கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

வியாழன், ஏப்ரல் 02, 2020

கவிக்கோ துரை வசந்தராசன் அவர்களின் விமர்சனம்...வெளிச்ச மொழியின் வாசிப்பு

÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
நூல் அறிமுகம்
நூல்: வெளிச்ச மொழியின் வாசிப்பு
ஆசிரியர் :கா.ந.கல்யாணசுந்தரம்
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
நாடறிந்த கவிஞர்.!
உலக தமிழ் ஹைக்கூ மன்றத்தின் தலைவர்!
தன்முனைக் கவிஞர்களின் தலைவர்!
கவிதையின் அனைத்து வடிவங்களிலும் பயணிப்பவர்!
கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் அவர்கள்.
அவரது புதுக்கவிதைப் புதையலொன்றைச் சமீபத்தில்தான் எனக்களித்தார்.
புதையலைப் பிரித்துப்பார்க்கிற பெரும்வாய்ப்பு இன்றுதான் கிடைத்தது.
கிடைத்த புதையலைப் பங்குவைப்பதில் பெருமகிழ்ச்சியெனக்கு.
"வெளிச்சமொழியின் வாசிப்பு "
திறக்கும்போதே மகுடமணிந்து காட்சியளிக்கிறது.என் இனிய நண்பர்
ஆரூர் தமிழ்நாடன் அவர்கள் ஆசையோடு ஆராதித்திருக்கிற அணிந்துரையால்.
இந்நூல்
புதுக்கவிதையும் நவீனத்துவமும் கலந்த கலவை.
வாழ்வியலோடு நிறைந்த மனிதநேயம் நிரம்பிய கவிதைகளோடு கவிஞரே நம்மோடு பயணிக்கும் அனுபவத்தை உணரவைக்கிறார்.
கிராமியத்தின் விழுமியங்களை விரித்துவைக்கிறது.
சமூக அவலங்களுக்கான எதிர்ப்பினை பதிவுசெய்கிறது.
தத்துவ வெளிகளும் தலைகாட்டுகிறது.
முற்றிய இளமையின் முத்தமுற்றத்தை
சத்தியவாக்குகளால் சமைத்துவைத்திருக்கிறது.
*
இது வெற்றியின் முகம்.
இந்நூலில்....கவிஞர்...
தலைப்புகளைக் கவிதைக்குள் வைத்துத்
தேடாமலேயே தலைகாட்ட வைக்கிறார்.
*
கிராமத்துத் தடங்களை கவிப்படமாக்கியவர்
"இவையாவும் இருந்தனவென்று
சாட்சி சொல்ல
இன்றும் நிமிர்ந்து நிற்கிறது
என் கிராமத்துச் சுமைதாங்கிக் கல் "
என்று சுமைதாங்கிக்கல்லில் தன் கவிப்படக் கருவியை நிறுத்துகிறார்.
அவர் நிறுத்திய இடத்திலிருந்து நம்மை ஓடவைக்கிறார்.
"மரங்கொத்தியின்
பொந்துக்குள்
கிளைகளின் வாழ்க்கை " என்று
வாழ்வானுபவத்தை விரித்துவைக்கிறவர்
"இரவின் மடியில்
உலகின்
பகல்பொழுது "
என்பதில் நம்மைத் தேடவைக்கிறார்.
*
ஒரு நீர்த்தேக்கத்தைப் பார்த்தபடி படம்பிடித்துக்கொண்டே வந்தவர்
. "நீர்த்தேக்கத்தில் எனது
எண்ணப்பறவைகள் மட்டும்
கானல்நீரை அருந்திக்கொண்டிருந்தன"
என்று கவிதையை நிறைவுசெய்கிறார்.
நிறைவுறாத நீர்த்தேக்கத்தில் நம்மை நிறுத்தி வைக்கிறார்.
*
முதிர்கன்னிகளைப் பேசவந்தவர்,இளைய தலைமுறைக்கு வேண்டுகோள் வைக்கிறார்
முதிர்கன்னியாய் முகமழியும் மகளிருக்காக
'நடக்கமுடியாத நதிகள்
பூகோள நிலப்பரப்பில் வேண்டா!
புதியதோர் உலகு செய்வோம் "
என்று புதிய நெம்புகோல்களுக்குப் புத்தாக்கம் தருகிறார்.
*
ஒரு கவிதையில்
"தன்னைத் தேர்ச்சக்கரத்தில்
ஏற்றும்படி காத்திருக்கிறான்
மனுநீதிச் சோழன்
நீதிமன்றத்தில் '
என்று
கழுவில் ஏற்றப்படும் நியாயங்களைக்
காண வைக்கிறார்.
*
" அடையாளத்தைத் தொலைத்த
வீட்டருகில்
ஓர் அஞ்சல்பெட்டி
முகவரியைக்
கொடுத்துக்கொண்டிருக்கிறது"
இந்தக் முகவரி நம்மை நெடுநேரம் நிற்கவைத்துவிடுகிறது.
*
இப்படி நூறு கவிதைகள்.
நூறு கவிதைகளிலும் நூற்றுக்கணக்கான கவிதைகள்.
*
சுருங்கக் கூறின்
அணிந்துரையில் தமிழ்நாடன் குறிப்பிட்டிருப்பதுபோல்
கவிச்சுடர் தன் திசைகளை அகலப்படுத்தியிருக்கிறது.
"அண்மைக்காலத்தில் வந்த தொகுப்புகளில் ,செறிந்த கவிதைத் தொகுப்பு என என்னால் எந்தச்சபையிலும் பரிந்துரைக்க முடியும்"
என்று ஆரூர் தமிழ்நாடன் முன்மொழிந்திருப்பதை நான் வழிமொழிகிறேன்.
அனைத்துக் கவிதைகளையும் சொல்ல ஆசைதான்.
அந்த ஆசையை நீங்கள் நூல்வாங்கி நிறைவுசெய்துகொள்ளுங்களேன்.
*
இந்நூலை
கவிஓவியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
மயிலாடுதுறை இளையபாரதியின் நேர்த்தியான வடிவமைப்பு எப்போதும்போல் இப்போதும் சிறப்பு !
வெல்க !
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
கவிஓவியா வெளியீடு
68/21,திருவள்ளுவர் தெரு
அன்பழகன் நகர்,செம்பியம்,சென்னை --11
எண் :9840912010
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

No photo description available.

Image may contain: கவிச்சுடர் கா.ந. கல்யாணசுந்தரம், beard

1 கருத்து:

  1. ஐயா இந்த புத்தகம் எனக்கு வேண்டும் ...
    அதன் அணிதுரை மிகவும் என்னை கவர்ந்தது ...
    அதை விட அந்த கானல் நீர் கவிதை அடடே
    கற்பனையின் உச்சம் ...

    பதிலளிநீக்கு