கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

புதன், நவம்பர் 23, 2011

எப்போது கிடைக்கும்?















பயணிக்கும்போது ஆன்மாவின்
இருப்பிடம் தூய்மையாகிறது!
அன்பை வெளிப்படுத்தி
அமைதியின் பிறப்பிடம் நோக்கி
பழகிய காலங்கள்
இன்பக் கேணியாய்
நெஞ்சில் பிரவாகமாகிறது!
துன்பத்தை பிறரிடம்
பகிர்ந்துகொள்ளும் போது
ஆறுதலான வரைபடம்
மனதில் உருவாகிறது!
எண்ணத்தூரிகைகளே .........
உங்களுக்கு ஒரு
சரியான ஓவியன்
எப்போது வருவான்?
என்னிடம் அலைபாயும்
எண்ணங்களின் வண்ணங்கள்
உள்ளக் கிண்ணங்களில்
நிரம்பி வழிந்துகொண்டிருக்கின்றன....
வீணாகிப்போனாலும் பரவாயில்லை !
ஒரு நல்ல ஓவியம்
எப்போது கிடைக்கும்?

..........கா.ந.கல்யாணசுந்தரம்.

செவ்வாய், நவம்பர் 22, 2011

பண்ணிசைக்கிறேன்!

உன்னில் இருந்து உதிர்ந்தாலும்
பரவாயில்லை....
சிறகை விரித்து பறக்கின்றாய் !
வானம் வசப்படட்டும்
நான் இந்த கரங்களில்
இருந்துகொண்டு
பண்ணிசைக்கிறேன்!

.....கா.ந.கல்யாணசுந்தரம்.

திங்கள், அக்டோபர் 17, 2011

சற்று வித்தியாசமானதுதான்
















அழகியலை ரசிப்பதற்கு
இருவர் வேண்டும்!
ஏகாந்த வேளைகளில் நமக்குள்
பரிமாறப்படும் சிந்தனைகள்
வாழ்க்கையின் வெளிச்சத்துக்கான
ஒளிச்சிதறல்கள்!
புரிதலான வாழ்க்கையின் அரிச்சுவடுகளை
இங்கே வண்ணம் தெளித்த வனக்கூரையின் கீழ்
படித்துக்கொண்டிருக்கிறோம்!
நீரில் எழுதும் எழுத்தினைப் போன்றது
இந்த நிலையில்லா உடல்....
நீர்மேல் நியலையாக சிம்மாசனம்போட்டு
எதிர்காலத்தின் விளிம்புகளில்
நிலாச்சோறு உண்கிறோம்!
எத்தனை விளக்குகள் நம்மிடம் இருப்பினும்
முற்போக்கு சிந்தனை விளக்கம் தாங்கும்
விடிவெள்ளி முளைக்கவேண்டும்!
வாழ்க்கை என்பது
ஒரு வெற்றிடத்தில் இருந்து
பிறக்கவில்லை....
இரண்டு உடற்கூறுகளின் சங்கமம்!
ஆம்.....
நமது திருமண முதலிரவு...
சற்று வித்தியாசமானதுதான்!

,,,,,,,,கா.ந.கல்யாணசுந்தரம்.

சனி, அக்டோபர் 15, 2011

ஒரு கார்கால துவக்கம்.....

என் ரோஜா தோட்டத்தில்
எனக்காக முதலில் பூத்த மலராக
உனது வருகை எப்போதுமே இருக்கும்.
வார மாத இதழ்களில் வருகின்ற
கவிதைகளைப் படிக்கும் போதெல்லாம்
அதில் உனது பார்வையின் துடிப்பை
அறிந்துகொண்டிருக்கின்றேன்!
காதல் உணர்வுகளில் எனது இதயம்
ஒரு தும்பியாய்
வட்டமிட்டுக்கொண்டிருக்கிறது!

பெண்ணியம் சார்ந்த ஒரு புரிதலில்
நிச்சயமாக இது சிற்றின்பம் இல்லை.
கனவுத் தொழிற்சாலையின்
இன்ப உற்பத்தியாக இருந்தால்
இந்த சமுதாய சந்தையில்
நம்மிடம் இருந்து காதல்
களவாடப்படும் என்பது உறுதி !

நாம் கை கோர்த்து நடந்த
நாள் முதலே நட்பின்
இலக்கணத்தை அல்லவா
சுவாசித்திருக்கிறோம்.
அது நம் காதலின்
கார்கால துவக்கமென்றால்
இன்று நமதுள்ளம்
இளமையின் வாயிலில்
உன்னதமான சிநேகத்தின்
வசந்தமாகட்டும்!

....கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், அக்டோபர் 13, 2011

முப்பெரும் காலங்கள்....
















ஒரு அங்கீகாரத்துக்காக
வாழ்நாளைப்
பணயம் வைத்ததுதான்
அவனின் கடந்தகாலம் .....
சறுக்கலின் கொடுமையை
உணர்ந்தவாறே
பயணித்தல்தான்
அவனது நிகழ்காலம் .....
எதோ ஒரு சக்த்தியால்
இயக்கப்படுகிறோம்....
நம்மால் ஒன்றும் இல்லை
இறையருள் ஒன்றே
மகத்தானது!
நல்லவை நடப்பது
நம்மிடம் இல்லை....
உழைத்த உழைப்பின்
அங்கீகாரம் அரூபமான
கடவுளிடம் இருந்து
கிடைத்துவிடும் ......
இதுவே அவனது
எதிர்காலத்தின்
வசந்தமானது!


.....கா.ந.கல்யாணசுந்தரம்.

புதன், அக்டோபர் 12, 2011

தமிழே வாழ்க!

தமிழே வாழ்க! தாயே வாழ்க!
அமிழ்தே வாழ்க! அன்பே வாழ்க!
கமழக் கமழக் கனிந்த கனியே
அமைந்த வாழ்வின் அழகே வாழ்க!

சேர சோழ பாண்டிய ரெல்லாம்
ஆர வளர்த்த ஆயே வாழ்க!
ஊரும் பேரும் தெரியா தவரும்
பாரோர் அறியச் செய்தாய் வாழ்க!

சீரிய அறமும் சிறந்த வாழ்வும்
ஆரும் அடையும் அறிவைப் பொழிந்தாய்;
வீரம் தந்தாய் மேன்மை வகுத்தாய்
ஈர நெஞ்சே இன்பம் என்றாய்.

குமரி நாட்டில் தூக்கிய கொடியை
இமயத் தலைமேல் ஏறச் செய்தாய்.
தமிழைத் தனித்த புகழில் நட்டாய்
தமிழின் பகைவர் நெஞ்சைச் சுட்டாய்.

முத்தமிழ் அம்மா! முத்தமிழ் அம்மா!
தத்துவ உணர்வை முதலில் தந்தாய்;
எத்தனை இலக்கியம், இலக்கணம் வைத்தாய்
முத்துக் கடலே! பவழக் கொடியே!

எழுத்தே பேச்சே இயலே வாழ்க!
இழைத்த குயிலே இசையே வாழ்க!
தழைத்த மயிலே கூத்தே வாழ்க!
ஒழுக்க வாழ்வின் உயிரே வாழ்க!

தமிழே ஆதித் தாயே வாழ்க!
தமிழர்க் கெல்லாம் உயிரே வாழ்க!
தமிழ் நாட்டுக்கும் பிற நாட்டுக்கும்
அமிழ்தாய் அமைந்த அம்மா வாழ்க!

ஊரில் தமிழன் மார்பைத் தட்டிப்
பாரில் தமிழன் நானே என்னும்
சீரைத் தந்த தமிழே வாழ்க!
ஓரா உலகின் ஒளியே வாழ்க!

.........புரட்சி கவி பாரதிதாசன்

செவ்வாய், அக்டோபர் 11, 2011

மண்வாசம்




















நெனவிருக்குதா பொன்னுத்தாயி
நீயும் நானும் ஒண்ணா சேந்து
நாலாவது படிக்கிறப்போ
களத்துமேட்டுல ஓடிப்பிடிச்சி
விளையாடும் போது.....
என்ன மாடு முட்டி கீழ தள்ளுனத!
கையில கட்டுபோட்டு
வீட்ல இருந்தப்போ
ஒன்னோட அம்மாவோட
என்ன பார்க்க வந்தப்போ....
'ஒங்க பொண்ணாலதான்
எம் புள்ள கைய ஓடிச்சிகிட்டான்'
அப்படின்னு ஆத்தா உன் ஆத்தாகிட்ட
சண்டை போட்டு அனுப்பிடுச்சி!
ஆனா....நீ ....எங்கிட்ட சொல்லிட்டுப் போனே...
நான் விழுந்த எடத்துல
ஒரு புளியங்கன்னு நட்டுவச்சி தண்ணிவூத்தி
வளக்கறேன்னு........
அதுக்கப்பறம் உங்க ஆத்தாவோட
வேற ஊருக்கு போயிட்ட....
இப்ப சரியா முப்பத்தஞ்சு வருஷமாச்சி....
நம்ம ஊர் அங்காளம்மா கோயில்ல
திருவிழாவுக்கு வந்தப்போ பாத்தேன்...
நீ நட்டுவச்ச புளியமரம் வளந்து
பூவும் பிஞ்சியுமா பாக்கறப்போ.....
உன் நெனப்பு வந்துடுச்சி பொன்னுத்தாயி!
ஆமா.... பொன்னுத்தாயி!
இப்ப என் கை நல்லா இருக்கு!
உன்னோட வேண்டுதல் பலிச்சிடுச்சி!
ஆனா உன்னோட வாழ்நாள்ள...
இந்த புளியமரமும் நம்மோட
கண்ணாமூச்சியும்.....மறக்கமுடியாத
பாதிப்ப உண்டுபன்னிடிச்சி.....
அக்கம் பக்கத்துல சொன்னாங்க....
போன வாரம் நீ உன் புருஷன் கொழந்தையோட
ஊருக்கு வந்து இந்த புளியமரத்தடியில
பொங்கல் வச்சி சாமி கும்மிட்டேன்னு.....
மனசு தாங்காம என் நெஞ்சுலே
ஒரு கேள்வி மட்டும் திரும்ப திரும்ப
ஒலிச்சிகிட்டே இருக்கு.....
என் சாமியே சாமி கும்பிடனுமா?

.........கா.ந.கல்யாணசுந்தரம்.

திங்கள், அக்டோபர் 10, 2011

சருகுகள்
















பிறர்க்கு உதவி இன்பம் காணும்
சிறு பிள்ளைவயதை நினைத்தே,
வாழ்ந்த இவளின் பருவம்
சமுதாய வீதியில் - சில கயவர்கள்
மடியில் தஞ்சும் புகுந்தது...
பட்டாம்பூச்சியாய் சிறகடித்து
பறந்த காலங்கள் வெறும்
கூட்டுப் புழுவானாள்!
கால் வயிற்று கஞ்சிக்கு காலம் தள்ள....
வயிற்றில் விளைந்த கருக்களும்
தரிசுநில வித்தாகிப் போனது!
ஒப்பிலா இன்பமுதை இரவுக் கூடலில்
தந்தவளின் உடலின்று முடங்கியது!
நுகர்ந்தோர் எல்லாம் நகர்ந்து போயினர்
அந்த நடை பாதை நுனியை யாரும் நாடவில்லை
அள்ளியெடுத்து முத்தமிட்ட மேனிக்கு
இன்று கொள்ளிவைத்து
பால் வார்க்க யாருமில்லை!
சமுதாயம் பெற்ற சந்தனப் பேழை
சாக்கடைப் பொருளாய் சிதறிக் கிடக்கிறது!
பட்டமரக் கிளை மீதமர்ந்த கழுகுக்கு
பிணவிருந்தாகி மடிந்து போனாள்!
அந்தோ!...... சமுதாயம் பெற்ற
விலைமகளிர் எல்லாம்
இளவேனிர்காலத்து உதிர்ந்த
சருகுகளே!

......கா.ந.கல்யாணசுந்தரம்.

சனி, அக்டோபர் 08, 2011

ஒரு கவிதையானது.....



எதற்காக மழலயின் மௌனம்?
இந்த மெழுகு வார்த்திகளை
அணைத்துதான் பிறந்தநாள்
கொண்டாடவேண்டுமா?
கேட்கின்றன இவளின் விழிகள்!
தமிழ்க் கவிதையாய்
எனை ஈன்ற பெற்றோருக்கு
ஒரு விண்ணப்பம்.....
மெழுகினை அணைக்காமல்
பிறந்தநாள் கொண்டாட
அனுமதி தாருங்கள்!
ஆமாம் இந்த மழலயின் எண்ணங்களில்
மனிதநேயத்தின் ஒளி பிறந்துள்ளாது!
இந்த காத்திருப்பு எமக்கு
ஒரு கவிதையானது!

.......கா.ந.கல்யாணசுந்தரம்.

எதிர்பார்ப்பும் கூடத்தான்!

இயற்கையின் யதார்த்தங்களில் இருந்து
விடுபட்டுப்போன காட்சிகள்!
இனிய இராகங்களின் புரிதல் இல்லாத
பாடல்களின் அரவணைப்புகளில்
விரசமான உடை அணிவிப்புகள்!
மனதைத் தொடாத குத்துப்பாடல்கள்!
நாமென்ன பத்துப்பாட்டும் எட்டுத்தொகையுமா
கேட்கின்றோம்?
வன்முறையும் விரசமும் வாடிக்கையாகிப்போன
இந்த சினிமா ஊடகம்
இளையதளைமுறைத் தோட்டத்து
நச்சு களைகளாக அல்லவா இருக்கிறது.
அறம், பொருள், இன்பம் எனும்
வாழ்வியல் தத்துவங்கள்
நவீனத்துவமாக இந்த
சினிமா ஊடகங்களில்
ஏன் உலா வரக்கூடாது?
இது இன்றைய இளைஞ்சர்களின்
வினாவல்ல!
எதிர்பார்ப்பும் கூடத்தான்!

..........கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், அக்டோபர் 06, 2011

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்



வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறும் பாவலர் உள்ளத்தில் இருப்பாள்
உள்ளதாம் பொருள் வேதி உணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின்று ஒளிர்வாள்
கள்ளமற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசக உட்பொருள் ஆவாள்
மாதர் தீம்குரல் பாட்டில் இருப்பாள்
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்
கீதம் பாடும் குயிலின் குரலை
கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள்
கோதகன்ற தொழிலுடைத்தாகி
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை உற்றாள்
இன்பமே வடிவாகிட பெற்றாள்
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறும் பாவலர் உள்ளத்தில் இருப்பாள்

வெள்ளி, செப்டம்பர் 30, 2011

கொடியில் பூத்த முல்லை!



இருவர் தந்த அமுதம் - இளம்
காலைப் பொழுதின் குமுதம்!
சின்ன விழிகள் அசைத்து - இவள்
வண்ண கவிதை வடிப்பாள்!
மெல்ல நடந்து வந்து - ஒரு
முத்தம் தந்து சிரிப்பாள்
பேசும் மழலைக் கிள்ளை - இளம்
கொடியில் பூத்த முல்லை!
மொழிகள் அறிந்த உண்மை - பேசும்
மழலைக்கு இணை ஏது?

......கா.ந.கல்யாணசுந்தரம்.

ரணம் ஆறாத வெந்த நெஞ்சோடு....
















சந்தைக்கு செல்லும் பாரவண்டி
சரக்கு மூட்டைகளை ஏற்றியதும்
அசைய மறுத்த எருதுகளை...
அவன் வெறுப்புடன் பார்த்தான்!
கடும் வெயில் காதுகளைக்
குடையும் முன் அடுத்த கிராமத்து
சந்தைக்கு செல்ல வேண்டும்!
சகட்டுமேனிக்கு அடித்த அடியில்
சாட்டைகூட பிய்ந்து போனது!
நேரத்தோடு பறந்து சென்று
நூற்றுக்கணக்கில் வியாபாரம் செய்து
முதலாளியிடம் நல்ல பெயர்
வாங்கியும்கூடமனதில் நிம்மதி இல்லை!
மாலையில் மனைவி குப்பம்மா
பச்சிலையால் எருதுகளின்
சாட்டைத் தழும்புகளுக்கு
பத்து போடும் போது இவன் மட்டும்
ரணம் ஆறாத வெந்த நெஞ்சோடு....
வாயில்லாத ஜீவனாய்
விக்கித்து நின்றான்!

.........கா.ந.கல்யாணசுந்தரம்

புதன், செப்டம்பர் 28, 2011

தீர்வு...


பிறந்தது, வளர்ந்தது
வாழ்ந்தது....என்று
நம் வாழ்க்கை எப்போதுமே
யதார்த்தமாய் இருந்தாலும்...
உள்ளம் என்ற உன்னத
உணர்வுப் பூங்காவில்
உணர்ந்தது, நெகிழ்ந்தது
மகிழ்ந்தது என்னும்
வண்ணமலர்க் கூட்டங்கள்
வாடாமல் மணம்
வீசுகின்றன...

உறவுகள், மரபுகள்
சொந்தங்கள், பந்தங்கள்
இவையெல்லாம்....
மானுடத்தின்
வரவுகள் என்றாலும்,
சேவைகளும், சிந்தனைகளின்
பகிர்வுகளும் நமது
விருதுகள் என்ற நினைவுகள்
வாழ்நாளில் ஆளுமை செய்ய...
எனது எச்சங்களுக்கு
நானே தீர்வு காணுகின்றேன்!

......கா.ந.கல்யாணசுந்தரம்

செவ்வாய், செப்டம்பர் 27, 2011

பாச வலைகள்....


உலகம் ஒரு மாயை என்று
சொல்வதை அறிவியல் ஆமோதிக்காது!
விதி என்பது விதிக்கப்பட்ட
ஒரு அமானுஷ்யம்........
என ஒப்புக்கொள்ளாத மானுடம்
அதர்மத்திடம் உறவுகொள்கிறது!
செயல்பாடுகள் என்றுமே
அவரவர் ஜனித்த நட்சத்திர
ராசி பலன்களால்தான்
என்றெல்லாம் கூறுவதை
பலநேரங்களில் நம்பத்தான்
வேண்டியிருக்கிறது!
மனிதத்தின் பலவீனங்கள்
பலவாறு கூறுபோட்டு பார்க்க
மனிதமே முயலுகிறது!
ஆளுமை எண்ணங்கள் தலைப்படும்போது...
மனசாட்சி ஏனோ அரசாட்சி செய்வதில்லை!
இன்னொரு பிறப்பின் ரகசியம்
என்னவென்று அறியாத
தூண்டில் மீன்களாய் மனிதவாழ்க்கை!
இருப்பினும்......
ஆசை எனும் வாழ்க்கை கடலில்
உறவுத் தோணிகள்
இன்றும் சுமக்கின்றன...
பாச வலைகளை!


.........கா.ந.கல்யாணசுந்தரம்.

திங்கள், செப்டம்பர் 26, 2011

நெஞ்சமதைத் தழுவும் வரை




இதயத்தை ஒருமுறை
கேட்டுக்கொள்கிறான் ...
வெடித்துவிடாமல்
வாழவேண்டுமென்று....
பாசம் நேசமெல்லாம்
பங்குபோட்டு
பாதியிலே ஒதுங்கிவிடும்!
உறவுகளின் ஒப்பாரியில்
ஓரங்க நாடகங்கள்
இடையிடையே அரங்கேறும்!
நட்பு வட்டங்கள்
அஞ்சலிக்கு ஆள் சேர்க்கும்!
கரும்பலகையில் கல்வி
கற்றதெல்லாம்
கல்லறை வரைக்கும்
கொண்டுசெல்லும்!
இருந்தாலும் .....
மீண்டும் மீண்டும்
கேட்டுக்கொள்கிறான்
இதயத்திடம்....
'வெடித்துவிடாதே
நினைவுக் கூடே...!
சற்றேனும் காத்திரு
சிநேகத்தின் சுவாசத்தை
மொத்தமாய் ஆளுகின்ற
என்னவளின் மூச்சுக்காற்று
நெஞ்சமதைத் தழுவும் வரை!'

....கா.ந.கல்யாணசுந்தரம்


மகத்தானது மனிதநேயம்
















எங்கே போகிறோம்?
என்று நமக்கு நாமே
கேள்வி கேட்டுக்கொள்வோம்!
மானுடம் வாழும் பூமியில்
விசாரிப்புகளின்றி
வறண்ட பாலைவனமாய்
ஈரமற்ற நெஞ்சின்
உடல் கூடுகளாய்
புழுவினும் கேவலமாய்
மனச் சுமைகளை மட்டுமே
சுயநலத்தின் சிகரமாக்கிக்கொண்டு
ஊர்ந்து செல்கிறோம்!
மானுடமே!.... வாழும் வாழ்க்கையில்
மகத்தானது மனிதநேயம்
என்பதைவிடுத்து பயணிக்கிறோம்!
உனது பாலைவன பயணத்திலும்
புதைகுழிகள் இருப்பதை மறந்து!


...கா.ந.கல்யாணசுந்தரம்.



சனி, செப்டம்பர் 24, 2011

அனுபவப் பெட்டகங்கள்
















எங்கேயோ எப்போதோ
செய்த தவருகள்தாம்
இங்கே, இப்போதே
திருத்தப்படுகின்றன...
முற்பகலும் பிற்பகலும்
அடுத்தடுத்த இயக்கங்களாயின!
இந்த மானுடத்தின்
பாதயாத்திரை இன்னும்
முற்றுப்பெறவில்லை!

தனக்கென சந்ததிகளையும்
சொத்துக்களையும் சேர்க்கின்ற
மானிடத் திசுக்கள்,
இனியாவது
சமுதாயச் சிந்தனைகளை
நல்லதொரு மறுமலர்ச்சிக்கு
பயிரிட்டு பேணி காக்க
மானுட மண்டையோட்டு
செதில்களுக்கு
சொல்லி வைக்கட்டும்!

அன்பெனும் சொல்லறியாது,
அறிவுத் தளர்ச்சியால்...
வயதில் பெரியோரை
காப்பகத்தில் வளர்க்கின்ற
இயந்திர வர்க்கத்தினைக்
காணுகின்றோம் நிலமதிலே!
இல்லை ....இல்லை...
இனியாவது இளைய தலைமுறையே!
மனிதநேயத்தின் மணிவிளக்காய்,
அனுபவப் பெட்டகங்களை
அரவணைப்போம் வாரீர்!

....கா.ந.கல்யாணசுந்தரம்

புரிதலைத் தேடியது


காதலின்போது காட்டிய
பரிவும் அன்பின் அரவணைப்புகளும்
திருமண வாழ்வுதனில்
புரிதல் இல்லாது போனதென்ன?
உண்மைக் காதலென
இந்த உள்ளம் நம்பியதெல்லாம்
பொய்மையென காலம்
கற்பித்ததென்ன?
காதலுக்கும் காமத்திற்கும்
அர்த்தம் புரியாது
புரிதலைத் தேடியது....
இந்தப் பேதையின் குற்றமே!

......கா.ந.கல்யாணசுந்தரம்

வெள்ளி, செப்டம்பர் 23, 2011

அப்போதே தன்னுள்....


வாழ்க்கை சிகரத்தின்
ஒவ்வொரு படியிலும்
நினைத்துப் பார்க்கிறேன்....
வியந்து நினைக்கிறேன்!
அகரம் பயில ....
துணையாய் நின்ற
தகரப் பலகையின்
கருமை வண்ணத்தை!
அப்போதே தன்னுள்
அடக்கமாய் ஒளித்து
வைத்திருந்த ஒளிமயமான
என்னுடய எதிர்காலத்தை!

.....கா.ந.கல்யாணசுந்தரம்.