கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

சனி, மார்ச் 09, 2013

பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகிறோம்

 
 


மொட்டவிழ்ந்த மலர்போல மழலை முகம்
பொட்டிட்டு பூச்சூடி பார்த்தாலே போதும்
கட்டவிழ்ந்த தாழை மலர் போல அழைப்பாள்
கொட்டுகின்ற அருவியென துள்ளி எழுவாள்
குழல்கூட இசைக்காமல் சற்றே நிற்கும்
மழலை இவள் வாய் மொழியில் தோற்கும்
வண்ணத்து பூச்சியென சிறகடித்து வருவாள்
காண்போரின் கையசைப்பில் கண்சிமிட்டி சிரிப்பாள்
முகமறியா போதிலும் மடிமீது வந்தமர்வாள்
கொடிமுல்லைப் பூவாய் மனம் கவர்ந்திழுப்பாள்
வினோத்குமார் கலைவாணி தம்பதியர
பெற்றெடுத்த வாசமிகு பெரும் செல்வம்
எங்களின் ஆசைமிகு பெயர்த்தி பிரணீ த்தா
மழலையிவள் நேசமிகு பிறந்தனாளின்று
உவகையுடன் பாசமிகு மனதுடனே
பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகிறோம்
தாத்தா பாட்டி !
கா .கல்யாணசுந்தரம்
அருள்செல்வி கல்யாணசுந்தரம்
செய்யாறு
09.03.2013



Reply
Forward


சனி, மார்ச் 02, 2013

அடையாளங்கள்





முயல்களைவிட ஆமைகளுக்கு
தெரிந்திருக்கிறது 
பாதையின் அடையாளங்கள்                    

........... கா.ந. கல்யாணசுந்தரம்    

                                                                                                                                                                     

திங்கள், பிப்ரவரி 25, 2013

குறையாத பொக்கிஷங்களாய் !










பனி படர்ந்த புல்வெளி
வெண்மேகம் அணைத்த
மலைமுகடுகள்
நீர் நிறைந்த பரந்த கிராமத்து எரி
வெண்ணிற கொக்குகள்
கூட்டமாய் பறந்து அமரும்
நாற்றங்கால் வயல்கள்
ஒற்றையடிப்பாதையில்
கால்நடைகளின் அணிவகுப்பு
தென்றல் தாலாட்டும்
தென்னை மரங்கள்
மாந்தோப்புக்குள் இசைக்கும்
இளம் குயில்கள்
அருவி கொட்டுதலின் 
சாரல் துளிகள் 
மாலை நேரத்து ஏரிக்கரையில் 
நிழலோவியமாய் 
வீடுதிரும்பும் தொழிலாளிகள் 
இன்னும் எத்தனை எத்தனையோ 
நெஞ்சில் இன்னும் 
வரைபடமாய் எனது ....
கிராமத்து வாழ்க்கையின் 
கையிருப்புகள் !
பிறரிடம் பகிர்ந்தும் 
குறையாத பொக்கிஷங்களாய் !
......கா.ந.கல்யாணசுந்தரம் 

புதன், பிப்ரவரி 20, 2013

பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள்










பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள்

தமிழ்க் காதல்

கமலம் அடுக்கிய செவ்விதழால் - மலர்க்
காட்டினில் வண்டின் இசைவளத்தால்
கமழ்தரு தென்றல் சிலிர் சிலிர்ப்பால் - கருங்
கண்மலரால் முல்லை வெண்ணகைப்பால் - மயில்
அமையும் அன்னங்களின் மென்னடையால் - மயில்
ஆட்டத்தினால் தளிர் ஊட்டத்தினால்
சமையும் ஒருத்தி - அப் பூஞ்சோலை எனைத்
தன் வசம் ஆக்கிவிட்டாள் ஒருநாள்.

சோலை அணங்கொடு திண்ணையிலே - நான்
தோளினை ஊன்றி இருக்கையிலே
சேலை நிகர்த்த விழியுடையாள் - என்றன்
செந்தமிழ்ப் பத்தினி வந்துவிட்டாள்!
சோலை யெலாம் ஒளி வானமெலாம் - நல்ல
தோகையர் கூட்டமெலாம் அளிக்கும்
கோல இன்பத்தை யென் உள்ளத்திலே - வந்து
கொட்டி விட்டாள் எனைத் தொட்டிழுத்தாள்!

மென்காற்றும் வன்காற்றும்

அண்டங்கள் கோடி கோடி அனைத்தையும் தன்ன கத்தே
கொண்ட ஓர் பெரும் புறத்தில் கூத்திடு கின்ற காற்றே!
திண்குன்றைத் தூள் தூளாகச் செய்யினும் செய்வாய் நீஓர்
துண்துளி அனிச்சம் பூவும் நோகாது நுழைந்தும் செல்வாய்! 14

தென்னாடுபெற்ற செல்வம்

உன்னிடம் அமைந் திருக்கும் உண்மையின் விரிவில், மக்கள்
சின்னதோர் பகுதி யேனும் தெரிந்தார்கள் இல்லை; யேனும்
தென்னாடு பெற்ற செல்வத் தென்றலே உன்இன்பத்தைத்
தென்னாட்டுக் கல்லால் வேறே எந்நாட்டில் தெரியச் செய்தாய்? 15

தென்றலின் நலம்
குளிர்நறுஞ் சந்தனஞ் சார் பொதிகையில் குளிர்ந்தும், ஆங்கே
ஒளிர்நறு மலரின் ஊடே மணத்தினை உண்டும், வண்டின்
கிளர்நறும் பண்ணில் நல்ல கேள்வியை அடைந்தும் நாளும்,
வளர்கின்றாய் தென்ற லேஉன் வரவினை வாழ்த்தா ருண்டா? 16

அசைவின் பயன்

உன்அரும் உருவம் காணேன் ஆயினும் உன்றன் ஒவ்வோர்
சின்னநல் அசைவும் என்னைச் சிலிர்த்திடச் செய்யும்! பெற்ற
அன்னையைக் கண்டோ ர், அன்னை அன்பினைக் கண்ணிற் காணார்,
என்னினும் உயிர்க் கூட்டத்தை இணைத்திடல் அன்பே அன்றோ? 17

தென்றலின் குறும்பு

உலைத்தீயை ஊது கின்றாய்; உலைத்தீயில் உருகும் கொல்லன்
மலைத்தோளில் உனது தோளும், மார்பினில் உன்பூ மார்பும்
சலிக்காது தழுவத் தந்து குளிர்ச்சியைத் தருவாய்! பெண்கள்
விலக்காத உடையை நீ போய் விலக்கினும், விலக்கார் உன்னை! 18

குழந்தையும் தென்றலும்

இழந்திட்டால் உயிர்வா ழாத என்னாசை மலர்மு கத்துக்
குழந்தையின் நெற்றி மீது குழலினை அசைப்பாய்; அன்பின்
கொழுந்தென்று நினைத்துக், கண்ணிற் குளிர்செய்து, மேனியெங்கும்
வழிந்தோடிக், கிலு கிலுப்பை தன்னையும் அசைப்பாய் வாழி! 19

தென்றல் இன்பம்

இருந்தஓர் மணமும், மிக்க இனியதோர் குளிரும், கொண்டு
விருந்தாய்நீ அடையுந் தோறும் கோடையின் வெப்பத் திற்கு
மருந்தாகி அயர்வி னுக்கு மாற்றாகிப் பின்னர், வானிற்
பருந்தாகி, இளங்கி ளைமேற் பறந்தோடிப் பாடு கின்றாய்! 20


தென்றலின் பயன்

எழுதிக்கொண் டிருந்தேன்; அங்கே எழுதிய தாளும் கண்டாய்;
வழியோடு வந்த நீயோ வழக்கம்போல் இன்பம் தந்தாய்;
' எழுதிய தாளை நீ ஏன் கிளப்பினை' என்று கேட்டேன்,
புழுதியைத் துடைத்தேன் என்றாய்; மீண்டும் நீ புணர்ந்தாய் என்னை! 21

தென்றற்கு நன்றி

கழுகொடு, நெடிய தென்னை, கமழ்கின்ற சந்த னங்கள்,
சமைகின்ற பொதிகை அன்னை, உனைத்தந்தாள் தமிழைத் தந்தாள்
தமிழ் எனக்கு அகத்தும், தக்கதென்றல்நீ புறத்தும், இன்பம்
அமைவுறச் செய்வ தைநான் கனவிலும் மறவேன் அன்றோ? 22

தென்றலின் விளையாட்டு

களச்சிறுதும்பி பெற்ற கண்ணாடிச் சிறகில் மின்னித்,
துளிச்சிறு மலர் இதழ்மேல் கூத்தாடித் துளிதேன் சிந்தி,
வெளிச்சிறு பிள்ளை யாடும் பந்தோடு விளையாடிப், போய்க்
கிளிச்சிற காடை பற்றிக் கிழிக்கின்றாய் தென்ற லேநீ! 23
 
 
.........பாவேந்தர் பாரதிதாசன் .


வெள்ளி, பிப்ரவரி 08, 2013

யாருக்கும் தெரியவில்லை

மாவட்ட கல்வி அதிகாரி
வருகையால் பரபரப்பானது
உயர்நிலைப்பள்ளி....
சீருடை மாணவர்களின்
அணிவகுப்பில் மகிழ்வெய்திய
அதிகாரி ......
ஒரு மூடிவெயத்த அறையைக்
காண்பித்து .....
என்னவென்று வினவ ...
முப்பது ஆண்டுகளாய்
பழுதான மர பெஞ்சுகள்
அடுக்கிய அறை
என பதில் வந்தது!
அறையைத் திறந்து ...
பத்தாம் வகுப்பு
பென்ச்சுகளைத் தேடினார்
கல்வி அதிகாரி!
உடைந்திருந்த அந்த
மர இருக்கையில் அமர்ந்தார் !
யாருக்கும் தெரியவில்லை
அவர் இந்த இருக்கையில்
அமர்ந்து இந்த பள்ளியில்
படித்தவர் என்பதை!

...கா.ந.கல்யாணசுந்தரம்

கடிகார முள்

அம்மா அலறியபடி தேடினாள்...
" எம் புள்ளைய காலைல இருந்து
காணலையே " என புலம்பியவாறு !
" வொம் பையன் மூனாவதூட்டு
புள்ள பார்வதியோட கூட்டாளி
போட்டுகினு கொல்லப்புறம் போனது"
இது பக்கத்துவீட்டு பொன்னம்மாளின்
அங்கலாய்ப்பு!
ஒரு பனைவோலை கடிகாரம்
செய்து பார்வதிக்கு கட்டிவிட்ட
நட்பின் கரங்கள் அங்கு .....
தேடிக்கொண்டிருந்தது
வேலமரத்து முட்களுக்காக....
சரியான கடிகார முள்
கிடைத்துவிட்ட பெருமிதத்தில்
அந்த எட்டு வயது சிறுவன்
தோழியுடன் நடந்தான் ......
அவன் வீடு இருந்த அந்த 
கிராமத்து தெரு முனைக்கு...
காலத்தை வென்ற
ஒரு கர்மவீரனாக !

.........கா.ந.கல்யாணசுந்தரம்.

புதன், ஜனவரி 30, 2013

நூலறுந்த பட்டங்கள்!








காகிதம், நூல்கண்டு, தென்னங்குச்சி
காற்றுக்குள் பிரவேசிக்க முயற்சி
சோற்றுப் பானையை திறந்து
சுடு சோற்றைப் பிசைந்து
பசையாக்கினோம்.....
அழகிய பட்டம் உருவாக்கினோம்!
வெட்டவெளி மைதானத்தில்
கூட்டமாய் சென்று காத்தாடி பட்டம்
கலர் கலராய் பறக்கவிட்டபடி
விண்ணையே அண்ணாந்து
விழிபிதுங்க பார்வையிட்டோம்....
பட்டங்கள் உயர உயர பறந்தபடி
எங்கள் மனங்களில் குதூகலம் !
சில காத்தாடி பட்டங்களில்
தந்திகளும் அனுப்பப்பட்டன.....!
மாஞ்சா தடவிய நூல்கண்டுகள்
அஞ்சாமல் பதம்பார்த்தன
உயரும் பட்டங்களின் எண்ணிக்கையை !
பசிவேளை வந்தாலும்
பட்டங்களை இறக்க மனமின்றி
மரத்தில் கட்டிவைத்து அழகு பார்த்தோம்!
எப்போதாவது மின்கம்பிகளில்
சிக்கித்தவிப்பதுண்டு
நூலறுந்த பட்டங்கள்!
இப்போதெல்லாம் வேலை கொடுக்காமலே
பெட்டிக்குள் சிக்குண்டு
சிறைபட்டுப்போகின்றன......
பல்கலைப் பட்டங்களும் !

..........கா.ந.கல்யாணசுந்தரம்.


திங்கள், ஜனவரி 21, 2013

பத்தாம் பசலிக்காரன்

ஊருக்கு செல்லும்
ஒற்றையடிப் பாதைகூட
பாதி காணாமல் போனது!
நல்ல தண்ணீர் குளம் முழுக்க
சாக்கடை நீரோடு
குட்டையாய் காட்சி தர
களத்துமேட்டு குடியிருப்புகள்
அடுக்குமாடியாய் இருந்தது!
கிராமம் நகரமாய்
மாறியிருந்தது!
கிழக்குபுறத்து அம்மன்கோயில்
புது கோபுரத்துடன்
மிளிர்ந்தது!
ஆனால் என்மனம் மட்டும்
ஏங்கித்தவித்து........ இளைப்பாறியது
ஒரு பெரிய ஆலமரத்தடியில்!
30 ஆண்டுகள் இடைவெளியில்
நாங்கள் நட்ட ஆலமரம்
தழைத்திருந்தது அப்படியே !
மகிழ்வில் உரக்க கத்தினேன்....
" மரம் இல்லா வாழ்வு
மரண வாழ்வு " ..என்றவாறு.
அங்கே சென்றவர்களின் பார்வை
என் மீது........
இவன் ஒரு பத்தாம் பசலிக்காரன்
என சொல்லியவாறு.

....கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, ஜனவரி 11, 2013

மனிதநேயப் பொங்கலிடு!









தை மகளின் வரவு - நல்ல
தமிழிசையின் உறவு!
புத்தரிசி பொங்கலிட்டு
புத்தாடை அணிந்து
மண்ணின் மணம் கமழ
பாடுகின்ற நாளிது!
உழைப்போரின் உளம் மகிழ
உன்னத இயற்கையின்
இறையருள் நாளிது!
பொங்கலிடு பொங்கலிடு !
புதிய வாழ்வின் பூமணக்கும்
பொங்கலிடு!
மனிதநேயமுடன் பொங்கட்டும்!
தமிழர்தம் வாழ்வு உலகளவில்
தழைக்கட்டும்!
பொங்கலிடு பொங்கலிடு !
மனிதநேயப் பொங்கலிடு!
தமிழ்ப் புத்தாண்டின் வரவு கண்டு
தமிழ் கூறும் நல்லுலகு செழிக்க
பொங்கலிடு!

......கா.ந.கல்யாணசுந்தரம்.

செவ்வாய், ஜனவரி 08, 2013

நம்பிக்கையெனும் நங்கூரம் !







*இருகரம் இணைந்த மணவாழ்வில்


புதைந்துகிடக்கிறது ....

நம்பிக்கையெனும் நங்கூரம் !



*கைகளுக்குள் கனிவாய்

மலர்ந்திடுதே....

காதல் பூக்கள் !



* கைகுலுக்காமலே

நடந்து முடிந்தது...

சாதி ஒழிப்பு மாநாடு!



* கண்ணாமூச்சி வேண்டாம்

உன் கைகளை நீட்டு...கண்ணே

மருதாணி வைக்க வேண்டும் !



* கடவுளைத் தொழும் கைகள்

காத்திருக்கவேண்டும் எப்போதும்....

மற்றவர் துயர் துடைக்க !



......கா.ந.கல்யாணசுந்தரம்.

.

செவ்வாய், ஜனவரி 01, 2013

சீர்மிகு நல்லுலகு காண

சிந்தனையை முன்னிறுத்தி
சீர்மிகு நல்லுலகு காண
செம்மாந்து வாழ்த்து சொல்வோம்
2013 - ம் ஆண்டு தழைக்கட்டும்!
நல்லுள்ளங்கள்
மகிழட்டும் எந்நாளும் !
வன்மம் வக்கிரம் தொலைத்து
வான்புகழ் வள்ளுவன் வழங்கிட்ட
குறள்வழி வாழ்வோம்
வையகத்தே இன்பமுற்று !

....கா.ந.கல்யாணசுந்தரம்.

திங்கள், டிசம்பர் 31, 2012

புத்தாண்டு வாழ்த்துக்கள் !!










0123 எண்கள் இடம்மாறி 2013 ஆனதோ?
பிறக்கும்  2013 - எப்போதும்
சிறக்கும் என்பதில் ஐயமில்லை !
பறக்கும் 2012 இன்றோடு ......
மறவா நிகழ்வுகள் நெஞ்சோடு !
என்றும் சிறக்கும் 2013 -  ல்
இமயம் வியக்கும் சாதனைகள்
இலங்கும் வாழ்வில் வன்மமின்றி !
என புத்தாண்டை வரவேற்று
உங்களனைவரையும் வாழ்த்துகிறேன்!
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

.......அன்புடன் கா.ந.கல்யாணசுந்தரம்.

புதன், டிசம்பர் 19, 2012

இல்லங்களில் மலர்ந்திருந்தது

 
 
 
 
 
 
 
மழலை மொழியறியாது
மகிழ்வோடு பழகின...
பொம்மைகள் !

மழலைகளின் கையசைப்பில்
மண்டிக்கிடந்தது....
மனிதநேயம்!

இறைவனின் பங்களிப்பாய்
இல்லங்களில் மலர்ந்திருந்தது
மழலை மொழி !

நடைவண்டிக்கு
தெரிந்திருந்தது....
குழந்தை வளர்ப்பு!

ஒரு மரப்பாச்சியின்
முதல் கனவு...
மழலைக்கு தாயானது!


........கா.ந.கல்யாணசுந்தரம்.

புதன், டிசம்பர் 12, 2012

12.12.12 ஹைக்கூ கவிதைகள்







*இலையுதிர் காலத்தின்
திறந்த புத்தகமாயின....
தளிர்களின் வரவு!

*மொட்டவிழும் மலருக்கு
தெரியாத உறவு...
வேர்களின் பரிவு !

*புல் நுனியில்
ஒரு பிரபஞ்சம்
பனித்துளி !

*தென்றலின் தழுவலில்
நாணிற்று ....
ஆற்றங்கரை நாணல் !

*மாலை நேரத்து
எழிலோவியங்கள்....
கூடு திரும்பும் பறவைகள் !

*மீனவனின் அவலத்தை
சுமந்து வந்தது......
கடலோர காற்று !

*மலை முகட்டில்
மேகப் பெண்களின் ஆடிப் பொங்கல் ....
அருவி!

*வெள்ளி அலைகளின்
தோழமையுடன் .....
துள்ளியெழும் மீன்கள் !

*பரிசல் பெண்ணின்
புரிதல் வாழ்க்கையில் ....
புலம் பெயரா படகுத்துடுப்புகள் !

*தேன் தந்த மலருக்கு
வண்டின் பரிசளிப்பு....
மகரந்த சேர்க்கை !

*கொன்றை மலர்களின்
சிவப்பு கம்பள வரவேற்பு....
கிராமத்தின் சாலைகளில் !

*விட்டுக் கொடுக்கும்
பண்பை வளர்த்தன....
ஒற்றையடிப் பாதைகள் !

...........கா.ந.கல்யாணசுந்தரம்.


 

செவ்வாய், டிசம்பர் 11, 2012

செவ்வாய் கிரஹத்தில்

 
 
 
 
 
 
 
பொழுது புலர்வதற்குள்
பெரு ஒளி வரவழைத்து
அலுவலகம் சென்றார்கள்!
பிள்ளைகளுக்கு ஆக்சிஜன் குப்பிகளை
முதுகுக்குபின்னால் கட்டிவைத்து
பள்ளிக்கூடம் அனுப்பினார்கள்
புத்தகமில்லா குழந்தைகள்
ஆக்சிஜனை சுமந்தவாறே
வேற்று கிரக மனிதர்களின்
ராக்கெட்டுகளில் பறந்தவாறே
டாடா காண்பித்து கிளம்பினர் !
பெட்ரோல் இல்லா கார்கள்
நகரில் வலம் வந்தன!
மனிதநேயமில்ல வாழ்க்கையில்
வயது முதிர்ந்தோர்
செவ்வாய் கிரஹத்தில்
காப்பகங்களில் வாழ்ந்தனர்!
அப்போதும் அவர்கள்
ஒரு சொல்லை
ஆன்மதிருப்தியாய்
உச்சரித்தவரே இருந்தனர்.....
"எல்லாம் தலைஎழுத்து" !

....கா.ந.கல்யாணசுந்தரம்.

புதன், டிசம்பர் 05, 2012

சிக்குண்டு தவிக்கிறது....







*நாணல் இசைத்த பாடல்
தெரிந்திருக்கிறது...
நதிக்கரைக்கு மட்டும் !

*மூங்கில் வேர்களை
மறக்கமுடியுமா?
புல்லாங்குழலின் நினைவுகள் !

*ஆற்றின் கரங்களை
முத்தமிட நினைக்கின்றன ...
அலை வருடிய கூழாங்கற்கள்!

*தள்ளினாலும் நீர் விலகாது
எனைத் தழுவி பயணிக்கிறது ....
பேசும் படகுத் துடுப்புகள்!

*வீசாத வலைக்குள்
சிக்குண்டு தவிக்கிறது....
ஒரு மீனவனின் பசி !

.............கா.ந.கல்யாணசுந்தரம்.

ஞாயிறு, டிசம்பர் 02, 2012

ஒரு கனத்த இதயத்தை










கண்களை மூடினேன்
உலகம் இருண்டது
இதயக் கோட்டையின்
கதவுகள் மட்டும்
எண்ணங்களின் திரவு கோலால்
திறந்துகொண்டது....
மூளையின் செதில்களில் சில
கரங்களாய் வளர்ந்து
தூரிகை ஒன்றினை
தேடிப் பிடித்தது....
மௌன சலவைக்காரன்
தீச்செயல் துணிகளைத் துவைத்து
வெண்மையாக்கினான் .
வண்ணமிழந்த ஆடைகளில்
பல வண்ணத்துப்பூச்சிகள்
வந்தமர்ந்தன.....
சும்மா இருந்த ஊனுடல்
எனது ஆன்மாவிடம் ....
'அந்த தூரிகையால்
வாசமிகு மலர்களை உருவாக்கி
வண்ணத்துப் பூச்சிகளுக்கு
விருந்தளி' ........என்று கேட்டது .
தூரிகைகள் மலர்களை
படைக்கும்முன்
கண்கள் திறந்துகொண்டன .....
சும்மா தியானம் நிலைபெறாமல்
சுமந்து சென்றது
ஒரு கனத்த இதயத்தை !

..........................கா.ந.கல்யாணசுந்தரம் 

திங்கள், நவம்பர் 26, 2012

காற்றின் விசாரிப்பு !











*துள்ளும் மீன்களுக்கு
தெரியவில்லை ...
வலைக்குள் சிறையானது!

*பூட்டிய வீட்டுக்குள்
புகுந்து வெளியேறியது...
காற்றின் விசாரிப்பு !

*ஒரு கைதியின் இதயத்தில்
ஏற்கனவே கைதானாள்
கள்வனின் காதலி !

*ரேகைகளை காண்பித்து
நல்லநேரம் தேடுவதில்
தொலைந்துபோனது எதிர்காலம்!

*படிப்பினைகளின் செயலாக்கமே
கிழித்தெறிகிறது....
கனவுக்கும் நினைவுக்குமான தூரத்தை!

*கடைசியாக நடந்தாலும்
இலக்கின் விளிம்புகளைத் தொடு...
இது ஊர்வலத்தின் உன்னதம்!

......................கா.ந.கல்யாணசுந்தரம்

ஞாயிறு, நவம்பர் 25, 2012

கிராமத்து களத்துமேடு!








ஒரு புதுக்கவிதையாய்
காலைப்பனி மேய்கின்ற...
கிராமத்து களத்துமேடு!

ஒற்றைக்காலில் நின்றபடி
வயிற்றுப் பசிக்கான தவம்
ஆற்றுப்படுகை கொக்குகள் !

இளஞ்சூரியனை
பங்குபோட்டு குதூகலிக்கும்
தென்னை ஓலைகள் !

எங்களுக்கேது விடுமுறை
வானில் எழும்....
இரைதேடும் பறவைகள்!

அன்றலர்ந்த மலர்களை
விட்டு வையுங்கள்....
தேனருந்தும் வண்டினம்!

..........கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், நவம்பர் 22, 2012

விரல்கள் தேடுகின்றன...





மரம் வெட்ட கோடரியை எடுத்தாலும்
கரங்களின் விரல்கள் தேடுகின்றன...
விருட்சத்தின் விதைகளை !

........கா.ந கல்யாணசுந்தரம்

 

திங்கள், நவம்பர் 19, 2012

உள்ளத்தில் நல்ல உள்ளம்




உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா... கர்ணா
வருவதை எதிகொள்ளடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா... கர்ணா
வருவதை எதிகொள்ளடா

தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
ஊர்ப்பழி ஏற்றாயடா
நானும் உன் பழி கொண்டேனடா
நானும் உன் பழி கொண்டேனடா
மன்னவர் பணியேற்கும்
கண்ணனும் பணி செய்த
உன்னடி பணிவேனடா -கர்ணா
மன்னித்து அருள்வாயடா

செஞ்சோற்று கடன் தீர்த்த
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா - கர்ணா
வஞ்சகன் கண்ணனடா
வஞ்சகன் கண்ணனடா

- கண்ணதாசன்

வெள்ளி, நவம்பர் 16, 2012

'அனுபவம் என்பதே நான்தான்'







 
 
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!
 
......................கவிஞர் கண்ணதாசன் 

திங்கள், நவம்பர் 12, 2012

தீப ஒளித் திருநாளாம் தீபாவளி நன்னாளில்





தீப ஒளித் திருநாளாம் தீபாவளி நன்னாளில்
இல்லமதில் மகிழ்ச்சி ஒளி திசையெங்கும் வீசட்டும்!
மனிதநேய அறுசுவை உணவுப் பரிமாற்றம்
வீதியெங்கும் விளங்கட்டும் !
இருப்போர் இல்லாதோர்க்கு
வழங்கிடும் நாளாகட்டும்!
இல்லாதோர் இனியிங்கு வளமுடனே
வாழும் நிலை வரட்டும்!
திருநாட்கள் பெருநாளாய்
அரும்பி நித்தம் மனிதநேயச் சோலையில்
மணம் கமழும் மலர்களாய்
பூத்துக் குலுங்கட்டும் !




........கா .ந .கல்யாணசுந்தரம்.

வியாழன், நவம்பர் 08, 2012

கண்கள் தேடுகின்றன.....







வெறுமனே புத்தகத்தின் பக்கங்களை
புரட்டிக் கொண்டிருந்தேன் !
வெளிச்ச தேவதையின் கண்கள்
கட்டப்பட்டு தனி அறையில்
தள்ளப்பட்டு தாளிடப்பட்டிருந்தது !
ஆசிரியர் சொன்ன பாடங்களின்
வரிகளை நிலவொளியில்
கண்கள் தேடுகின்றன.....
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
நுனிபுல்லை மேய்ந்த மாடென
சோம்பல் முறித்து தூங்கப் போனேன் !
ஏற்கனவே மின்சார பொத்தான்களை
இயக்கி வைத்ததால் பளீர் என
மின்னொளி நீண்ட நேர இடைவெளிக்குப்பின்
பாய்ந்து என் விழிப் படலத்தை தாக்கியது...
வெளிச்ச தேவதையின் கண்கள்
இப்போது திறக்கப்பட்டன.....
ஆனால் தூக்கம் ததும்பிய
எனது விழிகள் மட்டும் திறக்கவில்லை!
கனவில் ஆசிரியரின் பிரம்படி
துல்லியமாய் நினைவில் நின்றது
விழித்தபின் அம்மாவிடம் கேட்டேன் ...
விளக்கெரிக்க மண்ணெண்ணெய்யாவது
கிடைக்குமா?

........கா.ந கல்யாணசுந்தரம்

புதன், நவம்பர் 07, 2012

உறவுகளின் பண்பாடு - ஹைக்கூ







*ஒரு இரவின் கைப்பிடிக்குள்
தப்பிக்கவே  பதுங்கியிருந்தது
பகலின் ஒளிப்பிம்பங்கள்


*கரைகளை அணைத்தபடி
நதி ஓடிக்கொண்டிருந்தது
இது கரைகளின் கனவு 


*கல்லுக்குள் ஈரம் இருப்பதால் 
சிற்பியின்  உளி விளைவிக்கிறது
எழில்மிகு சிற்பங்கள்


*இருந்தும்  இறந்தபடி
வாழ்கிறார்கள்
செலவிடாத  செல்வத்துடன்


*பாசத்தின் நிழலோடு
எப்போதும் பயணிக்கும்
உறவுகளின் பண்பாடு


                            .....கா .ந.கல்யாணசுந்தரம்




செவ்வாய், நவம்பர் 06, 2012

தேடல்...





ஒரு பகல் பொழுதின்
ஆளுமையில்
அவனின் பலம் அனைத்தும்
இழந்த நிலையில்
கைகளில் திணிக்கப்படுகின்றன ...
இன்றைய
பொழுதுக்கான சம்பளம்!
ஆள் அரவமற்ற
தெருவோரத்து குடிசைக்குள்
கால்கள் சற்றே
ஓய்வெடுத்தன ....
மல்லாந்து படுத்த
அவனது கண்களுக்கு
கோளரங்கம் ஆனது
குடிசையின் கூரை!
அடுத்த நாளின்
நகர்தலுக்கான தேடல்...
மனதுக்குள்
ஏக்கப் புள்ளிகளுடன்
கோலமிட்டன....
வாசல் இல்லாத
அவனது வீட்டின்
முற்றத்தில்....!



.....கா.ந.கல்யாணசுந்தரம்





திங்கள், நவம்பர் 05, 2012

உயிர்ப்பின் ஆசை


பார்த்த பொம்மைகளையே
மீண்டும் மீண்டும் பார்த்தவாறே
அலுத்துப்போன குழந்தை
தாத்தாவின்  மடிமீது
தூங்கிப்போனது!
சிதறிக்கிடந்த பொம்மைகள்
மீண்டும் உயிர்ப்பித்தெழ
நேரமாகும்....!
தாத்தாவும் பொம்மைகளோடு
பொம்மையாய் குழந்தையை
சுமந்தவாறே தூங்கிப்போனார் !
எங்கிருந்தோ பாடல் ஒலித்தது....
' நான் மறுபடியும் குழந்தையாக
பிறக்க வேண்டும் - அன்னை
மடிமீது தலைவைத்து படுக்கவேண்டும்'

........கா.ந.கல்யாணசுந்தரம்  

திங்கள், செப்டம்பர் 17, 2012

மலர்களின் சிரிபொலி !


பிரிந்து செல்லும் பாதைகள்
எப்போதும் சந்தித்துக்கொள்கின்றன...
பிரிந்த இடத்தில் !

ஒரு பனிபொழிந்த காலை
துல்லியமாய் கேட்கிறது...
மலர்களின் சிரிபொலி !

உதிர்ந்த இறகினில்
உறங்காமல் விழித்திருக்கிறது...
ஒரு பறவையின் தேடல் !

ஆற்றுப் படுகை நாணலிடம்
கேட்கத் தோன்றுகிறது..
புயலின் வலிமையை !

கிராமிய மணம் கமழும்
உயிரோவியங்களுடன் ...
மாலை நேரத்து ஏரிக்கரை !

..........கா.ந.கல்யாணசுந்தரம்.

சனி, செப்டம்பர் 08, 2012

குழல்கூட இசைக்காமல் சற்றே நிற்கும்


மொட்டவிழ்ந்த மலர்போல மழலை முகம்
பொட்டிட்டு பூச்சூடி பார்த்தாலே போதும்
கட்டவிழ்ந்த தாழை மலர் போல அழைப்பாள்
கொட்டுகின்ற அருவியென துள்ளி எழுவாள்
குழல்கூட இசைக்காமல் சற்றே நிற்கும்
மழலை இவள் வாய் மொழியில் தோற்கும்
வண்ணத்து பூச்சியென சிறகடித்து வருவாள்
காண்போரின் கையசைப்பில் கண்சிமிட்டி சிரிப்பாள்
முகமறியா போதிலும் மடிமீது வந்தமர்வாள்
கொடிமுல்லைப் பூவாய் மனம் கவர்ந்திழுப்பாள்
மீண்டும் மழலையாய் பிறப்பெடுக்க இறைவனை
வேண்டும் மனம் கொடுத்து வாழ்வாள் இனிதாக!


..................கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, செப்டம்பர் 07, 2012

கலையழகு பாதமலர் போற்றி வணங்கிடுவோம் !
























அருளோடு திருஉருவம் ஆனந்த களிநடனம்
பெருநிதிய வளத்தோடு பூவுலகில் அவதரித்தாய் !
கலியுகம் இதுவென்று மானுடம் அறிந்திடவே - ஈரைந்து
அவதாரம் எடுத்துலகில் ஆட்கொண்டாய் பெருமாளே !

ஏழுமலை கடந்து உன்னுருவம் கண்டிடவே
பாழும் இவ்வுடல் சுமந்து வருகின்றேன்
சூழும் பாவ அலைகடலில் அகப்பட்டோம் - கலியுகம்
வீழும் நாளறியேன் அறிவேன் நாராயணாவெனும் நாமம்

அலைமகள் அகம்கண்ட கலியுக வரதனிவன்
சிலைவடிவம் கொண்டிட்டான் மலைமீது!
விலையிலா அருட்கொடையாம் என்றென்றும் - திருமாலின்
கலையழகு பாதமலர் போற்றி வணங்கிடுவோம் !

.............கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், செப்டம்பர் 06, 2012

அன்னை ஓர் ஆலயம்!


* பயணிக்கும் தூரம் அதிகமெனில்
தாகமெடுக்கும்.....
அம்மாவை நினைத்துக்கொள் !

* நினைத்ததை பெற்றவுடன்
நிம்மதி கிடைக்கும்....
பெற்றவளின் நினைவிருந்தால்!

* புகழின் உச்சியை அடைந்தாலும்
மறவாதே....
அன்னையின் அரவணைப்பை !

* தெய்வமில்லை என்போருக்கும்
கடவுளானாள்...
அன்னை ஓர் ஆலயம்!

.................கா.ந.கல்யாணசுந்தரம்

செவ்வாய், ஆகஸ்ட் 14, 2012

இனி ஒரு விதி செய்வோம்.....












விடுதலைக்கான சின்னமாய்
இன்றும் பட்டொளிவீசி பறக்கிறது
நமது மூவண்ணக்கொடி!
அன்னியரின் அடிமத்தளையருத்து
பொன்னான தாயகத்தை
மீட்டெடுக்க இன்னுயிர் நீத்தனர்
இந்தியத் திருநாட்டின்
இணையில்லா தவப்புதல்வர்கள் !
நள்ளிரவில் பெற்ற சுதந்திரம்
நலமுற பேணிக் காப்போமென
உறுதிமொழி ஏற்றிடும்
மாணவ மாணவியர் தினம் தினம்!
ஆகஸ்டு மாதம் பதினைந்தாம் நாளில்
நல்லதொரு கருத்தினை
பகிர்ந்திடவே விழைகின்றேன்!
சுதந்திர தேசிய மணிக்கொடியை
இனி தனிமனித போராட்டத்தில்
பயன் படுத்தலாகாது!
கொள்கை எதுவாகிலும்
தேசிய கொடியினை தன்னலப்போக்கில்
தவறாகப் பயன்படுத்தி மக்களிடம்
அனுதாபம் பெறுகின்ற சுயநலவாதிகளை
அடையாளம் கண்டுகொள்வோம்!
அரசும் சட்டமும் இருந்தும்
அகற்றிட தயக்கமென்ன?
இனி ஒரு விதி செய்வோம் அதை
எந்தநாளும் காப்போம்!

....கா.ந.கல்யாணசுந்தரம்.

ஞாயிறு, ஆகஸ்ட் 12, 2012

எது சுதந்திரம்?















அன்னியரின் அடிமைத்தளையருத்து
ஆருயிர் தாயகத்தை மீட்டெடுத்து
இணையிலா இந்தியத்திருனாட்டின்
ஈடில்லா அரசியலமைப்பை
உருவாக்கி மகிழ்ந்தோம்!
ஊரும் நாடும் சிறப்புறவே
எளியவரும் பயனுறும் வண்ணம்
ஏற்றமிகு மக்களாட்சி மலர்ந்திடச் செய்தோம்!
ஐயம் இல்லா அறிவுத்திருக்கோயில்
ஒவ்வொரு ஊராட்சியிலும் உருவாக்கினோம்!
ஓதும் கல்விமுறையில் மட்டும்
ஒளடதமாய் விளங்காமல்
மொழியுலக வரலாற்றில் சுதந்திரத்தை
பறிகொடுத்து வளர்கல்வி
அரசியலாய் சமைந்ததுவே!

.....கா.ந..கல்யாணசுந்தரம்

சனி, ஜூலை 28, 2012

முற்றுப்புள்ளி உறவுகள்......




கால்புள்ளியும் அரைப்புள்ளியும்
அவ்வப்போது வைத்து நீட்டித்துக்
கொண்டிருந்தாலும்,
வினாக்குறி வாழ்க்கையில்
எப்போதுமே ஆச்சரியக் குறிகள்!
இருப்பினும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
முற்றுப்புள்ளி உறவுகளுடன்.

......கா.ந.கல்யாணசுந்தரம்

வியாழன், ஜூலை 26, 2012

முடிவில்லா பயணம்....




*எங்களது முடிவில்லா பயணம்

கதிரவனின் ஒளிக்கரங்களுடன்

தாமரை மலர்கள்!

.........கா.ந.கல்யாணசுந்தரம்





செவ்வாய், ஜூலை 17, 2012

நீர்க்குமிழி பயணத்தில்....

@ மன ஏரியில் முகிழ்த்து
அடிக்கடி உடைந்துபோகிறது
எண்ணக் குமிழ்கள்

@ மழை வெள்ளத்தில் மிதக்கும்
நீர்க்குமிழி பயணத்தில்....
நிலைத்திருக்கிறது மானுட வாழ்வு!

@ உடையும் மழை வெள்ள
நீர்க்குமிழி உடையும் போது....
உடன் அழுகிறது மழலை !

@ குளத்து நீரில் மிதக்கும்
தாமரை இலைகளின் வரவுகள்
ஒட்டாத நீர்த்துளிகள்!

@ காகித கப்பல்களின் பயணத்தில்
மழை நீர் ஓடைகள்...
நொறுங்கும் நீர்க் குமிழ்களோடு !

...........கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, ஜூலை 13, 2012

இதய நூலகம்.....




படுக்கையில் படுத்ததும் கண்ணுறங்கி
கனவுலகில் சஞ்சரிக்கும் நாட்கள் குறைந்தன !
ஏதோ ஒன்றை இழந்து மற்றொன்றை தேடும்
படலத்தில் வாழ்க்கை காய்களை நகர்த்துகிறேன்!
ஒளிவு மறைவற்ற எண்ணங்களில்
என்னை நானே ஏமாற்றப்படுகிறேன்!
தீர்க்கமாய் செய்துமுடிக்கும் திறனும்
இப்போதெல்லாம் சோம்பல் போர்வைக்குள்
முடங்கியவாறே செயலிழந்திருப்பது...
நன்றாகவே உணரப்படுகிறது!
ஆரம்பிக்கப்பட்ட வாசல் கோலங்கள்
முடிக்கப்படாமலே சிக்கலாய் முடிவதைப்போல்
முனைப்புகள் தோல்விகளின் விளிம்புகளில் !
ஆனால் ஒன்று மட்டும் தெளிவாய் தெரிகிறது...
மனதின் உறுதியை உடல் ஏற்க மறுக்கிறது!
எண்ணங்களின் விழுதுகள் அவ்வப்போது
விரல் நுனிக்குள் கவிதை வேர்களாய் வியாபித்து....
தடம் பாதிக்கும் ஆற்றலுடன் வெளிப்படுகிறது!
காகிதத் தாட்களுடன் கடைசிவரை வாழ்வதில்
இதய நூலகம் எப்போதும் காத்திருக்கிறது!

..........கா.ந.கல்யாணசுந்தரம்.

புதன், ஜூலை 11, 2012

தியாகத்தின் விளைநிலம் !






என்னை உயிர்ப்பித்த நாள் முதல்
பிம்பங்களின் நடு நடுவே
எனது கண்கள் தேடுகின்றன...
நிஜமான மனதுடைய முகங்களை!
சில நேரங்களில் முகத்தருகே கூட
முத்தமிடுவதுபோல் அன்பான முகங்கள்!
சலிப்பின் விளிம்புகளை தொட்டவாறு
கைதட்டலோடு சில முகங்கள்!
சேட்டைகளை செய்தவாறே எனது
புன்னகைக்கு தவமிருக்கும் புதிய முகங்கள்!
கைநீட்ட எனை எடுத்தணைக்கும்
இருகரமுடைய மனிதங்கள்!
மனித உடல் சூட்டில் எனது சிறுநீர்
சட்டென்று வெளியேற,
வீசி எறியாத குறையாய் பெற்றவளிடம்
தள்ளுகின்ற பல முகங்கள்!
பட்டாடைமேல் மலம் கழித்தாலும்
முகம் சுளிக்காமல் எனைக் கொஞ்சுகின்ற
ஓர் முகம்! - பத்துமாத பந்தம் மட்டுமல்ல!
எனது முகவரிக்குள் எழுத்தாகி ,
உயிர் மெய்யாய் உலவும் தாயெனும்
தியாகத்தின் விளைநிலம்!

............கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, ஜூன் 08, 2012

சூட்சும நெறிகளை அறியவேண்டும்!




உணர்வுகள் மனித உடலின்
இரசாயனக் கலவை என்பதை
யாவரும் அறிந்ததே!
மனித இதயத்தின் இயக்கங்களை
மன அழுத்தம் கட்டுப்படுத்த இயலும்!
வெளியில் சொல்லப்படாத கவலைகள்
இரத்த நாளங்களை செயலிழக்கச் செய்யும்!
மொத்தத்தில் மனிதன் தனது
மூளையின் ஒழுங்கான செயல்பாட்டில்
இயங்கவிடாமல் வாழ்கிறான்!
செம்மையான சிந்தனைகளாலும்
அமைதி தியானம் போன்ற
அக ஒழுக்கங்களில்
வாழ்நாளை கூட்டவும் செய்யலாம் !
சிரிக்கத் தெரிந்த மனிதன்
வாழ்நாளில் புலம்பும் அவலநிலையை
சிரமேற் கொள்கிறான்!
சும்மா இருத்தலே சுகம் எனும்
ஞானியர் கூற்றில் ஒளிந்திருக்கும்
சூட்சும நெறிகளை அறியவேண்டும்!
மனிதம் வாழத்தான் பிறந்துள்ளது
என்பதை அறிய வேண்டும்!
வீடு பேற்றின் வாயிலைத் தொட
நாடு கடந்து போகத்தேவை இல்லை !
மனம் எனும் உள்ளக் கோயிலின்
மணிக் கதவுகளை சாந்தமெனும்
சாவி கொண்டு திறந்தாலே போதுமானது!

....கா.ந.கல்யாணசுந்தரம்.

புதன், ஜூன் 06, 2012

இனி காத்திருப்பு பயனில்லை...




நானொரு வெற்று காகிதம்தான்
என்றாலும் உன் கரம் பட்டு
காகித ஒடமானேன்!
அலைகளில்லா குளத்தில்
என்னை மிதக்கவிட்டு
வேடிக்கைப் பார்க்கிறாயே!
இது நியாயமா?
ஓடம் ஓடவேண்டும்...
மூழ்கினாலும் கப்பல் அழகென்று
இந்த மானுடம் வர்ணிக்கிறதே!
அலைகள்தான் எங்களின் வாழ்கையை
நிலைப்படுத்தும் ஆயுதம்!
நங்கூரங்கள் கூட பலநேரம்
நம்பிக்கை இழக்கிறது!
நில அதிர்வுகளில் அலைகள்
அரக்க குணம் கொண்டழிக்கிறது!
எங்களுக்கு உறுதுணையாய்
உடன்வந்தாலும் .....
உனது உள்ளமதை நாமறிவோம்!
இலக்குகளின்றி பயணித்தலை
பாய்மரக்கப்பல்கள் அறிந்திருந்தாலும்
மாலுமியின் திறனறிந்து
பயணித்தலே எங்கள் நோக்கம்!
அடி பெண்ணே! உண்மையை சொல்லிவிடு...
சும்மா எங்களுடன் உறவாடாதே...!
உனது எண்ணத் திசைகளை நன்கறிவோம்...!
இனி காத்திருப்பு பயனில்லை...
இனிய பயணிப்பு நம்மோடு பூத்திருக்கு....
பயணிப்போம் இலக்கை நோக்கி!

.......கா.ந.கல்யாணசுந்தரம்

திங்கள், மே 21, 2012

ஹைக்கூ ... தத்துவ மலர்கள்




@ பரந்த மனம் இல்லையெனில்
எப்போதும் இதயம் சுமக்க நேரிடும்
அந்தரங்க அமைதியின்மை !

@ நோக்கமும் கொள்கையும்
செயல்திறனுடன் இணைந்தால் தெரியும்....
முன்னேற்றப் பாதையின் முதல்படி !

@ மன ஏரியில் முகிழ்த்து
அடிக்கடி உடைந்துபோகிறது...
எண்ணக் குமிழ்கள் !

@ உறவுகளின் நல்வாழ்வில்
பங்குபெறும் உதவிக்கரங்கள் ...
இறைவனின் வழிபாட்டுக்கு உகந்தது!

@ தவறான சிந்தனைகளை களைய
எப்போதும் தேவைப்படுகிறது...
மற்றுமொரு கற்பனை எண்ணம் !

@ உன்னை அறிதலால்
புனிதமாகிறது....
தன்னம்பிக்கையின் பிறப்பிடம் !

@ அதர்ம களைகளை அகற்றி
தர்மத்தின் வேர்களுக்கு நீர் ஊற்று....
மலரும் மனிதநேய மலர்கள்!

.............கா.ந.கல்யாணசுந்தரம்

ஞாயிறு, மே 20, 2012

இலக்கை நோக்கி

அன்றாட வாழ்க்கை ஒரு
சுழற்சியாக இருக்கிறது...
புதுமைகளின் வரவுகள்
செயற்கையாய் மட்டுமே இருக்கிறது!
இயற்கையான புன்னகைகூட
பூக்காமலே இதழ்களுக்குள்
புதைந்துபோகிறது!
அழுத்தமான மனதுடன்
நெஞ்சம் இதயத்துடன்
தினம் தினம் போராடுகிறது!
பயணிப்பில் அர்த்தமற்று
திசைகளை அடையாளம் காணாது
மானுடம் தவிக்கிறது!
ஆசைகள் அரவமற்று மனதுக்குள்
நுழைந்து அரசாட்சி செய்கிறது!
பிறப்பில் ஏற்கனவே
எழுதப்பட்டுவிட்டது இறப்பு....
என்றாலும்.......
வாழ்வியல் அத்தியாயங்களில்
முத்திரைப் பதிக்கவே
தனித்துவ திறன்களை
அடையாளம் காண
இந்த மானுடத்திசுக்கள்
முற்படுகின்றன....!
இந்த சுழற்சி முற்றுப்பெறாது
ஆளுமை கதிர்வீச்சில்
இளமைக்காலங்கள் திசைமாறி
பயணிக்கிறது.....ஆம்
பாய்மரக் கப்பலில் இலக்கைநோக்கி!

..............கா.ந.கல்யாணசுந்தரம்.

புதன், மே 02, 2012

முன்னோக்கிய பயணிப்பில்....






இயற்கையும் செயற்கையும்

பின்னோக்கி நகர்கிறது ...

நமது முன்னேறும் பயணிப்பில்!



........கா.ந.கல்யாணசுந்தரம்.







செவ்வாய், ஏப்ரல் 24, 2012

என்னுடன் பழகிய நிழல் கூட....




*என்னுடன் பழகிய நிழல்கூட
இப்போது வெறுக்கிறது...
நிழல் தரும் மரங்களை வெட்டியதால் !

*எனது கிளைகளை வெட்டி
முடமாக்காதீர்.....
வெட்டினாலும் துளிர்த்திடுவேன்!

*படுத்து உறங்குபவர்களை விட
இளைப்பாறுபவர்களை விரும்புகிறேன்...
நிழல் தரும் மரங்கள் !

* அரம் கொண்டு மரம் அழித்தனர்
அறம் பொருள் இன்பமெனும்....
குறள் படித்த மாந்தர் !

* உங்களின் உயிர் மூச்சு எங்களிடம்
என்றாலும்....எங்களின் வாழ்வு உங்களிடமே....
மரங்களின் பெருமூச்சு !

..............கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, ஏப்ரல் 13, 2012

வசந்த வாயில் மாவிலைத் தோரணமே!

















சிந்தனை மலர்கள் தூவி
நந்தன ஆண்டு இன்று
சிறப்புற மலர்ந்ததுவே !
வண்ணங்கள் ஒருங்கிணைந்து
எண்ணங்களில் உயிர்த்தெழுந்து
வாழ்க்கைச் சுவற்றில்
நாளும் வரைந்திடுமே
நல்லதொரு ஓவியம்!
மனிதநேயம் மலரும்
மண்மீது மாண்புடனே!
சித்திரைத் தமிழ் மகளே
சிரம் தாழ்த்தி வணங்குகிறோம் !
வசந்த வாயில் மாவிலைத் தோரணமே !
வந்திங்கு வாழ்த்தொலிகள் ஏற்றிடுவாய் !
........கா.ந.கல்யாணசுந்தரம்.

புதன், ஏப்ரல் 11, 2012

வேர்களின் தேடல்.....













பூக்களுடன் உறவாடும்

வண்டுகளுக்கு தெரியுமா?

வேர்களின் தேடலை ....!


..........கா.ந.கல்யாணசுந்தரம்.

ஞாயிறு, ஏப்ரல் 08, 2012

கனவு மெய்ப்பட வேண்டும்



















நடந்து செல்ல செல்ல
எனது தூரம் வளர்கிறது
பாதை ஏனோ முடியவில்லை !
அருகில் எவரையும்
காண முடியவில்லை !
தேநீர் அருந்த எவ்வளவு
தூரம் பயணிப்பது?
ஒரு ஓலைக் குடிலுக்கு அருகில்
எனது தாய் என்னை வரவேற்கிறாள்!
மகனே...கால் வலிக்கிறதா?
உள்ளே வா ..... உனக்கு தேநீர் தருகிறேன்
என்றழைத்து ஒரு கோப்பை தேநீர்
அருந்தத் தருகிறாள்!
என் கரங்களைப் பற்றி
அவள் கண்ணீர் மல்க கூறுகிறாள்
" தடைக் கற்கள் என்றுமே
உனது படிக் கற்கள் தான்!
சோர்வு அடையாதே.....
என்றாவது இந்த உலகம்
உன்னை திரும்பி பார்க்கும்"
இந்த உற்சாக வார்த்தைகள்
என்னுள் ஆனந்த ராகங்களை
மீட்டுகிறது......
எனக்கு புதியதாய் சிறகுகள்
முளைக்கின்றன......
இதோ ....நான் பறந்து செல்கிறேன்...
இப்போது நான் பயணிக்கும் தூரம்
அதிகமில்லை!
இலக்குகள் என்னருகே.........!

............கா.ந.கல்யாணசுந்தரம்.

திங்கள், ஏப்ரல் 02, 2012

எங்கள் வீட்டு தோட்டத்தில்....

எங்கள் வீட்டுத் தோட்டத்தில்
புரட்சி புரட்சி என கேட்கிறது...
பறவைகளின் ஒலி

எங்கள் வீட்டுத் திண்ணையில்
அழியாத சுவடுகளாய் ...
மூதாதையரின் அமர்விடங்கள் !

எங்கள் வீட்டுப் பரணையில்
பழைய புத்தகக் கட்டுக்குள்...
நட்பின் அடையாளங்கள் !

எங்கள் வீட்டின் சன்னலருகே
முத்தமிடும் ...
நிலவொளி நிழல்கள் !

எங்கள் வீட்டு முற்றத்தில்
எப்போதும் காத்திருக்கிறேன்....
அணிலோடு விளையாட !

எங்கள் வீட்டு கதவிடுக்குகளில்
கண்ணை வைத்துப் பாருங்கள்...
இவளின் முகமழிந்த கோலங்கள் தெரியும்!

ஞாயிறு, மார்ச் 25, 2012

ஒளவையாரின் கொன்றைவேந்தன்
















கடவுள் வாழ்த்து

கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே

உயிர் வருக்கம்
1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று
3. இல்லறம் அல்லது நல்லறம் அன்று
4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்
5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்
8. ஏவா மக்கள் மூவா மருந்து
9. ஐயம் புகினும் செய்வன செய்
10. ஒருவனைப் பற்றி ஒரகத்து இரு
11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்
12. ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு
13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு

ககர வருக்கம்
14. கற்பெனப்படுவது சொல் திறம்பாமை
15. காவல்தானே பாவையர்க்கு அழகு
16. கிட்டாதாயின் வெட்டென மற
17. கீழோர் ஆயினும் தாழ உரை
18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்
20. கெடுவது செய்யின் விடுவது கருமம்
21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை
22. கைப் பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி
23. கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி
24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு
25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை

சகர வருக்கம்
26. சந்நதிக்கு அழகு வந்தி செய்யாமை
27. சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு
28. சினத்தைப் பேணின் தவத்திற்கு அழகு
29. சீரைத் தேடின் ஏரைத் தேடு
30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
31. சூதும் வாதும் வேதனை செய்யும்
32. செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும்
33. சேமம் புகினும் யாமத்து உறங்கு
34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்
35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்
36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்

தகர வருக்கம்

37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
38. தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
40. தீராக் கோபம் போராய் முடியும்
41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு
42. தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்
43. தெய்வம் சீறின் கைத்தவம் மாளும்
44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும்
45. தையும் மாசியும் வையகத்து உறங்கு
46. தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது
47. தோழனோடும் ஏழைமை பேசேல்

நகர வருக்கம்
48. நல்லிணக்கம் அல்லல் படுத்தும்
49. நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை
50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை
51. நீரகம் பொருந்திய ஊரகத்து இரு
52. நுண்ணிய கருமமும் எண்ணித் துணி
53. நூல்முறை தெரிந்து சீலத்து ஒழுகு
54. நெஞ்சை ஒளiத்து ஒரு வஞ்சகம் இல்லை
55. நேரா நோன்பு சீராகாது
56. நைபவர் எனினும் நொய்ய உரையேல்
57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்
58. நோன்பு என்பதுவே (? என்பது) கொன்று தின்னாமை

பகர வருக்கம்
59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்
60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்
61. பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்
62. பீரம் பேணி பாரம் தாங்கும்
63. புலையும் கொலையும் களவும் தவிர்
64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்
65. பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும்
66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்
67. பையச் சென்றால் வையம் தாங்கும்
68. பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்
69. போனகம் என்பது தான் உழந்து உண்டல்

மகர வருக்கம்
70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்
71. மாரி அல்லது காரியம் இல்லை
72. மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை
73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது
74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு
77. மேழிச் செல்வம் கோழை படாது
78. மை விழியார் தம் மனையகன்று ஒழுகு
79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம்
80. மோனம் என்பது ஞான வரம்பு

வகர வருக்கம்
81. வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண்
82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும்
83. விருந்திலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்
84. வீரன் கேண்மை கூரம்பு ஆகும்
85. உரவோர் என்கை இரவாது இருத்தல்
86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை
88. வேந்தன் சீறின் ஆம் துணை இல்லை
89. வைகல் தோறும் தெய்வம் தொழு
90. ஒத்த இடத்து நித்திரை கொள்
91. ஓதாதார்க்கு இல்லை உணர்வொடும் ஒழுக்கம்

ஒளவையாரின் ஆத்திச்சூடி
















வாழ்த்து

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.


உயிர் வருக்கம்
1. அறம் செய விரும்பு
2. ஆறுவது சினம்
3. இயல்வது கரவேல்
4. ஈவது விலக்கேல்
5. உடையது விளம்பேல்
6. ஊக்கமது கைவிடேல்
7. எண் எழுத்து இகழேல்
8. ஏற்பது இகழ்ச்சி
9. ஐயம் இட்டு உண்
10. ஒப்புரவு ஒழுகு
11. ஓதுவது ஒழியேல்
12. ஒளவியம் பேசேல்
13. அஃகம் சுருக்கேல்


உயிர்மெய் வருக்கம்
14. கண்டொன்று சொல்லேல்
15. ஙப் போல் வளை
16. சனி நீராடு
17. ஞயம்பட உரை
18. இடம்பட வீடு எடேல்
19. இணக்கம் அறிந்து இணங்கு
20. தந்தை தாய்ப் பேண்
21. நன்றி மறவேல்
22. பருவத்தே பயிர் செய்
23. மண் பறித்து உண்ணேல்
24. இயல்பு அலாதன செய்யேல்
25. அரவம் ஆட்டேல்
26. இலவம் பஞ்சில் துயில்
27. வஞ்சகம் பேசேல்
28. அழகு அலாதன செய்யேல்
29. இளமையில் கல்
30. அரனை மறவேல்
31. அனந்தல் ஆடேல்


ககர வருக்கம்
32. கடிவது மற
33. காப்பது விரதம்
34. கிழமைப்பட வாழ்
35. கீழ்மை அகற்று
36. குணமது கைவிடேல்
37. கூடிப் பிரியேல்
38. கெடுப்பது ஒழி
39. கேள்வி முயல்
40. கைவினை கரவேல்
41. கொள்ளை விரும்பேல்
42. கோதாட்டு ஒழி
43. கௌவை அகற்று


சகர வருக்கம்
44. சக்கர நெறி நில்
45. சான்றோர் இனத்து இரு
46. சித்திரம் பேசேல்
47. சீர்மை மறவேல்
48. சுளiக்கச் சொல்லேல்
49. சூது விரும்பேல்
50. செய்வன திருந்தச் செய்
51. சேரிடம் அறிந்து சேர்
52. சையெனத் திரியேல்
53. சொற் சோர்வு படேல்
54. சோம்பித் திரியேல்


தகர வருக்கம்
55. தக்கோன் எனத் திரி
56. தானமது விரும்பு
57. திருமாலுக்கு அடிமை செய்
58. தீவினை அகற்று
59. துன்பத்திற்கு இடம் கொடேல்
60. தூக்கி வினை செய்
61. தெய்வம் இகழேல்
62. தேசத்தோடு ஒட்டி வாழ்
63. தையல் சொல் கேளேல்
64. தொன்மை மறவேல்
65. தோற்பன தொடரேல்


நகர வருக்கம்
66. நன்மை கடைப்பிடி
67. நாடு ஒப்பன செய்
68. நிலையில் பிரியேல்
69. நீர் விளையாடேல்
70. நுண்மை நுகரேல்
71. நூல் பல கல்
72. நெற்பயிர் விளைவு செய்
73. நேர்பட ஒழுகு
74. நைவினை நணுகேல்
75. நொய்ய உரையேல்
76. நோய்க்கு இடம் கொடேல்


பகர வருக்கம்
77. பழிப்பன பகரேல்
78. பாம்பொடு பழகேல்
79. பிழைபடச் சொல்லேல்
80. பீடு பெற நில்
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
82. பூமி திருத்தி உண்
83. பெரியாரைத் துணைக் கொள்
84. பேதைமை அகற்று
85. பையலோடு இணங்கேல்
86. பொருள்தனைப் போற்றி வாழ்
87. போர்த் தொழில் புரியேல்


மகர வருக்கம்
88. மனம் தடுமாறேல்
89. மாற்றானுக்கு இடம் கொடேல்
90. மிகைபடச் சொல்லேல்
91. மீதூண் விரும்பேல்
92. முனைமுகத்து நில்லேல்
93. மூர்க்கரோடு இணங்கேல்
94. மெல்லி நல்லாள் தோள்சேர்
95. மேன்மக்கள் சொல் கேள்
96. மை விழியார் மனை அகல்
97. மொழிவது அற மொழி
98. மோகத்தை முனி


வகர வருக்கம்
99. வல்லமை பேசேல்
100. வாது முற்கூறேல்
101. வித்தை விரும்பு
102. வீடு பெற நில்
103. உத்தமனாய் இரு
104. ஊருடன் கூடி வாழ்
105. வெட்டெனப் பேசேல்
106. வேண்டி வினை செயேல்
107. வைகறைத் துயில் எழு
108. ஒன்னாரைத் தேறேல்
109. ஓரம் சொல்லேல்

nanri: Thamizh Ilakkiyam


--------------------------------------------------------------------------------

வெள்ளி, மார்ச் 23, 2012

விடியல் பறவைகள்

'அருவி ' கவிதை இலக்கிய காலாண்டிதழில் ( ஹைக்கூ - 786 சிறப்பிதழ்) இடம்பெற்றுள்ள எனது கவிதைகளை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

* பூங்காவில்
ஒரு நேர்காணல்
பூக்களோடு

* மண்வாசனையின்
தாய்வீடானது
பிறந்த கிராமம்

*வண்ணக் கலவைகள்
உயிர்த்தெழுந்தன
பட்டாம்பூச்சி

* ஒட்டடைக் குச்சியின்
ஒரு சிதைந்த வரலாறு
சிலந்தி வலைகள்

* மேய்ச்சல் இடமின்றி
தவித்துப் போயின
மந்தைவெளி மாடுகள்

* சுமப்பதில் எப்போதும்
தோள்களைவிட
மனசு

* நெஞ்சம் மகிழும்
உதய கீதங்களுடன்
விடியல் பறவைகள்

* பசியற்ற வாழ்வுக்கு
நல்லதோர் சுவர்தேடும்
கரித்துண்டு ஓவியன்

^ வாழ்க்கை வெளிச்சமின்றி
நகரும் விளக்குத் தூண்கள்
திருமண ஊர்வலத்தில்

* இல்லம் நிறைந்திருந்தது
பொன் பொருளால் அல்ல
மழலைச்சொற்களால்

.......கா.ந.கல்யாணசுந்தரம்,

(நன்றி: அருவி ஹைக்கூ சிறப்பிதழ்)

ஞாயிறு, மார்ச் 18, 2012

நட்பின் இலக்கணம்


 
பிரித்து எழுதி
                    பொருள் கூற முடியாது.... ....
நட்பின் இலக்கணம் 

 
.......கா.ந.கல்யாணசுந்தரம்.