கூட
சொட்டு மருந்து கொடுக்கிறதே...
நகரிய தெருக் குழாய்
......முகவை முனீஸ்
6. இருண்ட கிராமத்தின் வழியே
இரக்கமின்றி செல்கின்றன
நகரத்திற்கு மின்கம்பிகள்
......நாவம்மா முருகன்
7. பிச்சையெடுத்தான் சிறுவன்
பசி தீர்ந்தது
குடிகார அப்பாவுக்கு
.....நாவம்மா முருகன்
8. சங்கு ஊதியும்
எழுந்திருக்கவில்லை
ஆலைத் தொழிலாளி
.....சீனு தமிழ்மணி
9. இருட்டில் அமர்ந்து
மௌனத்தை தின்னும்
அணைந்த மெழுகுவர்த்தி
.....மு.முருகேஷ்
10. ஏற்றத் தாழ்விலும்
இணைந்த இயக்கம்
விரல்கள்
......கா.ந.கல்யாணசுந்தரம்
....................நாளை தொடரும்.............
(நன்றி: நீங்கள் கேட்ட ஐக்கூ தொகுப்பு நூல் - ஆண்டு 2000)

ஞாயிறு, ஏப்ரல் 15, 2018

உணர்வுமிக்க இலங்கைப் பயணம் ...தொடர் 4


உணர்வுமிக்க இலங்கைப் பயணம் ...தொடர் 4
************************************************************************

26/02/2018 அன்று திருகோணமலை பத்ரகாளியம்மன் ஆலயம் சென்று வழிபட்டோம். அடடா...என்னவொரு நேர்த்தியான சிற்பங்கள் கொண்ட கோயில். கோயிலின் மேற்புற கூரையில் அழகிய சிற்பங்கள் வடிவமைப்பு இருந்தது. இதுவரை இம்மாதிரியான கலை அம்சம் கொண்ட கோயிலைப் பார்த்ததில்லை. இந்தத் திருத்தல வரலாற்றை சிற்பங்களாக வடித்திருந்தனர்.

இன்றெல்லாம் கண்டாலும் நேரம் போதாது. காணக் கண்கோடி வேண்டும்.
பத்ரகாளி அம்மன் அச்சு அசலாக அருள்மிகு அங்காளபரமேஸ்வரி போன்ற தோற்றமுடன் வீற்றிருந்த காட்சி அற்புதம்.

இனி வரலாற்றைக் காண்போம்:
ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம் திருகோணமலை நகரின் மையப்பகுதியில்பேருந்து நிலையத்திற்கு மிக அருகாமையிலும் திருகோணமலை தொடருந்துநிலையத்திலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளது.
மேலும் இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில்தேவியின் இடுப்புப் பகுதி வி்ழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணிகூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது. ஒரு சிலர் உண்மையான சக்தி பீடக் கோவில் போர்ச்சுக்கீசியப் படையெடுப்பில் இடிக்கப்பட்டு விட்டதால் இந்தக் கோவிலின் அம்மன் சன்னதியே சக்தி பீடமாக வணங்கப்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.

இவ்வாலயத்தின் வரலாற்றினை திட்டவட்டமாக வரையறுத்துக் கூறமுடியவில்லையென்றாலும் இவ்வாலயத்தில் கிடைத்துள்ள கல்வெட்டுகள், பழைய சாசனங்கள், கர்ண பரம்பரையாக வழங்கிவரும் கதைகள், அக்கதைகளோடு தொடர்புடையதாய் தற்போது ஆலயத்திலிருக்கும் விக்கிரகங்கள், தகளி, வாகனம் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு முதலாம் இராசேந்திர சோழன் காலமாகிய பதினோராம் நூற்றாண்டில் இவ்வாலயம் சிறப்புற்றிருந்திருக்க வேண்டுமென்று சரித்திரப் பேராசிரியர் செ. குணசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாலயத்தில் கடந்த 150 ஆண்டு காலமாக மிகச்சிறப்பாக அனுட்டிக்கப்பட்டுவருகிறது கேதாரகௌரி விரதம்புரட்டாதி மாதம் விஜயதசமி முதல் ஐப்பசி மாத அமாவாசைத் திதிவரை நிகழும் 21 நாட்களுக்கான விரத அனுட்டானங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

விசயதசமியன்று நடைபெறும் கும்பவிழா திருகோணமலையில் இடம்பெறும் தனித்துவமான ஒரு விழாவாகும்.


திருகோணமலை கவிஞர் அருணாசலம் சிவானந்தம் அவர்கள் எங்களுடன் இத்திருத்தலத்தில் உடனிருந்து அழைத்துச் சென்றார்.. திருகோணமலையில் வசிக்கும் கவிதாயினிகள் சிவரமணி கவிச்சுடர் மற்றும் பிரிதிவிராஜ் லோஜி அவர்கள் நாயன்மார்கள் நற்றமிழ் சங்கம் நிறுவனர் ஸ்ரீகாந்த் ராஜா மற்றும் ஜாகிர் அவர்களுடன் இணைந்து கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். தமிழகக் கவிஞர்களுக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்ததை மறக்க முடியாது.  ஈழத்துக் கவிஞர்கள் பலருடன் உரையாடியது மகிழ்வை தந்தது.

கூட்டம் முடிந்து கவிதாயினி பிரிதிவிராஜ் லோஜி அவர்கள் தங்கள் வீட்டுக்கு எங்களை அழைத்துச் சென்று இன்முகத்துடன் வரவேற்று தேனீர் கொடுத்தது இன்னும் கண்முன்னே காட்சி அளிக்கிறது. லோஜி அவர்களுடைய வயதான தாயார் மற்றும் குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு கவிஞர் அருணாசலம் சிவானந்தம் அவர்கள் இல்லம் சென்றோம்.
அனைவரையும் வரவேற்று கவிஞர் சிவா அவரது மனைவியும் எங்களுக்கு இன்முகத்துடன்  அறுசுவை உணவளித்தது மறக்க முடியாது. நாங்கள் பயணப்பட்டு அன்றுதான் முழுமையான உணவருந்தி மகிழ்ந்தோம்.

இரவு விடுதியில் தங்கி மறுநாள் காலை வெந்நீர் ஊற்றில் குளித்து மகிழ்ந்தோம். மார்பல் பீச் -  பளிங்கு கடற்கரை சுற்றிப்பார்த்துவிட்டு  யாழ்பாணம் நோக்கி பயணமானோம்.

இனிய நேரங்கள்....

தொடரும்...அடுத்து....யாழ்பாணம் போகும் வழியில் ஓமந்தை கண்ணகி கோயில் வழிபாடு...

.........கா.ந.கல்யாணசுந்தரம்.








சனி, ஏப்ரல் 14, 2018

உணர்வுமிக்க இலங்கைப் பயணம் ...தொடர் 3


உணர்வுமிக்க இலங்கைப் பயணம் ...தொடர் 3
 ********************************************************



மட்டக்களப்பு – ஓட்டமாவடி இலக்கிய விழா முடித்து எங்களது பயணம் 26/02/2018 அன்று இலங்கையின் வடக்கு மாகாண தலைநகர்  திரிகோணமலை நோக்கி இனிதாய் நகர்ந்தது. திரிகோணமலை செல்லும் வழியெங்கும் அழகிய இலங்கை கடற்கரை இருபுறமும் காட்சி அளித்தது. இயற்கை எழில் சூழ்ந்த தமிழர் வாழும் பகுதிகள் நெஞ்சைக் கொள்ளை கொண்டது.

மதிய நேரம் திரிகோணமலை அடைந்து அங்கே விடுதியில் சற்று ஓய்வெடுத்து திரிகோணேஸ்வரர் திருக்கோயிலை கண்டு ரசித்தோம்.
இராவணனால் தரிசிக்கப்பட்ட புராதான சிவலிங்கம் தரிசனம் கண்டோம். இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கும் தற்போதைய அரசால் செய்யப்பட்டு இருந்தது.

விக்கிப்பீடியா வரலாறு :
திருக்கோணேச்சரம் (திருக்கோணேஸ்வரம்இலங்கையின்கிழக்கு மாகாணத்தின் தலை நகரமான திருகோணமலையில்உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இலங்கையில் உள்ள இரண்டு தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்று. கிபி 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் இக்கோயிலின் மீது ஒரு பதிகம் பாடியுள்ளார். வருடா வருடம் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் விக்கிரகம் நகர்வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி வி்ழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில்தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது. ஒரு சிலர் உண்மையான சக்தி பீடக் கோவில் போர்ச்சுக்கீசியப் படையெடுப்பில் இடிக்கப்பட்டு விட்டதால் இந்தக் கோவிலின் அம்மன் சன்னதியே சக்தி பீடமாக வணங்கப்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.[2]

இராவணன் தென் இலங்கையை ஆட்சி செய்த காலத்திலே தட்சிண கைலாயம் எனப் போற்றப்படுகின்ற திருக்கோணேச்சரத்தைப் பூசித்து வந்தான் என்று மட்டக்களப்பு மான்மியம் என்னும் நூல் கூறுகின்றது. இராவணன் தன் தாயாருக்குச் சிவலிங்கம் ஒன்று பெற விரும்பிப் பெயர்த்த மலை தட்சிண கைலாயமாகிய கோணமாமலை என்று தட்சிண கலாய புராணங் கூறுகின்றது. இதற்குச் சான்று பகர்வது போன்று இம்மலைப் பாறையில் இராவணன் வெட்டு என்ற பெயருடன் மலைப் பிளவு ஒன்று இன்னமும் இருக்கின்றது. இராவணன் கிறிஸ்து யுகத்துக்கு மிகவும் முற்பட்ட காலத்தில் வாழ்ந்தவன் என்றும் அவனுடைய காலத்துக்குப் பின் கடல்கோள் ஒன்று நிகழ்ந்தது என்றும் ராஜாவளிய என்னும் புத்த சமய வரலாற்று நூல் கூறுகின்றது.

குறிஞ்சியும் முல்லையும் நெய்தலும் ஒன்று சேர்கின்ற ஓர் இடத்தில் இத்தலம் அமைந்துள்ளது. திருக்குணமலை திருக்குணாமலை திருமலை தென் கைலாயம் கோகர்ணம் திருகூடம் மச்சேஸ்வரம் என்பன இத்தலத்தின் பிறபெயர்கள் ஆகும்.
இத்தகு சிறப்புமிகு இடத்தை மூன்று மணிநேரம் பார்வையிட்டோம். இம்மலைக்கு செல்லும் வழியில் மான்களும் மயில்களும் ஒருங்கே இருப்பதைக் காண முடிந்தது. இயற்கை சூழல், மலைவளம், கடற்கரை பொலிவு அனைத்தும் சேர்ந்த இந்த மலைப்பகுதி கோயில் இராவணனால் வணக்கப்பட்ட லிங்கம் உள்ளது என்பதற்கு சான்றாக மலையின் அடிப்பகுதியில் இராவணனின் கோட்டைக் கொத்தளம் இன்றளவும் சிதலமடைந்து உள்ளது என்றார்கள். அதற்கு நாங்கள் சென்ற போது படகுப் போக்குவரத்து இல்லை.  எழில் சூழ்ந்த இயற்கை வளங்களோடு வாழ்ந்த இராவணன் வரலாற்றை கோயில் உள்புற மண்டபத்தில் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளது மிகச் சிறப்பு.

பார்க்கவேண்டிய பரவசமூட்டும் இடம்....

...............கா.ந.கல்யாணசுந்தரம்

தொடரும்....அடுத்த பதிவு வியப்பில் ஆழ்த்தும் திரிகோணமலை பத்ரகாளியம்மன் கோயில் சிற்பங்கள்