கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

வெள்ளி, ஜனவரி 27, 2012

இந்தக் காதல் எதுவரை?
















புரிதலின் பயணிப்பில் நேசிப்பு பூத்துக் குலுங்கும்
நினைவுகளில் தேன்சொரிந்து இதயம் குளிரும்
வாசமிகு வாழ்வுக்கான வசந்த வாயில்கள்
வழியெங்கும் வரவேற்கும் - ஆம்
இதுதான் காதலின் மேன்மையென உள்ளங்கள்
ஒரு புரியாத ஸ்பரிசத்தில் பரவசப்படும்!
மார்கழிப் பனி பாவையர்க்கு உன்னத நோன்பானது
சூடிக்கொடுத்தவளின் திருவாயால்!
பயணிப்பின் எல்லை பயணிக்கும் திசையில்
ஒரு இடமறிந்த உண்மை!
நேசிப்பின் நடை இருமனங்களின்
எல்லையற்ற தூரத்தின் விளிம்புகள்!
வயதின் மூப்பிலும் வியப்பின்றி விருந்துவைக்கும்
இல்லத்துணையின் ஈடற்ற அன்பே காதல்!- இந்தக்
காதல் எது வரை? ....எனக்கேளின்....
துளிர் விடும் மனம் முதல் துவளும் நாள் வரை
துணைவருமே காதல் மாசற்ற முகத்துடன்...!
எனச் சொல்வோம் நேசமுடன் எந்நாளும் !


..........கா.ந.கல்யாணசுந்தரம்.

( நன்றி: ஈகரை)

தூரத்து உறவுகள் எப்போதும் ......

உறவுகளில் உன்னதமென்று
மாதா, பிதா. குரு தெய்வமென முன்னோர்கள்
அந்நாளில் கண்டறிந்த உண்மை!
அகல உழுவதிலும் ஆழ உழும் விவசாயி
கொண்டிருக்கும் உறவோ விளை நிலமீது!
நெய்யும் தொழிலுக்கு நிகரில்லையென
நெசவாளியின் உறவோ நெய்யும் தறி மீது!
உண்ண உணவு உடுக்க உடை
இவ்விரண்டும் கிடைத்தபின்
இருக்கும் இடம்தான் இன்றியமையாதது!
இடர் அகற்றி இனிதே தங்க
வீடென்பது விதிவிலக்கல்ல வாழ்வுக்கு!
உறவுகளின் மேன்மை சுற்றத்தாரோடு
முடிவதில்லை மானுட வாழ்வில்!
கற்றறியா சிற்பி கல்லுடன்
உளிகொண்டு உறவாடலில்
உன்னத சிலை வடிக்கும்
அற்புதம் காண்கின்றோம்!
உறவுகள் அண்மையில் இருப்பினும்
சேய்மையில் இருப்பினும்
மேன்மை காண்பதில்
இருக்கிறது மனிதநேயம்!
உவர்ந்து கசந்த போதிலும்
தூரத்து உறவுகள் எப்போதும்
இனிப்பதுண்டு பலாச்சுளையாய்......
பிரிவின் நிழலில் !

...........கா.ந.கல்யாணசுந்தரம்.

புதன், ஜனவரி 18, 2012

இனிய தமிழ் இனி

அகரம் பயின்ற நாள் முதலே
அன்னைத்தமிழில் பேசும் கலை கற்றோம்!
ஆன்மிகம் வளர்த்த இன்தமிழ்
ஆலம் விழுதாய் நிலமதில் நிலைத்தது!
இதழியல் வரலாற்றில் இமயம் தொட்டு
இணைய தளத்திலும் தடம் பதித்தது!
ஈதலும் இசைபட வாழ்தலும் நம் தமிழர்
ஈடிலா கொள்கையாய் சிரமேற்கொண்டனர்!
உலகின் மொழிகளில் செம்மொழியென
உன்னத இடம் கொண்டு உலவுகிறது!
ஊருணி பலருக்கும் உதவுதல் போல்
ஊக்கமுடன் நம் அறிஞரெல்லாம் செயல்படுவர்!
எங்கும் தமிழே முழங்கக் கேட்போம்
எதிலும் தமிழே வழங்கக் கேட்போமென
ஏங்கும் இளைஞர் அயராதுழைப்பர்!
ஏற்றமிகு சொல்வனத்தில் புவியெங்கும்
ஐயமின்றி தேன்பொழியும் மணமலறாய்
ஐயன் வள்ளுவன் திருவடி குறள் சிறக்க
ஒப்பிலா மொழியிதுவென உலகு மொழிகளை
ஒருங்கிணைத்து எபோதும்
ஓங்கு புகழுடன் இனியத் தமிழினி
ஔவை முதல் இன்றைய கவிகள் வரை
புகழ் சேர்த்து புவிமீது ஓயாது உலவும் !
............கா.ந.கல்யாணசுந்தரம்.

(nanri: eegarai.net)

நடக்க முடியாத நதிகள்
















பலவீனத்தின் குறியீட்டில் ஒரு பாலின மனிதம்!
அது பெண்மையெனும் மலரினையொத்த
மெல்லிய பூங்காற்று! - ஆம் நிலமதில்
ஒரு நூல்கண்டு வேலியில்
ஓடி விளையாடும் நூலறுந்த பட்டங்கள்!
பெண்ணியம் பேசுகின்ற பெண்டிரெல்லாம்
புரிதலான வாழ்வுக்கொரு வழி தந்தால்
பாரத மண் மீது பெண்மைக்கொரு பெருமைதான்!
உளவியலை ஆராயாமல் உடலியலில்
ஆவல் கொண்டு மணம்புரியும் மாந்தரெல்லாம்
நல்லதொரு வீணையை நலங்கெட புழுதியில்
எரிவதைக் காணுகின்றோம்!
விலைகேட்டுப் போனார்கள் திரும்பவில்லை - என்
வினைக்கூர்றின் மணநாளும் அரும்பவில்லையென
முதிர்கன்னியாய் முகமழியும் மகளிரைக் காணுகிறோம்!
பாரினில் பெண்கள் சட்டங்கள் ஆளினும்
வரதட்சணை நவீனமாய் உருவெடுத்து ஆள்கிறதே!
கலியுக இளைய தலைமுறையே......
நல்லதோர் முடிவெடுங்கள் இனிமேலும்
நடக்க முடியாத நதிகள்
பூகோள நிலப்பரப்பில் வேண்டாம்!
புதியதோர் உலகு செய்வோம்!

........கா.ந.கல்யாணசுந்தரம்.

(ஈகரை தமிழ் களஞ்சியம் - இணையதளத்தில் பரிசு பெற்ற கவிதை)

சனி, ஜனவரி 14, 2012

பொங்கலிடு பொங்கலிடு !

தை மகளின் வரவு - நல்ல
தமிழிசையின் உறவு!
புத்தரிசி பொங்கலிட்டு
புத்தாடை அணிந்து
மண்ணின் மணம் கமழ
பாடுகின்ற நாளிது!
உழைப்போரின் உளம் மகிழ
உன்னத இயற்கையின்
இறையருள் நாளிது!
பொங்கலிடு பொங்கலிடு !
புதிய வாழ்வின் பூமணக்கும்
பொங்கலிடு!
மனிதநேயமுடன் பொங்கட்டும்!
தமிழர்தம் வாழ்வு உலகளவில்
தழைக்கட்டும்!
பொங்கலிடு பொங்கலிடு !
மனிதநேயப் பொங்கலிடு!
தமிழ்ப் புத்தாண்டின் வரவு கண்டு
தமிழ் கூறும் நல்லுலகு செழிக்க
பொங்கலிடு!

......கா.ந.கல்யாணசுந்தரம்.

ஞாயிறு, ஜனவரி 08, 2012

ஆருத்ரா தரிசனம் - ஆடல் காணீர்!

சபைகள் ஐந்திலும் திருவடி கண்டேன்!
நடனமிடும் பொற்பாத காட்சி - அது
காண்போரின் இப்பிறப்பின் மாட்சி!
திருவாதிரை திருநாளின் அற்புத நடனம்
ஒருநாளும் மறவாத ஆருத்ரா தரிசனம்!

ஓம் நமச்சிவாய! ஓம் நமச்சிவாய! ஓம் நமச்சிவாய ஓம்!

அம்பலத்து ஆடும் நடராஜரைத் தரிசிக்கச் சென்றால், அவரது இடது திருவடியை அவசியம் தரிசிக்க வேண்டும். ஏனெனில், அந்த தரிசனம், நம் பாவங்களை எல்லாம் போக்கி, சொர்க்கத்தை தந்து விடும். மேலும், தீர்க்காயுளையும் தரும்.

சிவபக்தரான மார்க்கண்டேயருக்கு, 16 வயதில், ஆயுள் முடிந்து விடும் என்ற நிலை இருந்தது. இதனால், அவரது தந்தை, மிகுந்த வருத்தத்தில் இருந்தார். குறிப்பிட்ட நாளில், எமன் வர, தன் பிரிவால், தந்தை துக்கப்படக் கூடாதே என்பதற்காக, சிவலிங்கத்தை கட்டி அணைத்துக் கொண்டார். லிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட சிவனின் இடது கால், எமனை எட்டி உதைத்தது. மார்க்கண்டேயன் தப்பித்தார். அந்த திருவடி பட்டதால், எமனுக்கும் மீண்டும் உயிர் கிடைத்தது.

இப்படிப்பட்ட சிறப்புக்குரிய நடராஜர், தமிழகத்தில், ஐந்து சபைகளில் அருள் பாலிக்கிறார். ரத்ன சபையான திருவாலங்காடு, பொன்னம்பலமான சிதம்பரம், வெள்ளியம்பலமான மதுரை, தாமிர சபையான திருநெல்வேலி, சித்திர சபையான குற்றாலம் ஆகியவை, அவரது அருளை வாரி வழங்கும் ஸ்தலங்கள். ஆருத்ரா தரிசனத்தன்று, உங்கள் ஊரிலுள்ள நடராஜரின் திருவடி தரிசனம் பெற்று, வாழ்க்கைத் துணைவியை இன்முகத்துடன் நடத்துங்கள்; தீர்க்காயுளும் பெறுங்கள்.





சிதம்பரம் கனகசபை : (பொற்சபை)
























திருவாலங்காடு இரத்தின சபை :
















மதுரை வெள்ளியம்பலம் :













திருநெல்வேலி தாமிர சபை:















திருக்குற்றாலம் சித்திர சபை:













எல்லா வளமும் அருளும் பெற்று அனைவரும் வாழ்க வளமுடன் என்று இறைவனை துதிக்கிறேன்!




அன்பன், கா.ந.கல்யாணசுந்தரம்.

புதன், ஜனவரி 04, 2012

நெஞ்சைத் தொடும் கவிதைகள்.....











இசை அறியா உள்ளத்தையும்

செயலிழக்கச் செய்கிறது...

கொலுசுச் சத்தம்!


காய்க்க முடியாது தவிக்கும்

காகிதப் பூக்களாய்...

விலை மகளிர்!


என்றும் பசுமையாய்

நினைவில் நிற்கிறது...

பாடசாலை அனுபவங்கள்!


இனியவை பேசி

இன்னல் அகற்றுதல்...

மனிதநேயத்தின் அஸ்திவாரம்!


புரட்டிப் பார்ப்பதைவிட

என்னை படித்துப்பாருங்கள்...

ஏங்கிடும் புத்தகங்கள்!


............கா.ந.கல்யாணசுந்தரம்.








சனி, டிசம்பர் 31, 2011

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...


இரண்டாயிரத்து பன்னிரண்டு
அனைவருக்கும் இனிய ஆண்டு !
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
இயற்கை வளமுடன் என்றென்றும்
மானுடம் இனிதே வாழ்ந்து
சமுதாய முன்னேற்றம் காணும்!
நாடும் வீடும் பயனுறும் வண்ணம்
நன்மை மலிந்திடும் ஆண்டு!
பொன்னொளிர் வாழ்வில் அனைவரும்
நிம்மதி பெற்று நித்தம் மேன்மையுற
மனதார வாழ்த்துகிறேன்
இறைவனை வேண்டி !
வாழ்க வளமுடன்!
எல்லாப்புகழும் இறைவனுக்கே!

அன்பன், கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, டிசம்பர் 30, 2011

வலியறியாத...





நதி வருடிய கைகளின்
வலியறியாத...
கூழாங்கற்கள்!

......கா.ந.கல்யாணசுந்தரம்

மலரும் மங்கையும்



மலரும் மங்கையும்
ஒரு ஜாதியானதால்....
பட்டாம்பூச்சியின் சுவாசமானது!

....கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், டிசம்பர் 29, 2011

ஒரு பனிபொழியும் காலை


ஒரு பனிபொழியும் காலை
மேகப் போர்வைக்குள் ...
முடங்கிப்போனது சூரியக் கதிர்கள்!

...கா.ந.கல்யாணசுந்தரம்.

தவமாய் தவமிருக்கும்


தவமாய் தவமிருக்கும்
கூட்டுப்புழுவின் காத்திருப்பு....
ஒரு வண்ணமயமான வாழ்வுக்கு!

.......கா.ந.கல்யாணசுந்தரம்.

ஞாயிறு, டிசம்பர் 25, 2011

பெத்தலகேம் நகரின் புனிதமே..!






பெத்தலகேம் நகரின் புனிதமே!
அன்னை மரியாளின் அவதார புதல்வனே!
ஆண்டவனின் தூதனே....
கல்வாரிகுன்றின் முள் முடியரசனே!
அன்பும் கருணையும் ஈகையும்
உந்தன் பிரவிக்குணங்கள்!
உலகத்தின் பிறப்புகள் உந்தன்
வருகையால் புனிதம் பெற்றன!
வேதம் பைபிளில் சங்கீதமானது!
ஒரு கன்னத்தில் அறைந்தால்
மறு கன்னம் காட்டு என
மனிதநேயம் கற்பித்த மகாத்மாவே!
அடைக்கலமே உனது அபயகரம்!
உனது பிறந்தநாள் உலகில்
எல்லோர்க்கும் ஒரு புனிதநாள்!

..........கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, டிசம்பர் 23, 2011

சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்



















கால் வயிற்று கஞ்சிக்கு
கயிற்றில் அந்தர வாழ்க்கை...
தூக்கிலிடு சமுதாயத்தை !

அன்றாடத் தேடல்களில்
கேள்விக்குறியானது...
பாரம் சுமக்கும் முதுகு!

கல்வியறிவை
தானமாய்க் கொடுப்போம்...
அவலத்தில் வாழும் சிறார்களுக்கு !

பசியற்ற வாழ்வுக்கு
நல்லதோர் சுவர்தேடும்...
கரித்துண்டு ஓவியன்!

வெற்றிடம் இல்லாத
நிறைந்த வயிற்றுடன்...
பலூன் விற்பவன்!

வாழ்க்கை வெளிச்சமின்றி
நகரும் விளக்குத்தூண்கள்...
திருமண ஊர்வலத்தில்!

மதம் பிடித்த யானைகளாய்
சமுதாய சீர்கேடுகள்...
தேவை அங்குசக் கவிஞர்கள்!

...........கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், டிசம்பர் 22, 2011

உலகம் அழியும் இது மயனின் வழி.....


டிசம்பர் இருபத்து ஒன்று 2012
உலகம் அழியும் நாள்....
இது மயன் நாட்காட்டியின் எல்லை!
கடல் கொந்தளித்து சுனாமி வரலாம்...
எரிமலைகள் வெடித்து சிதறலாம்...
வேற்று கிரகங்களில் இருந்து
புதிய விண்வெளிக்கலன்களின் தாக்குதல்
இருக்கலாம்....
சூறாவளிப் புயல்களால் நாடு உருக்குலையலாம்....
சூரியனின் ஒளிக்கதிர்கள் மறைந்துபோகலாம்....
கடல்மட்டம் உயர்ந்து நிலங்களை
கபளீகரம் செய்யலாம்....
விண்மீன்களின் பாதைகள் மாறி
கிரகங்களின் மீது மோதி பூமியை தாக்கலாம்....
மொத்தத்தில் கலியுகம் முடியும் நாள்
டிசம்பர் 21 , 2012 ............................................
இப்படியெல்லாம் தகவல்கள்
தொலைக்காட்சிகளிலும்,
மேலைநாட்டு பத்திரிகைகளிலும்
இணையதளத்திலும் செய்திகள்..........
அறிவியல் வல்லுனர்கள்,
வானியல் ஆராய்ச்சியாளர்கள்
ஜோதிடர்கள், பாதிரியார்கள், சாதுக்கள்
இப்படியாக பலர்
அமானுஷ்யமாக பட்டும் படாமலும்
ஆமோதித்து பின்பு சாத்தியமில்லை என்றும்
சொல்கின்றனர்..........
இப்படியாக நான் இந்த செய்திகளை உள்வாங்கி,
சிந்தித்து நாற்காலியில் அமர்ந்திருந்தேன் !
என் கவனத்தை திசை திருப்பி
எங்களின் பெயர்த்தி சொன்னாள்.....
"இனிமே ஒரு வருஷம் என்பது
ஆறு மாதங்கள்தான் !
அப்போ நான் நிச்சயமா
நூறு வயசுக்குமேல் வாழ்வேன்...!"
சிரித்துக்கொண்டே சொன்ன சிறுமியின்
அமானுஷ்ய வார்த்தைகளில் சிக்குண்டு
அந்த மயன் நாட்காட்டியை
என் நினைவில் இருந்து
கழற்றி எறிந்தேன்!
மானுடம் வெல்லும் என்று எண்ணியவாறே!

........கா.ந.கல்யாணசுந்தரம்.

திங்கள், டிசம்பர் 19, 2011

வாழ்க்கைப் படகு!























பயணங்களில் எப்போதுமே
வெற்றி நிச்சயம் என்று
சொல்லமுடியாது!
இதுதான் இலக்கு என்று
பயணிப்பவர்களுக்கு கூட
படிக்கற்கள் தடைக்கல்லாய்
மாறியதுண்டு!
விட்டுக்கொடுக்கும்
பண்பானவர்களும்
வீதியில் நிற்கும் அவலங்கள்
அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது!
ஒரு நாணயத்தின்
இருபக்கங்களாய் மானுடம்
இந்த கலியுகத்தில்
வெற்றித் தோல்விக்கு மத்தியில்
பந்தாடப்படுகிறது!
ஓ.....மறைந்துபோகும் மானிடனே
மறந்துவிடாதே.....!
இந்த பிறவிக்கடலில்
எப்போதாவது சந்திக்கும்
வாழ்க்கைப் படகின்
வெற்றிப் பயணத்தில்
உன்னுடன் பயணிக்கின்றன...
தோல்வியின் துடுப்புகளும்!

..........கா.ந.கல்யாணசுந்தரம்.

ஒளிமயமான பசுமைக்காலம் - ஹைக்கூ

















பயணிக்கும் திசையில் மட்டுமில்லாமல்
வாழ்நாள் முழுவதும் வேண்டும் ...
ஒளிமயமான பசுமைக்காலம் !

ஞாயிறு, டிசம்பர் 18, 2011

வாழ்வியல் சிந்தனைகள் - ஹைக்கூ




பிரித்து எழுதி
பொருள் கூற முடியாது...
நட்பின் இலக்கணம்!




அடுத்தவேளை
உணவுக்கில்லை...
சமைந்தாள் மகள்



பாலில் நெல்
கலந்தபோது....
பதறியது பாலாடை!

சனி, டிசம்பர் 17, 2011

ஆண்டாள் நாச்சியார்





















மார்கழித் திங்களில் மங்கையரெல்லாம்-திரு
மாலவன் பாதம் போற்றி
பாவை நோன்பிருப்பார்!
திருப்பாவை முப்பதும் செப்புகிற பாவைக்கு
திருமண நன்னாள் எளிதில் கைகூடும்!
ஆண்டாள் நாச்சியார் நவின்ற திருப்பாவை
அழகு தமிழில் இனித்திடும் தெள்ளமுது!
புனித மாதமாம் மார்கழியில் அவர் திருநாமம் போற்றி
பயனுறுவோம் புவிமீது!

......கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், டிசம்பர் 15, 2011

உறவுகளோடு உறவுகளின் பயணிப்பு














சந்தணப் பொட்டிட்டு மாலை அணிவித்து
மாப்பிள்ளையை வரவேற்கும்
மைத்துனராக மணமகளின் சகோதரன்!
மணப்பெண்ணின் அலங்காரத்தில்
முழுதுமாய் அக்கறை செலுத்துகின்ற
தாய் வீட்டு சொந்தங்கள் !
புதிய உறவில் தடம் பதிக்கும்
சம்பந்திகளின் சம்பந்த நலுங்கு!
மணப்பந்தலில் கைவிளக்கேந்தி நிற்கும்
நாத்தனாராக மணமகனின் சகோதரி !
மங்கல நாண் அணியும்முன்
மணமகளை மடிமீது
அமர்த்திகொள்ளும் தாய் மாமன் !
அட்சதை அனைவரிடமும் கொடுத்து
மங்கல மனைமாட்சிக்கு
ஆசி கேட்கும் மாமன் மைத்துனர்கள் !
சீர்வரிசை முறையாக
கொடுத்து மகிழும் தாய் !
மருமகன் மருமகளை தன்மக்களாக
ஏற்றுக்கொள்ளும் மாமனார் மாமியார் !
கணவனே கண்கண்ட
தெய்வமென்று மனைவியும்…
மனைவி சொல்லே
மந்திரமென கணவனும்….
மாதா பிதா குரு
தெய்வமென பிள்ளைகளும்…..
இப்படியே உறவுகள் நமது பயணிப்பில்
இறுதிவரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது….
பாசம் எனும் முகமூடி அணிந்தவாறே..... !


.......கா.ந.கல்யாணசுந்தரம்