கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

சனி, மே 13, 2017

வைகையாற்று நாகரீகம் !




வைகையாற்று நாகரீகம் !
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இந்தியாவின் தொன்மையைப் புரட்டிப்போட்டது
தமிழனின் வைகை ஆற்று நாகரீகம் !
ஆம்....கீழடி அகழ்வாராய்ச்சி
ஐந்தாயிரத்து எட்டுநூறு பாரம்பரிய கலாச்சார
பொருட்களின் கண்டுபிடிப்பு !
சங்ககாலத்து பரிபாடல் மதுரைக்காஞ்சியின்
தொன்மைப் பொருட்களின் களஞ்சியம் !
பட்டினப்பாலையில் உலாவரும் உறைகேணிகளும்
இருந்திட்ட தடயங்களின் இருப்பிடங்கள் !
தமிழ்ப் பிராமி எழுத்துகளால் ஆன மண் ஓடுகள்...
சிந்துசமவெளி ஹரப்பா நாகரீகத்துக்கு இணையான
தொல்லியல் நாகரீகமாய் விரிகிறது தமிழனின்
மண் சார்ந்த உயரிய நாகரீகம் !

பாதியிலே மத்திய அரசு நிறுத்தியதன் விளைவில்
முடங்கிப்போனது தமிழனின் தொல்லியல் வரலாறு !
மதம் சாரா தமிழனின் வாழ்வு முறை
முத்தாய்ப்பாய் விளங்குவதால் மதவாத அரசியல்தான்
முட்டுக்கட்டைப் போட்டதோ ?
நெஞ்சுரமில்லா தமிழக அரசியலார் இருப்பிடத்தில்
தொல்லியலார் அமர்நாத்தின் பணியிடை மாற்றம்
நிகழ்ந்ததில் வியப்பென்ன ?
பழந்தமிழர் வரலாற்று இலக்கிய வாழ்வு
கிமு இரண்டாம் நூற்றாண்டை முந்தியது என
வைகை நதி நாகரீகம் இயம்புகிறது !
அகழ்வாராய்ச்சி அரை குறையாய் நின்றாலும்
மூடி மறைக்க முடியாது தமிழர்தம் தொன்மையை !


............கா.ந.கல்யாணசுந்தரம்  

வெள்ளி, மே 05, 2017

அறிவோம்...மூவரியில் புறநானூறு- 5 **************************************************

அறிவோம்...மூவரியில் புறநானூறு- 5
************************************************************
• மூவேந்தர் சூழ்ச்சியில் மாண்டான்
 பறம்புமலை வேந்தன் 
வள்ளல் பாரி மன்னன்
• அந்த நிலாக்காலத்தில்
இழக்கவில்லை பறம்புமலையும் பாசமிகு தந்தையையும்

• இந்த நிலாக்கால வெண்ணொளியில்
இழந்து வாடுகிறோம்
 எங்களது குன்றுடன் தந்தையையும்
• கபிலரின் அரவணைப்பில்
தந்தையை இழந்த
பாரிமகளிர் அங்கவை சங்கவை
• கபிலரை இழந்த பாரிமகளிருக்கு
நல்லறமோடு இல்லறம் காட்டினார்
 ஔவை மூதாட்டி
..........கா.ந.கல்யாணசுந்தரம்
அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில்
எந்தையும் உடையேம்; எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவில்
வென்றெறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே !
(புறநானூறு – 112) .......... பாரி மகளிர் அங்கவை சங்கவை

அறிவோம்...மூவரியில் புறநானூறு- 4

அறிவோம்...மூவரியில் புறநானூறு- 4
************************************************************
பிறப்புநிலை காணாது நற்கல்வி கற்றோர் சிறப்படைவர்... 
அன்னை முதல் அரசன் வரை !
.......கா.ந.கல்யாணசுந்தரம்
உற்றுழி யுதவியு முறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்ற னன்றே
பிறப்போ ரன்ன வுடன்வயிற் றுள்ளும்
சிறப்பின் பாலாற் றாயுமனந் திரியும்
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக வென்னா தவருள்
ஆறிவுடை யோனா றரசுஞ் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
கீழ்ப்பா லொருவன் கற்பின்
மேற்பா லொருவனு மவன் கட்படுமே.
(புறநானூறு - 183...........
பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்)


புதன், மே 03, 2017

அறிவோம்...மூவரியில் புறநானூறு – 3

அறிவோம்...மூவரியில் புறநானூறு – 3
******************************************************
* போரில் தோற்று சங்கிலியால்
பிணைத்து சிறைப்படுத்தப்பட்டான்
செங்கணான் நாட்டில் சேரமான்
* யாசித்து பருகும் நீர்வேண்டேன்
தன்மானத்தோடு இறந்தான் சிறையில் ...
சேரமான் கணைக்கால் இரும்பொறை !
* இறந்து பிறந்த குழந்தையோ
 தசைப் பிண்டமோ புதைக்கப்படும்
வீரமிகு வாளால் கீறி !
..........கா.ந.கல்யாணசுந்தரம்
குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்,
ஆள் அன்று என்று வாளின் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்,
மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணியத்,
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோ, இவ் உலகத் தானே?
(புறநானூறு-74)
பாடியவர்: சேரமான் கணைக்கா லிரும்பொறை

அறிவோம் மூவரியில் புறநானூறு - 2

அறிவோம் மூவரியில் புறநானூறு - 2
****************************************************
புலிபோகிய கல்குகையே தன்வயிறு
பெருமை நவிலும் வீரத்தாய்...
போர்க்களம் தோன்றும் வீரமகன் !
.........கா.ந.கல்யாணசுந்தரம்
(புறநானூறு: 86)
(சிற்றி னற்றூண் பற்றி நின்மகன்
யாண்டுள னோவென வினவுதி யென்மகன்
யாண்டுள னாயினு மறியே னோரும்
புலிசேர்ந்து போகிய கல்லளை போல
ஈன்ற வயிறோ விதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே !
.............காவற்பெண்டு )

அறிவோம்...மூவரியில் புறநானூறு – 1



அறிவோம்...மூவரியில் புறநானூறு – 1
*******************************************************

முரசுகட்டிலில் புலவன் மோசி கீரனார்
கவரிகொண்டு வீசினான்.....
மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறை !

..........கா.ந.கல்யாணசுந்தரம்

" மாசு அற விசித்த வார்புறு வள்பின்
மை படு மருங்குல் பொலிய, மஞ்ஞை
ஒலி நெடும் பீலி ஒண் பொறி மணித் தார்,
பொலங் குழை உழிஞையொடு, பொலியச் சூட்டி,
குருதி வேட்கை உரு கெழு முரசம்
 மண்ணி வாரா அளவை, எண்ணெய்
நுரை முகந்தன்ன மென் பூஞ் சேக்கை
அறியாது ஏறிய என்னைத் தெறுவர,
இரு பாற்படுக்கும் நின் வாள் வாய் ஒழித்ததை
அதூஉம் சாலும், நல் தமிழ் முழுது அறிதல்;
 அதனொடும் அமையாது, அணுக வந்து, நின்
மதனுடை முழவுத்தோள் ஓச்சி, தண்ணென
வீசியோயே; வியலிடம் கமழ,
இவண் இசை உடையோர்க்கு அல்லது, அவணது
உயர் நிலை உலகத்து உறையுள் இன்மை
 விளங்கக் கேட்ட மாறுகொல்
வலம் படு குருசில்! நீ ஈங்கு இது செயலே?"

(புறநானூறு - 50) .......மோசி கீரனார்

புதன், டிசம்பர் 21, 2016

ஹைக்கூ நூற்றாண்டு - தமிழ் ஹைக்கூ கவிதைகள்









மனசெல்லாம் ஹைக்கூ கவிதை நூல் வெளியீடு

" மனசெல்லாம் " ஹைக்கூ நூல் வெளியீட்டின் போது சேலம் வாசகன் பதிப்பகத்தாரால் வழங்கப்பட்ட " எழுத்துச் சிற்பி " விருது. விருது வழங்குபவர் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் திரு.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் அருகில் எழுத்தாளர் பதிப்பாசிரியர் திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள்.

புதன், அக்டோபர் 19, 2016

ஞாயிறு, செப்டம்பர் 18, 2016

நவயுக பெண்தான்..........

·        முன்னோர் வகுத்த 
     நெறிமுறையில் ஒரு
மரபின் கலாச்சாரம்

·        சுமைகளின் பகிர்வால்
ஒரு புரிதலின் உண்மை
பூத்துக் குலுங்கும்

·        உனது நிராகரிப்பு இருப்பின்
வக்கிரங்கள் அரங்கேறலாம்
கலந்துரையாடலே விடிவெள்ளி

·        பருவத்தின் பாரம்பரியம்
காதல் வயப்படுதல்
அது ஒருதலையாகவும் இருக்கலாம்

·        அன்போடு நிலைப்பாட்டை
எடுத்தியம்பு
இல்லையேல் காலம்தாழ்த்தாது
காவல்துறையை அணுகு

·        உன்னைப் பின்தொடர்பவர்கள்
எதற்காக என்பதறிவாய்
பாதுகாப்பு வளையத்துக்குள்
வாழக்  கற்றுக்கொள்

·        நவயுக பெண்தான்
ஒப்புக்கொள்கிறேன் ....
நண்பனை தேர்வுசெயும்முன்
ஆய்வுசெய் அவனது நட்புகளை !


........கா.ந.கல்யாணசுந்தரம், சென்னை.

திங்கள், செப்டம்பர் 12, 2016

" கா " விரித்த நீர் இப்போது.........






வங்கிகளை
நாட்டுடமையாக்கியதுபோல்
தேசியமயமாகட்டும்
இந்திய நதிகளும் அணைகளும் !
அரசியல் செய்வோர் அதிகாரமின்றி
தேசிய நதித்துறை
நடுநிலையோடு இயங்கட்டும் !
இந்திய மண்ணின் விளைபொருட்கள்
உலக மாந்தர் நல்வாழ்வின்
உணவுப் பொருட்கள் எனவறிந்து
நீரின்றி அமையாது உலகென்று
உணரும் நாள் எந்நாளோ ?
அணை தேக்கிய நீர்....
நதிநீர் வழிகளுக்கே
சொந்தமென அறிந்திடுவீர் !
" கா " விரித்த நீர் இப்போது
ஆற்றுக்குள் இல்லை....
அது கர்நாடகம் செல்ல
ஓர் மணல் வழிப் பாதையானது !
..........கா.ந.கல்யாணசுந்தரம்

ஞாயிறு, செப்டம்பர் 11, 2016

நவீனத்துவம் ஒரு நகர்தலோடு....




அந்த ஓவியத்துக்குள் 

என்னதான் இருக்கிறது ?
பின்நவீனத்துவ சிந்தனைகளில் 
பிறப்பெடுத்த வடிவமா ?
உதிர்ந்த இறகின் தூரிகையால் 
வரையப்பட்டதா ?
வண்ணங்களின் கூட்டுக் குடும்பமா ?
அப்பிய நிறங்களின் கலவைகளில்
மானுட வடிவங்கள் அம்மணமாய்
ஒரு கோணம் சித்தரித்தது !
பிறந்த மழலைக்கு பாலூட்டும்
அன்னையின் வடிவம் மறுகோணம் !
விரித்த கூந்தலொடு விசும்பும் பெண்ணின்
உருவமெங்கும் சிவப்புத் தழும்புகள்
மொத்தமாய் விசுவரூப தரிசனம்....
அத்தனையும் பின்னிப் பிணைந்திருக்கும்
நவீனத்துவம் ஒரு நகர்தலோடு....
வானரச் சேட்டைகளில்
விழிபிதுங்கும் மந்தியைப்போல்
அங்குமிங்கும் ஓடி அலைந்து
ஒதுக்கப்படுகிறேன்....அந்த
ஓவியக் கண்காட்சி வளாகத்தின்
மூலையில் ...
மனிதநேயமற்ற
ஒரு பிரளயத்தின் வாசம்
இப்போது எனது மூக்கருகில் !
...........கா.ந.கல்யாணசுந்தரம்

புதன், ஆகஸ்ட் 31, 2016

மனம்கொத்திப் பறவைகளின் கூடாகட்டும் !

இருளின் அடர்த்திக்குள்
என்னை முழுவதுமாய்
திணித்துக்கொண்டேன் ...
வெளிச்ச நாட்களின்
வாழ்க்கைப் பக்கங்களை
விளக்கின்றி
படிக்கத் துவங்கினேன்....
திடீரென இருளை
அணைத்துக்கொண்டு
விளக்கொளி உள்ளே
பாய்ந்தது ....
வெளிச்சப் பூக்களை
அள்ளித்தெளித்த
தேவதையாய் இரவின்
கரங்கள் மகிழ்ந்தன...
பகலைவிட இருளை
அதிகம் நேசிக்கிறேன்
காரணம்.....
அப்போதுதான் நெஞ்சம்
மனதின் விசும்பல்களை
அசைபோட்டபடியே
நிம்மதியடைகிறது !
இரவின் கரங்களே....
இப்போதாவது
தெரிந்து கொள்ளுங்கள்
உங்களிடம் இருக்கும்
வெளிச்சஅரும்புகளை
பூக்கவிடாது என்மீது
இருளின் வேர்களை
படரவிடுங்கள்....
அவை எனது
மனம்கொத்திப் பறவைகளின்
கூடாகட்டும் !
.......கா.ந.கல்யாணசுந்தரம்

உதிர்தலின் புனிதம் அறிந்து !

பாதங்களில் மிதியுற்ற 
சருகுகளின் சலசலப்பில் 
எனது பயணிப்பின் திசை
மாற்றியமைகிறது

மணல் தேசமொன்றின்
ஆற்றைக் கடக்க
ஒரு பரிசல் பெண்ணின்
துணையோடு
பயணமானேன்...
மற்றவர்களை மட்டுமே
கரைசேர்க்கும் இவள்
துவண்ட முகத்தோடு
துடுப்புகளால் கையசைத்து
விடைபெற்றாள்

பயனத்திசைகள் எங்கும்
மானுட அவலம்
முடிவின்றி பயணிக்கிறது
மீண்டும் தொடர்கிறேன்
காய்ந்த வனமொன்றின்
சாலையொன்றில்...
இப்போது மௌனித்திருந்தது
சலசலப்பின்றி சருகுகள்
உதிர்தலின் புனிதம் அறிந்து !

........கா.ந.கல்யாணசுந்தரம்.

ஞாயிறு, ஆகஸ்ட் 28, 2016

இல்லறத்தில் நல்லறம் கண்ட நங்கையிவள்



வான்வழி தவழும் நிலவென மழலையிவள்
வாய்முத்தம் சுவைத்திங்கு மகிழ்ந்திடவே....
நிலமதில் பேதையாய் எண்திசையும்
உற்றுநோக்கி வியப்பிலாழ்ந்து நாள்தோறும்  
பெதும்பையாய் தோழியர் பலருடன் ஊஞ்சலாடி.....
காலம் வளர்த்த பயிர் பசுமையுடன் நின்றாடுதம்மா !

கனிமொழி மங்கையிவள் பெண்மையின் சிறப்பறிந்து
நாணித் தலைகுனியும் நங்கையிவள்
கானகத்து வண்ணமயில் பூங்கோதை !  
அன்னநடை பயிலும் மடந்தையின் கைபிடிக்க
மணாளனைத் தேடிப் பெற்றோர் மட்டற்ற மகிழ்வெய்தி
அரிவைப் பருவத்தே பயிர் செய்வர் !

இல்லறத்தில் நல்லறம் கண்ட நங்கையிவள்
கைப்பிடித்த கணவனுடன் தெரிவைத் திறத்தாலே
பேர்சொல்லும் பிள்ளைகளைப் பெற்றெடுப்பர் !
பேரிளம் பெண்ணிவளின் பல்கலை வித்தகத்தால் 
சமுதாயக் கூடமதில் கலாச்சாரத் தூணாக நின்றிடுவாள்
அமுதாக தமிழ் மரபில் இலங்கிடுவாள் குலவிளக்காய் !
     


...............கா.ந.கல்யாணசுந்தரம்

சனி, ஆகஸ்ட் 27, 2016

புத்துலகு கண்டிடுமே பொறுப்போடு !

















தோகை விரித்தாடும்
மயில் போல்
தாவிக் குதித்திடும்
மனது நித்தம் !
புருவவில்லில் 
பார்வைக் கணைகள்
தொடுத்திடும்
ஒரு பருவ யுத்தம் !
வெண்கலச் சிலைபோல்
மேனி மின்னும்
எழிலுரு மாற்றம் தன்னில்...
அறியாது புரியாது
புன்முறுவல் பூக்கின்ற
ஆனந்த மொட்டவிழ்
வசந்த காலம் !
முறைமாமன்
குச்சி நட்டு பந்தலிடும்
மறத்தமிழன்
பண்பாட்டின் நிகழ்விடம் !
பட்டுப் பாவாடையும்
பளபளக்கும் தாவணியும்
பருவத்தின்
வாசலுக்கு மெருகூட்டும் !
மஞ்சள் நீராடி
அகில் சந்தன வாசமுடன்
கொஞ்சுமொழியாளின்
கூடத்து விழாவினில்...
கெஞ்சுகின்ற
விழியோடு காத்திருந்து
தஞ்சமடைந்திடுமே
வாலிப நெஞ்சங்கள் !
மொட்டவிழ் தாமரையாய்
முகம்மலர
நாளொருமேனியும்
பொழுதொரு வண்ணமுமாய் ...
பூப்பெய்திய பருவமினி
பெற்றோரின் அரவணைப்பில்
புத்துலகு கண்டிடுமே
பொறுப்போடு !
...........கா.ந.கல்யாணசுந்தரம்

மனசாட்சியை கூறுபோட்டு

எனது கனவுகளை
பறித்துக்கொண்டு
நிஜங்களை பரிசளிக்க
கடவுள் எதிரே வந்தார்....

இலவசமாய் பெறுவதற்கு
மனம் விரும்பவில்லை
அது விலையில்லா
பொருளாகி என்னிடம்
சோம்பலை தந்தது....
மனசாட்சியை கூறுபோட்டு
அடிமை சாசனத்தில்
கையெழுத்திட வைத்தது....!

காலை எழுந்தவுடன்
மறந்துபோகும் கனவுகளை
மட்டுமாவது விட்டுவையுங்கள்...
மீண்டும் கடவுளிடம்
மன்றாடிக் கேட்டேன் !

கனவுகள் எப்போதும்
இலவசமல்ல
உன்னோடு பிறந்தது ! 
என சொல்லி மறைந்தார்....!
தூக்கம் கலைந்தேன்
அந்த கனவு
மறவா கனவானது !
..........கா.ந.கல்யாணசுந்தரம் 






புதன், ஜூலை 20, 2016

இனி கங்கைக்கரையில்தான் என்று !


அறம் பொருள் இன்பமென
முப்பாலைப் பொழிந்தாய் !
மானுடம் உய்ய உலகுக்கோர்
பொதுமறையை பகன்றிட்டாய் !
செம்மொழியாம் தமிழுக்கு
மகுடமாய் என்றென்றும்உனது திருக்குறளன்றோ !

தன்னலம் கருதா தமிழ்க்காதலன்
தருண்விசையின் முயற்சியில்
கங்கை நதிப்புறத்து நற்றமிழ்
ஆசானாய் நீ கொலுவிருக்கும்
தருணத்தில்......பாவிகள் உன்னை
புறக்கணித்து கருப்புநிற காகிதத்தில்
சுற்றியபடி பூங்காவில் தள்ளினரே !
இன்னா செய்தாரை அவர்நாண
நன்னயம் செய்பவன் நீ......
பொருந்தாது இவையெல்லாம்
இந்நாளில்.....
தமிழினம் கொதித்தெழும்...!
இந்திய தேசியத்தின் நூலென
திருக்குறளை அரசு ஏற்காவிடினும்
சூளுரைப்போம்.....நம் அய்யனின்
திருவுருவம்.....இனி கங்கைக்கரையில்தான் என்று !


.....கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, ஜூலை 15, 2016

நாளொன்றைக் கூறுங்கள்...!!!




தேவைகளை உள்ளடக்கிய
வாழ்வில் அபரிமிதமாக
மனிதம் வாழ்கிறது ...!
பயணிப்பில் இலக்கு
தேவைதான்....
இலக்கின் பாதையில்
தோல்விகள் இருக்கலாம் !
ஆனால் சுயநலத்தின்
முதுகில் சவாரி செய்து
இலக்கினை அடைவதால்
யாருக்கு இலாபம் ?
வெற்றிகளை மட்டுமே
பச்சை குத்திக்கொள்ளும்
மனிதம் எப்போதுமே
அடையாளம் காணப்படுகிறது
ஆம்..............................
சூழலை மறந்த இனத்தோடு !
கொள்கையற்ற அரசியலார்
கால்கழுவி வாழுகின்ற
சுயநலக் கூட்டங்கள்
அவலநிலை மாந்தரின்
அன்றாட வாழ்வுதனை
கூறுபோட்டு விற்கிறது !
எல்லோரும் எல்லாமும்
பெறவேண்டும் !
இங்கு இல்லாமை
இல்லாத நிலை வேண்டும் !
........இதனை மெய்ப்பிக்கும்
நாளொன்றைக் கூறுங்கள்...!!!
.........கா.ந.கல்யாணசுந்தரம்