கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

ஞாயிறு, செப்டம்பர் 18, 2011

வீடுபேற்றின் வாயிலை நாடு!




















நிலத்தோடு ஸ்பரிசிக்கும் கால்கள்
நெஞ்சுக்குள் ஈரம் எப்போதும் பிரவாகமாய் !
பிராணத்தின் சூட்சுமத்தை அறிந்த இதயம்
தணலாய் எப்போதும் அடிவயிற்றின் யாகம்
கண்மணிக்குள் அடங்கிவிடும் நீலவானம்
ஐம்பூதங்களை ஒருங்கிணைத்து
சும்மா இருத்தலின் சுகம்தானைக் காண
அம்மா என்று உச்சரித்து அமர்ந்தேன்!
அமர்ந்தநிலை தியானத்தின் உச்சத்தில்
ஒரு எல்லையற்ற நிர்மலமான
அகண்டவெளியின் ஓங்காரத்தின்
ஒளியழகைக் கண்டேன்!
உருவமும் அருவமும் இல்லா
நிலை எய்தும் உன்னதம்
சும்மா இருத்தலின் சுகம்தானில்
மண்டிக் கிடக்கிறது மனமே!
அலைபாயும் எண்ணங்களை
ஒருமுகப்படுத்து!
சிலையென அசையாது
சின்முத்திரைப் பதித்து
அன்பின் வழியது உயிர்நிலையென
அறப்பொருளாய்
வீடுபேற்றின் வாயிலை நாடு!

.........கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, செப்டம்பர் 16, 2011

வெற்றிக்கான விழுப்புண்கள்

முழு மனதோடு
நம்மை
ஏற்றுக் கொள்ள
யாராவது
இருக்கிறார்களா
என ஏக்கத்துடன்
காத்திருக்கின்றன
தோல்விகள்!
காரணம்...
அவைகள்
வெற்றிக்கான
விழுப்புண்கள் என
நம்மால்
அடையாளம்
காணாததால்!

வியாழன், செப்டம்பர் 15, 2011

எங்கும் தமிழே முழங்கக் கேட்போம்





எங்கும் தமிழே முழங்கக் கேட்போம்

எதிலும் தமிழே வழங்கக் கேட்போம்

கங்கை தவழும் இமயம் கடந்து

கன்னித் தமிழைக் கொண்டு செல்வோம்

பொங்கும் தமிழின் இலக்கியச் சுவையை

பூமியின் மீது உலவ விடுவோம்

திங்கள் செல்லும் விண்வெளிப் பாதையில்

மங்காத் தமிழொளி சிந்தக் காண்போம்!


..........கா.ந.கல்யாணசுந்தரம்

















புதன், செப்டம்பர் 14, 2011

தேவை ஒரு மந்திரக்கோல்....


ஊழல், ஊழல், ஊழல்,
எங்கும் எதிலு ஊழல்....
கறுப்புப்பணம்.....இந்தியா
சுதந்திரம் வாங்கும் முன்பே
புழக்கத்தில் வழக்கமாகிப்போன
கணக்கில் வாராத பணம்.
உண்ணாவிரதம், சத்தியாகிரகம்
இவையெல்லாம் தேசத் தந்தை
மகாத்மாவினால் அடையாளம்
காணப்பட்டவை !
அரசுக்கு அறிவுறுத்தலாமே தவிர
மக்கள் வெள்ளத்தில்
வன்முறையை கட்டவிழ்க்கலாமா?
ஆம்..... இப்போது தேவை
நிச்சயம் தேவை ஒரு மந்திரக்கோல்....
ஒரு சமூக நீதி படைக்க!

திங்கள், செப்டம்பர் 12, 2011

மூதுரை



1.
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

2.
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால அந்நன்றி
என்று தருங்கோல் எனவேண்டா -நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.

3.
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர்.

4.
இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்
இன்னா அளவில் இனியவும் - இன்னாத
நாளல்லா நாள்பூந்த நன்மலரும் போலுமே
ஆளில்லா மங்கைக் கழகு.

5.
அட்டாலும் பால்சுவையில் குன்றா(து) அளவளவாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் - கெட்டாலும்
மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.

6.
அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா .

7.
உற்ற இடத்தில் உயிர்வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ - கற்றூண்
பிளந்திறுவ தல்லால் பெரும்பாரம் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான்.

8.
நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு - மேலைத்
தவத்தளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
குலத்தளவே ஆகுமாம் குணம் .

9.
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று.

10.
தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.

11.
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.

12.
பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமிபோனால் முளையாதாம் - கொண்டபேர்
ஆற்றல் உடையார்க்(கு) ஆகாது அளவு இன்றி
ஏற்ற கருமம் செயல்.

13.
மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடல்சிறியர் என்று இருக்க வேண்டா - கடல்பெரிது
மண்ணீரும் ஆகா(து) அதனருகே சிற்றூறல்
உண்ணீ ருமாகி விடும்.

14.
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் - அவைநடுவே
நீட்டோ லை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டா தவன்நன் மரம்.

15.
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி!
16.
வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி
ஆங்கதனுக்(கு) ஆகாரம் ஆனால்போல் - பாங்கறியாப்
புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின்மேல் இட்ட கலம்.

17.
அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு.

18.
அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வர் உறவல்லர் -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு.

19.
சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்(று)
அல்லாதார் கெட்டாலங் கென்னாகும்? - சீரிய
பொன்னின் குடம்உடைந்தால் பொன்னாகும் என்னாகும்
மண்ணின் குடமுடைந்தக் கால்.

20.
ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி - தோழி
நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம்
விதியின் பயனே பயன்.

21.
உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு.

22.
இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும்.

23.
எழுதியவா றேகாண இரங்கு மடநெஞ்சே
கருதியவா றாமே கருமம் - கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை.

24.
கற்பிளவோ(டு) ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவோ(டு) ஒப்பாரும் போல்வாரே - விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீர்ஒழுகு சான்றோர் சினம்.

25.
நற்றாமரைக் கயத்தில் நல்லன்னம் சேர்ந்தாற்போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்.

26.
நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும்
அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு - நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர்.

27.
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச்
சென்றஇடம் எல்லாம் சிறப்பு.

28.
கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொல்கூற்றம்
அல்லாத மாந்தர்க்(கு) அறம்கூற்றம் - மெல்லிய
வாழைக்குத் தான்ஈன்ற காய்கூற்றம் கூற்றமே
இல்லிற்(கு) இசைந்து ஒழுகாப் பெண்.

29.
சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்தும்
கந்தம் குறைபடாது ஆதலால் - தம்தம்
தனம்சிறியர் ஆயினும் தார்வேந்தர் கேட்டால்
மனம்சிறியர் ஆவரோ மற்று.

30.
மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல
உருவும் உயர்குலமும் எல்லாம் -திருமடந்தை
ஆகும்போ(து) அவளோடும் ஆகும்; அவள்பிரிந்து
போம்போ(து) அவளோடு (ம்) போம்.

31.
சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம்அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம்.

வியாழன், செப்டம்பர் 08, 2011

நினைவுகளின் ஆராதிப்பில்






















முப்பது ஆண்டுகளின்
இடைவெளிக்குப்பின்
இனிய பயணமாய்
பிறந்த ஊருக்கு!
கிராமத்து வாசம் மாறினாலும்
புராதான சின்னங்களாய்
பழைய வீடுகள்!

கோளரங்க கூரையின் கீழ்
குண்டும் குழியுமாய் தரை
பொற்கால நினைவுகளில்
புதையுண்டு போனேன்!
அன்புக்கேனியாய்
இன்ப ஊற்றை வற்றாமல்
அள்ளித் தெளித்த
அன்னை இல்லம்
அரவணைத்தது!

ஆட்டுக்கல் குழவியும்,
இன்சுவை சமையலறையும்,
தயிர்ப்பானைத் துளிகளும்,
ஆன்மீகமாய் பூஜையறை மாடங்களும்
அன்னை இல்லத்தின் அன்புச்
சுவடுகளாய் நிலைத்திருக்கிறது!

அம்மா, அப்பா, அக்கா, அண்ணன்
தம்பி, தங்கையென அப்போது
கதவின் பின்புறம் நானெழுதிய
வார்த்தைப் பிழைகளை திருத்திய
அம்மாவின் கையெழுத்தோடு
'தமிழமுதூட்டிய' அன்னையின்
சுவடுகள் அழியாது இன்றும்
நினைவுகளின் ஆராதிப்பில்!



....கா.ந.கல்யாணசுந்தரம்.

செவ்வாய், செப்டம்பர் 06, 2011

அவனுக்கு முடிந்தது...


காற்றுக்கு வேலி போட
முடியவில்லை!
கடலை சொந்தம் கொண்டாட
முடியவில்லை!
மழையினை கயிறாக கொண்டு
வானத்தை தொட முடியவில்லை!
விண்மீன்களை எண்ணிவிட
ஒருபோதும் முடியவில்லை!
வானவில்லுக்கு ஒரு மேடை
அமைத்திட முடியவில்லை!
கொட்டும் அருவிக்குள்
குடை பிடிக்க முடியவில்லை!
வெள்ளைநிற பட்டாம்பூச்சிக்கு
வண்ணம் தீட்ட முடியவில்லை!
ஆனால் அவனுக்கு முடிந்தது...
ஒரு பாலைவனமான பருவத்துக்கு
பொட்டு வைத்து பூச்சூட்டி
வசந்த காலத்தை வரவேற்க!

.........கா.ந.கல்யாணசுந்தரம்.

பேசத்தெரியாத குழந்தை


குழந்தை வீரிட்டு அழுத சப்தம்
அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை
ஓடி வந்து கேட்க வைத்தது....
'அடியே பொன்னம்மா....ஏண்டி
கொழந்தய இப்படி அடிக்குற? '
கையில் கிடைத்ததைக் கொண்டு
குழந்தையை அடித்தவள் இப்போது
வாரியணைத்தபடி சொன்னாள்....
'பின்ன என்னாக்கா....பத்து பாத்திரம்
தேச்சு வாங்கின சம்பளத்துல
புது சட்டை வாங்கி போட்டா...அத
தொலைச்சிட்டு வந்து நிக்கரா...
அடிச்சாலும் பதிலு இல்ல...'
பொனம்மாவின் குமுரலுக்கு
பேசத்தெரியாத குழந்தை
மனதோடு தேற்றிக் கொண்டது...
'என்னோட புதிய துணி

பக்கத்து வீட்டு கொழந்தையோட
மரப்பாச்சிக்கு கட்டிட்டேன்....
எவ்வளவு அழகா
இருக்கு தெரியுமா?' .


கா.ந.கல்யாணசுந்தரம்.




சிறகை விரி! வானில் எழு!!




எப்போதும் நல்லதை
நினைக்கும்போதெல்லாம்
ஒரு சமுதாயத்தின்
வளர்ச்சியாக அது இருக்கும்!
நாளை என்று
செயல்பாடுகளை தள்ளிப்போடாமல்
இன்றே இனிது
முடிப்பதால் நிச்சயமாக
வளர்ச்சியின் படிகளில்
வாழ்கிறோம் என்பதும்,
குறிக்கோளின் சிகரத்தினை
காணும் நேரம்
அருகாமையில்தான்
என்பதும் உறுதியாகிறது!
எதற்காக வாழ்ந்தோம்
என்று நினைவுகூரும்போது,
அதற்கான லட்சியத்தை
அடைந்தோமா என்பதில்தான்
இந்த மானுடத்தின்
புரிதல் பரிமளிக்கிறது!
நண்பனே....
சிறகை விரி! வானில் எழு!!
வானம் வசப்படவிட்டாலும்
பரவாயில்லை...
இந்த பூமிப்பந்தின்
விளிம்புகளையாவது
தரிசனம் செய்!

......கா.ந.கல்யாணசுந்தரம்.






இனி அவள் பாவை அல்ல...





பனி ஆடைக்குள் பவித்திரமாய்
அந்த மார்கழி காலைப்பொழுது!
விடியல் பறவை எழும்முன்
அவள் எழுந்துவிட்டாளோ?
காரணம் பனிபெய்த ஈரமண் வீதியில்,
தோழிகளுடன் அவளது பாத முத்திரைகளின்
அடையாளம் நன்றாகவே தெரிகிறது!
பாவை நோன்பில் ஆண்டுதோறும்
பயணித்திடும் அவளது எதிர்பார்ப்புகள்
வெறும் காத்திருப்புகளாகவே இருக்கின்றன!
இல்லை... இல்லை... இந்த ஆண்டு மட்டும்
அவளுக்கான இந்திரவனம்
என்னுள் பூத்திருக்கிறது....ஆம்
இனி அவள் பாவை அல்ல...
திருப்பாவை!

கா. ந.கல்யாணசுந்தரம்.

சனி, செப்டம்பர் 03, 2011

மயிலிறகு கொடுத்து

உன்வீட்டு பரணையில்
ஒன்பதாவது வகுப்பு
கட்டுரை நோட்டுப் புத்தகத்தை
நன்றாகப் பார்த்தாயா?
எனக்கு உன் மேல் ஒரு
இனம்புரியாத நேசம் வந்தபோது
மயிலிறகு கொடுத்து
அதற்காக உன்னிடம்....
பென்சில் கடனாக வாங்கியது
இன்றும் இருக்கிறது!
கட்டுரையை படிக்கிறாயோ
இல்லையோ,
புத்தகத்தை புறட்டியாவது பார்
அந்த நாள் நினைவுக்காக!

........கா.ந.கல்யாணசுந்தரம்.

புதன், ஆகஸ்ட் 31, 2011

வாழை பூக்கட்டும்!





அர்த்தம் புரியாத நாட்களில்
நெருகிப் பழகினோம்
ஒரு புரிதல் தொடங்கியபோது - நான்
ஒரு ஒற்றைச் செம்பருத்தியாய்p
மதிலுக்குள் ஒளிக்கப்பட்டேன்!
வாசம் மிகுந்தாலும் எனக்குப் பிடிக்காத
ஜாதி மல்லிகை பதியம் போட்டனர்!
செந்தூரப் பூக்களின் வாசமாக - உனது
நினைவலைகள் எனது இதயக்கமலத்து
தடாகத்தில் வந்து செல்கின்றன!- நமது
காதல் ரோஜா இதழினும் மென்மையானது!
எனினும் முட்கள் உடனிருப்பதால்
உங்களின் கரங்களுக்கு கவனம் தேவை!
தேனருந்தும் கருவண்டின்
கள்ளத்தனம் வேண்டாம்!
கார்காலம் வருமுன்னே வாருங்கள்!
கதிர்முற்றி சாயுமுன்னே வாருங்கள்!
புடம்போட்டுப் பார்க்காத ஸ்பரிசம்
உங்களின் பரிசத்தால் பரிச்சயமாகட்டும்!
ஊர்கூடி வாழ்த்துப்பா ஒலிக்க - நம்
வீட்டு வாயிலில் வாழை பூக்கட்டும்!


..........கா.ந.கல்யாணசுந்தரம்..

திங்கள், ஆகஸ்ட் 29, 2011

பூவாக உனை சுமக்க

புன்னை மர நிழலில்
தென்றல் துணையோடு
பிள்ளைக்கு தாலாட்டு!
தண்ணீர் தேக்கிவைத்த
வயக்காடு பரப்பினில்
நெல்நாத்துக் கட்டோடு
தாயவளின் பெரும்பாடு!

உச்சி வெயில் தணலாகி
உடம்பெல்லாம் வியர்க்க
பச்ச புள்ள செவ்வாய்க்கு
பால் புகட்டும் நேரமிது!
மார்பிரண்டும் பெரும்பாரம்
பிடிக்காத சுமையிதுவே!
பூவாக உனை சுமக்க
உள்ளமிது குதூகலிக்கும்!
குடைபிடித்து நிர்க்கின்ற
முதலாளி கெடுபிடியில்
நாற்று நாடும் கையிரண்டும்
குழந்தையின் நேசமிகு
உணர்வுகளில் நடுநடுங்க....
மங்கையவள் மாராப்பு
மழலைவாய் தீண்டாமல்
பால்வடிந்து நனைந்ததம்மா!
பாவியவள் அடிவயிற்றை
நனைக்கின்ற தேடலிலே!

.....கா.ந.கல்யாணசுந்தரம்.

பார்வையின் எல்லைக்குள்..........

நம் கைகளுக்கு
எட்டாத தூரத்தில்
வைத்திருப்போம்
குறிக்கோள்களை
ஆனால் அவை
எப்போதும்
இருக்க வேண்டும்
நமது
பார்வையின்
எல்லைக்குள்!
அவற்றை திருத்தவும்
அடையவும்
நம்மிடம் அதிகாரம்
இருக்கிறது!

......கா.ந .கல்யாணசுந்தரம்.

படித்தீர்களா?'அருவி'

'அருவி'
கவிதை இலக்கிய காலாண்டிதழ்
ஆசிரியர்: காவனூர் ந.சீனிவாசன்
புதிய பொலிவோடு முழுவதும் கவிதை மணம் பரப்பி
திமிரி நகரில் இருந்து வெளிவருகிறது

முகவரி: அருவி,
14 , நேரு பஜார்,
திமிரி 632512,
ஆர்க்காடு வட்டம்,
வேலூர் மாவட்டம

aruvisrinivasan@gmail.com
Cell:9600898806

இருவரின் புரிதலில்

மனிதப் பிறவியின் பயனிதுவென
இப்போதுதான் புரிந்தது....
அவளது புன்னகையில்
பிறப்பெடுக்கும் அங்கீகாரங்கள்!

கற்றது கைப்பிடி அளவுதான்னென்று
இப்போதுதான் புரிந்தது
அவளது அன்பின்
அரவணைப்பில் அகமகிழ்ந்தது!

எதிர்காலம் ஒரு வினாக்குரியானபோது
புதிரல்ல நம் வாழ்க்கையென்று
திட்டமிட்டு அவளால்
தடம்பதித்தது நிகழ்காலங்கள்!

எல்லா வளமும் நலனும்
இருவரின் புரிதலில்
ஒவ்வொருநாளும்
பிறப்பெடுக்கின்றன!





கா.ந.கல்யாணசுந்தரம்.

பரவசப்படும் இதயம்!






மனசுக்குள் ஒரு சுகம்...
அஞ்சலகப் பெட்டிக்குள்
கடிதம் விழும் போது
எப்போது சேருமோ என்கிற
ஏக்கத்தில் ஒரு தவிப்பு...
தெருமுனையில் தபால்காரன்
வருகைக்கான காத்திருப்பில்
ஒரு அலாதியான பரபரப்பு!
கைக்கு கிடைத்த கடிதத்தை
பக்குவமாய் பிரிப்பதற்குள்
அம்மாவும் தங்கையும்
அவசரப்படும் காட்சிகளில்
பரவசப்படும் இதயம்!
முத்து முத்தான கையெழுத்தில்
அண்ணனுடைய கடிதத்தினை
அம்மாவுக்கு படித்துக்காட்டும்போது
நானும் இமயமலையில்
இந்தியநாட்டின் எல்லையோரம்
துப்பாக்கியேந்தி நிர்ப்பது போன்ற
தியாக உணர்வுகள்...
மின்னணு நவீன பொருட்களும்
கைப்பேசியும் இப்போது
எங்களிடம் இருந்து என்ன பயன்?
மலர் மாலைக்குள் உனது
களங்கமற்ற முகத்தில் நாங்கள்
தெளிவாய் பிரதிபலிக்கிறோம்
இந்த தேசம் காத்த
தவப்புதல்வனின் வாரீசுகளாய்

ஒரு நீர்த்துளிக்குள் கடல்...



ஒரு நீர்த்துளிக்குள் கடல்...
என்று அறிந்தும் இந்த வாழ்க்கை
ஒரு மௌனத்தின் பிரவாகம்
என்பதை யாவரும் அறிந்திலர்!
இருட்டறைக்குள் உயிர் கொடுத்து
தவமிருந்து பெற்றெடுத்த தாயுள்ளம்
ஒரு தபோவனம்!
வம்ச விருட்சத்தின் நாற்றங்கால்கள்
இன்றளவும் நாம்தான் என்று பறைசாற்ற....
உன்னுள் இன்றளவும் எதை சாதித்தாய்
என்று மனம் மௌனமாய் கேட்பது
யாருக்கு தெரியப்போகிறது!
ஆனால் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது
இந்த மானுடம் வென்ற மௌன நித்திரை
மரணமென்று!........
இனிமேலாவது அன்னையின் தபோவனத்தில்
ஒரு நிரந்தரப் பணியாளனாய் இரு!

.....கா .ந .கல்யாணசுந்தரம்.

புதன், ஆகஸ்ட் 24, 2011

விழுப்புண்கள்

முழு மனதோடு
நம்மை
ஏற்றுக் கொள்ள
யாராவது
இருக்கிறார்களா
என ஏக்கத்துடன்
காத்திருக்கின்றன
தோல்விகள்!
காரணம்...
அவைகள்
வெற்றிக்கான
விழுப்புண்கள் என
நம்மால்
அடையாளம்
காணாததால்!

நம்மை நாமே....

நம்மை நாமே
தயார் படுத்திக்
கொள்ள வேண்டும்
மற்றவர்களின்
மகிழ்ச்சியான
வாழ்க்கைப்
பயணத்திற்கான
வழிகாட்டுதல்களில்
களமிறங்க!