கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

திங்கள், செப்டம்பர் 17, 2012

மலர்களின் சிரிபொலி !


பிரிந்து செல்லும் பாதைகள்
எப்போதும் சந்தித்துக்கொள்கின்றன...
பிரிந்த இடத்தில் !

ஒரு பனிபொழிந்த காலை
துல்லியமாய் கேட்கிறது...
மலர்களின் சிரிபொலி !

உதிர்ந்த இறகினில்
உறங்காமல் விழித்திருக்கிறது...
ஒரு பறவையின் தேடல் !

ஆற்றுப் படுகை நாணலிடம்
கேட்கத் தோன்றுகிறது..
புயலின் வலிமையை !

கிராமிய மணம் கமழும்
உயிரோவியங்களுடன் ...
மாலை நேரத்து ஏரிக்கரை !

..........கா.ந.கல்யாணசுந்தரம்.

சனி, செப்டம்பர் 08, 2012

குழல்கூட இசைக்காமல் சற்றே நிற்கும்


மொட்டவிழ்ந்த மலர்போல மழலை முகம்
பொட்டிட்டு பூச்சூடி பார்த்தாலே போதும்
கட்டவிழ்ந்த தாழை மலர் போல அழைப்பாள்
கொட்டுகின்ற அருவியென துள்ளி எழுவாள்
குழல்கூட இசைக்காமல் சற்றே நிற்கும்
மழலை இவள் வாய் மொழியில் தோற்கும்
வண்ணத்து பூச்சியென சிறகடித்து வருவாள்
காண்போரின் கையசைப்பில் கண்சிமிட்டி சிரிப்பாள்
முகமறியா போதிலும் மடிமீது வந்தமர்வாள்
கொடிமுல்லைப் பூவாய் மனம் கவர்ந்திழுப்பாள்
மீண்டும் மழலையாய் பிறப்பெடுக்க இறைவனை
வேண்டும் மனம் கொடுத்து வாழ்வாள் இனிதாக!


..................கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, செப்டம்பர் 07, 2012

கலையழகு பாதமலர் போற்றி வணங்கிடுவோம் !
























அருளோடு திருஉருவம் ஆனந்த களிநடனம்
பெருநிதிய வளத்தோடு பூவுலகில் அவதரித்தாய் !
கலியுகம் இதுவென்று மானுடம் அறிந்திடவே - ஈரைந்து
அவதாரம் எடுத்துலகில் ஆட்கொண்டாய் பெருமாளே !

ஏழுமலை கடந்து உன்னுருவம் கண்டிடவே
பாழும் இவ்வுடல் சுமந்து வருகின்றேன்
சூழும் பாவ அலைகடலில் அகப்பட்டோம் - கலியுகம்
வீழும் நாளறியேன் அறிவேன் நாராயணாவெனும் நாமம்

அலைமகள் அகம்கண்ட கலியுக வரதனிவன்
சிலைவடிவம் கொண்டிட்டான் மலைமீது!
விலையிலா அருட்கொடையாம் என்றென்றும் - திருமாலின்
கலையழகு பாதமலர் போற்றி வணங்கிடுவோம் !

.............கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், செப்டம்பர் 06, 2012

அன்னை ஓர் ஆலயம்!


* பயணிக்கும் தூரம் அதிகமெனில்
தாகமெடுக்கும்.....
அம்மாவை நினைத்துக்கொள் !

* நினைத்ததை பெற்றவுடன்
நிம்மதி கிடைக்கும்....
பெற்றவளின் நினைவிருந்தால்!

* புகழின் உச்சியை அடைந்தாலும்
மறவாதே....
அன்னையின் அரவணைப்பை !

* தெய்வமில்லை என்போருக்கும்
கடவுளானாள்...
அன்னை ஓர் ஆலயம்!

.................கா.ந.கல்யாணசுந்தரம்

செவ்வாய், ஆகஸ்ட் 14, 2012

இனி ஒரு விதி செய்வோம்.....












விடுதலைக்கான சின்னமாய்
இன்றும் பட்டொளிவீசி பறக்கிறது
நமது மூவண்ணக்கொடி!
அன்னியரின் அடிமத்தளையருத்து
பொன்னான தாயகத்தை
மீட்டெடுக்க இன்னுயிர் நீத்தனர்
இந்தியத் திருநாட்டின்
இணையில்லா தவப்புதல்வர்கள் !
நள்ளிரவில் பெற்ற சுதந்திரம்
நலமுற பேணிக் காப்போமென
உறுதிமொழி ஏற்றிடும்
மாணவ மாணவியர் தினம் தினம்!
ஆகஸ்டு மாதம் பதினைந்தாம் நாளில்
நல்லதொரு கருத்தினை
பகிர்ந்திடவே விழைகின்றேன்!
சுதந்திர தேசிய மணிக்கொடியை
இனி தனிமனித போராட்டத்தில்
பயன் படுத்தலாகாது!
கொள்கை எதுவாகிலும்
தேசிய கொடியினை தன்னலப்போக்கில்
தவறாகப் பயன்படுத்தி மக்களிடம்
அனுதாபம் பெறுகின்ற சுயநலவாதிகளை
அடையாளம் கண்டுகொள்வோம்!
அரசும் சட்டமும் இருந்தும்
அகற்றிட தயக்கமென்ன?
இனி ஒரு விதி செய்வோம் அதை
எந்தநாளும் காப்போம்!

....கா.ந.கல்யாணசுந்தரம்.

ஞாயிறு, ஆகஸ்ட் 12, 2012

எது சுதந்திரம்?















அன்னியரின் அடிமைத்தளையருத்து
ஆருயிர் தாயகத்தை மீட்டெடுத்து
இணையிலா இந்தியத்திருனாட்டின்
ஈடில்லா அரசியலமைப்பை
உருவாக்கி மகிழ்ந்தோம்!
ஊரும் நாடும் சிறப்புறவே
எளியவரும் பயனுறும் வண்ணம்
ஏற்றமிகு மக்களாட்சி மலர்ந்திடச் செய்தோம்!
ஐயம் இல்லா அறிவுத்திருக்கோயில்
ஒவ்வொரு ஊராட்சியிலும் உருவாக்கினோம்!
ஓதும் கல்விமுறையில் மட்டும்
ஒளடதமாய் விளங்காமல்
மொழியுலக வரலாற்றில் சுதந்திரத்தை
பறிகொடுத்து வளர்கல்வி
அரசியலாய் சமைந்ததுவே!

.....கா.ந..கல்யாணசுந்தரம்

சனி, ஜூலை 28, 2012

முற்றுப்புள்ளி உறவுகள்......




கால்புள்ளியும் அரைப்புள்ளியும்
அவ்வப்போது வைத்து நீட்டித்துக்
கொண்டிருந்தாலும்,
வினாக்குறி வாழ்க்கையில்
எப்போதுமே ஆச்சரியக் குறிகள்!
இருப்பினும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
முற்றுப்புள்ளி உறவுகளுடன்.

......கா.ந.கல்யாணசுந்தரம்

வியாழன், ஜூலை 26, 2012

முடிவில்லா பயணம்....




*எங்களது முடிவில்லா பயணம்

கதிரவனின் ஒளிக்கரங்களுடன்

தாமரை மலர்கள்!

.........கா.ந.கல்யாணசுந்தரம்





செவ்வாய், ஜூலை 17, 2012

நீர்க்குமிழி பயணத்தில்....

@ மன ஏரியில் முகிழ்த்து
அடிக்கடி உடைந்துபோகிறது
எண்ணக் குமிழ்கள்

@ மழை வெள்ளத்தில் மிதக்கும்
நீர்க்குமிழி பயணத்தில்....
நிலைத்திருக்கிறது மானுட வாழ்வு!

@ உடையும் மழை வெள்ள
நீர்க்குமிழி உடையும் போது....
உடன் அழுகிறது மழலை !

@ குளத்து நீரில் மிதக்கும்
தாமரை இலைகளின் வரவுகள்
ஒட்டாத நீர்த்துளிகள்!

@ காகித கப்பல்களின் பயணத்தில்
மழை நீர் ஓடைகள்...
நொறுங்கும் நீர்க் குமிழ்களோடு !

...........கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, ஜூலை 13, 2012

இதய நூலகம்.....




படுக்கையில் படுத்ததும் கண்ணுறங்கி
கனவுலகில் சஞ்சரிக்கும் நாட்கள் குறைந்தன !
ஏதோ ஒன்றை இழந்து மற்றொன்றை தேடும்
படலத்தில் வாழ்க்கை காய்களை நகர்த்துகிறேன்!
ஒளிவு மறைவற்ற எண்ணங்களில்
என்னை நானே ஏமாற்றப்படுகிறேன்!
தீர்க்கமாய் செய்துமுடிக்கும் திறனும்
இப்போதெல்லாம் சோம்பல் போர்வைக்குள்
முடங்கியவாறே செயலிழந்திருப்பது...
நன்றாகவே உணரப்படுகிறது!
ஆரம்பிக்கப்பட்ட வாசல் கோலங்கள்
முடிக்கப்படாமலே சிக்கலாய் முடிவதைப்போல்
முனைப்புகள் தோல்விகளின் விளிம்புகளில் !
ஆனால் ஒன்று மட்டும் தெளிவாய் தெரிகிறது...
மனதின் உறுதியை உடல் ஏற்க மறுக்கிறது!
எண்ணங்களின் விழுதுகள் அவ்வப்போது
விரல் நுனிக்குள் கவிதை வேர்களாய் வியாபித்து....
தடம் பாதிக்கும் ஆற்றலுடன் வெளிப்படுகிறது!
காகிதத் தாட்களுடன் கடைசிவரை வாழ்வதில்
இதய நூலகம் எப்போதும் காத்திருக்கிறது!

..........கா.ந.கல்யாணசுந்தரம்.

புதன், ஜூலை 11, 2012

தியாகத்தின் விளைநிலம் !






என்னை உயிர்ப்பித்த நாள் முதல்
பிம்பங்களின் நடு நடுவே
எனது கண்கள் தேடுகின்றன...
நிஜமான மனதுடைய முகங்களை!
சில நேரங்களில் முகத்தருகே கூட
முத்தமிடுவதுபோல் அன்பான முகங்கள்!
சலிப்பின் விளிம்புகளை தொட்டவாறு
கைதட்டலோடு சில முகங்கள்!
சேட்டைகளை செய்தவாறே எனது
புன்னகைக்கு தவமிருக்கும் புதிய முகங்கள்!
கைநீட்ட எனை எடுத்தணைக்கும்
இருகரமுடைய மனிதங்கள்!
மனித உடல் சூட்டில் எனது சிறுநீர்
சட்டென்று வெளியேற,
வீசி எறியாத குறையாய் பெற்றவளிடம்
தள்ளுகின்ற பல முகங்கள்!
பட்டாடைமேல் மலம் கழித்தாலும்
முகம் சுளிக்காமல் எனைக் கொஞ்சுகின்ற
ஓர் முகம்! - பத்துமாத பந்தம் மட்டுமல்ல!
எனது முகவரிக்குள் எழுத்தாகி ,
உயிர் மெய்யாய் உலவும் தாயெனும்
தியாகத்தின் விளைநிலம்!

............கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, ஜூன் 08, 2012

சூட்சும நெறிகளை அறியவேண்டும்!




உணர்வுகள் மனித உடலின்
இரசாயனக் கலவை என்பதை
யாவரும் அறிந்ததே!
மனித இதயத்தின் இயக்கங்களை
மன அழுத்தம் கட்டுப்படுத்த இயலும்!
வெளியில் சொல்லப்படாத கவலைகள்
இரத்த நாளங்களை செயலிழக்கச் செய்யும்!
மொத்தத்தில் மனிதன் தனது
மூளையின் ஒழுங்கான செயல்பாட்டில்
இயங்கவிடாமல் வாழ்கிறான்!
செம்மையான சிந்தனைகளாலும்
அமைதி தியானம் போன்ற
அக ஒழுக்கங்களில்
வாழ்நாளை கூட்டவும் செய்யலாம் !
சிரிக்கத் தெரிந்த மனிதன்
வாழ்நாளில் புலம்பும் அவலநிலையை
சிரமேற் கொள்கிறான்!
சும்மா இருத்தலே சுகம் எனும்
ஞானியர் கூற்றில் ஒளிந்திருக்கும்
சூட்சும நெறிகளை அறியவேண்டும்!
மனிதம் வாழத்தான் பிறந்துள்ளது
என்பதை அறிய வேண்டும்!
வீடு பேற்றின் வாயிலைத் தொட
நாடு கடந்து போகத்தேவை இல்லை !
மனம் எனும் உள்ளக் கோயிலின்
மணிக் கதவுகளை சாந்தமெனும்
சாவி கொண்டு திறந்தாலே போதுமானது!

....கா.ந.கல்யாணசுந்தரம்.

புதன், ஜூன் 06, 2012

இனி காத்திருப்பு பயனில்லை...




நானொரு வெற்று காகிதம்தான்
என்றாலும் உன் கரம் பட்டு
காகித ஒடமானேன்!
அலைகளில்லா குளத்தில்
என்னை மிதக்கவிட்டு
வேடிக்கைப் பார்க்கிறாயே!
இது நியாயமா?
ஓடம் ஓடவேண்டும்...
மூழ்கினாலும் கப்பல் அழகென்று
இந்த மானுடம் வர்ணிக்கிறதே!
அலைகள்தான் எங்களின் வாழ்கையை
நிலைப்படுத்தும் ஆயுதம்!
நங்கூரங்கள் கூட பலநேரம்
நம்பிக்கை இழக்கிறது!
நில அதிர்வுகளில் அலைகள்
அரக்க குணம் கொண்டழிக்கிறது!
எங்களுக்கு உறுதுணையாய்
உடன்வந்தாலும் .....
உனது உள்ளமதை நாமறிவோம்!
இலக்குகளின்றி பயணித்தலை
பாய்மரக்கப்பல்கள் அறிந்திருந்தாலும்
மாலுமியின் திறனறிந்து
பயணித்தலே எங்கள் நோக்கம்!
அடி பெண்ணே! உண்மையை சொல்லிவிடு...
சும்மா எங்களுடன் உறவாடாதே...!
உனது எண்ணத் திசைகளை நன்கறிவோம்...!
இனி காத்திருப்பு பயனில்லை...
இனிய பயணிப்பு நம்மோடு பூத்திருக்கு....
பயணிப்போம் இலக்கை நோக்கி!

.......கா.ந.கல்யாணசுந்தரம்

திங்கள், மே 21, 2012

ஹைக்கூ ... தத்துவ மலர்கள்




@ பரந்த மனம் இல்லையெனில்
எப்போதும் இதயம் சுமக்க நேரிடும்
அந்தரங்க அமைதியின்மை !

@ நோக்கமும் கொள்கையும்
செயல்திறனுடன் இணைந்தால் தெரியும்....
முன்னேற்றப் பாதையின் முதல்படி !

@ மன ஏரியில் முகிழ்த்து
அடிக்கடி உடைந்துபோகிறது...
எண்ணக் குமிழ்கள் !

@ உறவுகளின் நல்வாழ்வில்
பங்குபெறும் உதவிக்கரங்கள் ...
இறைவனின் வழிபாட்டுக்கு உகந்தது!

@ தவறான சிந்தனைகளை களைய
எப்போதும் தேவைப்படுகிறது...
மற்றுமொரு கற்பனை எண்ணம் !

@ உன்னை அறிதலால்
புனிதமாகிறது....
தன்னம்பிக்கையின் பிறப்பிடம் !

@ அதர்ம களைகளை அகற்றி
தர்மத்தின் வேர்களுக்கு நீர் ஊற்று....
மலரும் மனிதநேய மலர்கள்!

.............கா.ந.கல்யாணசுந்தரம்

ஞாயிறு, மே 20, 2012

இலக்கை நோக்கி

அன்றாட வாழ்க்கை ஒரு
சுழற்சியாக இருக்கிறது...
புதுமைகளின் வரவுகள்
செயற்கையாய் மட்டுமே இருக்கிறது!
இயற்கையான புன்னகைகூட
பூக்காமலே இதழ்களுக்குள்
புதைந்துபோகிறது!
அழுத்தமான மனதுடன்
நெஞ்சம் இதயத்துடன்
தினம் தினம் போராடுகிறது!
பயணிப்பில் அர்த்தமற்று
திசைகளை அடையாளம் காணாது
மானுடம் தவிக்கிறது!
ஆசைகள் அரவமற்று மனதுக்குள்
நுழைந்து அரசாட்சி செய்கிறது!
பிறப்பில் ஏற்கனவே
எழுதப்பட்டுவிட்டது இறப்பு....
என்றாலும்.......
வாழ்வியல் அத்தியாயங்களில்
முத்திரைப் பதிக்கவே
தனித்துவ திறன்களை
அடையாளம் காண
இந்த மானுடத்திசுக்கள்
முற்படுகின்றன....!
இந்த சுழற்சி முற்றுப்பெறாது
ஆளுமை கதிர்வீச்சில்
இளமைக்காலங்கள் திசைமாறி
பயணிக்கிறது.....ஆம்
பாய்மரக் கப்பலில் இலக்கைநோக்கி!

..............கா.ந.கல்யாணசுந்தரம்.

புதன், மே 02, 2012

முன்னோக்கிய பயணிப்பில்....






இயற்கையும் செயற்கையும்

பின்னோக்கி நகர்கிறது ...

நமது முன்னேறும் பயணிப்பில்!



........கா.ந.கல்யாணசுந்தரம்.







செவ்வாய், ஏப்ரல் 24, 2012

என்னுடன் பழகிய நிழல் கூட....




*என்னுடன் பழகிய நிழல்கூட
இப்போது வெறுக்கிறது...
நிழல் தரும் மரங்களை வெட்டியதால் !

*எனது கிளைகளை வெட்டி
முடமாக்காதீர்.....
வெட்டினாலும் துளிர்த்திடுவேன்!

*படுத்து உறங்குபவர்களை விட
இளைப்பாறுபவர்களை விரும்புகிறேன்...
நிழல் தரும் மரங்கள் !

* அரம் கொண்டு மரம் அழித்தனர்
அறம் பொருள் இன்பமெனும்....
குறள் படித்த மாந்தர் !

* உங்களின் உயிர் மூச்சு எங்களிடம்
என்றாலும்....எங்களின் வாழ்வு உங்களிடமே....
மரங்களின் பெருமூச்சு !

..............கா.ந.கல்யாணசுந்தரம்.