கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

வெள்ளி, செப்டம்பர் 30, 2011

கொடியில் பூத்த முல்லை!



இருவர் தந்த அமுதம் - இளம்
காலைப் பொழுதின் குமுதம்!
சின்ன விழிகள் அசைத்து - இவள்
வண்ண கவிதை வடிப்பாள்!
மெல்ல நடந்து வந்து - ஒரு
முத்தம் தந்து சிரிப்பாள்
பேசும் மழலைக் கிள்ளை - இளம்
கொடியில் பூத்த முல்லை!
மொழிகள் அறிந்த உண்மை - பேசும்
மழலைக்கு இணை ஏது?

......கா.ந.கல்யாணசுந்தரம்.

ரணம் ஆறாத வெந்த நெஞ்சோடு....
















சந்தைக்கு செல்லும் பாரவண்டி
சரக்கு மூட்டைகளை ஏற்றியதும்
அசைய மறுத்த எருதுகளை...
அவன் வெறுப்புடன் பார்த்தான்!
கடும் வெயில் காதுகளைக்
குடையும் முன் அடுத்த கிராமத்து
சந்தைக்கு செல்ல வேண்டும்!
சகட்டுமேனிக்கு அடித்த அடியில்
சாட்டைகூட பிய்ந்து போனது!
நேரத்தோடு பறந்து சென்று
நூற்றுக்கணக்கில் வியாபாரம் செய்து
முதலாளியிடம் நல்ல பெயர்
வாங்கியும்கூடமனதில் நிம்மதி இல்லை!
மாலையில் மனைவி குப்பம்மா
பச்சிலையால் எருதுகளின்
சாட்டைத் தழும்புகளுக்கு
பத்து போடும் போது இவன் மட்டும்
ரணம் ஆறாத வெந்த நெஞ்சோடு....
வாயில்லாத ஜீவனாய்
விக்கித்து நின்றான்!

.........கா.ந.கல்யாணசுந்தரம்

புதன், செப்டம்பர் 28, 2011

தீர்வு...


பிறந்தது, வளர்ந்தது
வாழ்ந்தது....என்று
நம் வாழ்க்கை எப்போதுமே
யதார்த்தமாய் இருந்தாலும்...
உள்ளம் என்ற உன்னத
உணர்வுப் பூங்காவில்
உணர்ந்தது, நெகிழ்ந்தது
மகிழ்ந்தது என்னும்
வண்ணமலர்க் கூட்டங்கள்
வாடாமல் மணம்
வீசுகின்றன...

உறவுகள், மரபுகள்
சொந்தங்கள், பந்தங்கள்
இவையெல்லாம்....
மானுடத்தின்
வரவுகள் என்றாலும்,
சேவைகளும், சிந்தனைகளின்
பகிர்வுகளும் நமது
விருதுகள் என்ற நினைவுகள்
வாழ்நாளில் ஆளுமை செய்ய...
எனது எச்சங்களுக்கு
நானே தீர்வு காணுகின்றேன்!

......கா.ந.கல்யாணசுந்தரம்

செவ்வாய், செப்டம்பர் 27, 2011

பாச வலைகள்....


உலகம் ஒரு மாயை என்று
சொல்வதை அறிவியல் ஆமோதிக்காது!
விதி என்பது விதிக்கப்பட்ட
ஒரு அமானுஷ்யம்........
என ஒப்புக்கொள்ளாத மானுடம்
அதர்மத்திடம் உறவுகொள்கிறது!
செயல்பாடுகள் என்றுமே
அவரவர் ஜனித்த நட்சத்திர
ராசி பலன்களால்தான்
என்றெல்லாம் கூறுவதை
பலநேரங்களில் நம்பத்தான்
வேண்டியிருக்கிறது!
மனிதத்தின் பலவீனங்கள்
பலவாறு கூறுபோட்டு பார்க்க
மனிதமே முயலுகிறது!
ஆளுமை எண்ணங்கள் தலைப்படும்போது...
மனசாட்சி ஏனோ அரசாட்சி செய்வதில்லை!
இன்னொரு பிறப்பின் ரகசியம்
என்னவென்று அறியாத
தூண்டில் மீன்களாய் மனிதவாழ்க்கை!
இருப்பினும்......
ஆசை எனும் வாழ்க்கை கடலில்
உறவுத் தோணிகள்
இன்றும் சுமக்கின்றன...
பாச வலைகளை!


.........கா.ந.கல்யாணசுந்தரம்.

திங்கள், செப்டம்பர் 26, 2011

நெஞ்சமதைத் தழுவும் வரை




இதயத்தை ஒருமுறை
கேட்டுக்கொள்கிறான் ...
வெடித்துவிடாமல்
வாழவேண்டுமென்று....
பாசம் நேசமெல்லாம்
பங்குபோட்டு
பாதியிலே ஒதுங்கிவிடும்!
உறவுகளின் ஒப்பாரியில்
ஓரங்க நாடகங்கள்
இடையிடையே அரங்கேறும்!
நட்பு வட்டங்கள்
அஞ்சலிக்கு ஆள் சேர்க்கும்!
கரும்பலகையில் கல்வி
கற்றதெல்லாம்
கல்லறை வரைக்கும்
கொண்டுசெல்லும்!
இருந்தாலும் .....
மீண்டும் மீண்டும்
கேட்டுக்கொள்கிறான்
இதயத்திடம்....
'வெடித்துவிடாதே
நினைவுக் கூடே...!
சற்றேனும் காத்திரு
சிநேகத்தின் சுவாசத்தை
மொத்தமாய் ஆளுகின்ற
என்னவளின் மூச்சுக்காற்று
நெஞ்சமதைத் தழுவும் வரை!'

....கா.ந.கல்யாணசுந்தரம்


மகத்தானது மனிதநேயம்
















எங்கே போகிறோம்?
என்று நமக்கு நாமே
கேள்வி கேட்டுக்கொள்வோம்!
மானுடம் வாழும் பூமியில்
விசாரிப்புகளின்றி
வறண்ட பாலைவனமாய்
ஈரமற்ற நெஞ்சின்
உடல் கூடுகளாய்
புழுவினும் கேவலமாய்
மனச் சுமைகளை மட்டுமே
சுயநலத்தின் சிகரமாக்கிக்கொண்டு
ஊர்ந்து செல்கிறோம்!
மானுடமே!.... வாழும் வாழ்க்கையில்
மகத்தானது மனிதநேயம்
என்பதைவிடுத்து பயணிக்கிறோம்!
உனது பாலைவன பயணத்திலும்
புதைகுழிகள் இருப்பதை மறந்து!


...கா.ந.கல்யாணசுந்தரம்.



சனி, செப்டம்பர் 24, 2011

அனுபவப் பெட்டகங்கள்
















எங்கேயோ எப்போதோ
செய்த தவருகள்தாம்
இங்கே, இப்போதே
திருத்தப்படுகின்றன...
முற்பகலும் பிற்பகலும்
அடுத்தடுத்த இயக்கங்களாயின!
இந்த மானுடத்தின்
பாதயாத்திரை இன்னும்
முற்றுப்பெறவில்லை!

தனக்கென சந்ததிகளையும்
சொத்துக்களையும் சேர்க்கின்ற
மானிடத் திசுக்கள்,
இனியாவது
சமுதாயச் சிந்தனைகளை
நல்லதொரு மறுமலர்ச்சிக்கு
பயிரிட்டு பேணி காக்க
மானுட மண்டையோட்டு
செதில்களுக்கு
சொல்லி வைக்கட்டும்!

அன்பெனும் சொல்லறியாது,
அறிவுத் தளர்ச்சியால்...
வயதில் பெரியோரை
காப்பகத்தில் வளர்க்கின்ற
இயந்திர வர்க்கத்தினைக்
காணுகின்றோம் நிலமதிலே!
இல்லை ....இல்லை...
இனியாவது இளைய தலைமுறையே!
மனிதநேயத்தின் மணிவிளக்காய்,
அனுபவப் பெட்டகங்களை
அரவணைப்போம் வாரீர்!

....கா.ந.கல்யாணசுந்தரம்

புரிதலைத் தேடியது


காதலின்போது காட்டிய
பரிவும் அன்பின் அரவணைப்புகளும்
திருமண வாழ்வுதனில்
புரிதல் இல்லாது போனதென்ன?
உண்மைக் காதலென
இந்த உள்ளம் நம்பியதெல்லாம்
பொய்மையென காலம்
கற்பித்ததென்ன?
காதலுக்கும் காமத்திற்கும்
அர்த்தம் புரியாது
புரிதலைத் தேடியது....
இந்தப் பேதையின் குற்றமே!

......கா.ந.கல்யாணசுந்தரம்

வெள்ளி, செப்டம்பர் 23, 2011

அப்போதே தன்னுள்....


வாழ்க்கை சிகரத்தின்
ஒவ்வொரு படியிலும்
நினைத்துப் பார்க்கிறேன்....
வியந்து நினைக்கிறேன்!
அகரம் பயில ....
துணையாய் நின்ற
தகரப் பலகையின்
கருமை வண்ணத்தை!
அப்போதே தன்னுள்
அடக்கமாய் ஒளித்து
வைத்திருந்த ஒளிமயமான
என்னுடய எதிர்காலத்தை!

.....கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், செப்டம்பர் 22, 2011

எழிலார்ந்த ஓவியம்


மாலையின் வரவுக்காக
மணிக்கணக்காய் தவமிருக்கிறேன்...
காரணம்....
பொன்னிற மஞ்சள் வெயிலில்
மயங்கும் நதிக்கரை
தென்னங் கீற்றுகள்!
இறைவன் தினம் தினம்
உயிர்த்துடிப்பாய் வரைகின்ற
இயற்கையெனும் இளையகன்னியின்
எழிலார்ந்த ஓவியம்!
சுருங்கச் சொன்னால்...
நான் இன்னும் உயிரோடிருப்பது
உங்களின் இனிய தோற்றங்களால்!

.........கா.ந.கல்யாணசுந்தரம்.

இத்தரையில் பெற்ற சுகம்...





















உனது மென்மையான
விரல் நுனிகளில்
அந்த வயலின்
பிரசவிக்கும்
இன்ப நாதங்கள்....
ஒரு குளிர்கால
முன்பனி காலத்தில்
பூத்துக் குலுங்கும்
செந்தூரப் பூக்களின்
அலாதியான வாசம்...
இரவும் பகலும்
சந்திக்கும் அந்த
அந்திசாயும் நேரத்து
பறவைகள் சங்கமிக்கும்
சலசலப்பு ஓசை!
இரவு நேரத்து
அமைதியின் மடியில்
குழந்தையை தூங்கவைக்கும்
ஒரு தாயின் தூரத்து
தாலாட்டுப் பாடல்.....
இறைவா....
இத்துணை மனிதநேயமிக்க
உறவுகளின் மேன்மயை
அதன் புனிதத்தை
அறியவைத்தாயே...
தாயே...இத்தறையில்
இப்பிறப்பு பெற்றசுகம்
இனிதானதென்று
இயம்பிட இன்று நீயில்லை!
உன் கைப்பிடித்து
உலாவிய நாட்களுக்கு
இனிதான நிகழ்வுகளை
காணிக்கையாக்குகிறேன்!

...கா.ந.கல்யாணசுந்தரம்.




புதன், செப்டம்பர் 21, 2011

களத்துமேட்டு வாழ்த்து...

களத்துமேடு குடியிருப்பில் அவள்
கதிர் அறுத்து கட்டு சுமந்து நடக்கையில்
காத தூரமானாலும் பின்னால் நடப்பதற்கு
வெல்லமென காத்திருப்பான்!
தென்னைமரத்து குயில் கூட
தோற்றுப்போகும் அவளது குரலில்!
மாந்தோப்பு மயில் கூட்டமும்
மெய்மறந்து ஆடாது நிற்கும்
அவளது இடையழகு நடையின் போது!
கருத்தொருமித்த காதலானது
இவர்களது நட்பின் மேன்மை!
நெல்லடித்து தூற்றியதுபோல்
சொல்லால் அடித்து துறத்தினார்கள்!
நூலருந்த பட்டமென அலைபாய்ந்து
செயலற்ற பிம்பமாய் அவளின் வாழ்வு!
கடலலை ஒதுக்கிய ஒற்றைக் கால் செருப்பாய்
கிராமத்து எல்லைதனில் ஒதுக்கப்பட்டான்!
எழிலார்ந்த வளமிக்க வயல்பரப்பில்
பழிசொல்லும் கூட்டம்தான் பெருகியது!
இயற்கை இயம்புவதை கேட்காத
ஈனபுத்தி மாக்கள் இனியேனும் மாறட்டும்!
விரும்பும் மனதின் வசந்த காலங்களை
அரும்பிட நீர்பாச்சும் நிலை வரட்டும்!
களத்துமேட்டு கதிரடிக்கும் காலமதில்
தூற்றிய பதர்களும் இருக்கத்தான் செய்யும்!
காளைகளின் மணியோசை இவர்களது
காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்!

.................கா.ந.கல்யாணசுந்தரம்.

ஞாயிறு, செப்டம்பர் 18, 2011

வீடுபேற்றின் வாயிலை நாடு!




















நிலத்தோடு ஸ்பரிசிக்கும் கால்கள்
நெஞ்சுக்குள் ஈரம் எப்போதும் பிரவாகமாய் !
பிராணத்தின் சூட்சுமத்தை அறிந்த இதயம்
தணலாய் எப்போதும் அடிவயிற்றின் யாகம்
கண்மணிக்குள் அடங்கிவிடும் நீலவானம்
ஐம்பூதங்களை ஒருங்கிணைத்து
சும்மா இருத்தலின் சுகம்தானைக் காண
அம்மா என்று உச்சரித்து அமர்ந்தேன்!
அமர்ந்தநிலை தியானத்தின் உச்சத்தில்
ஒரு எல்லையற்ற நிர்மலமான
அகண்டவெளியின் ஓங்காரத்தின்
ஒளியழகைக் கண்டேன்!
உருவமும் அருவமும் இல்லா
நிலை எய்தும் உன்னதம்
சும்மா இருத்தலின் சுகம்தானில்
மண்டிக் கிடக்கிறது மனமே!
அலைபாயும் எண்ணங்களை
ஒருமுகப்படுத்து!
சிலையென அசையாது
சின்முத்திரைப் பதித்து
அன்பின் வழியது உயிர்நிலையென
அறப்பொருளாய்
வீடுபேற்றின் வாயிலை நாடு!

.........கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, செப்டம்பர் 16, 2011

வெற்றிக்கான விழுப்புண்கள்

முழு மனதோடு
நம்மை
ஏற்றுக் கொள்ள
யாராவது
இருக்கிறார்களா
என ஏக்கத்துடன்
காத்திருக்கின்றன
தோல்விகள்!
காரணம்...
அவைகள்
வெற்றிக்கான
விழுப்புண்கள் என
நம்மால்
அடையாளம்
காணாததால்!

வியாழன், செப்டம்பர் 15, 2011

எங்கும் தமிழே முழங்கக் கேட்போம்





எங்கும் தமிழே முழங்கக் கேட்போம்

எதிலும் தமிழே வழங்கக் கேட்போம்

கங்கை தவழும் இமயம் கடந்து

கன்னித் தமிழைக் கொண்டு செல்வோம்

பொங்கும் தமிழின் இலக்கியச் சுவையை

பூமியின் மீது உலவ விடுவோம்

திங்கள் செல்லும் விண்வெளிப் பாதையில்

மங்காத் தமிழொளி சிந்தக் காண்போம்!


..........கா.ந.கல்யாணசுந்தரம்

















புதன், செப்டம்பர் 14, 2011

தேவை ஒரு மந்திரக்கோல்....


ஊழல், ஊழல், ஊழல்,
எங்கும் எதிலு ஊழல்....
கறுப்புப்பணம்.....இந்தியா
சுதந்திரம் வாங்கும் முன்பே
புழக்கத்தில் வழக்கமாகிப்போன
கணக்கில் வாராத பணம்.
உண்ணாவிரதம், சத்தியாகிரகம்
இவையெல்லாம் தேசத் தந்தை
மகாத்மாவினால் அடையாளம்
காணப்பட்டவை !
அரசுக்கு அறிவுறுத்தலாமே தவிர
மக்கள் வெள்ளத்தில்
வன்முறையை கட்டவிழ்க்கலாமா?
ஆம்..... இப்போது தேவை
நிச்சயம் தேவை ஒரு மந்திரக்கோல்....
ஒரு சமூக நீதி படைக்க!

திங்கள், செப்டம்பர் 12, 2011

மூதுரை



1.
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

2.
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால அந்நன்றி
என்று தருங்கோல் எனவேண்டா -நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.

3.
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர்.

4.
இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்
இன்னா அளவில் இனியவும் - இன்னாத
நாளல்லா நாள்பூந்த நன்மலரும் போலுமே
ஆளில்லா மங்கைக் கழகு.

5.
அட்டாலும் பால்சுவையில் குன்றா(து) அளவளவாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் - கெட்டாலும்
மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.

6.
அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா .

7.
உற்ற இடத்தில் உயிர்வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ - கற்றூண்
பிளந்திறுவ தல்லால் பெரும்பாரம் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான்.

8.
நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு - மேலைத்
தவத்தளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
குலத்தளவே ஆகுமாம் குணம் .

9.
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று.

10.
தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.

11.
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.

12.
பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமிபோனால் முளையாதாம் - கொண்டபேர்
ஆற்றல் உடையார்க்(கு) ஆகாது அளவு இன்றி
ஏற்ற கருமம் செயல்.

13.
மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடல்சிறியர் என்று இருக்க வேண்டா - கடல்பெரிது
மண்ணீரும் ஆகா(து) அதனருகே சிற்றூறல்
உண்ணீ ருமாகி விடும்.

14.
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் - அவைநடுவே
நீட்டோ லை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டா தவன்நன் மரம்.

15.
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி!
16.
வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி
ஆங்கதனுக்(கு) ஆகாரம் ஆனால்போல் - பாங்கறியாப்
புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின்மேல் இட்ட கலம்.

17.
அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு.

18.
அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வர் உறவல்லர் -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு.

19.
சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்(று)
அல்லாதார் கெட்டாலங் கென்னாகும்? - சீரிய
பொன்னின் குடம்உடைந்தால் பொன்னாகும் என்னாகும்
மண்ணின் குடமுடைந்தக் கால்.

20.
ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி - தோழி
நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம்
விதியின் பயனே பயன்.

21.
உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு.

22.
இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும்.

23.
எழுதியவா றேகாண இரங்கு மடநெஞ்சே
கருதியவா றாமே கருமம் - கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை.

24.
கற்பிளவோ(டு) ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவோ(டு) ஒப்பாரும் போல்வாரே - விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீர்ஒழுகு சான்றோர் சினம்.

25.
நற்றாமரைக் கயத்தில் நல்லன்னம் சேர்ந்தாற்போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்.

26.
நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும்
அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு - நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர்.

27.
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச்
சென்றஇடம் எல்லாம் சிறப்பு.

28.
கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொல்கூற்றம்
அல்லாத மாந்தர்க்(கு) அறம்கூற்றம் - மெல்லிய
வாழைக்குத் தான்ஈன்ற காய்கூற்றம் கூற்றமே
இல்லிற்(கு) இசைந்து ஒழுகாப் பெண்.

29.
சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்தும்
கந்தம் குறைபடாது ஆதலால் - தம்தம்
தனம்சிறியர் ஆயினும் தார்வேந்தர் கேட்டால்
மனம்சிறியர் ஆவரோ மற்று.

30.
மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல
உருவும் உயர்குலமும் எல்லாம் -திருமடந்தை
ஆகும்போ(து) அவளோடும் ஆகும்; அவள்பிரிந்து
போம்போ(து) அவளோடு (ம்) போம்.

31.
சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம்அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம்.

வியாழன், செப்டம்பர் 08, 2011

நினைவுகளின் ஆராதிப்பில்






















முப்பது ஆண்டுகளின்
இடைவெளிக்குப்பின்
இனிய பயணமாய்
பிறந்த ஊருக்கு!
கிராமத்து வாசம் மாறினாலும்
புராதான சின்னங்களாய்
பழைய வீடுகள்!

கோளரங்க கூரையின் கீழ்
குண்டும் குழியுமாய் தரை
பொற்கால நினைவுகளில்
புதையுண்டு போனேன்!
அன்புக்கேனியாய்
இன்ப ஊற்றை வற்றாமல்
அள்ளித் தெளித்த
அன்னை இல்லம்
அரவணைத்தது!

ஆட்டுக்கல் குழவியும்,
இன்சுவை சமையலறையும்,
தயிர்ப்பானைத் துளிகளும்,
ஆன்மீகமாய் பூஜையறை மாடங்களும்
அன்னை இல்லத்தின் அன்புச்
சுவடுகளாய் நிலைத்திருக்கிறது!

அம்மா, அப்பா, அக்கா, அண்ணன்
தம்பி, தங்கையென அப்போது
கதவின் பின்புறம் நானெழுதிய
வார்த்தைப் பிழைகளை திருத்திய
அம்மாவின் கையெழுத்தோடு
'தமிழமுதூட்டிய' அன்னையின்
சுவடுகள் அழியாது இன்றும்
நினைவுகளின் ஆராதிப்பில்!



....கா.ந.கல்யாணசுந்தரம்.

செவ்வாய், செப்டம்பர் 06, 2011

அவனுக்கு முடிந்தது...


காற்றுக்கு வேலி போட
முடியவில்லை!
கடலை சொந்தம் கொண்டாட
முடியவில்லை!
மழையினை கயிறாக கொண்டு
வானத்தை தொட முடியவில்லை!
விண்மீன்களை எண்ணிவிட
ஒருபோதும் முடியவில்லை!
வானவில்லுக்கு ஒரு மேடை
அமைத்திட முடியவில்லை!
கொட்டும் அருவிக்குள்
குடை பிடிக்க முடியவில்லை!
வெள்ளைநிற பட்டாம்பூச்சிக்கு
வண்ணம் தீட்ட முடியவில்லை!
ஆனால் அவனுக்கு முடிந்தது...
ஒரு பாலைவனமான பருவத்துக்கு
பொட்டு வைத்து பூச்சூட்டி
வசந்த காலத்தை வரவேற்க!

.........கா.ந.கல்யாணசுந்தரம்.

பேசத்தெரியாத குழந்தை


குழந்தை வீரிட்டு அழுத சப்தம்
அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை
ஓடி வந்து கேட்க வைத்தது....
'அடியே பொன்னம்மா....ஏண்டி
கொழந்தய இப்படி அடிக்குற? '
கையில் கிடைத்ததைக் கொண்டு
குழந்தையை அடித்தவள் இப்போது
வாரியணைத்தபடி சொன்னாள்....
'பின்ன என்னாக்கா....பத்து பாத்திரம்
தேச்சு வாங்கின சம்பளத்துல
புது சட்டை வாங்கி போட்டா...அத
தொலைச்சிட்டு வந்து நிக்கரா...
அடிச்சாலும் பதிலு இல்ல...'
பொனம்மாவின் குமுரலுக்கு
பேசத்தெரியாத குழந்தை
மனதோடு தேற்றிக் கொண்டது...
'என்னோட புதிய துணி

பக்கத்து வீட்டு கொழந்தையோட
மரப்பாச்சிக்கு கட்டிட்டேன்....
எவ்வளவு அழகா
இருக்கு தெரியுமா?' .


கா.ந.கல்யாணசுந்தரம்.




சிறகை விரி! வானில் எழு!!




எப்போதும் நல்லதை
நினைக்கும்போதெல்லாம்
ஒரு சமுதாயத்தின்
வளர்ச்சியாக அது இருக்கும்!
நாளை என்று
செயல்பாடுகளை தள்ளிப்போடாமல்
இன்றே இனிது
முடிப்பதால் நிச்சயமாக
வளர்ச்சியின் படிகளில்
வாழ்கிறோம் என்பதும்,
குறிக்கோளின் சிகரத்தினை
காணும் நேரம்
அருகாமையில்தான்
என்பதும் உறுதியாகிறது!
எதற்காக வாழ்ந்தோம்
என்று நினைவுகூரும்போது,
அதற்கான லட்சியத்தை
அடைந்தோமா என்பதில்தான்
இந்த மானுடத்தின்
புரிதல் பரிமளிக்கிறது!
நண்பனே....
சிறகை விரி! வானில் எழு!!
வானம் வசப்படவிட்டாலும்
பரவாயில்லை...
இந்த பூமிப்பந்தின்
விளிம்புகளையாவது
தரிசனம் செய்!

......கா.ந.கல்யாணசுந்தரம்.






இனி அவள் பாவை அல்ல...





பனி ஆடைக்குள் பவித்திரமாய்
அந்த மார்கழி காலைப்பொழுது!
விடியல் பறவை எழும்முன்
அவள் எழுந்துவிட்டாளோ?
காரணம் பனிபெய்த ஈரமண் வீதியில்,
தோழிகளுடன் அவளது பாத முத்திரைகளின்
அடையாளம் நன்றாகவே தெரிகிறது!
பாவை நோன்பில் ஆண்டுதோறும்
பயணித்திடும் அவளது எதிர்பார்ப்புகள்
வெறும் காத்திருப்புகளாகவே இருக்கின்றன!
இல்லை... இல்லை... இந்த ஆண்டு மட்டும்
அவளுக்கான இந்திரவனம்
என்னுள் பூத்திருக்கிறது....ஆம்
இனி அவள் பாவை அல்ல...
திருப்பாவை!

கா. ந.கல்யாணசுந்தரம்.

சனி, செப்டம்பர் 03, 2011

மயிலிறகு கொடுத்து

உன்வீட்டு பரணையில்
ஒன்பதாவது வகுப்பு
கட்டுரை நோட்டுப் புத்தகத்தை
நன்றாகப் பார்த்தாயா?
எனக்கு உன் மேல் ஒரு
இனம்புரியாத நேசம் வந்தபோது
மயிலிறகு கொடுத்து
அதற்காக உன்னிடம்....
பென்சில் கடனாக வாங்கியது
இன்றும் இருக்கிறது!
கட்டுரையை படிக்கிறாயோ
இல்லையோ,
புத்தகத்தை புறட்டியாவது பார்
அந்த நாள் நினைவுக்காக!

........கா.ந.கல்யாணசுந்தரம்.