கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

சனி, ஆகஸ்ட் 05, 2017

இது யாருக்கான தேடல் ?

இது யாருக்கான தேடல் ?
இரவும் பகலும் உறங்காத இதயத்துடன்
உயர்த்திப் பிடிக்கும் நெஞ்சுரத்துடன்
கண்களில் எதிர்காலத்தின்
வண்ணங்களைத் தேக்கியவாறே 
எத்தனை எத்தனை விடியாத பொழுதுகள் !
ஈரைந்து மாதங்கள் கூட ஒரு மலரைத்
தாங்கும் காம்பென சுகமானச் சுமையாகி
தவத்தின் மனோநிலைதான் இருந்தது !
மகனே உனது வளர்ப்பில் செலுத்தும் கவனங்களால்
ஒரு மண்பாண்டத் தொழிலாளியைப்போல்
எனது கவனங்கள் எப்போதுமே இருந்தது !
எப்பொழுதுமே என்னருகில்
உனை இருக்கச் செய்தல் என்பது
எனது இயலா நிலை என்று உணருகிறேன்....
காலத்தின் தேவை என்ன என்பதை
உனது உணர்வுகளால் தெரியப்படுத்துகிறாய்
பிரிதலுக்கான நேரம்தான் என அறிந்தும்
எதிர்பார்ப்பின்றி அன்பின் எல்லைகளை
விரிவுபடுத்தியத்தில் ஆனந்தம் கொண்டேன் !
அதீத கற்பனை வேண்டாம் வாழ்வில்
இயல்பின் வெளிப்பாடுகளை நுகர்வதில் ...
உனக்கான அடையாளங்களை தொலைக்காதே !
உன்னை உணர்ந்துகொண்டபிறகும்
யாருக்காகவும் மாற எப்போதும் நினைக்காதே !
தனித்துவ மேன்மையில் உனது
வெற்றிக் கொடிகள் எப்போதும் பறக்கட்டும் !
இந்த முதியோர் இல்லத்தில்
என்னிடமிருக்கிறது உனக்கான முத்திரை....
நானொரு முலையூட்டி வெப்ப இரத்த
வாழ்வினமே.....!...ஆம் மகனே .....
இது யாருக்கான தேடல் ?
வாழை அடி வாழைதான் இந்த மானுடம் !
..........கா.ந.கல்யாணசுந்தரம்
(உலகத் தாய்ப்பால் வாரம் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக