கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

வெள்ளி, ஏப்ரல் 13, 2012

வசந்த வாயில் மாவிலைத் தோரணமே!

















சிந்தனை மலர்கள் தூவி
நந்தன ஆண்டு இன்று
சிறப்புற மலர்ந்ததுவே !
வண்ணங்கள் ஒருங்கிணைந்து
எண்ணங்களில் உயிர்த்தெழுந்து
வாழ்க்கைச் சுவற்றில்
நாளும் வரைந்திடுமே
நல்லதொரு ஓவியம்!
மனிதநேயம் மலரும்
மண்மீது மாண்புடனே!
சித்திரைத் தமிழ் மகளே
சிரம் தாழ்த்தி வணங்குகிறோம் !
வசந்த வாயில் மாவிலைத் தோரணமே !
வந்திங்கு வாழ்த்தொலிகள் ஏற்றிடுவாய் !
........கா.ந.கல்யாணசுந்தரம்.

புதன், ஏப்ரல் 11, 2012

வேர்களின் தேடல்.....













பூக்களுடன் உறவாடும்

வண்டுகளுக்கு தெரியுமா?

வேர்களின் தேடலை ....!


..........கா.ந.கல்யாணசுந்தரம்.

ஞாயிறு, ஏப்ரல் 08, 2012

கனவு மெய்ப்பட வேண்டும்



















நடந்து செல்ல செல்ல
எனது தூரம் வளர்கிறது
பாதை ஏனோ முடியவில்லை !
அருகில் எவரையும்
காண முடியவில்லை !
தேநீர் அருந்த எவ்வளவு
தூரம் பயணிப்பது?
ஒரு ஓலைக் குடிலுக்கு அருகில்
எனது தாய் என்னை வரவேற்கிறாள்!
மகனே...கால் வலிக்கிறதா?
உள்ளே வா ..... உனக்கு தேநீர் தருகிறேன்
என்றழைத்து ஒரு கோப்பை தேநீர்
அருந்தத் தருகிறாள்!
என் கரங்களைப் பற்றி
அவள் கண்ணீர் மல்க கூறுகிறாள்
" தடைக் கற்கள் என்றுமே
உனது படிக் கற்கள் தான்!
சோர்வு அடையாதே.....
என்றாவது இந்த உலகம்
உன்னை திரும்பி பார்க்கும்"
இந்த உற்சாக வார்த்தைகள்
என்னுள் ஆனந்த ராகங்களை
மீட்டுகிறது......
எனக்கு புதியதாய் சிறகுகள்
முளைக்கின்றன......
இதோ ....நான் பறந்து செல்கிறேன்...
இப்போது நான் பயணிக்கும் தூரம்
அதிகமில்லை!
இலக்குகள் என்னருகே.........!

............கா.ந.கல்யாணசுந்தரம்.

திங்கள், ஏப்ரல் 02, 2012

எங்கள் வீட்டு தோட்டத்தில்....

எங்கள் வீட்டுத் தோட்டத்தில்
புரட்சி புரட்சி என கேட்கிறது...
பறவைகளின் ஒலி

எங்கள் வீட்டுத் திண்ணையில்
அழியாத சுவடுகளாய் ...
மூதாதையரின் அமர்விடங்கள் !

எங்கள் வீட்டுப் பரணையில்
பழைய புத்தகக் கட்டுக்குள்...
நட்பின் அடையாளங்கள் !

எங்கள் வீட்டின் சன்னலருகே
முத்தமிடும் ...
நிலவொளி நிழல்கள் !

எங்கள் வீட்டு முற்றத்தில்
எப்போதும் காத்திருக்கிறேன்....
அணிலோடு விளையாட !

எங்கள் வீட்டு கதவிடுக்குகளில்
கண்ணை வைத்துப் பாருங்கள்...
இவளின் முகமழிந்த கோலங்கள் தெரியும்!

ஞாயிறு, மார்ச் 25, 2012

ஒளவையாரின் கொன்றைவேந்தன்
















கடவுள் வாழ்த்து

கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே

உயிர் வருக்கம்
1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று
3. இல்லறம் அல்லது நல்லறம் அன்று
4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்
5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்
8. ஏவா மக்கள் மூவா மருந்து
9. ஐயம் புகினும் செய்வன செய்
10. ஒருவனைப் பற்றி ஒரகத்து இரு
11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்
12. ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு
13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு

ககர வருக்கம்
14. கற்பெனப்படுவது சொல் திறம்பாமை
15. காவல்தானே பாவையர்க்கு அழகு
16. கிட்டாதாயின் வெட்டென மற
17. கீழோர் ஆயினும் தாழ உரை
18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்
20. கெடுவது செய்யின் விடுவது கருமம்
21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை
22. கைப் பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி
23. கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி
24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு
25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை

சகர வருக்கம்
26. சந்நதிக்கு அழகு வந்தி செய்யாமை
27. சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு
28. சினத்தைப் பேணின் தவத்திற்கு அழகு
29. சீரைத் தேடின் ஏரைத் தேடு
30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
31. சூதும் வாதும் வேதனை செய்யும்
32. செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும்
33. சேமம் புகினும் யாமத்து உறங்கு
34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்
35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்
36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்

தகர வருக்கம்

37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
38. தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
40. தீராக் கோபம் போராய் முடியும்
41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு
42. தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்
43. தெய்வம் சீறின் கைத்தவம் மாளும்
44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும்
45. தையும் மாசியும் வையகத்து உறங்கு
46. தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது
47. தோழனோடும் ஏழைமை பேசேல்

நகர வருக்கம்
48. நல்லிணக்கம் அல்லல் படுத்தும்
49. நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை
50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை
51. நீரகம் பொருந்திய ஊரகத்து இரு
52. நுண்ணிய கருமமும் எண்ணித் துணி
53. நூல்முறை தெரிந்து சீலத்து ஒழுகு
54. நெஞ்சை ஒளiத்து ஒரு வஞ்சகம் இல்லை
55. நேரா நோன்பு சீராகாது
56. நைபவர் எனினும் நொய்ய உரையேல்
57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்
58. நோன்பு என்பதுவே (? என்பது) கொன்று தின்னாமை

பகர வருக்கம்
59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்
60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்
61. பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்
62. பீரம் பேணி பாரம் தாங்கும்
63. புலையும் கொலையும் களவும் தவிர்
64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்
65. பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும்
66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்
67. பையச் சென்றால் வையம் தாங்கும்
68. பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்
69. போனகம் என்பது தான் உழந்து உண்டல்

மகர வருக்கம்
70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்
71. மாரி அல்லது காரியம் இல்லை
72. மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை
73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது
74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு
77. மேழிச் செல்வம் கோழை படாது
78. மை விழியார் தம் மனையகன்று ஒழுகு
79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம்
80. மோனம் என்பது ஞான வரம்பு

வகர வருக்கம்
81. வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண்
82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும்
83. விருந்திலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்
84. வீரன் கேண்மை கூரம்பு ஆகும்
85. உரவோர் என்கை இரவாது இருத்தல்
86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை
88. வேந்தன் சீறின் ஆம் துணை இல்லை
89. வைகல் தோறும் தெய்வம் தொழு
90. ஒத்த இடத்து நித்திரை கொள்
91. ஓதாதார்க்கு இல்லை உணர்வொடும் ஒழுக்கம்

ஒளவையாரின் ஆத்திச்சூடி
















வாழ்த்து

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.


உயிர் வருக்கம்
1. அறம் செய விரும்பு
2. ஆறுவது சினம்
3. இயல்வது கரவேல்
4. ஈவது விலக்கேல்
5. உடையது விளம்பேல்
6. ஊக்கமது கைவிடேல்
7. எண் எழுத்து இகழேல்
8. ஏற்பது இகழ்ச்சி
9. ஐயம் இட்டு உண்
10. ஒப்புரவு ஒழுகு
11. ஓதுவது ஒழியேல்
12. ஒளவியம் பேசேல்
13. அஃகம் சுருக்கேல்


உயிர்மெய் வருக்கம்
14. கண்டொன்று சொல்லேல்
15. ஙப் போல் வளை
16. சனி நீராடு
17. ஞயம்பட உரை
18. இடம்பட வீடு எடேல்
19. இணக்கம் அறிந்து இணங்கு
20. தந்தை தாய்ப் பேண்
21. நன்றி மறவேல்
22. பருவத்தே பயிர் செய்
23. மண் பறித்து உண்ணேல்
24. இயல்பு அலாதன செய்யேல்
25. அரவம் ஆட்டேல்
26. இலவம் பஞ்சில் துயில்
27. வஞ்சகம் பேசேல்
28. அழகு அலாதன செய்யேல்
29. இளமையில் கல்
30. அரனை மறவேல்
31. அனந்தல் ஆடேல்


ககர வருக்கம்
32. கடிவது மற
33. காப்பது விரதம்
34. கிழமைப்பட வாழ்
35. கீழ்மை அகற்று
36. குணமது கைவிடேல்
37. கூடிப் பிரியேல்
38. கெடுப்பது ஒழி
39. கேள்வி முயல்
40. கைவினை கரவேல்
41. கொள்ளை விரும்பேல்
42. கோதாட்டு ஒழி
43. கௌவை அகற்று


சகர வருக்கம்
44. சக்கர நெறி நில்
45. சான்றோர் இனத்து இரு
46. சித்திரம் பேசேல்
47. சீர்மை மறவேல்
48. சுளiக்கச் சொல்லேல்
49. சூது விரும்பேல்
50. செய்வன திருந்தச் செய்
51. சேரிடம் அறிந்து சேர்
52. சையெனத் திரியேல்
53. சொற் சோர்வு படேல்
54. சோம்பித் திரியேல்


தகர வருக்கம்
55. தக்கோன் எனத் திரி
56. தானமது விரும்பு
57. திருமாலுக்கு அடிமை செய்
58. தீவினை அகற்று
59. துன்பத்திற்கு இடம் கொடேல்
60. தூக்கி வினை செய்
61. தெய்வம் இகழேல்
62. தேசத்தோடு ஒட்டி வாழ்
63. தையல் சொல் கேளேல்
64. தொன்மை மறவேல்
65. தோற்பன தொடரேல்


நகர வருக்கம்
66. நன்மை கடைப்பிடி
67. நாடு ஒப்பன செய்
68. நிலையில் பிரியேல்
69. நீர் விளையாடேல்
70. நுண்மை நுகரேல்
71. நூல் பல கல்
72. நெற்பயிர் விளைவு செய்
73. நேர்பட ஒழுகு
74. நைவினை நணுகேல்
75. நொய்ய உரையேல்
76. நோய்க்கு இடம் கொடேல்


பகர வருக்கம்
77. பழிப்பன பகரேல்
78. பாம்பொடு பழகேல்
79. பிழைபடச் சொல்லேல்
80. பீடு பெற நில்
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
82. பூமி திருத்தி உண்
83. பெரியாரைத் துணைக் கொள்
84. பேதைமை அகற்று
85. பையலோடு இணங்கேல்
86. பொருள்தனைப் போற்றி வாழ்
87. போர்த் தொழில் புரியேல்


மகர வருக்கம்
88. மனம் தடுமாறேல்
89. மாற்றானுக்கு இடம் கொடேல்
90. மிகைபடச் சொல்லேல்
91. மீதூண் விரும்பேல்
92. முனைமுகத்து நில்லேல்
93. மூர்க்கரோடு இணங்கேல்
94. மெல்லி நல்லாள் தோள்சேர்
95. மேன்மக்கள் சொல் கேள்
96. மை விழியார் மனை அகல்
97. மொழிவது அற மொழி
98. மோகத்தை முனி


வகர வருக்கம்
99. வல்லமை பேசேல்
100. வாது முற்கூறேல்
101. வித்தை விரும்பு
102. வீடு பெற நில்
103. உத்தமனாய் இரு
104. ஊருடன் கூடி வாழ்
105. வெட்டெனப் பேசேல்
106. வேண்டி வினை செயேல்
107. வைகறைத் துயில் எழு
108. ஒன்னாரைத் தேறேல்
109. ஓரம் சொல்லேல்

nanri: Thamizh Ilakkiyam


--------------------------------------------------------------------------------

வெள்ளி, மார்ச் 23, 2012

விடியல் பறவைகள்

'அருவி ' கவிதை இலக்கிய காலாண்டிதழில் ( ஹைக்கூ - 786 சிறப்பிதழ்) இடம்பெற்றுள்ள எனது கவிதைகளை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

* பூங்காவில்
ஒரு நேர்காணல்
பூக்களோடு

* மண்வாசனையின்
தாய்வீடானது
பிறந்த கிராமம்

*வண்ணக் கலவைகள்
உயிர்த்தெழுந்தன
பட்டாம்பூச்சி

* ஒட்டடைக் குச்சியின்
ஒரு சிதைந்த வரலாறு
சிலந்தி வலைகள்

* மேய்ச்சல் இடமின்றி
தவித்துப் போயின
மந்தைவெளி மாடுகள்

* சுமப்பதில் எப்போதும்
தோள்களைவிட
மனசு

* நெஞ்சம் மகிழும்
உதய கீதங்களுடன்
விடியல் பறவைகள்

* பசியற்ற வாழ்வுக்கு
நல்லதோர் சுவர்தேடும்
கரித்துண்டு ஓவியன்

^ வாழ்க்கை வெளிச்சமின்றி
நகரும் விளக்குத் தூண்கள்
திருமண ஊர்வலத்தில்

* இல்லம் நிறைந்திருந்தது
பொன் பொருளால் அல்ல
மழலைச்சொற்களால்

.......கா.ந.கல்யாணசுந்தரம்,

(நன்றி: அருவி ஹைக்கூ சிறப்பிதழ்)

ஞாயிறு, மார்ச் 18, 2012

நட்பின் இலக்கணம்


 
பிரித்து எழுதி
                    பொருள் கூற முடியாது.... ....
நட்பின் இலக்கணம் 

 
.......கா.ந.கல்யாணசுந்தரம்.
 

ஞாயிறு, மார்ச் 04, 2012

இனிய ஹைக்கூ ஒரு மொழிபெயர்ப்பில்.....


அன்பார்ந்த வலைத்தள உறவுகளே, எமது மனிதநேயத்துளிகள் எனும் ஹைக்கூ கவிதை நூலில் இருந்து
சில முக்கிய ஹைக்கூ கவிதைகள் மலையாளத்தில் http://www.wonderhaikuworlds.com/ வலைத்தளத்தில் மொழிபெயர்க்கப்பட்டன.
தங்களின் சிறப்புப் பார்வைக்கு.


*வைகறையில் சூரியனை
பங்குபோட்டன....
தென்னங் கீற்றுகள்!

*ഉദയ സൂര്യന്
തുണ്ടം തുണ്ടമായി -
ഓലക്കീറുകള്
.....................


*பாய்மரக் கப்பலில்
பயணிக்கிறோம்...
எண்ணிலா இலக்கை நோக்கி.


*പായ്മര കപ്പലില്
യാത്രയില്
മഹത്തായ ദിക്ക് നോക്കി
....................


*வீட்டின் கூரையில்
புதுமனை புகுவிழா...
சிட்டுக்குருவிகள்

*വീടിന്റെ കൂരയില്
ഒരു പാലു കാച്ച്
ചെറു കുരുവികള്


....................

*பலவண்ண மலர்கள்
நார் ஒன்றில்....
ஒருமைப் பாட்டுணர்வுடன்!


*പല വര്ണ മലര്കള്
ഒരു നാരില് നിന്ന്..
ഒരുമയിന് ഉണര്വുമായി
....................

சில்லரை காசுகள்தான்
இன்னிசைப்பாடல்கள்
தெருப்பாடகன்.

*ചില്ലറ കാശുകള് തന്നെ
എന്റെ മധുര ഗാനങ്ങള്
തെരുവ് ഗായകന്
...................
*இல்லையென்று சொல்லாமல்
ஒருமாலரினை கொடு
நெஞ்சம்நிறையும்

*ഇല്ലെന്ന് ചൊല്ലാമല്
ഒരു പൂവെങ്കിലും കൊടുക്കു ~
മനം-നിറയെ ആനന്ദം
...................
*மூழ்கியும் மலர்ந்தன
நீர் வட்டங்களாய்
குளத்தில் எறிந்த கல்

*മുങ്ങി പോയെങ്കിലും
മലര്ന്നു ജല വൃത്തങ്ങളായി ...
കുളത്തില് എറിഞ്ഞ കല്ല്

.....................

*உவர்க்கும் உறவுகளும்
இனிக்கும் பலாச்சுளையாய்
பிரிவின் நிழலில்

*കയ്ക്കുന്ന ബന്ധങ്ങളും
മധുരിക്കുന്ന ചക്ക ചുളകളായി
വേര്പാടിന്റെ നിഴലുകളില്
.............

.........கா.ந.கல்யாணசுந்தரம்.

செவ்வாய், பிப்ரவரி 28, 2012

காலையும் மாலையும்

கிராமத்து அத்தியாயங்கள்தான்
ஒரு சரித்திரம் படைக்கும் சித்திரங்கள் !
அகன்ற மண் தெருக்களில் வெள்ளநீர்
மழைநாளில் சிறுவர்களின்
காகிதக் கப்பல் விடும்
ஆற்றுப் படுகையானது!
கிராமத்து கிழக்கு வாசல்
அம்மன்கோயில் அனைவர்
வாழ்வோடு பக்திநெறி வளர்த்தது!
ஆலமரத்து நிழல் குடை
பாடித் திரியும் பறவைகள் சரணாலயம் ஆனது!
கிராமத்து திண்ணைகள் ஒரு
பாரம்பரியத்தின் சொத்தானது!
மனிதநேயம் வளர்த்த
மாண்புறு மேடையானது!
காலையும் மாலையும்
கிராமத்தின் எழிலார்ந்த ஓவியமானது!
வயல் பரப்பு ஒற்றையடிப் பாதைகள்
விட்டுக் கொடுக்கும் பண்பை வளர்த்தன!
கிராமங்கள் நகரமாகி நரகமாகும் நிலை
இனிவேண்டாம் !
படித்துப் பட்டம் பெற்றாலும்
ஏர்ப்பின்னதுதான் உலகம் என்றுணர்ந்து
இயற்கையோடு இயந்து வாழ வாருங்கள்!

............கா.ந.கல்யாணசுந்தரம்.

ஞாயிறு, பிப்ரவரி 26, 2012

தருணம் தரும் சுகம்





















பாச உணர்வுகள்
நேசமுடன் வெளிப்படுத்தும்
இருவிழி வாசல்கள்
எப்போதும் துடித்திருக்கின்றன !

விளக்கொளி சாம்ராஜ்ஜியத்தில்
மின்மினி பூச்சிகளின்
ஊர்வலங்கள் எப்போதாவது
நடைபெறும் காரிருளுக்காக!

தனக்கொரு வீடில்லை என
எப்போதும் தென்றல் நினைத்ததில்லை !
கட்டுப்பாடு அறியா சிட்டுகள்கூட
கூடு கட்ட தவறியதில்லை!

நதிமிகு வெள்ளம் அணைக்குள்
சிறைபட்டாலும் வளர்மிகு
வயலுக்கு ஜீவனாகி
வான்சிறப்பில் வாழ்ந்திடும்!

இதயம் வளர் அன்பெனும்
சிறைக்குள் அகப்படினும்
முறைப்படி மணம்முடிக்கும்
தருணத்தை வரவேற்போம் !

............கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, பிப்ரவரி 24, 2012

பிரிவோம் சந்திப்போம்.....















சந்தித்த வேளையில்
பகிர்ந்துகொண்ட உணர்வுகளுக்கு
ஒரு வடிகாலாய் அமைந்தது
நமது எதிர்பாரா நட்பு!

காலம் காலமாய்
உணவூட்டி கல்வி புகட்டி
நல்வழி காண்பித்த பெற்றோர்களை
மறத்தல் மாண்பாகுமா?

பின்தொடர்தலும்
காத்திருத்தலும்
காதலின் அத்தியாயங்கள்
என்றிருப்பின் முடிவுரை எங்கே?

என்னுடன் இணைவதே
இந்த பொன்னுடல் பெற்ற பேரெனில் ...
சுற்றம் மறந்து பயணித்தல்
உடன்போக்காகிவிடும்!

இந்த இனிய நட்பு
ஒரு இலக்கியக் காதலின்
முகவுரையாகட்டும்....
நட்புடன் இனி பிரிவோம் சந்திப்போம்!



.......கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், பிப்ரவரி 23, 2012

ஒரு மழை நாளில்....
















@வானத்து மழைத்துளிகளின்


வண்ணப் பதிப்பு....


வானவில் !




@புதியவர்களின் வருகைக்காக


மகிழ்ச்சியுடன் வீழ்கிறோம்...


ஒரு இலையுதிர்காலத்து இலை !




@மழைச் சாரல்களில்


ஒரு இனிய ஸ்பரிசம் நிகழ்கிறது....


விளையாடும் சிறுவர்களின் கண்களில்!




@இறை தேட வழியில்லை


சுவர் ஓரம் ஒதுங்குகின்றன...


மழையில் நனைந்த புறாக்கள்!




@ஒரு கோடை நாளின் வானப்பெண்ணின்


மேகக் கூந்தலுக்குள் நளினமாய்....


மின்னல் வகிடுகள் !



............கா.ந.கல்யாணசுந்தரம்.

திங்கள், பிப்ரவரி 13, 2012

முப்பொழுதும் நினைத்திருப்போம்!

மண்ணுலகை ஓரடியால்
வாமனன் அளந்தாலும்
வள்ளுவனின் ஈரடி குறள்
நம் நினைவில் தடம் பதிக்கிறது

நல்லுலகில் வள்ளுவம் வழி
நடக்கின்ற மாந்தரெல்லாம்
நல்வழிகண்டு நலம்பெருவர்
மதுரை சங்கம் கண்ட மாண்புறு தமிழ்
மண்ணில் சரித்திரம் படைத்ததுவே

செம்மொழியாய் செம்மாந்து
சேய்மையில் வாழ்வோரிடத்தும்
இன்றும் சொல்தொடுத்து
வாழ்வியலில் வளமோடு இலங்கியதே

கல்தோன்றி மண்தோன்றா காலத்தே
முன்தோன்றி மூத்த தமிழென்று
முன்னோர்கள் பகர்ந்ததை
மீண்டும் மீண்டும் பறைசாற்றி
பேசுவதில் பயனில்லை

மென்பொருள் அறிவியலில் மேலும்
தடம்பதிக்க விழைகின்றோம்!
மென்பொருள் துறை வல்லுனர்களே
தமிழின் தரம் ஆய்ந்து துறைதோறும்
தமிழ் மென்பொருள் கணணிவளர
அயராதுழைத்திடுங்கள்....!

இந்நூற்றாண்டில் மொழிப் புரட்சி
போர்க்கள தளபதி
எப்போதும் நீங்கள்தான்...!
முத்தமிழின் சிறப்புயர்த்தும்
இத்தரையின் மாந்தர்களை
முப்பொழுதும் நினைத்திருப்போம்!!!

..........கா.ந.கல்யாணசுந்தரம்.

திங்கள், பிப்ரவரி 06, 2012

அசையாதா அரசியல் தேர்.....

சோழர் கால உத்திரமேரூர்
கல்வெட்டு செப்புகின்ற
மக்களாட்ச்சியின் மகிமை
நாடறிந்த ஒன்று!
இடிப்பார் இலாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும் எனும்
குரள்மொழி இன்றும் கோலோச்சுகிறது!
எங்கும் ஊழல் எதிலும் ஊழல்தான்
இதுதான் விதியென மக்கள் நினைத்து...
வாழும் அவல நிலை இன்றும் உளது!
ஊழலின் வித்தாக அரசியல் கண்டோர்
உலவும் மாநிலத்தில் மக்களாட்சி,
மாற்றம் எப்போதும் கண்டதில்லை!
அடிபணியும் மக்களும் அதிகார வர்க்கமும்
புற்றீசலாய் புவிமீது எப்போதும்!
பொதுஉடைமைக் கொள்கைதனை
போதிக்கும் காந்தி இனிபிறப்பினும்,
ஆதரிக்கும் அரசியலாரைக் காண்பதறிது!
இளைய சமுதாயமே! இனி பொறுத்தது போதும்
பொங்கி எழுவென்று குரல்கொடுப்பினும்....,
எல்லோரும் ஏங்குகின்றனர்....
நல்லதொரு சமுதாயம் பிறப்பெடுக்க,
மக்களாட்ச்சியில் ஒரு மறுமலர்ச்சி பிறந்திட,
அசையாதா அரசியல் தேர் இனியேனும் !

........கா.ந.கல்யாணசுந்தரம்.

வேரை மறந்த விழுதுகள்....

ஆல் போல் தழைத்து
அருகுபோல் வேரூன்றி
பல்லாண்டு வாழ்கவென
வாழ்த்தும் பெரியோர்கள்
முத்திரைப் பதித்தனர்! -கனணியுக
வாழ்வுதனில் கால்பத்தித்த இளைஞர்கள்
தேடலே வாழ்க்கையென
பொன்னான மனிதநேய
வாழ்வுதனை தொலைக்கின்றார்!
இயந்திரமாய் இயங்குகிற
உலகமதில் உழன்றுழன்று முடங்கும்
தெளிவற்ற சிந்தனையில்- வயோதிகர்
உளமதனைஅறிந்திடாமல்
அறிவிழப்போர் ஏராளம்!
பிள்ளைகளின் எதிர்கால வாழ்வுதனை
செல்லரிக்கா விழுதெனவே வளர்த்து
சுயவளர்ச்சி காணாத பெற்றோர்கள்
வலுவிழந்து வீழுகின்ற
சூழலை நாம் காணுகின்றோம்!
காப்பகங்கள் சாலைதோறும்
தோன்றிற்று இந்நாளில்!
வயது முதிர்ந்தாலும்
அனுபவப் பெட்டகங்கள்
பயனின்றி காப்பகத்தில்
வாழும் நிலை அறிவோம்!
நல்லதொரு குடும்பம்
பல்கலை என்பதனை நிலை நிறுத்த,.
வேரை மறந்த விழுதுகளை இனங்கண்டு
தரையைத் தொடவைப்போம்! - ஆல்
தழைத்து அனுபவத்தை பகிர்ந்திடவே!

.........கா..கல்யாணசுந்தரம்.

( நன்றி: ஈகரை தமிழ் களஞ்சியம்)

ஞாயிறு, ஜனவரி 29, 2012

நிலமகள் நோதல் இன்றி....
















வேலை வெட்டி ஏதுமில்லையென
நாளும் வெட்டியாய் ஊர் சுற்றும் வாலிபர்கள்
தோளினை சுமக்கும் உடல்கள்
இருந்தென்ன இலாபம்?
விவசாயம் தழைக்கின்ற விளைநிலங்கள்
ஏராளம் நம் நாட்டில்!
படித்துவிட்டு வேலையின்றி
பகட்டாய் வாழ்ந்ததெல்லாம்
வீணே என்றறியும் முன்
வீறுகொண்டு எழுவீர் இளைய தலைமுறையே...
பாட்டன் கொடுத்த வயல்காட்டில்
பொன்விளையும் பூமி இதுவென்று போற்றி
எர் பிடித்து உழுதிடுவீர்!
தைமகள் உங்கள் வீடு தேடி
தானியக் களஞ்சியத்தை கொட்டிடுவாள்
இது உறுதி நம்பிடுவீர் ! - இனி
பயிரிடா விளைநிலங்கள்
இருத்தலாகாது என இயம்பிடுங்கள்!
நிலமகள் நோதலின்றி வாழ்ந்திடுங்கள்!

.....கா.ந.கல்யாணசுந்தரம்,
நன்றி: ஈகரை தமிழ் களஞ்சியம்

வெள்ளி, ஜனவரி 27, 2012

இந்தக் காதல் எதுவரை?
















புரிதலின் பயணிப்பில் நேசிப்பு பூத்துக் குலுங்கும்
நினைவுகளில் தேன்சொரிந்து இதயம் குளிரும்
வாசமிகு வாழ்வுக்கான வசந்த வாயில்கள்
வழியெங்கும் வரவேற்கும் - ஆம்
இதுதான் காதலின் மேன்மையென உள்ளங்கள்
ஒரு புரியாத ஸ்பரிசத்தில் பரவசப்படும்!
மார்கழிப் பனி பாவையர்க்கு உன்னத நோன்பானது
சூடிக்கொடுத்தவளின் திருவாயால்!
பயணிப்பின் எல்லை பயணிக்கும் திசையில்
ஒரு இடமறிந்த உண்மை!
நேசிப்பின் நடை இருமனங்களின்
எல்லையற்ற தூரத்தின் விளிம்புகள்!
வயதின் மூப்பிலும் வியப்பின்றி விருந்துவைக்கும்
இல்லத்துணையின் ஈடற்ற அன்பே காதல்!- இந்தக்
காதல் எது வரை? ....எனக்கேளின்....
துளிர் விடும் மனம் முதல் துவளும் நாள் வரை
துணைவருமே காதல் மாசற்ற முகத்துடன்...!
எனச் சொல்வோம் நேசமுடன் எந்நாளும் !


..........கா.ந.கல்யாணசுந்தரம்.

( நன்றி: ஈகரை)

தூரத்து உறவுகள் எப்போதும் ......

உறவுகளில் உன்னதமென்று
மாதா, பிதா. குரு தெய்வமென முன்னோர்கள்
அந்நாளில் கண்டறிந்த உண்மை!
அகல உழுவதிலும் ஆழ உழும் விவசாயி
கொண்டிருக்கும் உறவோ விளை நிலமீது!
நெய்யும் தொழிலுக்கு நிகரில்லையென
நெசவாளியின் உறவோ நெய்யும் தறி மீது!
உண்ண உணவு உடுக்க உடை
இவ்விரண்டும் கிடைத்தபின்
இருக்கும் இடம்தான் இன்றியமையாதது!
இடர் அகற்றி இனிதே தங்க
வீடென்பது விதிவிலக்கல்ல வாழ்வுக்கு!
உறவுகளின் மேன்மை சுற்றத்தாரோடு
முடிவதில்லை மானுட வாழ்வில்!
கற்றறியா சிற்பி கல்லுடன்
உளிகொண்டு உறவாடலில்
உன்னத சிலை வடிக்கும்
அற்புதம் காண்கின்றோம்!
உறவுகள் அண்மையில் இருப்பினும்
சேய்மையில் இருப்பினும்
மேன்மை காண்பதில்
இருக்கிறது மனிதநேயம்!
உவர்ந்து கசந்த போதிலும்
தூரத்து உறவுகள் எப்போதும்
இனிப்பதுண்டு பலாச்சுளையாய்......
பிரிவின் நிழலில் !

...........கா.ந.கல்யாணசுந்தரம்.

புதன், ஜனவரி 18, 2012

இனிய தமிழ் இனி

அகரம் பயின்ற நாள் முதலே
அன்னைத்தமிழில் பேசும் கலை கற்றோம்!
ஆன்மிகம் வளர்த்த இன்தமிழ்
ஆலம் விழுதாய் நிலமதில் நிலைத்தது!
இதழியல் வரலாற்றில் இமயம் தொட்டு
இணைய தளத்திலும் தடம் பதித்தது!
ஈதலும் இசைபட வாழ்தலும் நம் தமிழர்
ஈடிலா கொள்கையாய் சிரமேற்கொண்டனர்!
உலகின் மொழிகளில் செம்மொழியென
உன்னத இடம் கொண்டு உலவுகிறது!
ஊருணி பலருக்கும் உதவுதல் போல்
ஊக்கமுடன் நம் அறிஞரெல்லாம் செயல்படுவர்!
எங்கும் தமிழே முழங்கக் கேட்போம்
எதிலும் தமிழே வழங்கக் கேட்போமென
ஏங்கும் இளைஞர் அயராதுழைப்பர்!
ஏற்றமிகு சொல்வனத்தில் புவியெங்கும்
ஐயமின்றி தேன்பொழியும் மணமலறாய்
ஐயன் வள்ளுவன் திருவடி குறள் சிறக்க
ஒப்பிலா மொழியிதுவென உலகு மொழிகளை
ஒருங்கிணைத்து எபோதும்
ஓங்கு புகழுடன் இனியத் தமிழினி
ஔவை முதல் இன்றைய கவிகள் வரை
புகழ் சேர்த்து புவிமீது ஓயாது உலவும் !
............கா.ந.கல்யாணசுந்தரம்.

(nanri: eegarai.net)