கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

செவ்வாய், அக்டோபர் 21, 2014

மனிதநேயமுடன் மாநிலத்தில் வாழ்ந்திடவே வாழ்த்துகிறேன்....




இன்சுவைப் பண்டங்கள் 
இனிதே உண்டு 
புத்தாடைப் பொலிவுடனே 
பட்டாசு மத்தாப்பு 
வகை வகையாய் 
வானவேடிக்கை பல செய்து 
மகிழ்ந்திருப்பீர் நட்புடனே!
தீப ஒளித் திருநாளாம் 
தீபாவளி நன்னாளில் 
மனிதம் தழைத்திட 
உறுதிமொழி ஏற்பீர் !
அறிவியல் நுட்பமெல்லாம் 
ஆக்கமுடன் கையாண்டு 
மனிதநேயமுடன் 
மாநிலத்தில் வாழ்ந்திடவே 
வாழ்த்துகிறேன்....
இனிய தீபாவளி 
திருநாள் வாழ்த்துக்கள்!

..........கா.ந.கல்யாணசுந்தரம்.  

புதன், அக்டோபர் 08, 2014

அமிழ்தென நின் பாடல் இலங்கும் புவிமீது !



காடுவெளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலும்தான் மிச்சம் ! - எனும்
உழைக்கும் வர்க்கத்தின் அவலத்தை
அன்றே பாடிவைத்த பட்டுக்கோட்டையே !
இமைப்பொழுதும் சோம்பலின்றி உழைத்து 
இளைய சமுதாயம் மேன்மையுற- நல்லிசை
பாடலை நாள்தோறும் புனைந்த புலவனே !
பொதுஉடமை பூவெடுத்து நற்றமிழ் சொல்
நார்கொண்டு பாமாலை தந்த வள்ளலே !
நிலவுக்கு ஆடைகட்டி மன மேடையில்
ஆடவைத்த ஆனந்தக் கவியே!
உனதிசைப்பாடல்களால் துள்ளாத மனங்களை
துள்ளவைத்து இன்பத் தேனை அள்ள வைத்தாய்!
வாழ்ந்த காலங்கள் குறைவெனினும்
குன்றின்மேலிட்ட விளக்கானாய் !
நும் பெயரை எனக்கிட்ட பெற்றோர்கள் இன்றில்லை!
நுனிப்புல்லின் பனித்துளியாய் கவிஎழுதும்
திறன் எனக்கு வந்ததெல்லாம் - நின் பெயரை
கொண்டதாலே எனவெண்ணி நாளும் மகிழ்கிறேன்!
தமிழ் வாழும் காலமெல்லாம் நற்றமிழ் மணம்பரப்பி
அமிழ்தென நின் பாடல் இலங்கும் புவிமீது !

.........கா.ந.கல்யாணசுந்தரம்

ஞாயிறு, அக்டோபர் 05, 2014

காத்திருக்கிறேன்....




புன்னகை எப்போது வரும்?
காத்திருக்கிறேன்....
சராசரி மனித வாழ்க்கையில்
மகிழ்வின் எல்லையில் 
உதடுகள் தருகின்ற 
உன்னத வெளிப்பாடே 
புனிதமான புன்னகை !
எண்ணங்களின் எளிய 
வண்ணமயமான 
வாழ்வியலே புன்னகை!
பொலிவுறும் முகத்தோற்றத்தில் 
புத்தொளி வீசி 
கவர்ந்திழுக்கும் கலைனுட்பமே 
புன்னகை!
மற்றவரின் செயல்பாடுகளில் 
நிறைவுகளை அடையாளம் 
காணும் மௌன வெளிப்பாடே 
புன்னகை....
ஒரு புன்னகை ஓராயிரம் 
செயல்பாட்டினை செம்மையாக 
செயல்படுத்தும் திறனாளி !
வாய்மொழியில் பாராட்டாது
புன்னகைத்து அங்கீகரித்தல் 
பண்பாட்டின் எல்லை !
அகத்தின் முகவரியை 
முகத்தின் புன்னகை  
அறிமுகப்படுத்தும் !
முகவரி அற்றுப்போய் 
முதுகெலும்பில்லாமல் வாழாதீர்!
புன்னகை முகத்தோடு 
புவிமீது புதுக்கவிதை 
எழுத வாருங்கள்...
காத்திருக்கிறேன்.....
புன்னகையின் பேரேழில் காண !


............கா.ந.கல்யாணசுந்தரம் 



சனி, அக்டோபர் 04, 2014

பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும், - காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்;
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும், - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!

பொழிலிடை வண்டின் ஒலியும் - ஓடைப்
புனலிடை வாய்க்கும் கலியும்,
குழலிடை வாய்க்கும் இசையும், - வீணை
கொட்டிடும் அமுதப் பண்ணும்,
குழவிகள் மழலைப் பேச்சும் - பெண்கள்
கொஞ்சிடும் இதழின் வாய்ப்பும்,
விழைகுவ னேனும், தமிழும் - நானும்
மெய்யாய் உடலுயிர் கண்டீர்!

பயிலுறும் அண்ணன் தம்பி, - அக்கம்
பக்கத் துறவின் முறையார்,
தயைமிக உடையாள் அன்னை - என்னைச்
சந்ததம் மறவாத் தந்தை,
குயில்போற் பேசிடும் மனையாள், - அன்பைக்
கொட்டி வளர்க்கும் பிள்ளை,
அயலவ ராகும் வண்ணம் - தமிழ் என்
அறிவினில் உறைதல் கண்டீர் !

நீலச் சுடர்மணி வானம் - ஆங்கே
நிறையக் குளிர்வெண் ணிலவாம்.
காலைப் பரிதியின் உதயம் - ஆங்கே
கடல்மேல் எல்லாம் ஒளியாம்,
மாலைச் சுடரினில் மூழ்கும் - நல்ல
மலைகளின் இன்பக் காட்சி
மேலென எழுதும் கவிஞர் - தமிழின்
விந்தையை எழுதத் தரமோ?

செந்நெல் மாற்றிய சோறும் - பசுநெய்
தேக்கிய கறியின் வகையும்,
தன்னிகர் தானியம் முதிரை, - கட்டித்
தயிரோடு மிளகின் சாறும்,
நன்மதுரஞ்செய் கிழங்கு - கானில்
நாவிலினித்திடும் அப்பம்,
உன்னை வளர்ப்பன தமிழா! -உயிரை
உணர்வை வளர்ப்பது தமிழே !

.......பாவேந்தர் பாரதிதாசன்.

வியாழன், செப்டம்பர் 25, 2014

இன்னொரு பட்டாம்பூச்சி ....





ஒரு கோப்பை தேனீர்
என்னெதிரே இருக்க
பட்டம்பூச்சி என்னருகே
நலம் விசாரித்துவிட்டு
போகிறது....!

தேநீரை அருந்தாத
எனது நெஞ்சத்தில்
இனம்புரியாத
மகிழ்வோன்று
படபடக்கிறது....

இயற்கையுடன்
இணைந்த  வாழ்வில்
இயந்திரமாய்
இருப்பதற்கு
இடம் கொடுக்கவில்லை....!

எழுந்தவாறே
பறக்க நினைக்கிறேன் ....
நடப்பு நாளின்
நடுங்கும் குளிரிலும்
கங்குலானது மனது !

தீராத வேட்கைக்கு
தீர்ப்பெழுதிப்போன
அந்த வண்ணத்துப் பூச்சியின்
சிதைந்த சிறகு ஒன்று
கைகொட்டி சிரித்தது ...

இயற்கையுடன் இயைந்த
வாழ்வு கொடுவென்று
ஏளனமாய் எனைப்பார்த்து
வழிவிட்டு ஒதுங்கியது
காற்றின் தோழமையோடு !

மீண்டும் அமர்ந்தேன்
ஒரு கோப்பை தேநீரை
அருந்தியபடி
சிந்தித்துக் கொண்டிருந்தேன்...
நலம் விசாரிக்க வரவில்லை ...
இன்னொரு பட்டாம் பூச்சி !

...........கா.ந.கல்யாணசுந்தரம்




செவ்வாய், செப்டம்பர் 23, 2014

கார்கால ஹைக்கூ கவிதைகள்.....




*கார்கால மழை
நனையாமல் நகரும் நத்தைகள்
சாலையோர நாய்க்குடை காளான்கள் ...!

* பாசிபடிந்த ஆல விழுதுகள்
ஊஞ்சலாடுகின்றன...
மழையில் நனைந்த மந்திகள் !

* மந்தையில் இருந்து பிரிந்தது
ஆட்டுக்குட்டி....
மஞ்சள் வெயிலில் நனைந்தபடி !

* குளிர் காற்றில் ஊசலாடும்
தூக்கனான் குருவிக் கூடுகள்...
உறக்கமிழந்த குஞ்சுகளோடு !

* புது வெள்ளத்தில்
ஆனந்தக் கூத்தாடியது...
ஓடைக்கரை தவளைகள்  !

* நேற்று பெய்த மழை வாசம்
புத்துயிர் பெற்றன...
எனது கவிதைக் கரங்கள் !

* இன்னமும் தேடுகிறது மனது
மழை வருமுன் மணக்கின்ற
மண்வாசம் !

.......கா.ந.கல்யாணசுந்தரம்.


அது ஒரு வசந்தகாலம்...



அது ஒரு வசந்த காலம்
மேக மூட்டம் பகலை
இருளாக்கியது.....


பெருமழை பெயதலின்
முன்னோடியாய்
மின்னல் வெட்டும் இடியும்...
பள்ளிக்கூடத்தின் மணி
அடிக்கப்பட்டது....
புற்றீசலாய் வகுப்பிலிருந்து
பறந்து சென்றோம்
வீட்டுக்கு....!


சுவையான கேழ்வரகு அடை
அம்மாவின் கைவண்ணத்தில்
மணம் தவழ
அழைத்தது வீட்டின் வாயில் !


தூறல் ஆரம்பித்தது.....
மழைக்கு இதமாய்
அடையை காகிதப்பைகளில்
அடைத்து வைத்துக்கொண்டு
திண்ணையில் உட்கார்ந்து
சுவைத்தவரே தயாரானது
எங்களின் காகிதக் கப்பல்கள்....!


அக்கம் பக்கம் நட்புகளுடன்
தெருவில் அணைகட்டி
திறந்துவிட்டோம்
வெள்ளத்தை ....
வெள்ள நீரில் பயணித்தன
காகிதக் கப்பல்கள் .........
மனிதநேயத்தின்
அறிச்சுவடுகளாய்....!
ஆம்...அது ஒரு வசந்த காலம் !!!!!!

.....கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், செப்டம்பர் 11, 2014

மங்கலத் திருமண நாளின்று....









பெற்றோர் ஆசிகூற சுற்றமும் நட்பும் வாழ்த்தொல்லிக்க 
நற்றமிழ் நங்கை அருள்செல்வியுடன் கரம் கோர்த்த 
மங்கலத் திருமண நாளின்று ! - பல்கலையாய் 
மக்களீன்ற மனைமாட்சி மகிழ்வெய்தும் தருணமிது !
பகிருகின்றோம் வலைப்பூவில் அகம் மகிழ்ந்து.

- கா.ந.கல்யாணசுந்தரம்.

சனி, ஆகஸ்ட் 09, 2014

நீங்களாவது.......




கொடிதருகிறேன் 
குண்டூசி தருகிறேன் 
நீங்களாவது சட்டையில் 
அணிந்துகொள்ளுங்கள்!
என்று தணியுமிந்த 
ஏழ்மையின் தாகம்?
தேசியம் தழைத்ததா?
சுதந்திரம் பிழைத்ததா?
நினைவினில் பாரதி ....
நிழலாடுதே உன்கவி...!

........கா.ந.கல்யாணசுந்தரம் .

சனி, ஜூன் 07, 2014

இனி தேவை ....மனிதநேயம்







@   மனிதம் பிழைக்க இனி 
       தேவை ....
       மனிதநேயம் !

@    குழந்தை வேண்டி 
        பெண்மையின் தவம் ....
        மண்சோறு உண்டபடி !

@    குழந்தைகளின் 
        போராட்ட ஊர்வலம்....
        மழலைக்  கவிஞர் வேண்டுமென!

.........கா.ந.கல்யாணசுந்தரம் 




         

திங்கள், ஏப்ரல் 14, 2014

தமிழ் நவின்று தழைத்திடுங்கள் பல்லாண்டு!










முத்தமிழின் சுவையுணரும் 
இளங்காலை நேரம் !

இத்தரையை மகிழ்விக்கும் 
சுகமான காலம் !
சித்திரை எனும் 
முத்திரை பதித்த மாதம்!
மல்லிகை மலரோடு 
மாவிலைத் தோரணம் அசைந்தாட 
மெல்லிசையாய்  
தமிழ் பேசும் மழலை மொழி !
உற்றோரும் பெற்றோரும் 
பெற்றெடுத்த தமிழ்மண்ணின் 
வரலாற்றை வளமோடு காத்திட்டு 
வளர்கின்ற தலைமுறைக்கு
தாய்மொழியை அமுதாக..... 
என்றென்றும் தந்திடுவோம்  தரமாக !
ஜெய ஆண்டின் வருகையிலே 
இதய மகிழ் தமிழ் வாழ்த்து 
இயம்புகிறேன் .... தமிழ் நவின்று 
தழைத்திடுங்கள்  பல்லாண்டு! 

........... கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், ஏப்ரல் 03, 2014

இதுவன்றோ தமிழனின் வீடு......

தமிழிசை நாள்தோறும் பாடு - இனி 
நற்றமிழ் துறைதோறும் நாடு 
இதுவன்றோ தமிழனின் வீடு - இதை 
மறுப்போரை மறக்காமல் சாடு 

......(தமிழிசை ) 

தாய்மொழி நன்கறிந்து பயின்றால் - அயல் 
மொழி இனிதாகும் இன்றே 
வாய்மொழி தாய்தந்த பரிசு - நம் 
வாழ்வினை வளமாக்கும் உறவு 

....(தமிழிசை ) 

அம்மா என்றழைக்கும் மழலை - பின் 
மம்மி என்றழைப்பது ஏனோ ? 
தனிமனித முன்னேற்றம் இதுவில்லை - ஏன் 
தமிழன் மறந்தான் நற்றமிழ் சொல்லை ? 

......(தமிழிசை )

............................கா.ந.கல்யாணசுந்தரம் .

திங்கள், மார்ச் 31, 2014

நாளை உலகின் பாதையை .....



ஆசையே அலைபோலே நாமெலாம் அதன்மேலே

ஓடம்போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே! (ஆசை)

பருவம் என்னும் காற்றிலே
பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார்
சுகம் பெறுவார் அதிசயம் காண்பார்!
நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்? (ஆசை)

வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே
வடிவம் மட்டும் வாழ்வதேன்
இளமை மீண்டும் வருமா
மணம் பெறுமா முதுமையே சுகமா!
காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்? (ஆசை)

சூறைக்காற்று மோதினால்
தோணி ஓட்டம் மேவுமோ
வாழ்வில் துன்பம் வரவு
சுகம் செலவு இருப்பது கனவு!
காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்? (ஆசை)


 ..........கவியரசு கண்ணதாசன் .

செவ்வாய், மார்ச் 25, 2014

ஹைக்கூ கவிதைகள்..... மாறுபட்ட சிந்தனைகளுடன் !



@  பூட்டிய வீட்டுக்குள்
      சலங்கை ஒலி ...
      பரதம் கற்பித்த முற்றத்துடன் !

@  நிலவொளியில் மங்கினாலும்
      நீலவானின் நண்பர்கள் ...
      விண்மீன்கள் !

@  நடைபயிலும் குழந்தைக்கு
      தெளிவாய் தெரிந்தது
      நம்பிக்கையின் இருப்பிடம் !

...........கா.ந.கல்யாணசுந்தரம் 

புதன், மார்ச் 19, 2014

தமிழர்தம் நெஞ்சமெல்லாம்.........



தமிழர்தம் வாழ்வினை சிற்றுளியால்
மனிதநேயமுடன் சிற்பங்களில்
அள்ளித் தெளித்தான் பல்லவன் !
பகலவன் உள்ளளவும் பார்போற்றும்
மாமல்லை பறைசாற்றும்
கலைமாந்தர் நுண்ணறிவை !
வனப்புமிகு சிலைகள் எல்லாம்
உயிர்பெற்று வாராதோ... என்றே
ஏங்கிடும் தமிழர்தம் நெஞ்சமெல்லாம்
தவிக்கிறது ........
உயிர்கொடுத்தேனும் காப்பாற்றவேண்டும்
மாமல்லபுரத்து எழில்மிகு சிற்பங்களை....
கடலரிப்பின்  பிடியிலிருந்து !

........கா.ந.கல்யாணசுந்தரம் 

திங்கள், பிப்ரவரி 24, 2014

ஏங்கிடும் புத்தகங்கள்!

 @ என்னை புரட்டிப் பார்ப்பதைவிட
 படித்துப்பாருங்கள்....
ஏங்கிடும் புத்தகங்கள்!

@ வீட்டின் அழகு கூட்ட
அலங்காரப் பொருளானேன்...
படிக்கப்படாத புத்தகங்கள் !

@ என்னுள் ஒரு மயிலிறகு
காலம் கடந்தும் சுமக்கிறது  ...
வசந்த காலங்களை !

@ உங்களின் நினைவுகளில்
வாழாவிடினும் உணவானேன்...
கரையான்களுக்கு !

@ எப்படியோ அறிவொளி
ஏற்றி மகிழ்ந்தேன்
கிழிந்த நிலை புத்தகங்கள் !

.........கா.ந.கல்யாணசுந்தரம்.


வெள்ளி, பிப்ரவரி 21, 2014

அம்மா எனும் சொல் அற்புதமானது ...


வணிகக்கல்வி வாழ்வினை உயர்த்தும்
கல்வியில் வணிகம் மனிதத்தை வீழ்த்தும்
தாய்மொழிக் கல்வி தரத்தினை பெருக்கும்
அயல்மொழி கற்றிட அடித்தளம் அமைக்கும்

செம்மொழி தமிழின் இலக்கிய மாண்பு
சிந்தனை வளத்தின் இயற்கை ஊற்று
புலமை பெற்றிட்ட முன்னோரெல்லாம்
பன்மொழி பயின்று மேதைகளானார்

ஆங்கிலம் பயிலும் அரும்புகளிடத்து
அம்மா எனும் சொல் அற்புதமானது
அளவுக்கு மீறிய புத்தக சுமையில்
அமுத மொழியோ புதைந்து போனது

உலகின் தொன்மை தமிழில் உண்டு
உண்மை இதுவென அனைவரும் அறிவர்
பெற்றோர் நாளும் தமிழினை பகன்றால்
புதிய தலைமுறை அணியும் மகுடம்

.................கா.ந.கல்யாணசுந்தரம்.

ஞாயிறு, பிப்ரவரி 16, 2014

நெஞ்சம் நிறையும்



இல்லையென்று  சொல்லாமல் 
ஒரு மலரினைக் கொடு 
நெஞ்சம் நிறையும் 
......கா.ந.கல்யாணசுந்தரம் 

சனி, நவம்பர் 02, 2013

புத்தாடை இனிப்போடு பட்டாசு வெடியோடு மனமகிழ் தீபவொளி மனையெங்கும் ஒளிவீச தீமை, வறுமை நிலமதில் எந்நாளும் வாராது ... மனிதம் தழைக்க கொண்டாடுவோம் இனிதாக தீபவொளித் திருநாளை! நல்வாழ்த்துக்கள் என்றென்றும்..... அன்பன், கா.ந.கல்யாணசுந்தரம்

ஞாயிறு, செப்டம்பர் 22, 2013

தளிர்களின் நிழல்

உதிரும் சருகுகளின்
பாதையில் தெளிவாய்...
தளிர்களின் நிழல் !

...........கா.ந.கல்யாணசுந்தரம்

வெள்ளி, செப்டம்பர் 20, 2013

புத்தனின் போதிமர நிழல்













உனது கனவுகளின்
அடித்தளங்கள்
என்னால் உருவாக்கப்படுகின்றன
கண்களை மூடி
எண்ணங்களை ஒருமுகப்படுத்து....
நெற்றிப் பொட்டில்
வண்ண வண்ண கலவைகளின்
வடிவமைப்பில்
ஒரு பூங்கா உருவாவதை
உன்னால் உணரமுடியும் !
கனவுக்குள் ஒரு கனவை
உருவாக்கி ஆளுமைப்படுத்த
ஒரு கனவுத் தொழிற்சாலை
எனக்கு தேவைப்படுகிறது.....
சிந்தனை முதலீடுகளில்
நேரம் தொலைந்தாலும்
சிதைந்த நினைவுகளை
செம்மைப்படுத்த முயல்கிறேன்!
கனவுகளில் மட்டும்
தொடரும் என் நினைவுகளை
நிகழ்கால வாழ்க்கையிலும்
மனதில் கொள்!
அறிமுகமில்லா இந்த
இருவரின் வாழ்க்கையில்
ஒரு அர்த்தமுள்ள
எதிர்காலம் உருவாகட்டும்!
கண்களைத் திற
உன்னைச் சுற்றி புத்தனின்
போதிமர நிழல்
பரவிக்கிடக்கிறது....
ஆனால் சூரியன் மட்டும்
இங்கு உதிக்கவில்லை !

.............கா.ந.கல்யாணசுந்தரம்

திங்கள், செப்டம்பர் 09, 2013

அன்பின் வழியது உயிர்நிலைதான் என்றாலும்
ஆழ்கடலின் நங்கூரமாய் மனது !
இயல்பின் வெளிப்பாடாய் இயக்கம் அமைந்தாலும்
ஈன்ற அன்னைக்கு ஈடில்லை உலகில் !
உண்மை ஒளிரும் எப்போதும் என்றாலும்
ஊமை மொழி அறிவது எக்கணம்?
எண்  சாண்  உடலுக்கு சிரசே பிரதானம்
ஏற்றமிகு வாழ்விற்கு பணமே அரியாசனம்
ஐம்பொன் சிலைக்கு பாலாபிஷேகம்
ஒரு ஏழைச் சிறுமிக்கு பாலியல் வன்மம்
ஓடி ஒளிந்த தமிழின ஈழம்
ஔடதமாய் எந்நாளில் கிட்டும்?

......கா.ந.கல்யாணசுந்தரம் .

வளம் தரும் விநாயகர் சதுர்த்தி விரதம்



வளம் தரும் விநாயகர் சதுர்த்தி விரதம்





விநாயகர் சதுர்த்தி விரதத்தை ஒரு கொண்டாட்டமாகவே நாம் பாவிக்கலாம். விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் தருவார்.




அதனால்தான் அவர் எல்லாருக்கும் பொதுவாகவும், யாரும் சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார்.



விநாயகர் விரதத்தை பார்வதி தேவியே மேற்கொண்டிருக்கிறார். தன் கணவரை அவமதித்து யாகம் நடத்திய தந்தை தட்சனிடம் நியாயம் கேட்கப் போனாள் பார்வதி என்ற தாட்சாயணி. ஆனால், தட்சனோ மிகவும் கர்வம் பிடித்தவன். மருமகனை அவமானப்படுத்தியது போதாதென்று, மகளையும் கேலி பேசினான்.



இந்த அவமானத்தை பொறுத்துக் கொள்ள முடியாத தாட்சாயணி, தட்சன் வளர்த்து வைத்திருந்த யாக குண்டத்தில் அப்படியே பாய்ந்துவிட்டாள்.



அதன்பிறகு, பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து பார்வதி என்னும் பெயருடன் வளர்ந்து வந்தாள்.



சிறு வயதிலிருந்தே கயிலைநாதன்தான் தன் கணவன் என்று தீர்மானமாக இருந்தாள். அவளுடைய அந்த எண்ணம் பலிக்க வேண்டும் என்றால், அவள் விநாயகரை நினைத்து சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டுமென்று அவளுடைய தந்தையார் பர்வதராஜன் யோசனை சொன்னார்.



அவர் சொன்னபடியே, மண்ணால் ஒரு விநாயகர் விக்ரகத்தை உருவாக்கினாள் பார்வதி. கூடவே தங்கத்தாலும் ஓர் உருவம் செய்து இரண்டையும் பொற்கும்பம் ஒன்றின் பக்கத்தில் வைத்தாள்.



அந்த விக்ரகங்களுக்கு ஆகம விதிப்படி பூஜைகளை செய்தாள்.



ஆவணி மாத அமாவாசைக்கு அடுத்த சதுர்த்தியில் இப்படி பூஜையை ஆரம்பித்து, பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி வரையில் தினமும் பூஜை செய்தாள்.



அதற்குப் பிறகு மண் பிள்ளையாரை, மேள தாளத்தோடு ஊர்வலமாக எடுத்துப் போய் நதியிலே இறக்கி விட்டாள். அந்த பதினைந்து நாட்களும் நியம நிஷ்டைகளை மீறாமல் இருந்த விரதத்தின் பலனாக, தான் ஆசைப்பட்டாற்போல கயிலைநாதனை கைப்பிடித்தாள்.



விநாயகர் ஆதி பரம்பொருள். எல்லோருக்கும் மூத்தவர். பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று எல்லோரையும் உருவாக்கியவர் அவர்தான். அவர் சாதிக்க வேண்டியது நிறைய இருந்ததால் அவர் பலவித அவதாரங்களை எடுத்தார்.



அந்த மாதிரியான ஒரு அவதாரம்தான் சிவன் மகனாக அவர் தோன்றியது. அற்பத் தாவரமான புல்லையும் (அருகம்புல்) அவர் ஏற்றுக் கொள்கிறார். காட்டுப்பூவான எருக்கம்பூவைக் கூட அவர் மறுப்பதில்லை.



அவரைப் பொறுத்தவரை புல் மாலை போட்டவரும் ஒன்றுதான்; ரோஜா மாலை போட்டவரும் ஒன்றுதான். வித்தியாசமே பார்க்க மாட்டார். தன்னை வணங்குபவரின் மனம் சுத்தமாக இருக்கிறதா, அந்த மனதில் தனக்கு எத்தகைய இடம் இருக்கிறது என்பதை மட்டும்தான் பார்ப்பார்.



விநாயகர் சதுர்த்தி விரத நடைமுறைகள் என்னென்ன?



அன்றைய தினம் விடியற் காலையிலேயே எழுந்து, சுத்தமாக குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். வாசலில் மாவிலைத் தோரணம் கட்டலாம். முடிந்தால், இரண்டு வாழைக் கன்றுகளையும் வாசலின் இருபுறங்களிலும் கட்டி வைக்கலாம். பிறகு, பூஜையறையில் சுத்தம் செய்த ஒரு மணையை வைக்க வேண்டும்.



அதன்மேல் ஒரு கோலம் போட்டு, அதன்மேல் ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும். இலையின் நுனி வடக்கு பார்த்ததுபோல இருப்பது நல்லது. இந்த இலையின் மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும்.



பூமியிலிருந்து உருவான எதுவும் பூமிக்கே திரும்பப் போகவேண்டும் என்ற தத்துவம்தான் களிமண் பிள்ளையார். களிமண் மட்டும்தான் என்றில்லாமல், உலோகம், கற்சிலை விக்ரகங்களையும் வைக்கலாம்.



பத்ர புஷ்பம் எனப்படும் பல்வகைப் பூக்கள் கொண்ட கொத்து, எருக்கம்பூ மாலை, அருகம்புல், சாமந்தி, மல்லி என்று எத்தனை வகை பூக்களை வாங்க முடியுமோ, அவரவர் வசதிக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம்.



அதேபோல முடிந்த அளவுக்கு சில வகை பழங்களையும் வாங்கிக் கொள்ளலாம். இவை எல்லாவற்றையும் விட, விநாயகருக்கு மிகவும் பிடித்தமான மோதகத்தை செய்து கொள்ளலாம்.



அதாவது கொழுக்கட்டை. தேங்காய் பூர்ணத்தை உள்ளே வைத்து செய்யப்படுவது. இதிலும் ஒரு தத்துவம் இருக்கிறது. மேலே இருக்கும் மாவுப் பொருள்தான் அண்டம்.



உள்ளே இருக்கும் வெல்லப் பூர்ணம்தான் பிரம்மம். அதாவது நமக்குள் இருக்கும் இனிய குணங்களை மாயை மறைக்கிறது. இந்த மாயையை உடைத்தால் அதாவது வெள்ளை மாவுப் பொருளை உடைத்தால், உள்ளே இனிய குணமான வெல்லப் பூர்ணம் நமக்குக் கிடைக்கும்.



(விநாயகருக்கு முதன் முதலாக இந்தக் கொழுக்கட்டையை நிவேதனம் செய்தது, வசிஷ்ட முனிவருடைய மனைவியான அருந்ததி.)



பிள்ளையாருக்கு பூக்களால் அலங்காரம் செய்து விட்டு, பிறகு விநாயகர் பாடல்கள் எதை வேண்டுமானாலும் பாடலாம். அவ்வையார் தந்த விநாயகர் அகவல், காரிய சித்தி மாலை படிப்பது விசேஷமான பலன்களைத் தரும். பிள்ளையாருக்கு கொழுக்கட்டை மட்டுமில்லாமல், அவரவர் வசதிக்கேற்ப எள்ளுருண்டை, பாயசம், வடை என்றும் நைவேத்யம் செய்யலாம்.



பால், தேன், வெல்லம், முந்திரி, அவல் என்று ஒவ்வொன்றிலும் சிறிதளவு எடுத்து ஒன்றாகக் கலந்து அதையும் நைவேத்யம் செய்யலாம். நிவேதனப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் 21 என்ற கணக்கில் சிலர் வைப்பார்கள். ஆனால், எண்ணிக்கை முக்கியமில்லை; ஈடுபாடுதான் முக்கியம். பிறகு கற்பூரம் காட்டி விரதத்தை முடிக்கலாம்.



இந்த விரதத்தை காலையிலிருந்தே உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் அனுஷ்டிப்பது மிகவும் விசேஷம். பூஜை நேரம் வரை பட்டினியாக இருப்பது சிறப்பு. சம்பிரதாயம் பார்க்கக் கூடியவர்கள் இந்த விநாயகர் சதுர்த்திக்குப் பிறகும் தொடர்ந்து விரதத்தை அனுசரிப்பார்கள். அப்படித் தொடர்ந்து, பௌர்ணமிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினத்தோடு விரதத்தை நிறைவு செய்வார்கள்.



இத்தனை நாள் விரதத்துக்குப் பிறகுதான் பிள்ளையாரை கிணற்றிலோ அல்லது ஏதாவது நீர்நிலையிலோ கொண்டுபோய் போடுவது வழக்கம்.



பதினைந்து நாள் அனுசரித்தாலும் சரி, விநாயகர் சதுர்த்தி அன்றைக்கு ஒரே ஒருநாள் மட்டும் அனுசரித்தாலும் சரி, மேற்கொள்ளும் விரதத்தை உளப்பூர்வமாகக் கடைப்பிடிக்க வேண்டியதுதான் முக்கியம்.



வருடத்திற்கு ஒருமுறை இப்படி விநாயகர் சதுர்த்தி அனுசரிப்பதுபோல மாதந்தோறும் பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தியாக அனுஷ்டிக்கப்படுகிறது.



இந்த நாளிலும் விரதம் இருப்பது சிலருடைய வழக்கம். அன்றைக்கு முழுவதும் பட்டினி இருந்து, விநாயகர் சிலை அல்லது படத்துக்கு முன்னால் தீபமேற்றி, விநாயகர் பாடல்கள், ஸ்தோத்திரங்களை பாடி, மாலையில் கொழுக்கட்டை நைவேத்யம் செய்து, பிறகு சந்திர தரிசனம் செய்துவிட்டு எளிமையான உணவை எடுத்துக்கொண்டு விரதத்தை முடிப்பதும் சிலர் வழக்கம்.



இந்த விரதங்களால் உள்ளம் மேன்மைஅடையும்; உடல் ஆரோக்கியம் வளரும்; எல்லா வளங்களும் நிறையும். விரதம் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்தினருக்கும், அவர்களை சார்ந்த அனைவருக்கும் விநாயகர் நல்லன எல்லாம் அருள்வார்.



(Thanks: Dinakaran)

திங்கள், ஆகஸ்ட் 05, 2013

எப்போது கண்டெடுக்கும் இன்னொரு காந்தியை ?









அகமும் புறமும்
என்னவென்று அறியாமலே
கலிங்கத்து பரணிக்கு
உரை எழுதுபவர்கள் !
நெல்லிக்கனியின்
சுவையறியாது
அதியாமானின்
வள்ளல்தன்மைக்கு
மகுடம் சூட்டுபவர்கள் !
ஆறாம் அறிவை
அடகுவைத்துவிட்டு
ஏழாம் அறிவை அலசுபவர்கள் !
இவர்களெல்லாம் ....
வெளிச்சத்துக்கு விளக்கு
ஏற்றுபவர்கள் !
வெளிச்சப்பார்வையில்
இவர்களெல்லாம்
இருளின் சொந்தக்காரர்கள்  !
சமுதாயப் புத்தகத்தின்
முகவரியைக் கூட
படிக்கத்  தெரியாத
சுயநலவாத
கூட்டமைப்பின்
கொள்கைச்செம்மல்கள் !
வாக்கு வங்கிகளை
கொள்ளையடித்து ....
மக்களாட்சியின் மகிமைக்கு
மலர்வளையம் வைப்பவர்கள்!
சுதந்திர தினம் ஆண்டுதோறும்
கொடியேற்றத்தில் மட்டுமே
கொண்டாடப்படுகிறது!
மதம் பிடித்த யானைகளாய்
சமுதாய சீர்கேடுகளை
கட்டவிழ்த்துவிடுவோரை
இனம்கண்டும் ...
ஆர்த்தெழாத  மானுடம்
எப்போது கண்டெடுக்கும்
இன்னொரு காந்தியை ?

..........கா.ந.கல்யாணசுந்தரம்








வியாழன், ஜூலை 11, 2013

தோள்களின் தோழமையோடு !






விடியல் பறவைகளோடு
எனது பயணிப்பும் !
வாழ்க்கையின் தொலைந்த
பக்கங்களைப் புரட்டியவாறே
கடக்கும் இரவுப் பொழுதுகள் !
பகல் நேரத்து தேடல்களில் !
புலம்பெயரும் சிந்தனைகள்
அரை குறை அறிவுஜீவிகளின்
அறிவுறுத்தல்களில்
செயலிழக்கும் மனம் !
உடன் பிறவா தோழர்களின்
தளர்ந்த கைகுலுக்கல்களில்
நட்பின் தேய்மானம் !
இறை வழிபாடுகளில்
இனம்புரியா நிலைப்பாடு !
கார் கால தொடர் மழையில்
நிரம்பும் ஏரிகளுக்கும்
வடிகால்கள் இருக்கின்றன !
ஆம் ....பிறரிடம் பகிரப்படாத
துன்பங்களுடன் எனது
மனமும் முன்வரிசையில்
அமர்ந்திருக்கிறது....
பாரம் சுமப்போர் போட்டியில்
கலந்துகொள்ள .....
தோள்களின் தோழமையோடு !

...........கா.ந.கல்யாணசுந்தரம்


சனி, ஜூலை 06, 2013

உனக்காகத் தேடுகிறேன்




வேறொரு பெயரை 
உனக்காகத் தேடுகிறேன் 
ஜாதிமல்லியே !

............கா.ந.கல்யாணசுந்தரம்

வெள்ளி, மே 10, 2013

சுமைதாங்கியிடம்

என்னை நான் வியந்து பார்க்கிறேன்
நெஞ்சு வெடிக்கும் மனச் சுமைகளைக் கூட
தாங்கிக்கொள்ளும் மனோபாவத்தை
இறைவன் எப்படி கொடுத்தானென்று !

எப்படியும் ஏதோ ஒரு விதத்தில்
ஒவ்வொருவருக்கும் மனச் சுமைகள்
இருந்து கொண்டுதான் இருக்கிறது!

சுமைகளை ஏற்றிய பார வண்டியாய்
இமைகளை மூடி ஒரு புத்தனைப்போல்
சும்மா இருத்தலின் சுகம் காணும்
முயற்சியில் தோல்விகளே நிதர்சனம்!

நடைபயணத்தில் தலைமுதல்
பாதம்வரை நரம்புகள் உயிர்த்தெழ
பாரம் பதவி விலகி பயணிக்க ஆரம்பித்தது !

கிராமத்து ஒற்றையடிப் பாதையில்
கம்பீரமாய் நின்ற சுமைதாங்கியில்
சாய்ந்தபடி ஓய்வெடுத்தேன்......
" தலைச் சுமைகளை மட்டுமே
இறக்கிவைக்கின்றனர் " என ஏக்கத்துடன்
முணுமுணுத்த சுமைதாங்கியிடம்
விக்கித்து வலுவிழந்துபோனேன் !


..............கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், மே 09, 2013

கும்புடுங்க



கத்திரி வெய்யில்
தோள்பட்டை எலும்பை
உருக்கி எடுக்க
தென்னை இளநீர்
விற்றபடி கணவனைப்
பார்த்து மனைவி சொன்னாள் ....
"படிக்கவைக்காத
தென்னம்பிள்ளையை
படம்புடிச்சி தெனமும்
கும்புடுங்க !"

......கா.ந.கல்யாணசுந்தரம்,

எதிர்வினை ....



ஒரு கனவின் தொடர்
என்னுள் மின்னல் பூக்களை
மலரவிட்டது
தொடரும் தேடுதல்
எதற்காக என்பது மட்டும்
புரியாமல் இருக்கிறது
கைக்கு எட்டியது
வாய்க்கு எட்டாமலே
கனவுகள் முற்றுப்பெருகிறது
வானப்பெருவெளியில்
சிறகை விரித்து பறக்கிறேன்
மனிதநேயமுடன்
பறவைகளின் விசாரிப்புகள்
மனதை குளிர்விக்கிறது
சிகரங்களை நோக்கி
பயணம் தொடர்கிறது
என்னைப் பிடித்து
இழுத்து கீழே தள்ள
அங்கு எவரும் இல்லை.
இருப்பினும் எதிர்வினை
இல்லாததொரு தேசத்தில்
எனது இருப்பிடம்
சிறப்பானதாக தெரியவில்லை.

............கா.ந.கல்யாணசுந்தரம்  

ஞாயிறு, ஏப்ரல் 14, 2013

சித்திரை மலர்கள்









சித்திரை மலர்கள் மலரட்டுமே
சிந்தனைத் துளிகள் அரும்பட்டுமே
இத்தரை மகிழும் நன்னாளாம்
முத்திரைப் பதித்து வளரட்டுமே

விஜய ஆண்டின் வரவிங்கு
விளைக்கும் ஆயிரம் நலமிங்கு
புதுமைகள் பூத்துக் குலுங்கிடுமே
புன்னகை நம்மில் இலங்கிடுமே

மழலை மொழியிங்கு தமிழென்று
மனதால்  கொள்கை கொண்டிடுவோம் 
தமிழை சொல்லும் தமிழன் இங்கே
தலைநிமிர்ந்து வாழ்வது திண்ணியமே

.............கா.ந.கல்யாணசுந்தரம்


 

செவ்வாய், ஏப்ரல் 02, 2013

அமிழ்தான தமிழ் இன்று வேண்டும்


அமிழ்தான தமிழ் இன்று வேண்டும் - தினம்
அகம் குளிர நான் பாட வேண்டும்
இனிதான சொல் காண வேண்டும் - நம்
இல்லத்தில் கலந்துரையாட வேண்டும்

                                                            (அமிழ்தான )

மம்மி என்றழைக்காது மழலை - இனி
அம்மா என்றிசைக்கட்டும் குழலை
மொழியோடு உறவாடும் நெஞ்சம் - நல்
வழியோடு வளமாக வாழும்

                                                           (அமிழ்தான )

சான்றோர்கள் வளர்த்திட்ட செம்மொழி - வளர்
சான்றாக உடன்வாழும் அருள்மொழி
தாய்மொழி பகல்வதில் தாழ்வில்லை - இளைய
தலைமுறையே இனி பேசிடு தவறில்லை


                                                              (அமிழ்தான )

                                               ..................கா..கல்யாணசுந்தரம். 

சனி, மார்ச் 09, 2013

பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகிறோம்

 
 


மொட்டவிழ்ந்த மலர்போல மழலை முகம்
பொட்டிட்டு பூச்சூடி பார்த்தாலே போதும்
கட்டவிழ்ந்த தாழை மலர் போல அழைப்பாள்
கொட்டுகின்ற அருவியென துள்ளி எழுவாள்
குழல்கூட இசைக்காமல் சற்றே நிற்கும்
மழலை இவள் வாய் மொழியில் தோற்கும்
வண்ணத்து பூச்சியென சிறகடித்து வருவாள்
காண்போரின் கையசைப்பில் கண்சிமிட்டி சிரிப்பாள்
முகமறியா போதிலும் மடிமீது வந்தமர்வாள்
கொடிமுல்லைப் பூவாய் மனம் கவர்ந்திழுப்பாள்
வினோத்குமார் கலைவாணி தம்பதியர
பெற்றெடுத்த வாசமிகு பெரும் செல்வம்
எங்களின் ஆசைமிகு பெயர்த்தி பிரணீ த்தா
மழலையிவள் நேசமிகு பிறந்தனாளின்று
உவகையுடன் பாசமிகு மனதுடனே
பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகிறோம்
தாத்தா பாட்டி !
கா .கல்யாணசுந்தரம்
அருள்செல்வி கல்யாணசுந்தரம்
செய்யாறு
09.03.2013



Reply
Forward


சனி, மார்ச் 02, 2013

அடையாளங்கள்





முயல்களைவிட ஆமைகளுக்கு
தெரிந்திருக்கிறது 
பாதையின் அடையாளங்கள்                    

........... கா.ந. கல்யாணசுந்தரம்    

                                                                                                                                                                     

திங்கள், பிப்ரவரி 25, 2013

குறையாத பொக்கிஷங்களாய் !










பனி படர்ந்த புல்வெளி
வெண்மேகம் அணைத்த
மலைமுகடுகள்
நீர் நிறைந்த பரந்த கிராமத்து எரி
வெண்ணிற கொக்குகள்
கூட்டமாய் பறந்து அமரும்
நாற்றங்கால் வயல்கள்
ஒற்றையடிப்பாதையில்
கால்நடைகளின் அணிவகுப்பு
தென்றல் தாலாட்டும்
தென்னை மரங்கள்
மாந்தோப்புக்குள் இசைக்கும்
இளம் குயில்கள்
அருவி கொட்டுதலின் 
சாரல் துளிகள் 
மாலை நேரத்து ஏரிக்கரையில் 
நிழலோவியமாய் 
வீடுதிரும்பும் தொழிலாளிகள் 
இன்னும் எத்தனை எத்தனையோ 
நெஞ்சில் இன்னும் 
வரைபடமாய் எனது ....
கிராமத்து வாழ்க்கையின் 
கையிருப்புகள் !
பிறரிடம் பகிர்ந்தும் 
குறையாத பொக்கிஷங்களாய் !
......கா.ந.கல்யாணசுந்தரம்