கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

வெள்ளி, பிப்ரவரி 08, 2013

யாருக்கும் தெரியவில்லை

மாவட்ட கல்வி அதிகாரி
வருகையால் பரபரப்பானது
உயர்நிலைப்பள்ளி....
சீருடை மாணவர்களின்
அணிவகுப்பில் மகிழ்வெய்திய
அதிகாரி ......
ஒரு மூடிவெயத்த அறையைக்
காண்பித்து .....
என்னவென்று வினவ ...
முப்பது ஆண்டுகளாய்
பழுதான மர பெஞ்சுகள்
அடுக்கிய அறை
என பதில் வந்தது!
அறையைத் திறந்து ...
பத்தாம் வகுப்பு
பென்ச்சுகளைத் தேடினார்
கல்வி அதிகாரி!
உடைந்திருந்த அந்த
மர இருக்கையில் அமர்ந்தார் !
யாருக்கும் தெரியவில்லை
அவர் இந்த இருக்கையில்
அமர்ந்து இந்த பள்ளியில்
படித்தவர் என்பதை!

...கா.ந.கல்யாணசுந்தரம்

கடிகார முள்

அம்மா அலறியபடி தேடினாள்...
" எம் புள்ளைய காலைல இருந்து
காணலையே " என புலம்பியவாறு !
" வொம் பையன் மூனாவதூட்டு
புள்ள பார்வதியோட கூட்டாளி
போட்டுகினு கொல்லப்புறம் போனது"
இது பக்கத்துவீட்டு பொன்னம்மாளின்
அங்கலாய்ப்பு!
ஒரு பனைவோலை கடிகாரம்
செய்து பார்வதிக்கு கட்டிவிட்ட
நட்பின் கரங்கள் அங்கு .....
தேடிக்கொண்டிருந்தது
வேலமரத்து முட்களுக்காக....
சரியான கடிகார முள்
கிடைத்துவிட்ட பெருமிதத்தில்
அந்த எட்டு வயது சிறுவன்
தோழியுடன் நடந்தான் ......
அவன் வீடு இருந்த அந்த 
கிராமத்து தெரு முனைக்கு...
காலத்தை வென்ற
ஒரு கர்மவீரனாக !

.........கா.ந.கல்யாணசுந்தரம்.

புதன், ஜனவரி 30, 2013

நூலறுந்த பட்டங்கள்!








காகிதம், நூல்கண்டு, தென்னங்குச்சி
காற்றுக்குள் பிரவேசிக்க முயற்சி
சோற்றுப் பானையை திறந்து
சுடு சோற்றைப் பிசைந்து
பசையாக்கினோம்.....
அழகிய பட்டம் உருவாக்கினோம்!
வெட்டவெளி மைதானத்தில்
கூட்டமாய் சென்று காத்தாடி பட்டம்
கலர் கலராய் பறக்கவிட்டபடி
விண்ணையே அண்ணாந்து
விழிபிதுங்க பார்வையிட்டோம்....
பட்டங்கள் உயர உயர பறந்தபடி
எங்கள் மனங்களில் குதூகலம் !
சில காத்தாடி பட்டங்களில்
தந்திகளும் அனுப்பப்பட்டன.....!
மாஞ்சா தடவிய நூல்கண்டுகள்
அஞ்சாமல் பதம்பார்த்தன
உயரும் பட்டங்களின் எண்ணிக்கையை !
பசிவேளை வந்தாலும்
பட்டங்களை இறக்க மனமின்றி
மரத்தில் கட்டிவைத்து அழகு பார்த்தோம்!
எப்போதாவது மின்கம்பிகளில்
சிக்கித்தவிப்பதுண்டு
நூலறுந்த பட்டங்கள்!
இப்போதெல்லாம் வேலை கொடுக்காமலே
பெட்டிக்குள் சிக்குண்டு
சிறைபட்டுப்போகின்றன......
பல்கலைப் பட்டங்களும் !

..........கா.ந.கல்யாணசுந்தரம்.


திங்கள், ஜனவரி 21, 2013

பத்தாம் பசலிக்காரன்

ஊருக்கு செல்லும்
ஒற்றையடிப் பாதைகூட
பாதி காணாமல் போனது!
நல்ல தண்ணீர் குளம் முழுக்க
சாக்கடை நீரோடு
குட்டையாய் காட்சி தர
களத்துமேட்டு குடியிருப்புகள்
அடுக்குமாடியாய் இருந்தது!
கிராமம் நகரமாய்
மாறியிருந்தது!
கிழக்குபுறத்து அம்மன்கோயில்
புது கோபுரத்துடன்
மிளிர்ந்தது!
ஆனால் என்மனம் மட்டும்
ஏங்கித்தவித்து........ இளைப்பாறியது
ஒரு பெரிய ஆலமரத்தடியில்!
30 ஆண்டுகள் இடைவெளியில்
நாங்கள் நட்ட ஆலமரம்
தழைத்திருந்தது அப்படியே !
மகிழ்வில் உரக்க கத்தினேன்....
" மரம் இல்லா வாழ்வு
மரண வாழ்வு " ..என்றவாறு.
அங்கே சென்றவர்களின் பார்வை
என் மீது........
இவன் ஒரு பத்தாம் பசலிக்காரன்
என சொல்லியவாறு.

....கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, ஜனவரி 11, 2013

மனிதநேயப் பொங்கலிடு!









தை மகளின் வரவு - நல்ல
தமிழிசையின் உறவு!
புத்தரிசி பொங்கலிட்டு
புத்தாடை அணிந்து
மண்ணின் மணம் கமழ
பாடுகின்ற நாளிது!
உழைப்போரின் உளம் மகிழ
உன்னத இயற்கையின்
இறையருள் நாளிது!
பொங்கலிடு பொங்கலிடு !
புதிய வாழ்வின் பூமணக்கும்
பொங்கலிடு!
மனிதநேயமுடன் பொங்கட்டும்!
தமிழர்தம் வாழ்வு உலகளவில்
தழைக்கட்டும்!
பொங்கலிடு பொங்கலிடு !
மனிதநேயப் பொங்கலிடு!
தமிழ்ப் புத்தாண்டின் வரவு கண்டு
தமிழ் கூறும் நல்லுலகு செழிக்க
பொங்கலிடு!

......கா.ந.கல்யாணசுந்தரம்.

செவ்வாய், ஜனவரி 08, 2013

நம்பிக்கையெனும் நங்கூரம் !







*இருகரம் இணைந்த மணவாழ்வில்


புதைந்துகிடக்கிறது ....

நம்பிக்கையெனும் நங்கூரம் !



*கைகளுக்குள் கனிவாய்

மலர்ந்திடுதே....

காதல் பூக்கள் !



* கைகுலுக்காமலே

நடந்து முடிந்தது...

சாதி ஒழிப்பு மாநாடு!



* கண்ணாமூச்சி வேண்டாம்

உன் கைகளை நீட்டு...கண்ணே

மருதாணி வைக்க வேண்டும் !



* கடவுளைத் தொழும் கைகள்

காத்திருக்கவேண்டும் எப்போதும்....

மற்றவர் துயர் துடைக்க !



......கா.ந.கல்யாணசுந்தரம்.

.

செவ்வாய், ஜனவரி 01, 2013

சீர்மிகு நல்லுலகு காண

சிந்தனையை முன்னிறுத்தி
சீர்மிகு நல்லுலகு காண
செம்மாந்து வாழ்த்து சொல்வோம்
2013 - ம் ஆண்டு தழைக்கட்டும்!
நல்லுள்ளங்கள்
மகிழட்டும் எந்நாளும் !
வன்மம் வக்கிரம் தொலைத்து
வான்புகழ் வள்ளுவன் வழங்கிட்ட
குறள்வழி வாழ்வோம்
வையகத்தே இன்பமுற்று !

....கா.ந.கல்யாணசுந்தரம்.

திங்கள், டிசம்பர் 31, 2012

புத்தாண்டு வாழ்த்துக்கள் !!










0123 எண்கள் இடம்மாறி 2013 ஆனதோ?
பிறக்கும்  2013 - எப்போதும்
சிறக்கும் என்பதில் ஐயமில்லை !
பறக்கும் 2012 இன்றோடு ......
மறவா நிகழ்வுகள் நெஞ்சோடு !
என்றும் சிறக்கும் 2013 -  ல்
இமயம் வியக்கும் சாதனைகள்
இலங்கும் வாழ்வில் வன்மமின்றி !
என புத்தாண்டை வரவேற்று
உங்களனைவரையும் வாழ்த்துகிறேன்!
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

.......அன்புடன் கா.ந.கல்யாணசுந்தரம்.

புதன், டிசம்பர் 19, 2012

இல்லங்களில் மலர்ந்திருந்தது

 
 
 
 
 
 
 
மழலை மொழியறியாது
மகிழ்வோடு பழகின...
பொம்மைகள் !

மழலைகளின் கையசைப்பில்
மண்டிக்கிடந்தது....
மனிதநேயம்!

இறைவனின் பங்களிப்பாய்
இல்லங்களில் மலர்ந்திருந்தது
மழலை மொழி !

நடைவண்டிக்கு
தெரிந்திருந்தது....
குழந்தை வளர்ப்பு!

ஒரு மரப்பாச்சியின்
முதல் கனவு...
மழலைக்கு தாயானது!


........கா.ந.கல்யாணசுந்தரம்.

புதன், டிசம்பர் 12, 2012

12.12.12 ஹைக்கூ கவிதைகள்







*இலையுதிர் காலத்தின்
திறந்த புத்தகமாயின....
தளிர்களின் வரவு!

*மொட்டவிழும் மலருக்கு
தெரியாத உறவு...
வேர்களின் பரிவு !

*புல் நுனியில்
ஒரு பிரபஞ்சம்
பனித்துளி !

*தென்றலின் தழுவலில்
நாணிற்று ....
ஆற்றங்கரை நாணல் !

*மாலை நேரத்து
எழிலோவியங்கள்....
கூடு திரும்பும் பறவைகள் !

*மீனவனின் அவலத்தை
சுமந்து வந்தது......
கடலோர காற்று !

*மலை முகட்டில்
மேகப் பெண்களின் ஆடிப் பொங்கல் ....
அருவி!

*வெள்ளி அலைகளின்
தோழமையுடன் .....
துள்ளியெழும் மீன்கள் !

*பரிசல் பெண்ணின்
புரிதல் வாழ்க்கையில் ....
புலம் பெயரா படகுத்துடுப்புகள் !

*தேன் தந்த மலருக்கு
வண்டின் பரிசளிப்பு....
மகரந்த சேர்க்கை !

*கொன்றை மலர்களின்
சிவப்பு கம்பள வரவேற்பு....
கிராமத்தின் சாலைகளில் !

*விட்டுக் கொடுக்கும்
பண்பை வளர்த்தன....
ஒற்றையடிப் பாதைகள் !

...........கா.ந.கல்யாணசுந்தரம்.


 

செவ்வாய், டிசம்பர் 11, 2012

செவ்வாய் கிரஹத்தில்

 
 
 
 
 
 
 
பொழுது புலர்வதற்குள்
பெரு ஒளி வரவழைத்து
அலுவலகம் சென்றார்கள்!
பிள்ளைகளுக்கு ஆக்சிஜன் குப்பிகளை
முதுகுக்குபின்னால் கட்டிவைத்து
பள்ளிக்கூடம் அனுப்பினார்கள்
புத்தகமில்லா குழந்தைகள்
ஆக்சிஜனை சுமந்தவாறே
வேற்று கிரக மனிதர்களின்
ராக்கெட்டுகளில் பறந்தவாறே
டாடா காண்பித்து கிளம்பினர் !
பெட்ரோல் இல்லா கார்கள்
நகரில் வலம் வந்தன!
மனிதநேயமில்ல வாழ்க்கையில்
வயது முதிர்ந்தோர்
செவ்வாய் கிரஹத்தில்
காப்பகங்களில் வாழ்ந்தனர்!
அப்போதும் அவர்கள்
ஒரு சொல்லை
ஆன்மதிருப்தியாய்
உச்சரித்தவரே இருந்தனர்.....
"எல்லாம் தலைஎழுத்து" !

....கா.ந.கல்யாணசுந்தரம்.

புதன், டிசம்பர் 05, 2012

சிக்குண்டு தவிக்கிறது....







*நாணல் இசைத்த பாடல்
தெரிந்திருக்கிறது...
நதிக்கரைக்கு மட்டும் !

*மூங்கில் வேர்களை
மறக்கமுடியுமா?
புல்லாங்குழலின் நினைவுகள் !

*ஆற்றின் கரங்களை
முத்தமிட நினைக்கின்றன ...
அலை வருடிய கூழாங்கற்கள்!

*தள்ளினாலும் நீர் விலகாது
எனைத் தழுவி பயணிக்கிறது ....
பேசும் படகுத் துடுப்புகள்!

*வீசாத வலைக்குள்
சிக்குண்டு தவிக்கிறது....
ஒரு மீனவனின் பசி !

.............கா.ந.கல்யாணசுந்தரம்.

ஞாயிறு, டிசம்பர் 02, 2012

ஒரு கனத்த இதயத்தை










கண்களை மூடினேன்
உலகம் இருண்டது
இதயக் கோட்டையின்
கதவுகள் மட்டும்
எண்ணங்களின் திரவு கோலால்
திறந்துகொண்டது....
மூளையின் செதில்களில் சில
கரங்களாய் வளர்ந்து
தூரிகை ஒன்றினை
தேடிப் பிடித்தது....
மௌன சலவைக்காரன்
தீச்செயல் துணிகளைத் துவைத்து
வெண்மையாக்கினான் .
வண்ணமிழந்த ஆடைகளில்
பல வண்ணத்துப்பூச்சிகள்
வந்தமர்ந்தன.....
சும்மா இருந்த ஊனுடல்
எனது ஆன்மாவிடம் ....
'அந்த தூரிகையால்
வாசமிகு மலர்களை உருவாக்கி
வண்ணத்துப் பூச்சிகளுக்கு
விருந்தளி' ........என்று கேட்டது .
தூரிகைகள் மலர்களை
படைக்கும்முன்
கண்கள் திறந்துகொண்டன .....
சும்மா தியானம் நிலைபெறாமல்
சுமந்து சென்றது
ஒரு கனத்த இதயத்தை !

..........................கா.ந.கல்யாணசுந்தரம் 

திங்கள், நவம்பர் 26, 2012

காற்றின் விசாரிப்பு !











*துள்ளும் மீன்களுக்கு
தெரியவில்லை ...
வலைக்குள் சிறையானது!

*பூட்டிய வீட்டுக்குள்
புகுந்து வெளியேறியது...
காற்றின் விசாரிப்பு !

*ஒரு கைதியின் இதயத்தில்
ஏற்கனவே கைதானாள்
கள்வனின் காதலி !

*ரேகைகளை காண்பித்து
நல்லநேரம் தேடுவதில்
தொலைந்துபோனது எதிர்காலம்!

*படிப்பினைகளின் செயலாக்கமே
கிழித்தெறிகிறது....
கனவுக்கும் நினைவுக்குமான தூரத்தை!

*கடைசியாக நடந்தாலும்
இலக்கின் விளிம்புகளைத் தொடு...
இது ஊர்வலத்தின் உன்னதம்!

......................கா.ந.கல்யாணசுந்தரம்

ஞாயிறு, நவம்பர் 25, 2012

கிராமத்து களத்துமேடு!








ஒரு புதுக்கவிதையாய்
காலைப்பனி மேய்கின்ற...
கிராமத்து களத்துமேடு!

ஒற்றைக்காலில் நின்றபடி
வயிற்றுப் பசிக்கான தவம்
ஆற்றுப்படுகை கொக்குகள் !

இளஞ்சூரியனை
பங்குபோட்டு குதூகலிக்கும்
தென்னை ஓலைகள் !

எங்களுக்கேது விடுமுறை
வானில் எழும்....
இரைதேடும் பறவைகள்!

அன்றலர்ந்த மலர்களை
விட்டு வையுங்கள்....
தேனருந்தும் வண்டினம்!

..........கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், நவம்பர் 22, 2012

விரல்கள் தேடுகின்றன...





மரம் வெட்ட கோடரியை எடுத்தாலும்
கரங்களின் விரல்கள் தேடுகின்றன...
விருட்சத்தின் விதைகளை !

........கா.ந கல்யாணசுந்தரம்

 

திங்கள், நவம்பர் 19, 2012

உள்ளத்தில் நல்ல உள்ளம்




உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா... கர்ணா
வருவதை எதிகொள்ளடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா... கர்ணா
வருவதை எதிகொள்ளடா

தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
ஊர்ப்பழி ஏற்றாயடா
நானும் உன் பழி கொண்டேனடா
நானும் உன் பழி கொண்டேனடா
மன்னவர் பணியேற்கும்
கண்ணனும் பணி செய்த
உன்னடி பணிவேனடா -கர்ணா
மன்னித்து அருள்வாயடா

செஞ்சோற்று கடன் தீர்த்த
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா - கர்ணா
வஞ்சகன் கண்ணனடா
வஞ்சகன் கண்ணனடா

- கண்ணதாசன்

வெள்ளி, நவம்பர் 16, 2012

'அனுபவம் என்பதே நான்தான்'







 
 
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!
 
......................கவிஞர் கண்ணதாசன் 

திங்கள், நவம்பர் 12, 2012

தீப ஒளித் திருநாளாம் தீபாவளி நன்னாளில்





தீப ஒளித் திருநாளாம் தீபாவளி நன்னாளில்
இல்லமதில் மகிழ்ச்சி ஒளி திசையெங்கும் வீசட்டும்!
மனிதநேய அறுசுவை உணவுப் பரிமாற்றம்
வீதியெங்கும் விளங்கட்டும் !
இருப்போர் இல்லாதோர்க்கு
வழங்கிடும் நாளாகட்டும்!
இல்லாதோர் இனியிங்கு வளமுடனே
வாழும் நிலை வரட்டும்!
திருநாட்கள் பெருநாளாய்
அரும்பி நித்தம் மனிதநேயச் சோலையில்
மணம் கமழும் மலர்களாய்
பூத்துக் குலுங்கட்டும் !




........கா .ந .கல்யாணசுந்தரம்.

வியாழன், நவம்பர் 08, 2012

கண்கள் தேடுகின்றன.....







வெறுமனே புத்தகத்தின் பக்கங்களை
புரட்டிக் கொண்டிருந்தேன் !
வெளிச்ச தேவதையின் கண்கள்
கட்டப்பட்டு தனி அறையில்
தள்ளப்பட்டு தாளிடப்பட்டிருந்தது !
ஆசிரியர் சொன்ன பாடங்களின்
வரிகளை நிலவொளியில்
கண்கள் தேடுகின்றன.....
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
நுனிபுல்லை மேய்ந்த மாடென
சோம்பல் முறித்து தூங்கப் போனேன் !
ஏற்கனவே மின்சார பொத்தான்களை
இயக்கி வைத்ததால் பளீர் என
மின்னொளி நீண்ட நேர இடைவெளிக்குப்பின்
பாய்ந்து என் விழிப் படலத்தை தாக்கியது...
வெளிச்ச தேவதையின் கண்கள்
இப்போது திறக்கப்பட்டன.....
ஆனால் தூக்கம் ததும்பிய
எனது விழிகள் மட்டும் திறக்கவில்லை!
கனவில் ஆசிரியரின் பிரம்படி
துல்லியமாய் நினைவில் நின்றது
விழித்தபின் அம்மாவிடம் கேட்டேன் ...
விளக்கெரிக்க மண்ணெண்ணெய்யாவது
கிடைக்குமா?

........கா.ந கல்யாணசுந்தரம்