கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

சனி, ஆகஸ்ட் 27, 2016

புத்துலகு கண்டிடுமே பொறுப்போடு !

















தோகை விரித்தாடும்
மயில் போல்
தாவிக் குதித்திடும்
மனது நித்தம் !
புருவவில்லில் 
பார்வைக் கணைகள்
தொடுத்திடும்
ஒரு பருவ யுத்தம் !
வெண்கலச் சிலைபோல்
மேனி மின்னும்
எழிலுரு மாற்றம் தன்னில்...
அறியாது புரியாது
புன்முறுவல் பூக்கின்ற
ஆனந்த மொட்டவிழ்
வசந்த காலம் !
முறைமாமன்
குச்சி நட்டு பந்தலிடும்
மறத்தமிழன்
பண்பாட்டின் நிகழ்விடம் !
பட்டுப் பாவாடையும்
பளபளக்கும் தாவணியும்
பருவத்தின்
வாசலுக்கு மெருகூட்டும் !
மஞ்சள் நீராடி
அகில் சந்தன வாசமுடன்
கொஞ்சுமொழியாளின்
கூடத்து விழாவினில்...
கெஞ்சுகின்ற
விழியோடு காத்திருந்து
தஞ்சமடைந்திடுமே
வாலிப நெஞ்சங்கள் !
மொட்டவிழ் தாமரையாய்
முகம்மலர
நாளொருமேனியும்
பொழுதொரு வண்ணமுமாய் ...
பூப்பெய்திய பருவமினி
பெற்றோரின் அரவணைப்பில்
புத்துலகு கண்டிடுமே
பொறுப்போடு !
...........கா.ந.கல்யாணசுந்தரம்

மனசாட்சியை கூறுபோட்டு

எனது கனவுகளை
பறித்துக்கொண்டு
நிஜங்களை பரிசளிக்க
கடவுள் எதிரே வந்தார்....

இலவசமாய் பெறுவதற்கு
மனம் விரும்பவில்லை
அது விலையில்லா
பொருளாகி என்னிடம்
சோம்பலை தந்தது....
மனசாட்சியை கூறுபோட்டு
அடிமை சாசனத்தில்
கையெழுத்திட வைத்தது....!

காலை எழுந்தவுடன்
மறந்துபோகும் கனவுகளை
மட்டுமாவது விட்டுவையுங்கள்...
மீண்டும் கடவுளிடம்
மன்றாடிக் கேட்டேன் !

கனவுகள் எப்போதும்
இலவசமல்ல
உன்னோடு பிறந்தது ! 
என சொல்லி மறைந்தார்....!
தூக்கம் கலைந்தேன்
அந்த கனவு
மறவா கனவானது !
..........கா.ந.கல்யாணசுந்தரம் 






புதன், ஜூலை 20, 2016

இனி கங்கைக்கரையில்தான் என்று !


அறம் பொருள் இன்பமென
முப்பாலைப் பொழிந்தாய் !
மானுடம் உய்ய உலகுக்கோர்
பொதுமறையை பகன்றிட்டாய் !
செம்மொழியாம் தமிழுக்கு
மகுடமாய் என்றென்றும்உனது திருக்குறளன்றோ !

தன்னலம் கருதா தமிழ்க்காதலன்
தருண்விசையின் முயற்சியில்
கங்கை நதிப்புறத்து நற்றமிழ்
ஆசானாய் நீ கொலுவிருக்கும்
தருணத்தில்......பாவிகள் உன்னை
புறக்கணித்து கருப்புநிற காகிதத்தில்
சுற்றியபடி பூங்காவில் தள்ளினரே !
இன்னா செய்தாரை அவர்நாண
நன்னயம் செய்பவன் நீ......
பொருந்தாது இவையெல்லாம்
இந்நாளில்.....
தமிழினம் கொதித்தெழும்...!
இந்திய தேசியத்தின் நூலென
திருக்குறளை அரசு ஏற்காவிடினும்
சூளுரைப்போம்.....நம் அய்யனின்
திருவுருவம்.....இனி கங்கைக்கரையில்தான் என்று !


.....கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, ஜூலை 15, 2016

நாளொன்றைக் கூறுங்கள்...!!!




தேவைகளை உள்ளடக்கிய
வாழ்வில் அபரிமிதமாக
மனிதம் வாழ்கிறது ...!
பயணிப்பில் இலக்கு
தேவைதான்....
இலக்கின் பாதையில்
தோல்விகள் இருக்கலாம் !
ஆனால் சுயநலத்தின்
முதுகில் சவாரி செய்து
இலக்கினை அடைவதால்
யாருக்கு இலாபம் ?
வெற்றிகளை மட்டுமே
பச்சை குத்திக்கொள்ளும்
மனிதம் எப்போதுமே
அடையாளம் காணப்படுகிறது
ஆம்..............................
சூழலை மறந்த இனத்தோடு !
கொள்கையற்ற அரசியலார்
கால்கழுவி வாழுகின்ற
சுயநலக் கூட்டங்கள்
அவலநிலை மாந்தரின்
அன்றாட வாழ்வுதனை
கூறுபோட்டு விற்கிறது !
எல்லோரும் எல்லாமும்
பெறவேண்டும் !
இங்கு இல்லாமை
இல்லாத நிலை வேண்டும் !
........இதனை மெய்ப்பிக்கும்
நாளொன்றைக் கூறுங்கள்...!!!
.........கா.ந.கல்யாணசுந்தரம்

புதன், ஜூலை 13, 2016

வடுகப்பட்டிமுதல் வால்காவரை ......



என் ஜன்னலின் வழியே
எட்டிப்பார்க்கிறேன்
நேற்றுப் போட்ட கோலம் கூட
ஒரு மௌனத்தின்
சப்தங்களாகிப்போனது !
வானம் தொட்டுவிடும் தூரம்தான்
என்று வைகறை மேகங்களில்
தமிழுக்கு நிறமுண்டென
உனது திருத்தி எழுதிய தீர்ப்புகள்
மறக்கவியலா கல்வெட்டுக்கள் !
பெய்யெனப்பெய்யும் மழையே ....
இந்த தண்ணீர் தேசத்து
எல்லா நதிகளிலும்
எங்கள் ஓடங்கள்
சிகரத்தை நோக்கி
கொஞ்சம் தேநீர் நிறைய வானத்துடனும்
காவி நிறத்தில் ஒரு காதல் செய்கிறது !
மூன்றாம் உலகப்போருக்கு
வில்லோடு வா நிலவே என்றழைக்க ...
ஒரு போர்க்களமும்
இரண்டு பூக்களுமே மீதமிருந்தன !
எனது பழைய பனைவோளைகளை
புரட்டியதில்
குளத்தில் கல்லெறிந்தவர்களை விட
கவிராஜன் கதைகளைக்
கேட்டவர்களே அதிகம் !
இதனால் சகலமானவர்களுக்கும்
வடுகப்பட்டிமுதல் வால்காவரை
சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன் .....
கள்ளிக்காட்டு இதிகாசம்
உனது இரத்ததானம் !
கருவாச்சி காவியம்
இன்னொரு தேசியகீதம் !
சிறுகதைகளின் சிற்பியே
உன்னைச் செதுக்கினாலும்
அந்தக் கல்லிலிருந்து
உதிரும் கவிதைப்பூக்கள்
விற்பனைக்கல்ல எங்களின் சுவாசத்திற்கு !
தாய்மண்ணின் தமிழுக்கு
உயிராய் வாழும் இந்நூற்றாண்டு கவியே
உளமார வாழ்த்துகிறேன் பிறந்தநாளில்
பல்லாண்டு வாழ்கவென !
.......கா.ந.கல்யாணசுந்தரம்

சனி, ஜூலை 09, 2016

தார்ச்சாலைப் பூக்கள்

தெருவிளக்கு உமிழும் 
வெளிச்ச எச்சிலில் 
இரவு  தன்னை 
கரைத்துக்கொண்டு
விடியலின் வாழ்வுக்கு 
வழிவிடுகிறது 

தார்ச்சாலைப் பூக்கள் 
வியர்வைத்துளிகளின் 
வாசம் பரப்பி 
ஒரு பரபரப்பில் 
தன்னை சிறைவைக்க 
தயாரானது 

எச்சங்களின் வரவால் 
வயிறு புடைத்த 
குப்பைத் தொட்டிகள் 
அட்டை பொறுக்கும் 
சிறுவர்களின் மறுவாழ்வில் 
அங்கம் கொண்டது   

நான்கு சக்கரம் 
இரண்டு சக்கரம் 
மூன்று சக்கரம் 
நாளெல்லாம் உருண்டு 
மானுடத் திசுக்களை 
சுமந்தவாறு 
ஊர்வலத்தை நடத்தின  

வளமிக்க 
விளைநிலங்களை 
மறந்த மனங்கள் 
விடுதலை அறியா 
விருப்பினர்களாக
தூண்டில்  புழுவானார்கள் 

நெரிசல் மிக்க 
நகரத்து விண்வெளியில் 
பறக்க மறந்த
பறவைகள் மட்டும் 
கிராமத்து பாதைகளை 
தேர்ந்தெடுத்தன 

.........கா.ந.கல்யாணசுந்தரம் 

புதன், ஜூன் 22, 2016

புதுயுகம் கண்டிட உடனிருப்போம்

இயல்பாய் படித்திடு என் மகனே !
******************************************************
மதிப்பெண் அதிகம் பெறவேண்டும்
மாநில விருதுகள் பெறவேண்டும்
ஊடக செய்தியில் வரவேண்டும்
உறவுகள் வியப்பில் விழவேண்டும்
இதையே இலக்காய் வாழாமல்
இயல்பாய் படித்திடு என்மகனே
......(மதிப்பெண்)
நாட்டு நடப்பில் பங்கேற்று
நடைமுறை வாழ்வில் விளக்கேற்று
அனிச்சை செயலாய் வாழாமல்
அறிவுப்பூர்வமாய் நடைபோடு
.....(மதிப்பெண்)
உன்னில் இருக்கும் திறனறிவாய்
உலகம் வியக்க வளர்த்திடுவாய்
கன்னல் தமிழை நன்கறிந்து
கவிநூறு கலைகள் காத்திடுவாய்
....(மதிப்பெண்)
வித்தக வாழ்க்கையின் வளமனைத்தும்
புத்தக சுமைக்குள் கிடைக்காது
பெற்றோர் நாங்கள் உணர்ந்துவிட்டோம்
புதுயுகம் கண்டிட உடனிருப்போம்
....(மதிப்பெண்)
..........கா.ந.கல்யாணசுந்தரம் 

செவ்வாய், ஜூன் 21, 2016

தமிழினத்தின் பெருமைதனை

தமிழின் தொன்மையும்
வரலாறும்
கல்வெட்டு சாசனங்கள் !
கலாச்சாரத்தின் படிமங்களாய்
காலத்தால் அழியா
கற்சிலைகள் !

கலைவளர்த்த மன்னர்களின்
கடமையில் விளைந்தன
எழில்மிகு சிற்பங்கள் !
செம்மொழி தமிழென்றும்
மூத்தகுடி தமிழனென்றும்
சொல்லுவது எப்படி ?
தொல்பொருள் ஆய்வுகளால்
துலங்கும் கோயில்
கற்சிலைகள் !

சிலைகடத்தி பிழைத்தல்
தொழில் செய்து
பொருளீட்டும் மூடர் கூட்டம்
தமிழர்தம் தொன்மையை
சிதைக்கும் சீர்கேட்டில்
உலவுகின்றார் !
தமிழினத்து துரோகிகளை
வேரோடு அழித்தொழித்து
சமுதாய நலம்காக்க
அரசியலார் கடும் சட்டம்
தீட்ட வேண்டும் !
தமிழினத்தின் பெருமைதனை
காக்க வேண்டும் !

 ......கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், ஜூன் 02, 2016

இசையுலகின் இணையிலா மேதை !

இசையுலகின் இணையிலா மேதை !

இறைவனின் இசை அவதாரம் !


இயற்கையின் இதயத்தை தொட்டவன் !


இயல்பின் வெளிப்பாடுகளில்


இமயத்தை முத்தமிட்டவன் !


இலங்கும் புவிமீது இசையின்


இலக்கணத்தை வடித்தவன் !


இன்றல்ல நேற்றல்ல என்றும்


இசையுலகின் சக்கரவர்த்தி !


இளையராஜா- எங்களின்


இதயம்கவர் கள்வன் !


இந்தியத்தாய் பெற்றெடுத்த


இணையிலா தவப்புதல்வன்


இன்னும் இன்னும் வேண்டும்


இவனின் இசை கேட்டு


இன்பம் பருகும் வாழ்நாட்கள் !


இந்த இன்னிசை வேந்தனின்


இனிய பிறந்தநாளில் வாழ்த்துவோம்


இதயம் கனிந்து !




............கா.ந.கல்யாணசுந்தரம்.

செவ்வாய், மே 31, 2016

விடியலைத் தாருங்கள் ...

மக்களால் தேர்ந்தெடுகப்பட்டும்
மதியிழந்து போனார்கள் ...
காலில் விழும் கனவான்கள் !
பரவாயில்லை ...
பொறுத்துக்கொள்கிறோம் !

தொகுதிக்கு வாருங்கள்
உங்களின் காலில் விழுந்து
கெஞ்சாத குறையாய்
காத்திருக்கிறார்கள்
உங்களின் பிரஜைகள் !

அடிப்படை வசதிகூட
காணாத பகுதிக்கு
அவசியம் செல்லுங்கள்...!
குறைகளைக் கேட்டறிந்து
களைந்திடுங்கள் உடனடி தீர்வால் !

அடுத்த வேளை உணவின்றி
உடுத்த துணியுமின்றி வாடும்
அடித்தட்டு மக்களுக்கு நல்லதொரு
விடியலைத் தாருங்கள் ...
அடுத்த ஐந்தாண்டு அருகில்தான் !

.......கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், மே 26, 2016

கண்டபோதெல்லாம் வாடுங்கள் .....!

அறிவியல் வளர்ச்சியெல்லாம்
அகம் மகிழும் புறவாழ்வு !
ஆன்மீக நெறிகளில்
பேரின்பம் பெருக்கெடுக்கும் !

பொருள் குவிக்கும் செயலினிலே
பூவுலக போதை புதைந்திருக்கும் !
ஆளுமை அகங்கார வாழ்வுதனில்
அடிமைகளை வளர்த்திட்டு
ஆர்பரிக்கும் குணமிருக்கும் !

பாரம்பரிய மரபுகளை மீட்டெடுக்கும்
பணிதனில் பண்புகளே மிஞ்சிடும் !
கல்விதனை வணிகமது தத்தெடுத்தால்
மனித மூளைதனை அடகுவைக்கும்
நிகழ்வுகளே அணிவகுக்கும் !

பாரதத்தின் பெரும்பகுதி
பாரம்பரிய விவசாய நிலமாகும் !
விளைநிலங்கள் அழித்தொழித்து
வாழ்விட மையங்கள் ஆக்காதீர் !

உண்ணும் உணவின் பிறப்பிடம்
அறியா தலைமுறைகளே ....
உணருங்கள் மானுட வாழ்வுதனை !
விவசாய தொழில்நுட்பம் ஏட்டளவில்
இருந்தால் போதுமா?
தகவல் தொழில்நுட்பமும்
மென்பொருள் வளர்ச்சியும்
தானியங்களை தந்திடுமா?

திரும்பிப் பார்த்திடுங்கள் கிராமங்களை ...
பணிக்கொடையாய் விளைநிலங்கள்
தரிசாய் மாறி தரிசனம் தருகின்றன !
பொருளாதார மேம்பாட்டு திட்டமென
அரசியலார் சுருட்டுகின்ற செயலதனை
இனி ஒழிப்போம் ...!



மெத்தப் படித்தாலும் வாழ்வின் மேம்பாட்டில்
இத்தரை காணும் விவசாயமே எனக்கண்டு
அணியணியாய் திரள்வீர் ...!
தனியொருவனுக்கு உணவில்லையெனில்
இனி ஜெகத்தினை எரிக்கவேண்டாம் ....
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
வாடுங்கள் .....!

....கா.ந.கல்யாணசுந்தரம்.




புதன், ஏப்ரல் 13, 2016

" காலத்தை வெல்லும் தமிழ் ஹைக்கூ கவிதைகள்" - ஆய்வு நூலுக்கு இதுவரை எம்மிடம் இருக்கும்/வந்துள்ள ஹைக்கூ நூல்கள்:

" காலத்தை வெல்லும் தமிழ் ஹைக்கூ கவிதைகள்" - ஆய்வு நூலுக்கு இதுவரை எம்மிடம் இருக்கும்/வந்துள்ள ஹைக்கூ நூல்கள்:
1. புள்ளிப்பூக்கள் - அமுத பாரதி
2. சூரியப்பிறைகள் - ஈரோடு தமிழன்பன்
3. நனையாத நிலா - செ.செந்தில்குமார்
4. விரல்நுனியில் வானம் - மு.முருகேஷ்
5. கிண்ணம் நிறைய ஹைக்கூ - தொகுப்பு: மு.முருகேஷ், பா.உதயகண்ணன்
6. வேரில்பூத்த ஹைக்கூ - தொகுப்பு: மு.முருகேஷ்
7. நீங்கள்கேட்ட ஹைக்கூ - தொகுப்பு: மு.முருகேஷ், பா.உதயகண்ணன்
8. பரிதிப் புன்னகை - செந்தமிழினியன்
9. கடைசி மழைத்துளி - அறிவுமதி
10. குயிலின்நிறம்- ரமா ராமநாதன்
11. சென்னிமலை கிளியோபாத்ராக்கள் -
12. ஈரோடுதமிழன்பன்
13. சுண்டுவிரல் - மாடப்பள்ளி ஜெகதீசன்
14. சூரியத்துளிகள் - கவிமுகில்
15. பொன்விழா ஹைக்கூ - வலசைவீரபாண்டியன்
16. புத்தாயிரம் ஹைக்கூ - வலசை வீரபாண்டியன்
17. மனிதநேயத் துளிகள் - கா.ந.கல்யாணசுந்தரம்
18. கிராமத்து காற்று - சஞ்சீவி மோகன்
19. இன்று பௌர்ணமி - டி. இராஜேந்திரன்
20. மழைதினம் - பாரதி ஜிப்ரான்
21. ஒற்றை சிறகால் வானத்தை தொடு - தரிசனப்பிரியன்
22. உதிர நிற பொட்டு - வண்ணை சிவா
23. பூவரச இலை ஊதல் - அரசு கலைக்கல்லூரி, திருத்தணி
24. அறுவடை நாளின் மழை - ந.க.துறைவன், மு.முருகேஷ், பல்லவி குமார், சோலை இசைக்குயில்
25. பனிபடர்ந்த சூரியன் - தென்றல் நிலவன், கவி.குமார்
26. கொஞ்சம் ஹைக்கூ கொஞ்சம்புதுக்கவிதை - மு.முருகேஷ்
27. நிஜமும் நிழலும் - பொன் குமார்
28. பிற - பொன் குமார்
29. குளத்தில் மிதக்கும் தீபங்கள் - ஆரிசன்
30. பயணத்திசை - தமிழியலன்
31. தார்ச்சாலைப் பூக்கள் - கே. பாக்யா
32. தமிழ் ஹைக்கூ ஆயிரம் - இரா.இரவி
33. ஹைக்கூ பூக்கள் - நம்மொழி தொகுப்பு நூல் - . மயிலாடுதுறை இளைய பாரதி
34. தமிழ் ஹைக்கூ ஆயிரம் - சாகித்ய அகாதமி - இரா மோகன்
35. ஹைக்கூ வாசல் - அருவி- காவனூர் ந.சீனிவாசன்
36. மனசெல்லாம் ...கா.ந.கல்யாணசுந்தரம் (தயாரிப்பில் - வாசன் பதிப்பகம்)
இந்த நூல்களுடன்(ஆய்வு நூல்களும்)....
1. ஹைக்கூ ஒருபுதிய அனுபவம் - சுஜாதா
2. தமிழ் ஹைகூவில் மொழி வீச்சு - செல்லம்மாள் கண்ணன்
3. தமிழில் ஹைக்கூ - நெல்லை சு.முத்து
4. தமிழ் ஹைக்கூ நேற்றும் இன்றும் - மித்ரா
மேலும்: இதழ்கள்:
கணை, ஏழைதாசன், கவிதை உறவு, தமிழ் மூவேந்தர் முரசு, இனிய ஹைக்கூ, ஹைக்கூ, சிநேகம், மதுமலர், வாசகர் வட்டம், மன்னுயிர், தாரகை, கரந்தடி, கணையாழி, வேர்கள், கவிக்காவிரி, வள்ளியூர் தென்றல், பாக்யா, பாவையர் மலர், கவிஒவியா, அத்திப்பூ, ஹைக்கூ அஞ்சல் அட்டை, தினமலர் வாரமலர்,தினகரன்,பரணி காலாண்டுஇதழ், அமுதசுரபி, குமுதம், கல்கி, மனிதநேயம்
மற்றும்
கவிச்சூரியன், கொலுசு - மின்னிதழ்கள்
அனைத்து ' அருவி ' காலாண்டிதழ்கள்.
மேலும்: முகநூல் குழுமங்கள்: ஹைக்கூ உலகம், கவிதைப் பட்டறை, அமுதசுரபி, ஹைக்கூ தோட்டம், தமிழ்க் கவிதைப் பூங்கா, பிரபலங்களின் ஹைக்கூ கவிதைகள்,
ஒருகவிஞ்சனின்ி்ி்கனவு போன்ற முகநூல் குழுமங்களில் இருந்தும்தெரிவு செய்து வருகிறேன்.
ஹைக்கூ கவிஞர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்.
அன்பன், கா.ந.கல்யாணசுந்தரம்
குறிப்பு: ஹைக்கூ கவிஞர்கள் தங்களிடம் இருக்கும் மற்ற கவிஞர்களின் ஹைக்கூ நூல் பிரதிகளை ( ஒன்றுக்கு மேல் வைத்திருந்தால்) அனுப்பி வைக்கவும்.

" காலத்தை வெல்லும் தமிழ் ஹைக்கூ கவிதைகள் " - ஆய்வுக் கட்டுரைகள்.


தமிழ் ஹைக்கூ கவிதைகளின் வளர்ச்சிக்கு வித்திட்ட முதுபெரும் ஹைக்கூ கவிஞர்களின் மேலான கவிதைகளுடன் அவர்கள் தங்கள் நூல்களில் பகிர்ந்த பன்முக கருத்துக்களோடு வெளிவர உள்ளது " காலத்தை வெல்லும் தமிழ் ஹைக்கூ கவிதைகள் " - ஆய்வுக் கட்டுரைகள்.

தற்கால ஹைக்கூ கவிஞர்கள் விரைந்து தங்களது ஹைக்கூ நூல்களை கீழ்கண்ட எனது முகவரிக்கு அனுப்பி வையுங்கள். நன்றி.

அன்பன்,

கா.ந.கல்யாணசுந்தரம்
நெ.62 பத்தாவது தெரு
ஜெயச்சந்திரன் நகர்
மேடவாக்கம்
சென்னை 600100

செவ்வாய், ஏப்ரல் 12, 2016

காலத்தை வெல்லும் தமிழ் ஹைக்கூ கவிதைகள்....ஆய்வுக் கட்டுரைகள் தயாரிப்பில்....

ஆய்வுக் கட்டுரையில் கீழ்கண்ட ஜப்பானிய ஹைக்கூ கவிமேதைகளின் கவிதைகள் தமிழில் இடம்பெறும்.
பாஷோ (ஹைகூவின் தந்தை)
போசோ பூசான்
கோபயாஷி இன்ஸா
மாஸஒகாகிஷிஇந்த 
காவா ஷி காஹி ஹெகி கோட்டோ
தகாஹடா கியோஷி
ஒகிவார செயசென்சூய
தனேடா சந்தோகா
ஒசதிஹோ சாய்
நாகத்சூகா இப்பெகரோ
ஹாஷிமோடோதகாகோ
நாகமுரா குஸதாஒ
கேடோ ஷூசென்
ஒசாகி ஹொசாய்
இஷிகாவா தாகுபோடு
காரய் சென்றியு

மேற்கண்ட ஜப்பானிய ஜென் தத்துவ ஹைக்கூ கவிஞர்களின் ஹைக்கூ கவிதைகள் நமது கவிஞர் சுஜாதா அவர்களின் ஆய்வேட்டில் தமிழாக்கம் செய்துள்ளபடி இடம்பெறும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொகிறேன். இவர்களுடன் உங்களது கவிதைகளும் மேலான ஆய்வுகளுடன்.
அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.
இந்த ஆய்வுக்கட்டுரை நூலில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் ஹைக்கூ கவிஞர்களின் ஹைக்கூ கவிதைகள் இடம் பெறுகிறது. நூல் வடிவமைப்பு மிக உயர்ந்த நேர்த்தியான வடிவமைப்பில் அச்சிட்டு ஹைக்கூ வரலாற்றில் பங்குபெறும் நூலாக இருக்கும். ஹைக்கூ கவிகளின் ஒத்துழைப்பு தேவை. நல்ல தேர்ந்த சிந்தனைவளம் மிக்க கவிதைகளை கொடுங்கள்....வாழ்த்துக்கள்...நன்றி. அன்பன், கா.ந.கல்யாணசுந்தரம்.

சனி, ஜனவரி 30, 2016

பூவாளிகளை மட்டுமே தயாரிக்கும்....!



இயற்கை ஒரு
திறந்த புத்தகம்
அதில் மனிதநேயமே
முகவுரை

புல்வெளிகளும்
மண்டிக்கிடக்கும்
மலர்களின் வாசமும் 
பக்க எண்கள்
 
மகரந்தம் பரப்பும்
வண்ணத்துப்பூச்சிகளும்
வண்டினங்களும்
அத்தியாயங்கள்

அந்திவானமும்
மேகம் தழுவும் மலைகளும்
நதிக்கரை நாணல்களும்
நயமிக்க வார்த்தைகள்

அடர்வன  மூங்கில் புதர்களும்
நெஞ்சை அள்ளும்
நீரோடைகளும்
புனைவுகளின் பிரதிகள்

கீதம் பாடும் விடியல்
பறவைகளும்
புல்லின் நுனி பனித்துளிகளும்
முடிவுரையின் எல்லைகள்

இன்னும் பல ......
இயற்கைப் புத்தகத்தின்
உதிர்ந்த இறகுகளாய்
வானத்தை அளந்தபடி
தென்றலில் கரைந்தன

ஆம் ......கோடரியில்லா
மானுட கரங்கள்   இனி  
பூவாளிகளை  மட்டுமே
தயாரிக்கும்....!


......கா..கல்யாணசுந்தரம்.