கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

ஞாயிறு, ஏப்ரல் 14, 2013

சித்திரை மலர்கள்









சித்திரை மலர்கள் மலரட்டுமே
சிந்தனைத் துளிகள் அரும்பட்டுமே
இத்தரை மகிழும் நன்னாளாம்
முத்திரைப் பதித்து வளரட்டுமே

விஜய ஆண்டின் வரவிங்கு
விளைக்கும் ஆயிரம் நலமிங்கு
புதுமைகள் பூத்துக் குலுங்கிடுமே
புன்னகை நம்மில் இலங்கிடுமே

மழலை மொழியிங்கு தமிழென்று
மனதால்  கொள்கை கொண்டிடுவோம் 
தமிழை சொல்லும் தமிழன் இங்கே
தலைநிமிர்ந்து வாழ்வது திண்ணியமே

.............கா.ந.கல்யாணசுந்தரம்


 

செவ்வாய், ஏப்ரல் 02, 2013

அமிழ்தான தமிழ் இன்று வேண்டும்


அமிழ்தான தமிழ் இன்று வேண்டும் - தினம்
அகம் குளிர நான் பாட வேண்டும்
இனிதான சொல் காண வேண்டும் - நம்
இல்லத்தில் கலந்துரையாட வேண்டும்

                                                            (அமிழ்தான )

மம்மி என்றழைக்காது மழலை - இனி
அம்மா என்றிசைக்கட்டும் குழலை
மொழியோடு உறவாடும் நெஞ்சம் - நல்
வழியோடு வளமாக வாழும்

                                                           (அமிழ்தான )

சான்றோர்கள் வளர்த்திட்ட செம்மொழி - வளர்
சான்றாக உடன்வாழும் அருள்மொழி
தாய்மொழி பகல்வதில் தாழ்வில்லை - இளைய
தலைமுறையே இனி பேசிடு தவறில்லை


                                                              (அமிழ்தான )

                                               ..................கா..கல்யாணசுந்தரம். 

சனி, மார்ச் 09, 2013

பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகிறோம்

 
 


மொட்டவிழ்ந்த மலர்போல மழலை முகம்
பொட்டிட்டு பூச்சூடி பார்த்தாலே போதும்
கட்டவிழ்ந்த தாழை மலர் போல அழைப்பாள்
கொட்டுகின்ற அருவியென துள்ளி எழுவாள்
குழல்கூட இசைக்காமல் சற்றே நிற்கும்
மழலை இவள் வாய் மொழியில் தோற்கும்
வண்ணத்து பூச்சியென சிறகடித்து வருவாள்
காண்போரின் கையசைப்பில் கண்சிமிட்டி சிரிப்பாள்
முகமறியா போதிலும் மடிமீது வந்தமர்வாள்
கொடிமுல்லைப் பூவாய் மனம் கவர்ந்திழுப்பாள்
வினோத்குமார் கலைவாணி தம்பதியர
பெற்றெடுத்த வாசமிகு பெரும் செல்வம்
எங்களின் ஆசைமிகு பெயர்த்தி பிரணீ த்தா
மழலையிவள் நேசமிகு பிறந்தனாளின்று
உவகையுடன் பாசமிகு மனதுடனே
பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகிறோம்
தாத்தா பாட்டி !
கா .கல்யாணசுந்தரம்
அருள்செல்வி கல்யாணசுந்தரம்
செய்யாறு
09.03.2013



Reply
Forward


சனி, மார்ச் 02, 2013

அடையாளங்கள்





முயல்களைவிட ஆமைகளுக்கு
தெரிந்திருக்கிறது 
பாதையின் அடையாளங்கள்                    

........... கா.ந. கல்யாணசுந்தரம்    

                                                                                                                                                                     

திங்கள், பிப்ரவரி 25, 2013

குறையாத பொக்கிஷங்களாய் !










பனி படர்ந்த புல்வெளி
வெண்மேகம் அணைத்த
மலைமுகடுகள்
நீர் நிறைந்த பரந்த கிராமத்து எரி
வெண்ணிற கொக்குகள்
கூட்டமாய் பறந்து அமரும்
நாற்றங்கால் வயல்கள்
ஒற்றையடிப்பாதையில்
கால்நடைகளின் அணிவகுப்பு
தென்றல் தாலாட்டும்
தென்னை மரங்கள்
மாந்தோப்புக்குள் இசைக்கும்
இளம் குயில்கள்
அருவி கொட்டுதலின் 
சாரல் துளிகள் 
மாலை நேரத்து ஏரிக்கரையில் 
நிழலோவியமாய் 
வீடுதிரும்பும் தொழிலாளிகள் 
இன்னும் எத்தனை எத்தனையோ 
நெஞ்சில் இன்னும் 
வரைபடமாய் எனது ....
கிராமத்து வாழ்க்கையின் 
கையிருப்புகள் !
பிறரிடம் பகிர்ந்தும் 
குறையாத பொக்கிஷங்களாய் !
......கா.ந.கல்யாணசுந்தரம் 

புதன், பிப்ரவரி 20, 2013

பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள்










பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள்

தமிழ்க் காதல்

கமலம் அடுக்கிய செவ்விதழால் - மலர்க்
காட்டினில் வண்டின் இசைவளத்தால்
கமழ்தரு தென்றல் சிலிர் சிலிர்ப்பால் - கருங்
கண்மலரால் முல்லை வெண்ணகைப்பால் - மயில்
அமையும் அன்னங்களின் மென்னடையால் - மயில்
ஆட்டத்தினால் தளிர் ஊட்டத்தினால்
சமையும் ஒருத்தி - அப் பூஞ்சோலை எனைத்
தன் வசம் ஆக்கிவிட்டாள் ஒருநாள்.

சோலை அணங்கொடு திண்ணையிலே - நான்
தோளினை ஊன்றி இருக்கையிலே
சேலை நிகர்த்த விழியுடையாள் - என்றன்
செந்தமிழ்ப் பத்தினி வந்துவிட்டாள்!
சோலை யெலாம் ஒளி வானமெலாம் - நல்ல
தோகையர் கூட்டமெலாம் அளிக்கும்
கோல இன்பத்தை யென் உள்ளத்திலே - வந்து
கொட்டி விட்டாள் எனைத் தொட்டிழுத்தாள்!

மென்காற்றும் வன்காற்றும்

அண்டங்கள் கோடி கோடி அனைத்தையும் தன்ன கத்தே
கொண்ட ஓர் பெரும் புறத்தில் கூத்திடு கின்ற காற்றே!
திண்குன்றைத் தூள் தூளாகச் செய்யினும் செய்வாய் நீஓர்
துண்துளி அனிச்சம் பூவும் நோகாது நுழைந்தும் செல்வாய்! 14

தென்னாடுபெற்ற செல்வம்

உன்னிடம் அமைந் திருக்கும் உண்மையின் விரிவில், மக்கள்
சின்னதோர் பகுதி யேனும் தெரிந்தார்கள் இல்லை; யேனும்
தென்னாடு பெற்ற செல்வத் தென்றலே உன்இன்பத்தைத்
தென்னாட்டுக் கல்லால் வேறே எந்நாட்டில் தெரியச் செய்தாய்? 15

தென்றலின் நலம்
குளிர்நறுஞ் சந்தனஞ் சார் பொதிகையில் குளிர்ந்தும், ஆங்கே
ஒளிர்நறு மலரின் ஊடே மணத்தினை உண்டும், வண்டின்
கிளர்நறும் பண்ணில் நல்ல கேள்வியை அடைந்தும் நாளும்,
வளர்கின்றாய் தென்ற லேஉன் வரவினை வாழ்த்தா ருண்டா? 16

அசைவின் பயன்

உன்அரும் உருவம் காணேன் ஆயினும் உன்றன் ஒவ்வோர்
சின்னநல் அசைவும் என்னைச் சிலிர்த்திடச் செய்யும்! பெற்ற
அன்னையைக் கண்டோ ர், அன்னை அன்பினைக் கண்ணிற் காணார்,
என்னினும் உயிர்க் கூட்டத்தை இணைத்திடல் அன்பே அன்றோ? 17

தென்றலின் குறும்பு

உலைத்தீயை ஊது கின்றாய்; உலைத்தீயில் உருகும் கொல்லன்
மலைத்தோளில் உனது தோளும், மார்பினில் உன்பூ மார்பும்
சலிக்காது தழுவத் தந்து குளிர்ச்சியைத் தருவாய்! பெண்கள்
விலக்காத உடையை நீ போய் விலக்கினும், விலக்கார் உன்னை! 18

குழந்தையும் தென்றலும்

இழந்திட்டால் உயிர்வா ழாத என்னாசை மலர்மு கத்துக்
குழந்தையின் நெற்றி மீது குழலினை அசைப்பாய்; அன்பின்
கொழுந்தென்று நினைத்துக், கண்ணிற் குளிர்செய்து, மேனியெங்கும்
வழிந்தோடிக், கிலு கிலுப்பை தன்னையும் அசைப்பாய் வாழி! 19

தென்றல் இன்பம்

இருந்தஓர் மணமும், மிக்க இனியதோர் குளிரும், கொண்டு
விருந்தாய்நீ அடையுந் தோறும் கோடையின் வெப்பத் திற்கு
மருந்தாகி அயர்வி னுக்கு மாற்றாகிப் பின்னர், வானிற்
பருந்தாகி, இளங்கி ளைமேற் பறந்தோடிப் பாடு கின்றாய்! 20


தென்றலின் பயன்

எழுதிக்கொண் டிருந்தேன்; அங்கே எழுதிய தாளும் கண்டாய்;
வழியோடு வந்த நீயோ வழக்கம்போல் இன்பம் தந்தாய்;
' எழுதிய தாளை நீ ஏன் கிளப்பினை' என்று கேட்டேன்,
புழுதியைத் துடைத்தேன் என்றாய்; மீண்டும் நீ புணர்ந்தாய் என்னை! 21

தென்றற்கு நன்றி

கழுகொடு, நெடிய தென்னை, கமழ்கின்ற சந்த னங்கள்,
சமைகின்ற பொதிகை அன்னை, உனைத்தந்தாள் தமிழைத் தந்தாள்
தமிழ் எனக்கு அகத்தும், தக்கதென்றல்நீ புறத்தும், இன்பம்
அமைவுறச் செய்வ தைநான் கனவிலும் மறவேன் அன்றோ? 22

தென்றலின் விளையாட்டு

களச்சிறுதும்பி பெற்ற கண்ணாடிச் சிறகில் மின்னித்,
துளிச்சிறு மலர் இதழ்மேல் கூத்தாடித் துளிதேன் சிந்தி,
வெளிச்சிறு பிள்ளை யாடும் பந்தோடு விளையாடிப், போய்க்
கிளிச்சிற காடை பற்றிக் கிழிக்கின்றாய் தென்ற லேநீ! 23
 
 
.........பாவேந்தர் பாரதிதாசன் .


வெள்ளி, பிப்ரவரி 08, 2013

யாருக்கும் தெரியவில்லை

மாவட்ட கல்வி அதிகாரி
வருகையால் பரபரப்பானது
உயர்நிலைப்பள்ளி....
சீருடை மாணவர்களின்
அணிவகுப்பில் மகிழ்வெய்திய
அதிகாரி ......
ஒரு மூடிவெயத்த அறையைக்
காண்பித்து .....
என்னவென்று வினவ ...
முப்பது ஆண்டுகளாய்
பழுதான மர பெஞ்சுகள்
அடுக்கிய அறை
என பதில் வந்தது!
அறையைத் திறந்து ...
பத்தாம் வகுப்பு
பென்ச்சுகளைத் தேடினார்
கல்வி அதிகாரி!
உடைந்திருந்த அந்த
மர இருக்கையில் அமர்ந்தார் !
யாருக்கும் தெரியவில்லை
அவர் இந்த இருக்கையில்
அமர்ந்து இந்த பள்ளியில்
படித்தவர் என்பதை!

...கா.ந.கல்யாணசுந்தரம்

கடிகார முள்

அம்மா அலறியபடி தேடினாள்...
" எம் புள்ளைய காலைல இருந்து
காணலையே " என புலம்பியவாறு !
" வொம் பையன் மூனாவதூட்டு
புள்ள பார்வதியோட கூட்டாளி
போட்டுகினு கொல்லப்புறம் போனது"
இது பக்கத்துவீட்டு பொன்னம்மாளின்
அங்கலாய்ப்பு!
ஒரு பனைவோலை கடிகாரம்
செய்து பார்வதிக்கு கட்டிவிட்ட
நட்பின் கரங்கள் அங்கு .....
தேடிக்கொண்டிருந்தது
வேலமரத்து முட்களுக்காக....
சரியான கடிகார முள்
கிடைத்துவிட்ட பெருமிதத்தில்
அந்த எட்டு வயது சிறுவன்
தோழியுடன் நடந்தான் ......
அவன் வீடு இருந்த அந்த 
கிராமத்து தெரு முனைக்கு...
காலத்தை வென்ற
ஒரு கர்மவீரனாக !

.........கா.ந.கல்யாணசுந்தரம்.

புதன், ஜனவரி 30, 2013

நூலறுந்த பட்டங்கள்!








காகிதம், நூல்கண்டு, தென்னங்குச்சி
காற்றுக்குள் பிரவேசிக்க முயற்சி
சோற்றுப் பானையை திறந்து
சுடு சோற்றைப் பிசைந்து
பசையாக்கினோம்.....
அழகிய பட்டம் உருவாக்கினோம்!
வெட்டவெளி மைதானத்தில்
கூட்டமாய் சென்று காத்தாடி பட்டம்
கலர் கலராய் பறக்கவிட்டபடி
விண்ணையே அண்ணாந்து
விழிபிதுங்க பார்வையிட்டோம்....
பட்டங்கள் உயர உயர பறந்தபடி
எங்கள் மனங்களில் குதூகலம் !
சில காத்தாடி பட்டங்களில்
தந்திகளும் அனுப்பப்பட்டன.....!
மாஞ்சா தடவிய நூல்கண்டுகள்
அஞ்சாமல் பதம்பார்த்தன
உயரும் பட்டங்களின் எண்ணிக்கையை !
பசிவேளை வந்தாலும்
பட்டங்களை இறக்க மனமின்றி
மரத்தில் கட்டிவைத்து அழகு பார்த்தோம்!
எப்போதாவது மின்கம்பிகளில்
சிக்கித்தவிப்பதுண்டு
நூலறுந்த பட்டங்கள்!
இப்போதெல்லாம் வேலை கொடுக்காமலே
பெட்டிக்குள் சிக்குண்டு
சிறைபட்டுப்போகின்றன......
பல்கலைப் பட்டங்களும் !

..........கா.ந.கல்யாணசுந்தரம்.


திங்கள், ஜனவரி 21, 2013

பத்தாம் பசலிக்காரன்

ஊருக்கு செல்லும்
ஒற்றையடிப் பாதைகூட
பாதி காணாமல் போனது!
நல்ல தண்ணீர் குளம் முழுக்க
சாக்கடை நீரோடு
குட்டையாய் காட்சி தர
களத்துமேட்டு குடியிருப்புகள்
அடுக்குமாடியாய் இருந்தது!
கிராமம் நகரமாய்
மாறியிருந்தது!
கிழக்குபுறத்து அம்மன்கோயில்
புது கோபுரத்துடன்
மிளிர்ந்தது!
ஆனால் என்மனம் மட்டும்
ஏங்கித்தவித்து........ இளைப்பாறியது
ஒரு பெரிய ஆலமரத்தடியில்!
30 ஆண்டுகள் இடைவெளியில்
நாங்கள் நட்ட ஆலமரம்
தழைத்திருந்தது அப்படியே !
மகிழ்வில் உரக்க கத்தினேன்....
" மரம் இல்லா வாழ்வு
மரண வாழ்வு " ..என்றவாறு.
அங்கே சென்றவர்களின் பார்வை
என் மீது........
இவன் ஒரு பத்தாம் பசலிக்காரன்
என சொல்லியவாறு.

....கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, ஜனவரி 11, 2013

மனிதநேயப் பொங்கலிடு!









தை மகளின் வரவு - நல்ல
தமிழிசையின் உறவு!
புத்தரிசி பொங்கலிட்டு
புத்தாடை அணிந்து
மண்ணின் மணம் கமழ
பாடுகின்ற நாளிது!
உழைப்போரின் உளம் மகிழ
உன்னத இயற்கையின்
இறையருள் நாளிது!
பொங்கலிடு பொங்கலிடு !
புதிய வாழ்வின் பூமணக்கும்
பொங்கலிடு!
மனிதநேயமுடன் பொங்கட்டும்!
தமிழர்தம் வாழ்வு உலகளவில்
தழைக்கட்டும்!
பொங்கலிடு பொங்கலிடு !
மனிதநேயப் பொங்கலிடு!
தமிழ்ப் புத்தாண்டின் வரவு கண்டு
தமிழ் கூறும் நல்லுலகு செழிக்க
பொங்கலிடு!

......கா.ந.கல்யாணசுந்தரம்.

செவ்வாய், ஜனவரி 08, 2013

நம்பிக்கையெனும் நங்கூரம் !







*இருகரம் இணைந்த மணவாழ்வில்


புதைந்துகிடக்கிறது ....

நம்பிக்கையெனும் நங்கூரம் !



*கைகளுக்குள் கனிவாய்

மலர்ந்திடுதே....

காதல் பூக்கள் !



* கைகுலுக்காமலே

நடந்து முடிந்தது...

சாதி ஒழிப்பு மாநாடு!



* கண்ணாமூச்சி வேண்டாம்

உன் கைகளை நீட்டு...கண்ணே

மருதாணி வைக்க வேண்டும் !



* கடவுளைத் தொழும் கைகள்

காத்திருக்கவேண்டும் எப்போதும்....

மற்றவர் துயர் துடைக்க !



......கா.ந.கல்யாணசுந்தரம்.

.

செவ்வாய், ஜனவரி 01, 2013

சீர்மிகு நல்லுலகு காண

சிந்தனையை முன்னிறுத்தி
சீர்மிகு நல்லுலகு காண
செம்மாந்து வாழ்த்து சொல்வோம்
2013 - ம் ஆண்டு தழைக்கட்டும்!
நல்லுள்ளங்கள்
மகிழட்டும் எந்நாளும் !
வன்மம் வக்கிரம் தொலைத்து
வான்புகழ் வள்ளுவன் வழங்கிட்ட
குறள்வழி வாழ்வோம்
வையகத்தே இன்பமுற்று !

....கா.ந.கல்யாணசுந்தரம்.

திங்கள், டிசம்பர் 31, 2012

புத்தாண்டு வாழ்த்துக்கள் !!










0123 எண்கள் இடம்மாறி 2013 ஆனதோ?
பிறக்கும்  2013 - எப்போதும்
சிறக்கும் என்பதில் ஐயமில்லை !
பறக்கும் 2012 இன்றோடு ......
மறவா நிகழ்வுகள் நெஞ்சோடு !
என்றும் சிறக்கும் 2013 -  ல்
இமயம் வியக்கும் சாதனைகள்
இலங்கும் வாழ்வில் வன்மமின்றி !
என புத்தாண்டை வரவேற்று
உங்களனைவரையும் வாழ்த்துகிறேன்!
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

.......அன்புடன் கா.ந.கல்யாணசுந்தரம்.

புதன், டிசம்பர் 19, 2012

இல்லங்களில் மலர்ந்திருந்தது

 
 
 
 
 
 
 
மழலை மொழியறியாது
மகிழ்வோடு பழகின...
பொம்மைகள் !

மழலைகளின் கையசைப்பில்
மண்டிக்கிடந்தது....
மனிதநேயம்!

இறைவனின் பங்களிப்பாய்
இல்லங்களில் மலர்ந்திருந்தது
மழலை மொழி !

நடைவண்டிக்கு
தெரிந்திருந்தது....
குழந்தை வளர்ப்பு!

ஒரு மரப்பாச்சியின்
முதல் கனவு...
மழலைக்கு தாயானது!


........கா.ந.கல்யாணசுந்தரம்.

புதன், டிசம்பர் 12, 2012

12.12.12 ஹைக்கூ கவிதைகள்







*இலையுதிர் காலத்தின்
திறந்த புத்தகமாயின....
தளிர்களின் வரவு!

*மொட்டவிழும் மலருக்கு
தெரியாத உறவு...
வேர்களின் பரிவு !

*புல் நுனியில்
ஒரு பிரபஞ்சம்
பனித்துளி !

*தென்றலின் தழுவலில்
நாணிற்று ....
ஆற்றங்கரை நாணல் !

*மாலை நேரத்து
எழிலோவியங்கள்....
கூடு திரும்பும் பறவைகள் !

*மீனவனின் அவலத்தை
சுமந்து வந்தது......
கடலோர காற்று !

*மலை முகட்டில்
மேகப் பெண்களின் ஆடிப் பொங்கல் ....
அருவி!

*வெள்ளி அலைகளின்
தோழமையுடன் .....
துள்ளியெழும் மீன்கள் !

*பரிசல் பெண்ணின்
புரிதல் வாழ்க்கையில் ....
புலம் பெயரா படகுத்துடுப்புகள் !

*தேன் தந்த மலருக்கு
வண்டின் பரிசளிப்பு....
மகரந்த சேர்க்கை !

*கொன்றை மலர்களின்
சிவப்பு கம்பள வரவேற்பு....
கிராமத்தின் சாலைகளில் !

*விட்டுக் கொடுக்கும்
பண்பை வளர்த்தன....
ஒற்றையடிப் பாதைகள் !

...........கா.ந.கல்யாணசுந்தரம்.


 

செவ்வாய், டிசம்பர் 11, 2012

செவ்வாய் கிரஹத்தில்

 
 
 
 
 
 
 
பொழுது புலர்வதற்குள்
பெரு ஒளி வரவழைத்து
அலுவலகம் சென்றார்கள்!
பிள்ளைகளுக்கு ஆக்சிஜன் குப்பிகளை
முதுகுக்குபின்னால் கட்டிவைத்து
பள்ளிக்கூடம் அனுப்பினார்கள்
புத்தகமில்லா குழந்தைகள்
ஆக்சிஜனை சுமந்தவாறே
வேற்று கிரக மனிதர்களின்
ராக்கெட்டுகளில் பறந்தவாறே
டாடா காண்பித்து கிளம்பினர் !
பெட்ரோல் இல்லா கார்கள்
நகரில் வலம் வந்தன!
மனிதநேயமில்ல வாழ்க்கையில்
வயது முதிர்ந்தோர்
செவ்வாய் கிரஹத்தில்
காப்பகங்களில் வாழ்ந்தனர்!
அப்போதும் அவர்கள்
ஒரு சொல்லை
ஆன்மதிருப்தியாய்
உச்சரித்தவரே இருந்தனர்.....
"எல்லாம் தலைஎழுத்து" !

....கா.ந.கல்யாணசுந்தரம்.

புதன், டிசம்பர் 05, 2012

சிக்குண்டு தவிக்கிறது....







*நாணல் இசைத்த பாடல்
தெரிந்திருக்கிறது...
நதிக்கரைக்கு மட்டும் !

*மூங்கில் வேர்களை
மறக்கமுடியுமா?
புல்லாங்குழலின் நினைவுகள் !

*ஆற்றின் கரங்களை
முத்தமிட நினைக்கின்றன ...
அலை வருடிய கூழாங்கற்கள்!

*தள்ளினாலும் நீர் விலகாது
எனைத் தழுவி பயணிக்கிறது ....
பேசும் படகுத் துடுப்புகள்!

*வீசாத வலைக்குள்
சிக்குண்டு தவிக்கிறது....
ஒரு மீனவனின் பசி !

.............கா.ந.கல்யாணசுந்தரம்.

ஞாயிறு, டிசம்பர் 02, 2012

ஒரு கனத்த இதயத்தை










கண்களை மூடினேன்
உலகம் இருண்டது
இதயக் கோட்டையின்
கதவுகள் மட்டும்
எண்ணங்களின் திரவு கோலால்
திறந்துகொண்டது....
மூளையின் செதில்களில் சில
கரங்களாய் வளர்ந்து
தூரிகை ஒன்றினை
தேடிப் பிடித்தது....
மௌன சலவைக்காரன்
தீச்செயல் துணிகளைத் துவைத்து
வெண்மையாக்கினான் .
வண்ணமிழந்த ஆடைகளில்
பல வண்ணத்துப்பூச்சிகள்
வந்தமர்ந்தன.....
சும்மா இருந்த ஊனுடல்
எனது ஆன்மாவிடம் ....
'அந்த தூரிகையால்
வாசமிகு மலர்களை உருவாக்கி
வண்ணத்துப் பூச்சிகளுக்கு
விருந்தளி' ........என்று கேட்டது .
தூரிகைகள் மலர்களை
படைக்கும்முன்
கண்கள் திறந்துகொண்டன .....
சும்மா தியானம் நிலைபெறாமல்
சுமந்து சென்றது
ஒரு கனத்த இதயத்தை !

..........................கா.ந.கல்யாணசுந்தரம் 

திங்கள், நவம்பர் 26, 2012

காற்றின் விசாரிப்பு !











*துள்ளும் மீன்களுக்கு
தெரியவில்லை ...
வலைக்குள் சிறையானது!

*பூட்டிய வீட்டுக்குள்
புகுந்து வெளியேறியது...
காற்றின் விசாரிப்பு !

*ஒரு கைதியின் இதயத்தில்
ஏற்கனவே கைதானாள்
கள்வனின் காதலி !

*ரேகைகளை காண்பித்து
நல்லநேரம் தேடுவதில்
தொலைந்துபோனது எதிர்காலம்!

*படிப்பினைகளின் செயலாக்கமே
கிழித்தெறிகிறது....
கனவுக்கும் நினைவுக்குமான தூரத்தை!

*கடைசியாக நடந்தாலும்
இலக்கின் விளிம்புகளைத் தொடு...
இது ஊர்வலத்தின் உன்னதம்!

......................கா.ந.கல்யாணசுந்தரம்