கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!
காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஆகஸ்ட் 05, 2017

இதுதான் கார் காலமோ ?

மின்னல் வெட்டிய பொழுதில்
மழைச் சாரல் !
துளிர்த்தலும் உதிர்தலும்
அன்றாட நிகழ்வுகள் ....
தெருவெங்கும் செந்நிற இலைகளால் 
ஒரு சிவப்புக் கம்பள வரவேற்பு !
நீ...நடந்த பாதைகளில்
உதிர்த்த புனகைக் கோட்டின் எல்லைகளில்...
தவம் செய்யும் புல்லின் பனித்துளிகள் !
ஒன்றிரண்டு நனைந்த பறவைகள்
சிறகு விரித்தலில் சிந்தும்
மழைத் துளிகள் ...
இதுதான் கார் காலமோ ?
மங்கிய மாலைப் பொழுதில்
மேற்கு திசை வானம்
கவிழ்ந்து கிடக்கிறது !
மேகங்களைச் சுமந்தபடி
கிழக்கிலிருந்து புறப்பட்ட
ஈரமற்ற உனது குடைக்குள்
இறக்கத்துடன்
ஒரு இதயம் பயணிக்கிறது.....
யாருக்கும் தெரியாமல் !
திண்ணையில் அந்தக் குடையை
மடக்கி வைக்காதே....
அது மரணித்துவிடும் !
...........கா.ந.கல்யாணசுந்தரம்.

ஞாயிறு, பிப்ரவரி 26, 2012

தருணம் தரும் சுகம்





















பாச உணர்வுகள்
நேசமுடன் வெளிப்படுத்தும்
இருவிழி வாசல்கள்
எப்போதும் துடித்திருக்கின்றன !

விளக்கொளி சாம்ராஜ்ஜியத்தில்
மின்மினி பூச்சிகளின்
ஊர்வலங்கள் எப்போதாவது
நடைபெறும் காரிருளுக்காக!

தனக்கொரு வீடில்லை என
எப்போதும் தென்றல் நினைத்ததில்லை !
கட்டுப்பாடு அறியா சிட்டுகள்கூட
கூடு கட்ட தவறியதில்லை!

நதிமிகு வெள்ளம் அணைக்குள்
சிறைபட்டாலும் வளர்மிகு
வயலுக்கு ஜீவனாகி
வான்சிறப்பில் வாழ்ந்திடும்!

இதயம் வளர் அன்பெனும்
சிறைக்குள் அகப்படினும்
முறைப்படி மணம்முடிக்கும்
தருணத்தை வரவேற்போம் !

............கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, பிப்ரவரி 24, 2012

பிரிவோம் சந்திப்போம்.....















சந்தித்த வேளையில்
பகிர்ந்துகொண்ட உணர்வுகளுக்கு
ஒரு வடிகாலாய் அமைந்தது
நமது எதிர்பாரா நட்பு!

காலம் காலமாய்
உணவூட்டி கல்வி புகட்டி
நல்வழி காண்பித்த பெற்றோர்களை
மறத்தல் மாண்பாகுமா?

பின்தொடர்தலும்
காத்திருத்தலும்
காதலின் அத்தியாயங்கள்
என்றிருப்பின் முடிவுரை எங்கே?

என்னுடன் இணைவதே
இந்த பொன்னுடல் பெற்ற பேரெனில் ...
சுற்றம் மறந்து பயணித்தல்
உடன்போக்காகிவிடும்!

இந்த இனிய நட்பு
ஒரு இலக்கியக் காதலின்
முகவுரையாகட்டும்....
நட்புடன் இனி பிரிவோம் சந்திப்போம்!



.......கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, ஜனவரி 27, 2012

இந்தக் காதல் எதுவரை?
















புரிதலின் பயணிப்பில் நேசிப்பு பூத்துக் குலுங்கும்
நினைவுகளில் தேன்சொரிந்து இதயம் குளிரும்
வாசமிகு வாழ்வுக்கான வசந்த வாயில்கள்
வழியெங்கும் வரவேற்கும் - ஆம்
இதுதான் காதலின் மேன்மையென உள்ளங்கள்
ஒரு புரியாத ஸ்பரிசத்தில் பரவசப்படும்!
மார்கழிப் பனி பாவையர்க்கு உன்னத நோன்பானது
சூடிக்கொடுத்தவளின் திருவாயால்!
பயணிப்பின் எல்லை பயணிக்கும் திசையில்
ஒரு இடமறிந்த உண்மை!
நேசிப்பின் நடை இருமனங்களின்
எல்லையற்ற தூரத்தின் விளிம்புகள்!
வயதின் மூப்பிலும் வியப்பின்றி விருந்துவைக்கும்
இல்லத்துணையின் ஈடற்ற அன்பே காதல்!- இந்தக்
காதல் எது வரை? ....எனக்கேளின்....
துளிர் விடும் மனம் முதல் துவளும் நாள் வரை
துணைவருமே காதல் மாசற்ற முகத்துடன்...!
எனச் சொல்வோம் நேசமுடன் எந்நாளும் !


..........கா.ந.கல்யாணசுந்தரம்.

( நன்றி: ஈகரை)

வெள்ளி, டிசம்பர் 30, 2011

மலரும் மங்கையும்



மலரும் மங்கையும்
ஒரு ஜாதியானதால்....
பட்டாம்பூச்சியின் சுவாசமானது!

....கா.ந.கல்யாணசுந்தரம்.

சனி, டிசம்பர் 03, 2011

உனக்கான எனது காத்திருப்பு.....















நம்மைச் சுற்றி உற்றுநோக்கினால்

எல்லாமே எதற்காகவோ

காத்திருக்கின்றன...

முற்றுப்பெறாத நீண்ட சாலைகள்

பயணிப்பின் வரவை எதிர்நோக்கி!

விதைக்கப்பட்டவை

அறுவடை நாளை நோக்கி!

உயர்ந்த மலை முகடுகள்

நீர்வீழ்ச்சியின் வரவுக்காக!

வான் மேகங்கள்

நல்ல மழை பொழிதலுக்காக!

தேன்கூட்டின் ஈக்களும்

தேனருந்த முழுநிலவின் வருகைக்காக!

மூங்கில் காடுகள்

எப்போதும் காத்திருக்கின்றன

நல்லதொரு

புல்லாங்குழலை பிரசவிக்க !

இப்படி எத்தனையோ

அசையும் அசையா

பொருட்கள் ஒரு காத்திருப்பின்

சுகத்தில் லயித்திருக்கின்றன!

உனக்கான எனது காத்திருப்பு மட்டும்

உனக்கு கசந்துவிட்டது ஏனோ ?


............கா.ந.கல்யாணசுந்தரம்.

சனி, அக்டோபர் 15, 2011

ஒரு கார்கால துவக்கம்.....

என் ரோஜா தோட்டத்தில்
எனக்காக முதலில் பூத்த மலராக
உனது வருகை எப்போதுமே இருக்கும்.
வார மாத இதழ்களில் வருகின்ற
கவிதைகளைப் படிக்கும் போதெல்லாம்
அதில் உனது பார்வையின் துடிப்பை
அறிந்துகொண்டிருக்கின்றேன்!
காதல் உணர்வுகளில் எனது இதயம்
ஒரு தும்பியாய்
வட்டமிட்டுக்கொண்டிருக்கிறது!

பெண்ணியம் சார்ந்த ஒரு புரிதலில்
நிச்சயமாக இது சிற்றின்பம் இல்லை.
கனவுத் தொழிற்சாலையின்
இன்ப உற்பத்தியாக இருந்தால்
இந்த சமுதாய சந்தையில்
நம்மிடம் இருந்து காதல்
களவாடப்படும் என்பது உறுதி !

நாம் கை கோர்த்து நடந்த
நாள் முதலே நட்பின்
இலக்கணத்தை அல்லவா
சுவாசித்திருக்கிறோம்.
அது நம் காதலின்
கார்கால துவக்கமென்றால்
இன்று நமதுள்ளம்
இளமையின் வாயிலில்
உன்னதமான சிநேகத்தின்
வசந்தமாகட்டும்!

....கா.ந.கல்யாணசுந்தரம்.

திங்கள், செப்டம்பர் 26, 2011

நெஞ்சமதைத் தழுவும் வரை




இதயத்தை ஒருமுறை
கேட்டுக்கொள்கிறான் ...
வெடித்துவிடாமல்
வாழவேண்டுமென்று....
பாசம் நேசமெல்லாம்
பங்குபோட்டு
பாதியிலே ஒதுங்கிவிடும்!
உறவுகளின் ஒப்பாரியில்
ஓரங்க நாடகங்கள்
இடையிடையே அரங்கேறும்!
நட்பு வட்டங்கள்
அஞ்சலிக்கு ஆள் சேர்க்கும்!
கரும்பலகையில் கல்வி
கற்றதெல்லாம்
கல்லறை வரைக்கும்
கொண்டுசெல்லும்!
இருந்தாலும் .....
மீண்டும் மீண்டும்
கேட்டுக்கொள்கிறான்
இதயத்திடம்....
'வெடித்துவிடாதே
நினைவுக் கூடே...!
சற்றேனும் காத்திரு
சிநேகத்தின் சுவாசத்தை
மொத்தமாய் ஆளுகின்ற
என்னவளின் மூச்சுக்காற்று
நெஞ்சமதைத் தழுவும் வரை!'

....கா.ந.கல்யாணசுந்தரம்


புதன், செப்டம்பர் 21, 2011

களத்துமேட்டு வாழ்த்து...

களத்துமேடு குடியிருப்பில் அவள்
கதிர் அறுத்து கட்டு சுமந்து நடக்கையில்
காத தூரமானாலும் பின்னால் நடப்பதற்கு
வெல்லமென காத்திருப்பான்!
தென்னைமரத்து குயில் கூட
தோற்றுப்போகும் அவளது குரலில்!
மாந்தோப்பு மயில் கூட்டமும்
மெய்மறந்து ஆடாது நிற்கும்
அவளது இடையழகு நடையின் போது!
கருத்தொருமித்த காதலானது
இவர்களது நட்பின் மேன்மை!
நெல்லடித்து தூற்றியதுபோல்
சொல்லால் அடித்து துறத்தினார்கள்!
நூலருந்த பட்டமென அலைபாய்ந்து
செயலற்ற பிம்பமாய் அவளின் வாழ்வு!
கடலலை ஒதுக்கிய ஒற்றைக் கால் செருப்பாய்
கிராமத்து எல்லைதனில் ஒதுக்கப்பட்டான்!
எழிலார்ந்த வளமிக்க வயல்பரப்பில்
பழிசொல்லும் கூட்டம்தான் பெருகியது!
இயற்கை இயம்புவதை கேட்காத
ஈனபுத்தி மாக்கள் இனியேனும் மாறட்டும்!
விரும்பும் மனதின் வசந்த காலங்களை
அரும்பிட நீர்பாச்சும் நிலை வரட்டும்!
களத்துமேட்டு கதிரடிக்கும் காலமதில்
தூற்றிய பதர்களும் இருக்கத்தான் செய்யும்!
காளைகளின் மணியோசை இவர்களது
காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்!

.................கா.ந.கல்யாணசுந்தரம்.

செவ்வாய், செப்டம்பர் 06, 2011

இனி அவள் பாவை அல்ல...





பனி ஆடைக்குள் பவித்திரமாய்
அந்த மார்கழி காலைப்பொழுது!
விடியல் பறவை எழும்முன்
அவள் எழுந்துவிட்டாளோ?
காரணம் பனிபெய்த ஈரமண் வீதியில்,
தோழிகளுடன் அவளது பாத முத்திரைகளின்
அடையாளம் நன்றாகவே தெரிகிறது!
பாவை நோன்பில் ஆண்டுதோறும்
பயணித்திடும் அவளது எதிர்பார்ப்புகள்
வெறும் காத்திருப்புகளாகவே இருக்கின்றன!
இல்லை... இல்லை... இந்த ஆண்டு மட்டும்
அவளுக்கான இந்திரவனம்
என்னுள் பூத்திருக்கிறது....ஆம்
இனி அவள் பாவை அல்ல...
திருப்பாவை!

கா. ந.கல்யாணசுந்தரம்.

புதன், ஆகஸ்ட் 31, 2011

வாழை பூக்கட்டும்!





அர்த்தம் புரியாத நாட்களில்
நெருகிப் பழகினோம்
ஒரு புரிதல் தொடங்கியபோது - நான்
ஒரு ஒற்றைச் செம்பருத்தியாய்p
மதிலுக்குள் ஒளிக்கப்பட்டேன்!
வாசம் மிகுந்தாலும் எனக்குப் பிடிக்காத
ஜாதி மல்லிகை பதியம் போட்டனர்!
செந்தூரப் பூக்களின் வாசமாக - உனது
நினைவலைகள் எனது இதயக்கமலத்து
தடாகத்தில் வந்து செல்கின்றன!- நமது
காதல் ரோஜா இதழினும் மென்மையானது!
எனினும் முட்கள் உடனிருப்பதால்
உங்களின் கரங்களுக்கு கவனம் தேவை!
தேனருந்தும் கருவண்டின்
கள்ளத்தனம் வேண்டாம்!
கார்காலம் வருமுன்னே வாருங்கள்!
கதிர்முற்றி சாயுமுன்னே வாருங்கள்!
புடம்போட்டுப் பார்க்காத ஸ்பரிசம்
உங்களின் பரிசத்தால் பரிச்சயமாகட்டும்!
ஊர்கூடி வாழ்த்துப்பா ஒலிக்க - நம்
வீட்டு வாயிலில் வாழை பூக்கட்டும்!


..........கா.ந.கல்யாணசுந்தரம்..

செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011

ஒரு பனி பொழியும் காலை


ஒரு பனி பொழியும் காலை
அவளின் பவித்திர எழிலை
சுமந்து வந்த செந்நிறக் கதிர்கள்
அவனது இதய வாசலில்
பன்னீர் தெளித்து கோலமிட்டது...
ஒவ்வொரு விடியலும்
தினம் தினம் பூக்கின்றன
அவளின் வாசத்தோடு!
வைகறை மேகங்களில்
சேர்ந்திசைப் பாடல்களை
விடியல் பறவைகள்
பாடும்போதெல்லாம்
அவனது இதயக் கூட்டுக்குள்
ஒரு இனம்புரியாத
நேசப்பறவை சிறகடிப்பதை
உணர்ந்துகொள்ள முடியும்
அவளால் மட்டுமே!

.......கா .ந .கல்யாணசுந்தரம்.